Tag: விருந்து

  • மனக்கற்பனையின் வலை

    அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார்.

    —-

    லட்சியம் என்பது வெறுமை
    அது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க ஒரு நிழல்.
    அதை அடைய வேண்டுமெனும் பேராசை, இப்போதே உன் சுமையை அதிகப்படுத்த வேண்டாம்.
    உன் நரம்புகளுக்குள் எதிர்பார்ப்பின் ரத்தத்தை பாய்ச்சிவிடாதே.
    நரம்புத் திசுக்களைச் சுற்றி ரத்தம் ஓடுவது இயற்கை;
    ஆனால் நரம்பிழைக்குள் ரத்தம் ஓடுவது இயற்கையல்ல.

    லட்சியம் என்பது கற்பனை
    கற்பனை நிகழ்ந்துவிடும் என்ற உறுதி
    அதன் ஈர்ப்பில் லயித்திருப்பது! –
    அடுத்த வார விருந்துக்கு
    இப்போது பட்டினி கிடப்பது

    போட்டி ஒரு கற்பனை
    யார் மீது,
    எதன் மீது,
    போட்டி?

    தான் நடக்கும் பாதையில்
    யாரோ வந்துவிடுவார்கள் எனும் அதீத பீதி,
    இன்னொரு பாதையில் நடப்பவரைத்
    தள்ளிவிடும் எண்ணம் —
    நம் கற்பனையில் மட்டுமே உள்ளது போட்டியுணர்வு!

    நம் இலக்கை நாம் அடைவதும்,
    அவன் இலக்கை அவன் அடைவதும்
    போட்டியுணர்வின் அடிப்படையில் தான் என எண்ணுதல் —
    மணற்பரப்பில் தெரியும் நீர்க்காட்சி மேலான தாகம்!

    எதிர்காலத்தின்
    ஏதோ ஒரு புள்ளியைப்
    பிடித்துத் தொங்கிக் கொண்டிருத்தல் —
    கனவு ஆப்பிளின்
    கற்பனைச் சுவைபார்த்தல்.

    போர்வைக்குள் தூக்கம்
    கனவு வலைக்குள் இயக்கம்
    கொத்த வரும் பாம்பிலிருந்து தப்புதல் சுலபம்
    போர்வையை விலக்கி கண்விழித்தல்
    பாம்பை இல்லாமல் ஆக்கி விடும்.

  • சுவரில் ஒரு கடிதம்

    பெல்ஷஸார் – விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் டேனியலின் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பாபிலோனின் பட்டத்து இளவரசன். விவிலியத் தொன்மத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத் நெஸாரின் மகன் என்று குறிப்பிடப்படும் பெல்ஷஸார் வரலாற்று ரீதியாக நெபுகத் நெஸாருக்குப் பின் வந்த நெபோடினஸ் என்னும் அரசனின் மகனாவான். டேனியலின் புத்தகத்தில் வரும் தொன்மக் கதையின் படி பெல்ஷஸார் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவ்விருந்தில் அவனுடைய பிரபுக்கள், அமைச்சர்கள், மனைவிகள், அந்தப்புரப் பெண்கள் எனப் பெருந்திரளாக அனைவரும் கலந்துகொண்டனர். நெபுகத் நெஸார் ஜெருசலேமைக் கைப்பற்றி யூதர்களின் தலைமைக் கோயிலிலிருந்து எடுத்து வந்த கோப்பைகளையும் பாத்திரங்களையும் விருந்தில் மதுவருந்த பயன்படுத்துமாறு ஆணையிடுகிறான் பெல்ஷஸார். விருந்தினர் அனைவரும் அந்தக் கோப்பைகளில் மதுவூற்றி அருந்துகின்றனர். பின்னர் அக்கோப்பைகளின் மூலப்பொருட்களான தங்கம், வெண்கலம், வெள்ளி முதலானவற்றுக்கான தேவதைகளை வணங்குகின்றனர். அப்போது விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த அறையின் சுவரொன்றில் ஓர் ஆண் கரம் தோன்றுகிறது. சுவரில் பின் வரும் சொற்கள் எழுதப்படுகின்றன. அந்தச் சொற்களின் அர்த்தம் ஒருவருக்கும் புரியவில்லை. அமைச்சர் ஒருவரை அழைத்து ஜெருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அழைத்துவரப்பட்ட யூதர்களிலேயே அறிவு மிக்கவரும் பலவித மொழிகளை அறிந்தவருமான டேனியலை கூட்டிவரப் பணிக்கிறான். டேனியல் அங்கு வந்தவுடன் சுவரில் காணப்படும் சொற்களின் அர்த்தத்தைச் சொன்னால் பாபிலோனிய நாட்டின் மூன்றாவது அதிகாரமிக்கவனாக ஆக்குவதாகச் சொல்கிளான். டேனியல் தனக்கு பரிசோ பதவியோ வேண்டாம் என்று மறுத்துவிட்டு அர்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

    מנא מנא תקל ופרסין
    Mede Mede Tekel Upharsin

    “Mene, தேவன் உமது ராஜ்யத்தின் நாட்களை எண்ணி, அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறார் ;Tekele, நீ எடைபோடப்பட்டாய்…உன் எடை குறைந்து காணப்படுகிறது ; “UPHARSIN”, உனது ராஜ்யம் பாரசீகர்களுக்குக் கொடுக்கப்படும்.”

    அன்றிரவே பெல்ஷஸார் பாரசீகர்களால் கொல்லப்படுகிறான். பாபிலோனை பாரசீக பேரரசர் டரியஸ் கைப்பற்றுகிறார். டரியஸ் பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களை ஜுடேயாவுக்கே திரும்ப அனுப்பிவைக்கிறார்.

    That very night Belshazzar the Chaldean (Babylonian) king was killed, and Darius the Mede received the kingdom.

    — Daniel 5:30–31[1]

  • பண்டிகை காட்சிகள்

    firni
    நிறைவு என்ற பதத்துக்கு
    நிறைய என்று பொருள் கொண்டு
    கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது
    நிறைய வகைகளில் “நிறைய”..
    “கொஞ்சம் நிறைய” “நிறைய நிறைய”
    “சென்ற வருடத்தை விட நிறைய”
    “மைத்துனரின் வீட்டை விட நிறைய”
    என!
    கொஞ்சமிருப்பவரும்
    “நிறைய” காண்பிப்பதற்கு
    நிறைய கடன்களைப் பெற
    நிறைய விழாக்கால வங்கித் திட்டங்களும்.
    அந்தஸ்தை நிரூபிக்க
    நிறைய பரிசுகள் !
    நிறைய உடைகள் !
    நிறைய இனிப்புகள் !
    நிறைய விருந்துகள் !
    நிறைய வாழ்த்தட்டைகள் !
    நிறைய மனநிறைவும் இருக்கும்
    நண்பனொருவன் தன் குடும்பத்தை
    வெளிநாடு அழைத்துச் சென்று
    வெண்பனி சூழ்ந்த
    பயணியர் விடுதிக்குள்
    கொண்டாடியதாய் கேள்விப்படும் வரை !