முன்னுரை

மிகச்சிறு வயதில் 1982 -இல் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடெங்கும் பள்ளிகளில், கல்லூரிகளில், வானொலிகளில், பொதுவிடங்களில் விமரிசையாக கொண்டாடினார்கள். அந்த நாட்களில் தான் பாரதியின் கவிதைகள் எனக்கு அறிமுகமாயின. எனக்கும் கவிதை எழுதவேண்டுமென்ற ஆசை உருவானது. என் அப்பாவின், முழுதும் உபயோகிக்கப்படாத பழைய டைரிகளில் கிறுக்கத்தொடங்கினேன். கிறுக்கினவற்றை ஒளித்துத்தான் வைத்திருந்தேன். என் அம்மாவோ அல்லது என் சகோதரர்களோ, யாரோ கண்டுபிடித்து என் கிறுக்கல்களை படித்துவிட்டார்கள். பின்னர், சிலகாலம் என் குடும்பத்திற்குள் "கவிஞன்" என்ற பெயரோடு "புகழுடன்’ வலம் வந்தேன்.

சில பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைக்கலாமென்ற எண்ணத்துடன், கிறுக்கல்களை டைப்-செய்ய என் அப்பாவிடம் கொடுத்தேன். அப்பா பல மாதங்களாகியும் அவற்றை டைப்-அடித்து எனக்கு கொண்டு தரவில்லை. எப்போது கேட்டாலும் அலுவலக டைபிஸ்ட்-இடம் கொடுத்திருப்பதாகசொல்வார். அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே கடிதங்கள், ஆவணங்கள் எல்லாம் டைப்-அடிக்கப்பட்டதனாலோ என்னமோ, டைபிஸ்ட்-டுக்கு தமிழ் தட்டச்சு வராது போலும் என்று நான் விட்டுவிட்டேன். என் கவிதை கிறுக்கல்களை இப்படித்தான் நான் இழந்தேன்.

பின்னர் நான் 10 -ஆம் வகுப்புக்கு சென்றேன். நிறைய மதிப்பெண் எடுக்கவேண்டுமென்று எல்லாரும் விரும்பினார்கள். எனவே கொஞ்சகாலம் என் "குடும்பப்புலவர்" பதவியை துறக்க தீர்மானித்தேன். 10 -ம் வகுப்பில் பொதுத்தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்தேன் என்று நினைவில்லை. நான் இதுவரை வேலை செய்த எட்டு நிறுவனங்களிலும் யாரும் ஒருநாள் கூட என் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப்பற்றி கேட்டதேயில்லை.

பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது என் ஒரு புதிய திசையில் பயணிக்க முடிவு செய்தேன். கவிதைகளை விடுத்து சிறுகதைகள் புனையும் எண்ணம் உதயமானது. கவிஞனாக இருந்தது போதும், என் சிறுகதை திறமையை இவ்வுலகுக்கு காட்ட முடிவு செய்தேன். ஒரு பக்ககதைகளாக இருபது கதைகள் எழுதியிருப்பேன். அதற்குள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து, 11 -ம் வகுப்பு சேர வேண்டியதாகிவிட்டது. அதுவும் முதல்முறையாக ஆங்கில வழியில் படிக்கவேண்டிவந்தது. bowler எடுக்கிற ரன்கள் மாதிரி மார்க்குகள் ரொம்ப குறைச்ச்சலானது. ஆங்கில அறிவை ஏற்றுவது இன்றியமையாததானது. எனவே, கிரிக்கெட் கமெண்டரி கேட்டு எனது ஆங்கிலத்தை உயர்த்த அரும்பாடுபட்டேன். 12 -வது வரும்போது, எனது பள்ளியில் எனக்கு கருணைகாட்டி தமிழ்வழிக்கு மாறிக்கொள்ளும் சலுகை தந்தார்கள். Debit வரவு என்றானது. dividend பங்காதாயம் ஆனது. எந்த குழப்பமும் அடையாமல் 12 -ம் வகுப்பை முடித்தேன். (இல்லை, 12 ம் வகுப்பு மதிப்பெண்களும் ஞாபகத்தில் இல்லை.)

கல்லூரி படிக்கும் காலங்களில், நான் எழுதிய சிறுகதைகளை படிக்கலாமென்று, வீடு முழுதும் சல்லடை போட்டு தேடியதில் நான் எழுதிய சிறுகதைகள் அடங்கிய நோட்புக் எங்கே போனதேன்றே தெரியவில்லை. அம்மாவைக்கேட்டேன். "தெரியலியேடா…செய்தித்தாள்களுடன் சேர்ந்து உன் நோட்புக்கும் எடைக்குப்போயிருக்குமோ?" என்ற சந்தேகத்தை எழுப்பினாள். அன்றுதான் ஒரு நல்ல எழுத்தாளனை தமிழிலக்கிய உலகம் இழந்தது.

பிறகு வாழ்க்கை வெகு வேகமாக ஓட ஆரம்பித்தது. மூச்சுவிடுவதற்குள் எனக்கு 42 வயது ஆகிவிட்டது. எனக்கு திரும்பவும் இளைஞனாக மாற வேண்டுமென்ற எண்ணம் வந்தது. இளைஞனாவதற்கு முன்னர் நான் என்னசெய்துகொண்டிருந்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது நான் புலவனாகவும் எழுத்தாளனாகவும் திகழ்ந்த நாட்கள் நெஞ்சில் காட்சிகளாக ஓடின. அக்கணமே இந்த வலைதளத்தை துவங்கினேன். இப்போது மீண்டும் "கிறுக்க" தொடங்கியிருக்கிறேன். ஒரு வித்தியாசம், இப்போதெல்லாம் சிறுகதை மற்றும் கவிதை இரண்டையும் எழுதுகிறேன். இருபது வருடங்களுக்கு முன்னாலிருந்த முகமும் உடலும் எனக்கு வந்துவிடலாம். இன்னும் கொஞ்சநாட்களில் என் நண்பர்களுக்கு கூட நான் அடையாளம் தெரியாமல் போகக்கூடும்.

இந்தமுறை எழுதுவதை நிறுத்தக்கூடாது. முன்னர் நான் எழுதியவற்றை எடைக்காரனுக்கு இழந்ததுபோல இம்முறை நடக்காது. ஏனென்றால், மடிக்கணினியை யாரும் எடைக்கு போடமாட்டார்கள்தானே !

1 Comment

  1. Venkat says:

    அருமையான பகிர்வு… ஒரு படைப்பாளனுக்கு எத்தனை எத்தனை இடைஞ்சல்கள் – பேப்பர் காரரரையும், அலுவலக டைப்பிஸ்ட்-ஐயும் தான் சொல்கிறேன்…. 🙂

    நான் ஆரம்பத்தில் இப்படி எழுதியதெல்லாம் இல்லை…. எழுதிய சிலவற்றை எனக்கே பிடிக்காமல் கிழித்து விட்டேன் உடனேயே… 😦

    சுட்டி கொடுத்ததற்கு நன்றி நண்பரே…

Leave a reply to Venkat Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.