Tag: வாதம்

  • சத்தம் அநித்தியம்

    சத்தம் அழியக்கூடிய பொருள் எனும் விவாதம் நிறைய பவுத்த நூல்களில் இடம் பெறுகின்றன

    …. சத்தம் அநித்தம் என்றல்
    பக்கம், பண்ணப் படுத லாலெனல்
    பக்கத் தன்ம வசனமாகும்…

    (மணிமேகலை, 29 : 68-71)

    திக்நாகர் சொல்கிறார் : “அநித்ய: ஸப்தைதி பக்ஷ வசனம் க்ருதகத்வாத்இதி பக்ஷதர்ம வசனம்” (ப்ரமாண சமுச்சய)

    கிட்டத்தட்ட மொழியாக்கம் செய்தவை போல தோன்றுகிறதல்லவா?

    சத்தம் நிரந்தர பொருளல்ல ; அழியக்கூடியது, ஏனெனில் அது யாராலோ எதனாலோ எழுப்பப் படுபவை.

    இந்த வாதத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? வேத ஒலிகளுக்கு நித்தியத் தன்மை வழங்கிய இந்து தத்துவ பள்ளிகளுக்கு (மீமாம்சை, ந்யாய) நேரடி எதிர்வினை தரும் முகமாக பவுத்தம் எழுப்பிய வாதம் இது. குமாரில பட்டர் போன்ற மீமாம்சை தத்துவ வாதிகள் வேத மந்திரங்கள் நித்தியத்தன்மை கொண்டவை என்றனர். அச்சத்தங்கள் உருவாக்கப்படாதவை (அபௌருஷேய) என்றும் கூறினர். ஒலி நித்தியம் ஏனெனில் அது கண்ணுக்குப் புலனாகாதவை, ஆகாசம் போல.

    திக்நாகரும் அவரது சீடர் தர்மகீர்த்தியும் இதைக் கையிலெடுத்துக் கொண்டு முக்கூற்று வாத முறையில் சத்தம் அழியக்கூடியது என்று வாதாடினர்.

    பக்கம் (Skt.Pratijna) : “சத்தம் அநித்தியம்”

    ஏது (Skt.Hetu) : “ஏனெனில் அது எழுப்பப்படுவது”

    உதாரணம் : “பானையைப் போல்”

    பண்ணப்படுவது எதுவும் (“பேச்சு”, “ஆயுதம்”) அழியக்கூடியவை, எனவே அநித்தியமானவை.

    “ஒலியை” பௌத்தர்கள் குறி வைத்ததற்கான காரணங்கள் – (1) வேதங்களின் காலமின்மை என்ற மீமாம்சகர்களின் வாதத்தை முறிப்பது. (2) சார்பியல் தோற்றத்தை (ப்ரதித்ய சமுத்பாதம்) நிரூபிப்பது (3) மீமாம்சகத்தின் சடங்கு உலகம் வேத மந்திரங்களின் நித்தியத்தன்மை கொள்கையைச் சார்ந்திருந்தது

    பின்னர் வந்த வைதீக தத்துவவாதிகள் (நியாய – வைசேசிகர்கள்) தமது நிலைப்பாட்டை சற்று செம்மைப் படுத்திக் கொண்டு நித்ய சத்தம், அநித்திய சத்தம் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தினர். பௌத்தர்களோ அதற்கும் பதிலடி கொடுத்தனர் – “அனைத்து சத்தங்களும் அழியக்கூடியவை தாம்; வெளிப்படாத ஒலி என்பது கருத்தியல் புனைகதை” என்றனர்.

    இவ்விவாதம் வெறும் ஒலியியல் பற்றியது மட்டுமல்ல. “சுருதி” -“பௌத்த அனுமானகம்”, நித்தியவாதம் – அநித்தியவாதம் – ஆகியவற்றுக்கிடையிலான மோதல். “சத்தம் அநித்தியம்” எனும் Syllogism வைதீக பள்ளிகளின் மீப்பொருண்மையியல் கூற்றுகளைத் தகர்க்கும் கருவியாக பயன்பட்டது.

  • இப்னு ருஷ்த்

    எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ஒரு நேர்காணல் வாயிலாகத்தான் முதன்முதலாக இப்னு ருஷ்த் பற்றி நான் அறிந்தேன். எழுத்தாளர் சல்மான் ருஷ்டி சொன்னார் : “குடும்பப் பெயரை ருஷ்டி என்று மாற்றுமளவிற்கு எனது தந்தை இப்னு ருஷ்தின் தத்துவத்தை வெகுவாகப் போற்றினார். என் தந்தை ஏன் அவர் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்பதை நான் பின்னர் உணர்ந்தேன். இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள் நம்பமுடியாத அளவிற்கு நவீனமயமாக்கும் குரலாக இருந்தார் ருஷ்த்”

    Ibn Rushd (1126 – 1198)

    அவெரோஸ் என்றும் அழைக்கப்படும் இப்னு ருஷ்த், இடைக்கால அண்டலூசியாவில் வாழ்ந்த இஸ்லாமிய தத்துவஞானி, சட்ட நிபுணர் மற்றும் மருத்துவர். அவருடைய படைப்புகள் இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய சிந்தனைகள் இரண்டிலும், குறிப்பாக தத்துவம் மற்றும் இறையியல் துறைகளில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்பெயினின் கோர்டோபாவில் 1126 இல் பிறந்த இப்னு ருஷ்தின் அறிவுசார் பங்களிப்புகள் அரிஸ்டாட்டிலியன் தத்துவம், இஸ்லாமிய நீதியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியவை.

    அரிஸ்டாட்டிலின் படைப்புகள் பற்றிய அவரது விளக்கங்கள் இப்னு ருஷ்தின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும். அரிஸ்டாட்டிலின் “மெட்டாபிசிக்ஸ்” மற்றும் “இயற்பியல்” பற்றிய அவரது விளக்கங்கள் ஐரோப்பிய கல்விமான்களிடையே செல்வாக்கு பெற்றவை. அவை முந்தைய இஸ்லாமிய தத்துவஞானிகளின் விளக்கங்களிலிருந்து வேறுபட்டு அரிஸ்டாட்டிலின் கருத்துகளுக்கு ஒரு புதிய விளக்கங்களை அளித்தன.

    இப்னு ருஷ்த் இஸ்லாமிய நீதியியல் பற்றியும் விரிவாக எழுதினார். அரிஸ்டாட்டிலின் போதனைகளை இஸ்லாமிய இறையியலுடன் ஒப்பிட்டார் . “The Decisive Treatise” என்று அறியப்படும் நீதித்துறை பற்றிய அவரது பணி தத்துவத்திற்கும் மதத்திற்கும் இடையிலான உறவை எடுத்துரைத்தது. இந்நூலில் தத்துவமும் மதமும் இணக்கமாக இருக்க முடியும் என்று அவர் வாதிட்டார்.

    அரிஸ்டாட்டிலிய இயற்பியலின் சிக்கலான வாதத்தின் மூலம் கடவுளின் இருப்பை நிரூபிக்க முடியும் என்று இபின் ருஷ்த் நம்புகிறார். இது ஒரு முதல் காரணத்தை நிறுவுகிறது. பொதுவாக இயற்பியல் வாதங்களைப் போலவே, வாதமும் ஒரு அடையாளமே (தலீல்), இது உலகின் அனுபவ அம்சங்களில் இருந்து தொடங்குகிறது. அவை காரண ரீதியாக பின்னால் இருந்தாலும் நம்மால் நன்கு தெரிந்து கொள்ளும்படியாக உள்ளன.

    இப்னு சினா மற்றும் அஷ்அரைட் இறையியலாளர்களின் முன்னோடி மீப்பொருண்மை வாதங்களை அவர் நிராகரிக்கிறார். இவையனைத்தும் நிரூபணமாக குறைவுபட்டது மட்டுமல்லாமல், சாதாரணர் புரிந்து கொள்ளும், ஏற்கும் வகையிலும் இல்லை என்று நினைக்கிறார். கடவுள் ஒரு திறமையான காரணமாக (efficient cause) அல்ல, ஆனால் இறுதி மற்றும் முறையான காரணமாக பணியாற்றுகிறார் என்று இப்னு ருஷ்த் கூறுகிறார். நிஜத்தில் நகரும் வானசோதிகள் (Moving Bodies) மற்றொரு வானசோதியை அதன் ஆற்றல் நிலையிலிருந்து உண்மையான இயக்கத்திற்கு நகர்த்தும்போது திறமையான காரணத்தன்மை நிலவுகிறது. பரலோக காயம் ஏற்கனவே நித்தியமானதாக உள்ளதால் பரத்தின் களத்தில் திறமையான காரணத்திற்கு இடமில்லை. ஆகாயக் கோளங்களுடனான முதல் காரணத்தின் உறவு அறிவுக்குப் புலனாகும் – அதாவது, முதல் காரணத்தின் நித்திய எண்ணம் அறிவை ஊக்குவிக்கும் இறுதி காரணங்களாக செயல்படும் வடிவமாகும். “காலஞ்சேர்ந்தவை முற்றிலும் நித்தியமானதிலிருந்து முன்னெடுக்க முடியாதவை. அதன் பொருளில் அவை நித்தியமானவை என்றாலும் அதன் இயக்கங்களில் தற்காலிகமானவை” அறிவுயிர்களுக்கு மத்தியில் கடவுளுக்கு மட்டுமே இறுதிக் காரணமாக செயல்படக்கூடிய அறிவுசார் சிந்தனைக்கு வேறு இலக்கு இருக்க முடியாது. மாறாக, “முதல் வடிவம் தனக்கு வெளியே எதையும் நினைக்காது”. இது கடவுளின் தனித்துவமான எளிமையை ஒரு தூய மனதாகக் கணக்கிட உதவுகிறது, எப்போதும் கடவுளைத் தவிர வேறு எதனாலும் முழுமையாக உணரப்படாததாக அது இருப்பதாக விளக்குகிறது. ஆனால் – கடவுள் படைத்த உலகம் பற்றிய அறிவுணர்வு பற்றிய கேள்விகளுக்கு இது வழிவகுக்கிறது. கடவுள் கருத்தாக்கத்தைப் பற்றிய “மிகவும் வலிமையான சந்தேகம்” இதுவாகும். “கடவுளுக்கு விவரங்கள் தெரியாது” என்ற பார்வை தான் “மதக்கருத்துக்கு எதிரானவர் இப்னு ருஷ்த்” என்று அல் கஸாலியால் முத்திரை குத்த வைத்தது. இந்த அனுமானத்தை அசை போடுவதாகவும் இது குறித்து உறுதியாக இருப்பதை இப்னு ருஷ்த் மறுக்கிறார். கடவுள் தான் படைத்த உலகம் பற்றிய அறிவை தனக்கே உரிய முறையில் கொண்டிருக்கிறார் என்றும், பொதுமையாகவோ தனிப்பட்டதாகவோ இல்லாமல், உலகத்தால் ஏற்படுவது போல் அல்லாமல், உலகத்தின் காரணங்களாக அவருடைய எண்ணங்கள் விளைகின்றன. (I want to know God’s thoughts, rest are details என்று ஐன்ஸ்டைன் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது). தெய்வீக மனம் “தன் சுயத்தை நினைப்பது அனைத்து இருப்பினுடைய அதன் சிந்தனையை ஒத்ததாக இருக்கிறது”.

    முஸ்லீம் சூழலில் இப்னு ருஷ்தின் செல்வாக்கு இப்னு சினாவின் பெரும் செல்வாக்குடன் ஒப்பிட முடியாதது, அல்லது ஐரோப்பாவில் இப்னு ருஷ்தின் சொந்த செல்வாக்குடன் கூட ஒப்பிட முடியாதது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இஸ்லாமிய சிந்தனையில் அவருக்கு எந்த தாக்கமும் இல்லை என்னும் கூற்று தவறானது. இப்னு சினா, அல்-கஸாலியைப் போலல்லாமல் இப்னு ருஷ்த் சுயசரிதை எழுதவில்லை என்பதால் அவரது வாழ்க்கையின் பல அம்சங்கள் தெளிவாவதில்லை. இப்னு ருஷ்தின் கருத்துக்கள் இஸ்லாமிய உலகில் சர்ச்சையை ஏற்படுத்தின என்பது உண்மைதான். ஆனாலும், அவரது படைப்புகள் இஸ்லாமிய உலகிலும் மற்றும் மேற்குலகிலும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு போற்றப்பட்டன. கிளாசிக்கல் கிரேக்க சிந்தனையை இடைக்கால ஐரோப்பாவிற்கு கடத்துவதில் ஒரு முக்கிய நபராக ருஷ்த் கருதப்படுகிறார்.

    ரம்ஜான்போஸ்ட் – 23.1.2024

  • நஞ்சு

    ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

    சிறு தளிர்கள்
    உதிர்ந்து விழுந்தன
    மொட்டுகள்
    மூச்சுத் திணறி வாடிப்போயின
    வேர் வழி
    உருவிலா நஞ்சு பரவி
    மரம் தள்ளாடிற்று
    ஒரு மரம் அழித்து
    தரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி
    அதி விரைவில்
    எதிர்காலத்தின் வனமொன்றை அழித்தது
    கருத்தின் வடிவிலும்
    கொள்கையின் வடிவிலும்
    தீவிரம் என்னும் உடையணிந்து
    வாதம் எனும் மகுடியூதி
    மூளைகளை தூக்கநடனத்தில் ஆழ்த்தி
    விழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து
    நஞ்சு இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.