குதூகலம்.
மகிழ்ச்சி.
சந்தோஷம்.
உவகை.
சொற்கள்
உணர்வின் அடையாளமாக
பரிமாறப்பட்டன.
திகட்டிவிட்டதென்று
எழுந்து கொள்ள முடியாமல்
முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது.
அலுப்பு
சலிப்பு
வெறுப்பு
இயலாமை
சொற்களில்லாமல்
சொன்னது
உடல் மொழி.
சொற்கள்
முற்றுப்புள்ளியை
அழைத்து வந்து
பொருத்திக்கொண்டு
அமைதியாயின.
புன்னகை
புன்முறுவல்
குறும்புப்பார்வை
வெடுக்கென எழுதல்
உடல்மொழி
கட்டைவிரலை
உயர்த்திக்காட்டி
வெளியேறியது…
சொற்கள்
அமைதியாய்
காகிதத்தில் வந்தமர்ந்தன
கவிதையாக.
இறுமாப்புடன்
திரும்பிய
உடல்மொழி
கவிதையாக
உருக்கொண்ட
சொற்களைக்கண்டு
மோனமாகி
நெற்றி அகன்று
சிந்தனை வயப்பட்டது.
”வாய் வார்த்தையாகும் சொற்கள்
எழுத்துருவாகியும் பேசுகின்றன.”
சிந்தனையும்
சொற்களாகவே வெளிப்படுவதை
உணர்ந்த
உடல் மொழி
மரியாதையாய்
தலை குனிந்தது.
சொற்கள் நிரம்பிய
கவிதை புத்தகத்தின்
பக்கங்கள் காற்றில் புரண்டன.
Leave a reply to Ashok1288 Cancel reply