Tag: வண்டி

  • ‘இது காடு;நகரமல்ல’

    கான்டர் எனப்படும் திறந்த லாரியில் ஏறி வனத்துக்குள் சென்றோம். எங்களது லாரியில் பத்து-பன்னிரண்டு சுற்றுலாப்பயணிகள் இருந்தனர். மூன்றுமணி நேரம் தேடினோம். நீர்நிலைகளுக்கருகே காத்திருந்தோம். குரங்குகளும் மான்களும் இடும் எச்சரிக்கை ஒலிக்குப் பின்னர், ஒலி வந்த திசையில் காத்திருந்தோம். புலிகளின் பாதச்சுவடுகளைத் தேடினோம். ஈரப்பதமாக இருந்த இடத்தில் அதன் காலடித் தடங்களைப் பார்த்தோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் புலி அங்கு உலவிய தடம் அது என்றார், வாகனத்தைச் செலுத்திய முன்னாள் ராணுவ வீரர். அந்தத் தடம் பெண் புலியினுடையதாக இருக்கலாம் என்றும் சொன்னார். ஆண்புலியின் தடம் பெண்புலியின் தடத்தைவிடப் பெரிதாக இருக்கும் என்றார்.

    வாகன ஓட்டியுடன் ஒரு நடத்துநரும் இருந்தார். சஃபாரி நடத்துநரின் பெயர் என்னவென்று கேட்க மறந்துவிட்டேன். நேர்த்தியான ஆங்கிலத்தில் (லேசாக எட்டிப் பார்த்த ராஜஸ்தானி கொச்சை மொழியில்) பேசினார். வேளாண்மைத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருந்த அவருக்கு தர்தி என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.

    ஓரிடத்தில் வண்டியை நிறுத்திப் புலி தென்படுகிறதாவென நோக்கிக்கொண்டிருந்தோம். சுல்தானாவின் பகுதியில் வண்டியை நிறுத்தியிருப்பதாக தர்தி சொன்னார். சுல்தானா இளம் பெண்புலி. சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றிருக்கிறது.

    வேறோர் இடத்தில் நாங்கள் காத்திருந்தபோது சுல்தானாவின் சகோதரி நூரியின் பகுதியை அடைந்திருந்தோம். நூரிக்கும் சுல்தானாவுக்கும் அன்னை உண்டு. அதன் பெயர் நூர். நூர் முதுமையை எட்டிவிட்டதாம். அதற்குப் பதினாறு வயதாகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் – இரண்டாம் குட்டி நூரி அன்னை நூரைத் துரத்தி அன்னையின் பிரதேசத்தைக் கைப்பற்றிக்கொண்டதுதான்.

    வாழும் பெருங்காட்டில் தனக்கென ஒரு பகுதியை நிர்ணயித்துக் கொண்டு தனித்து வாழும் புலி ஒரு தனிமை விரும்பியாகும். அன்னை, குட்டி எனத் தம் உறவு அனைத்திலிருந்தும் விலகி நிற்கும் பிராணி. குட்டிகள் தாயிடம் இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் இருக்கும். அதன் பின்னர், குட்டி அன்னையைத் துரத்திவிடும் அல்லது தாய் குட்டியைத் துரத்திவிடும். தானிருக்கும் பிரதேசம் தன்னுடையதாய் மட்டும் இருக்க வேண்டும் என்று கருதுவது புலிகளின் மரபணுவில் உள்ளது. மரத்தின் மீது பற்குறிகளைப் பதிப்பது, மலம் – மூத்திரம் போன்றவற்றால் குறிப்பது எனத் தன்னுடைய பிரதேசத்தை வரையறை செய்யும். பெண் புலி, மரங்களின் மீது தன் மூத்திரத்தைத் தடவி அதன் வாசனையைப் பரப்புவதன் மூலம் ஆண் புலிகளைப் புணர்வதற்கென அழைக்கும்.

    புள்ளிமான்களும் கலைமான்களும் ஏராளமாய்ச் சுற்றித்திரிந்துகொண்டிருந்தன. வடஇந்தியச் சமவெளி சாம்பர் மந்திகளும் நிறைய கண்ணில் பட்டன. மானுக்கும் மந்திக்கும் இருந்த நட்புறவைப் பற்றி அதிகம் குறிப்பிட்டார் தர்தி. மரத்தின் மேல் உட்கார்ந்திருக்கும் மந்தி, புலியின் நடமாட்டம் இருந்தால் உடனடியாகச் சத்தம் கொடுக்குமாம். மரத்தினடியில் மேய்ந்து கொண்டிருக்கும் மான்கள் மந்தியின் சத்தத்தைக் கேட்டவுடன் ஓடத் தொடங்கிவிடுமாம். காட்டு பெர்ரி மரங்களில் பழுத்திருக்கும் அதன் பழங்களைத் தரையில் வீசியெறிந்து மான் நண்பர்களுக்குத் தின்னத் தருமாம்.

    இன்னோர் இடத்தில் காத்திருந்தபோது பாசி படிந்திருந்த நீர் நிலைக்கருகே இருந்த சேற்று மண்ணில் புரண்டு கொண்டிருந்தது கறுப்பு நிறமுள்ள ஓர் ஆண் கலைமான். அதற்குப் பக்கத்தில் இருந்த பாறாங்கல்லில் இரண்டடி நீளமான வெளிறிப் போன முதலையொன்று சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்தது. குளிர்காலத்தில் உறக்க நிலைக்குச் சென்றுவிடும் பாம்புகள்போல, முதலைகள் குளிர்காலத்தில் சூரிய வெளிச்சத்தில் நாட்கணக்கில் படுத்துக்கிடக்குமாம்.

    புள்ளிமான்களைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. நாங்கள் புலியின் வரவுக்காக ஏங்கி மான்களை ஆபத்துக்குள்ளாக்குகிறோமோ என்ற குற்றவுணர்வுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். வயது முதிர்ந்த ஆண் கலைமான்தான் புலிக்குப் பிடித்தமான இரை என்றார் தர்தி. ஓர் ஆண் கலைமானை வேட்டையாடினால் நான்கு நாட்களுக்குப் புலி மீண்டும் வேட்டைக்குச் செல்ல வேண்டியதிருக்காதாம். தர்தி இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக ஒரு கறுப்புக் கலைமான் எங்கள் வாகனத்துக்கு மிக அருகில் நின்றிருந்தது. அதன் கொம்புகள் நன்கு முதிர்ந்திருந்தன. நீட்டிக்கொண்டிருந்த மரக்கிளைகளைத் தன் கொம்புகளால் வளைத்துக் கடந்துசெல்லத் தொடங்கியது. கொம்புகள் உடைந்துபோய்விடுமோ என்று நான் பயப்பட்டேன். உடைந்தாலும் கொம்பு மீண்டும் வளரும் என்றார் தர்தி.

    மான்களை எளிதில் புலிகள் வேட்டையாடிவிட்டால் காட்டில் மான்களின் எண்ணிக்கை குறைந்துவிடாதா என்ற குழந்தைத்தனமான கேள்வியைத் தர்தியிடம் கேட்டேன். உணவுச்சங்கிலியெனும் பெருங்கருத்தின் மிகச் சிறு அறிமுகத்தை எனக்களித்தார் தர்தி. 1700 கிலோ சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட ரண்தம்போர் காட்டில் 75 முதல் 80 புலிகள் வாழ்கின்றன. இருபது சதுர கிலோ மீட்டருக்கு ஒரு புலி. வேட்டையாடும் ஒவ்வொரு தடவையும் புலி வெற்றிபெறும் எனில் மான்களோ பிற மிருகங்களோ எஞ்சியிராது. அப்படி இரைகள் அனைத்தும் மடிந்துவிட்டால் புலிகள் எப்படி உயிர் வாழும்? Bio-diversityயை நிலைநிறுத்துவதில் இயற்கையாற்றும் பங்கை விவரித்தார் தர்தி. பத்துமுறை முயன்று ஒரு வெற்றியும் பெறாமல் இரையில்லாமல் குகைக்குப் பட்டினியுடன் திரும்பும் புலி பற்றிப் படித்த ஒரு சிறுகதை நினைவில் வந்தது. அதன் தலைப்பு ஞாபகமில்லை. வேட்டையாட வரும் மிருகத்திடமிருந்து காத்துக்கொள்ள சாது மிருகங்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வெகுமதிகள் அவற்றைப் பலமுறை காப்பாற்றிவிடுகின்றன. பசியுடன் பதற்றத்தையும் சுமந்து திரியும் புலியை எளிதில் கற்பனைசெய்துகொள்ள முடிந்தது. புலியின் வேட்டையில் சிக்கி உயிர்துறக்கும் மானைத் தூரத்திலிருந்து பார்க்கும் பிற மான்களுக்கும் பதற்றம் தொற்றலாம்.

    கோரைப்புற்கள் அசைவதான பரபரப்பு ஏற்பட்டது. கேன்டர்களும் ஜிப்ஸிக்களும் ஒரே இடத்தில் நின்றன. “அங்கு தெரிகிறது அங்கு தெரிகிறது” எனும் சத்தங்கள்! கண்ணை வெறித்துக்கொண்டு சொன்ன திசையில் நோக்கினேன். புற்கள் அசைவது தெரிந்தது. பிராணி கண்ணில் படவில்லை. பக்கத்து கான்டரில் இருந்த அயல் நாட்டுச் சுற்றுலாப்பயணி பைனாகுலரை வைத்து உற்றுநோக்கிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் திருப்தியில்லை; புன்னகையில்லை. புலி தெரிந்திருந்தால் ஒரு புன்னகை மலர்ந்திருக்கலாம். ஜிப்ஸி வாகனங்கள் நகர்ந்தன. எங்கள் ஓட்டுநருக்கு அங்கிருந்து கிளம்ப மனசு வரவில்லை. “அந்தக் கோரைப்புல்லுக்குப் பின்னால் நிச்சயம் புலிக்குட்டி இருக்கிறது” என்கிறார் ஓட்டுநர். ஐந்து நிமிடங்களாயின. கோரைப்புல்லில் இருந்து எதுவும் வெளியே வரவில்லை. ஏமாற்றத்துடன் நகர்ந்தது எங்களது வாகனம்.

    காட்டுக்கு நடுவே மலசலம் கழிக்க சில அறைகள் கட்டப்பட்டிருந்தன. அதற்கருகே வாகனங்கள் சில நிமிடங்கள் நின்றபோது பறவைகள் வந்து பயணிகளின் கைகளிலும் தரைகளிலும் அமர்ந்து விளையாட்டுக் காட்டின. அழகான அடர்-மஞ்சள் நிறப் பட்டையுடன் பறவைகள் பார்க்க மிக வசீகரமாக இருந்தன. என் தலைமீது வந்தமர்ந்த ஒரு பறவை நான் தலைகுனிந்தபோது முதுகில் முத்தமிடுவது போன்று குத்திவிட்டுப் போனது. அதனை உள்ளூரில் புலிப்பறவை என்று அழைப்பார்கள் என்றார் தர்தி. காக்கை இனத்தைச் சார்ந்த புலிப்பறவையின் ஆங்கிலப்பெயர் -ரூஃபஸ் ட்ரீபி.

    இலேசாக இருட்டத் தொடங்கிற்று. புலிகள் பகல்-தூக்கத்திலிருந்து விழித்து உலாவத் தொடங்கும் நேரம். சிறிய நீர்நிலைக்கருகே காத்திருந்தோம். மாமிச உணவுண்ணும் பெரும்பாலான மிருகங்கள் பொதுவாக இரவில் உலவுபவை. மான் போன்று தாவரவகைகளைத் தின்னும் விலங்குகள் சாயங்காலப் பொழுதுகளில் தூங்கச் செல்பவை எனும் சுவாரசியமான பார்வையைப் பகிர்ந்தார் தர்தி.

    புலிகள் தலைகாட்டுவதாயில்லை. வண்டியைத் திருப்பிக் காட்டுப்பகுதி எண் ஒன்றை நீங்கும் தறுவாயில் கிட்டத்தட்ட முந்நூறு மீட்டர் தொலைவில் மாலைச் சூரியனின் ஒளியில் மஞ்சள் தோல் மின்ன எங்களுக்கு முதுகு காட்டிச் சென்றுகொண்டிருந்தது அம்மிருகம். மற்றவர் சொல்லாமலிருந்தால் அதைப் புலி என்று நான் எண்ணுவதற்கே வாய்ப்பு அதிகம். “அதோ பாருங்கள் சிறுத்தை!” என்றார். சிறுத்தையின் தோல்களில் புலிபோன்ற வரிகள் இருக்காது. புலியை விடச் சற்றுப் பலங்குறைந்த மிருகம். புலியைப் பார்க்காத ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டிருந்ததாலோ என்னமோ “சிறுத்தைகளைப் பார்ப்பது புலிகளைப் பார்ப்பதைவிட அபூர்வம்” என்றார் தர்தி.

    ரண்தம்போர் தேசியப்பூங்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 114. புலிகளின் எண்ணிக்கையைவிட அதிகம். புலிகளைக் காட்டிலும் சிறுத்தைகள் கண்ணில் தென்படாமல் இருப்பதில் தேர்ந்தவை.

    “புலியைப் பார்க்கப் போனேன். சிறுத்தை பார்த்து வந்தேன்” என்று முனகிக்கொண்டிருந்தபோது கான்டர், தேசியப் பூங்காவின் வாயிலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. எங்களுக்கு முன் சென்றுகொண்டிருந்த ஜிப்ஸியில் இருந்த இளம்பெண்ணொருத்தி சிப்ஸ் பாக்கெட்டைத் தூக்கியெறிந்தாள். எங்களது வண்டியின் ஓட்டுநர் – முன்னாள் ராணுவ வீரர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தினார். “அம்மா, அக்கா”க்களைச் சேர்த்துச் சில வினைச்சொற்களை உச்சரித்தவாறே அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டைப் பொறுக்கியெடுத்தார். “இது காடு… மிருகங்கள் வாழும் பகுதி… நகரமல்ல” என்று கத்திச் சொன்னார்.

    நன்றி : காலச்சுவடு

  • நுழைவாயில்

    காடு வழியே செல்லும் அந்த மண் பாதை லாகூரையும் முல்தானையும் இணைக்கிறது. இரு பெரு வணிக நகரங்களுக்கிடையே சம தூரத்தில் இருந்தது துலம்பா எனும் பழம் பெரும் ஊர். அங்கு அதிக மக்கள் தொகை இல்லை. துலம்பாவைத் தாண்டியதுமே அடர்த்தியான காடு இரு மருங்கிலும். மிருகங்கள் மட்டுமல்லாது இரவுக் கொள்ளையர்களின் அபாயமும் நிலவியது. பயணம் செல்லும் பல வணிகர்கள் கத்தி குத்துப்பட்டு சாலையோரங்களில் இறந்து கிடப்பதை மறுநாள் பகலில் பயணம் செல்வோர் காண்பதுண்டு. இரவு நெருங்கும் முன்னரே துலம்பாவை அடுத்துள்ள காட்டுப் பிரதேசத்தை பயணிகள் கடந்து விட விழைவார்கள். இல்லையேல் துலம்பாவில் இரவைக் கழிப்பார்கள். துலம்பாவில் சத்திரங்கள் ஏதும் இல்லை. பயணிகள் துலம்பாவாசிகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டி அவர்கள் வீட்டில் தங்கலாமா எனக் கேட்பார்கள். இது அசௌகரியந்தான். எத்தனை பேர் “உள்ளே வாருங்கள் ; எங்கள் அறைகள் ஏதாவதொன்றில் தங்கி கொள்ளுங்கள்” என்று சொல்லி அந்நியர்களுக்கு தங்கள் வீட்டுக் கதவை திறந்துவிடுவார்கள்?

    லாகூரின் வணிகர் – தரம்பால் அடிக்கடி துலம்பாவைக் கடந்து முல்தான் செல்வார். காஷ்மீரக் கம்பளங்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து கொண்டிருந்தார். குதிரை பூட்டிய வண்டியில் கம்பளங்களை அடுக்கிக் கொண்டு ஓர் உதவியாள் சகிதம் மாதம் ஓரிரு முறை அவர் முல்தானுக்கு பயணம் செய்வதுண்டு. துலம்பாவில் இருந்த அவருடைய நண்பரின் குடும்பம் எமினாபாதுக்கு குடி பெயர்ந்துவிட்ட பிறகு துலம்பாவில் அவருக்கு தங்கும் பிரசினை. அதற்காகவே சில மாதங்கள் முல்தானுக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். முல்தானில் அவருடைய முகவராக இருப்பவர் லாகூர் வந்தபோது துலம்பாவுக்கு முன்னதான காட்டுப் பிரதேசத்தில் ஒரு பெரிய சத்திரத்தைக் கண்டதாகச் சொன்னார். அந்த சத்திரத்தை சஜ்ஜன் – கஜ்ஜன் எனும் மாமன் – மருமகன் ஜோடி நடத்தி வருவதாகவும் அந்த சத்திரத்துக்கு நல்ல கூட்டம் வருவதாகவும் என்று கூடுதல் தகவல்களையும் வேறு தந்தார். சில மாதங்களாக முல்தான் வாடிக்கையாளர்களை சந்திக்காததால் நிலுவைத் தொகை பெருத்திருந்தது.

    அடுத்த பயணத்தின் போது சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்தை தேடிக் கண்டு பிடித்தார். முக்கிய சாலையிலிருந்து சற்று தள்ளி இருந்தது சத்திரம். ஆனாலும் சாலையில் செல்வோரின் கண்ணில் படும்படியாகவும் இருந்தது. தரம்பால் சத்திரத்துக்கு சென்ற அன்று ஏறத்தாழ பத்து பேர் சத்திரத்தில் தங்கியிருந்தனர். அவர்களில் இருவர் தரம்பாலின் நண்பர்கள் கூட. நண்பர்களில் ஒருவர் மனைகள் வாங்கி விற்பவர். இன்னொருவர் லாகூர் நகரின் மிகப்பிரசித்தமான பட்டு வியாபாரி. அவர்கள் இருவரையும் பார்த்ததும் கையை ஆட்டி “எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இருவருமே “லாகூர் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அவர்களும் முல்தான் செல்பவர்களாக இருந்தால் வழித்துணையாக இருக்கும் என்று எண்ணினார் தரம்பால்.

    அப்போது தான் கிட்டத்தட்ட ஒரே உயரம், முகஜாடை கொண்ட இருவர் அவரை அணுகினர். அவர்களில் சற்று வயதானவர் தனது வலது கையை சிரம் வரை உயர்த்தி “சலாம்..என்னை சஜ்ஜன் என்பார்கள்” என்றார். “சலாம் சஜ்ஜன்…உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்” என்று சம்பிரதாயமாக தரம்பால் பதிலளித்தார். “இது என் மருமகன் கஜ்ஜன்” அதற்கு பதில் ஏதும் எதிர்பார்க்கவில்லை சஜ்ஜன். “மருமகனே, வாசலில் சென்று இவரின் உடைமைகளை எடுத்து வா” என்றார்.

    “என் உதவியாள் என் சரக்குக்கு காவலாக வண்டியில் இருப்பான்” என்றார் தரம்பால்.

    “எங்கள் வாடிக்கையாளர்களின் சரக்குகளுக்கும் நாங்கள் பொறுப்பாளிகள் ; உங்கள் வண்டியை நீங்கள் சத்திரத்துக்குள்ளேயே நிறுத்திக் கொள்ளலாம். எங்கள் சமையலைறையில் சமையல் வேலைகள் முடிந்ததும் உங்கள் உதவியாள் அங்கு இளைப்பாறிக் கொள்ளலாம்”

    தரம்பாலுக்கு வசதியான ஒரு தனியறை வழங்கப்பட்டது. அங்கு சற்று நேரம் களைப்பாறிய பின்னர் அறை வாசலில் வைக்க்கப்பட்டிருந்த வாளியிலிருந்து நீரெடுத்து முகம் கழுவிக் கொண்டார். அவர் அறை கதவிலிருந்து புல்வெளியைத் தாண்டி சத்திரத்தின் நுழைவாயிலை நோக்கினார். நுழைவாயிலின் வளைந்த சிகரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தன. அப்பியிருக்கும் இருட்டில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருப்பதாலேயே நுழைவாயில் புலப்பட்டது. முப்பது வருடங்களாக இவ்வழியில் பயணம் செய்து கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் சலிப்பே மிஞ்சுகிறது. இது சலிப்பு மட்டுமா? உயிர்ப் பயம் கூட. இந்த சாலையில் பயணம் செய்கையில் அவரின் நண்பர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் பிணங்கள் கூட கிடைக்கவில்லை. இந்த பிரயாணங்களை நிறுத்தும் வழி புரியவில்லை. வாடிக்கையாளர்களை கைவிட முடியவில்லை. அவர்கள் வாயிலாக ஈட்டும் லாபம் இன்றும் இனிக்கவே செய்கிறது. திடிரென்று வண்டி ஞாபகம் வந்தது. இருட்டில் அது எங்கு நிற்கிறது என்று அவருக்கு தெரியவில்லை. நுழை வாயில் நோக்கி நடந்தார். மற்ற அறைகள் எல்லாம் அடைத்துக் கிடந்தன. புல் தரையில் லேசான ஈரம். நடக்க சுகமாயிருந்தது. சத்திரக் காரர்கள் பரவாயில்லை. நாளைக் காலை இவர்களுக்கு நல்ல சன்மானம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

    “உங்கள் வண்டி நுழைவாயிலுக்கு உட்புறம் நிற்கிறது. உங்கள் உதவியாள் உணவருந்திக் கொண்டிருக்கிறான்” – சஜ்ஜனின் குரல் – “வாருங்கள் உங்கள் வண்டி வரை செல்வோம்”

    சஜ்ஜனின் கையில் சிறு தீப்பந்தம். சீராக எரிந்து கொண்டிருந்து.

    நுழைவு வாயிலுக்கும் புல் தரைக்குமான இடைவெளியில் குதிரை வண்டி நின்று கொண்டிருந்தது. குதிரை அருகேயே ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. வண்டியில் உள்ள சரக்குகள் பற்றிக் கேட்டான் சஜ்ஜன்.

    “காஷ்மீர்க் கம்பளம்” என்றார் தரம்பால்

    “நிறைய சரக்கை முல்தான் கொண்டுப்போகிறீர்களே” எனக் கேட்டான் சஜ்ஜன்

    “ஆம், முப்பது வருடங்களாக இவ்வியாபாரத்தில் இருக்கிறேன். முல்தானில் எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள்”

    “நானும் உங்களின் வாடிக்கையாளன் ஆகப் போகிறேன். எனது பத்து அறைகளிலும் கம்பளம் விரிக்கலாமென்றிருக்கிறேன். நீங்கள் எனக்கு நல்ல கழிவு தர வேண்டும்”

    “நிச்சயமாக.”

    “உங்கள் உணவு தயார். நானே அறைக்கு எடுத்து வந்து பரிமாறுகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நீங்கள் சாப்பிட்டு முடித்ததும் கம்பளங்களின் விலை பற்றிப் பேசி முடிவெடுத்துவிடுவோம்”

    அறையை நோக்கிச் சென்றார்கள். அறையின் வாசலில் உணவுத் தட்டோடு கஜ்ஜன் காத்திருந்தான். மூவரும் அறைக்குள் சென்றார்கள்.

    +++++

    பதினைந்து நாட்கள் ஆன பின்னர் தான் தரம்பாலின் உறவினர்களுக்கு பிரக்ஞை வந்தது. தரம்பால் லாகூர் திரும்பவேயில்லை. முல்தானில் இருந்த முகவரை லாகூர் வரவழைத்து விசாரித்த போது தரம்பால் முல்தான் போய்ச் சேரவில்லை என்பது தெரிந்தது. தரம்பாலின் உறவினர்கள் சிலர் லாகூர்-முல்தான் பாதையெங்கும் விசாரித்தனர். முல்தானில் அவரின் பல நண்பர்களுடன் பேசினர். கஜ்ஜன்-சஜ்ஜன் சத்திரத்தையும் விடவில்லை. ஆனால் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. "பல பிரயாணிகள் வந்து சத்திரத்தில் ஒரு ராத்திரி தங்குகிறார்கள் ; மறுநாள் காலை சென்றுவிடுகிறார்கள். இதில் எத்தனை பேரை நாங்கள் நினைவில் வைத்துக் கொள்வோம்? நீங்கள் சொல்பவர் எங்களது சத்திரத்தில் வந்து தங்கவேயில்லை என்று சொல்ல முடியாது; இங்கிருந்து அவர் சென்ற பின்னர் அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி நாங்கள் என்ன சொல்ல முடியும்?" – கஜ்ஜனும் சஜ்ஜனும் ஒரே குரலில் சொன்னது. துலம்பாவாசிகளின் துணை கொண்டு தரம்பாலின் உறவினர்கள் காட்டுப் பகுதிகளில் பல வாரங்களாக தேடினார்கள். தரம்பாலின் அல்லது உதவியாளின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை.

    +++++

    துறவிகளை அவர்கள் அணிந்திருக்கும் உடையை வைத்து, தறித்திருக்கும் சின்னங்களை வைத்து அவர் ஹிந்துவா அல்லது முஸ்லீமா என்று எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஹிந்து துறவிகள் காவி அணிவார்கள். முஸ்லீம்கள் பச்சை அணிவார்கள். முஸ்லீம்கள் மண்டை தொப்பி அணிவார்கள். ஹிந்து துறவிகள் தம் தலைமுடியை திறந்தவாறு விட்டுவிடுவார்கள். துலம்பாவுக்கடுத்த காட்டுப் பிரதேச சாலையில் தன் நண்பருடன் நடந்து கொண்டிருக்கும் இந்த பெரியவரின் சமய அடையாளத்தை அவர் அணிந்திருப்பவற்றை வைத்து கண்டுபிடிக்க இயலாது. இந்த மனிதர் முஸ்லீம் சூபிக்களைப் போல நீள சொக்காய் அணிந்திருந்தார். ஆனால் அது பச்சை நிறமில்லை. அது காவி. ஃபகீர்கள் போட்டுக் கொள்வது போல அவரின் இடுப்பில் ஒரு வெள்ளை பட்டையை போட்டுக் கொண்டிருந்தார். தலையில் ஒரு தொப்பி இருந்தது. ஆனால் அது டர்பனால் மறைக்கப்பட்டிருந்தது. மரச் செருப்புகளை தறித்திருந்தார். தன் சமய அடையாளத்தை நீர்க்கச் செய்யும் முயற்சி போன்று தோன்றியது அவர் உடை அணியும் விதம்.

    சத்திரங்களின் வசதி அவருக்கு தேவையற்றதாயிருந்தது. இல்லற வாழ்க்கையை விட்டு நீங்கிய பின் அவர் மேற்கொண்ட பிரயாணங்களில் சாலையோர மரத்தினடியில் உறங்கவே அவர் விரும்பினார். அவருடன் நடந்த அவரின் நண்பனுக்கு அத்தனை மனவுறுதி இருக்கவில்லை. வெறும் அன்பின் நிமித்தம் கூட நடந்த நண்பன் அவருடன் உரிமையுடன் விவாதம் செய்தான். அன்றிரவு மரத்தடியில் உறங்க அவனுக்கு விருப்பமில்லை. மதியத்திலிருந்தே அவருடன் வார்த்தை யுத்தம். இருட்டத் தொடங்கிவிட்டது.

    "வா மர்தானா..அந்த ஆலமரத்தினடியில் அமர்ந்து இன்றைய இரவைக் கழிப்போம்" என்றார் பாபா (பெரியவர்). பாபா அதை சொல்லும் நேரத்தில் அவர்கள் இருவரும் கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்துக்கு முன்னால் வந்தடைந்திருந்தனர்.

    ஆலமரத்தினடியில் அன்றிரவை கழிப்பதில் விருப்பமில்லை என்பதை மர்தானா மீண்டுமொரு முறை பாபாவிடம் வலியுறுத்தினான். "நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லையென்றால் உங்களுடன் இந்த பயணத்தில் இனி வர மறுப்பேன்". மர்தானா உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததை பாபா காதில் விழவில்லை. கஜ்ஜன் – சஜ்ஜன் சத்திரத்தின் நுழை வாயில் அவர் பார்வையில் பட்டது. சில கணங்கள் அந்த சத்திரத்தின் வாயிற்சிகரத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு பெயரை அவர் வாய் முணுமுணுத்தது. பிறகு, மர்தானாவை நோக்கித் திரும்பி "உன் இஷ்டப்படியே ஆகட்டும்…இன்றிரவை எதிரில் இருக்கும் சத்திரத்தில் கழிப்போம்" என்றார்.

    பொதுவாக யோகிகளும் சாதுக்களும் இந்த சத்திரத்தை அண்டுவது கிடையாது. பணக்கார வணிகர்களை, அரச அதிகாரிகளை விரும்பி வரவேற்பதை பழக்கமாகக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கு யோகிகளையும் சாதுக்களையும் வரவேற்பதில் ருசி கிடையாது. சத்திரத்துக்கு வந்த அன்றைய விருந்தினர்களைக் கண்டவுடன் கஜ்ஜனும் சஜ்ஜனும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் தம் அதிருப்தியை முகத்தில் காட்டவில்லை. பாபாவையும் மர்தானாவையும் வரவேற்று உணவளித்து உபசரித்த பிறகு அவர்களின் அறையை காண்பித்துக் கொடுத்தனர். விருந்தினர்களிடமிருந்து கொள்ளையடிப்பது தினமும் நிகழ்த்துவது தான். தொடர்ந்து பணக்கார விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இந்த பாபாவிடம் உண்மையான விருந்தோம்பலை காட்டிவிட்டுப் போவோமே என்று சஜ்ஜன் நினைத்திருக்கலாம்!

    விடுதியில் அன்று அதிகம் விருந்தினர்கள் இல்லை. மூன்று அறைகளில் மட்டுமே விருந்தினர் இருந்தனர். மூன்று அறைகளும் மூடிய பிறகு முன்னிரவில் மாமனும் மருமகனும் சமையலறையில் சந்தித்தனர்.

    "அவ்விருவரையும் உயிருடன் விடுவதா அல்லது கொல்வதா?" – மாமனாகிய சஜ்ஜன் கேட்டான்.

    "இந்த இரண்டு ஃபகீர்களைக் கொன்று என்ன பயன்? நமக்கு உபயோகமான எதுவும் அவர்களிடம் இருக்குமெனத் தோன்றவில்லை. அவர்கள் இருவரும் அதிக நாள் இங்கே இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நாளோ இரண்டு நாளோ தங்கிக் கொள்ளட்டுமே" – கஜ்ஜனின் பதில்.

    "கஜ்ஜன், நீ சின்னப் பையன். இந்த புனித ஆசாமிகளைப் பற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பயண வழியில் கொள்ளையடிக்கப்படப் போகும் பயம் காரணமாக செல்வந்தர்கள் பலர் இந்த மாதிரி சாது வேஷம் போட்டுக்கொள்வதுண்டு. அவர்களிருவரும் லாகூர் நகரின் பெரிய வணிகர்கள் என்பது என் யூகம். பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் மிச்சம் பிடிக்க இது ஓரு வழி”

    “அவர்கள் வணிகர்கள் என்றால் எங்கே அவர்களின் உடைமைகள்? இருவரும் வெறும் கையை வீசிக் கொண்டல்லவா வந்தார்கள்?”

    “தம் உடைமைகளை காட்டுக்குள், மயானத்துக்கருகே, எங்கேனும் மறைத்து வைத்து விட்டு இங்கே நுழைந்திருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

    “இல்லை மாமா, எனக்கென்னவோ நீங்கள் அவர்களைப் பற்றி தவறாகக் கணிக்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். எனினும், அவர்களை நீங்கள் கொல்லத்தான் வேண்டுமென்று சொன்னால் அந்த காரியத்தில் ஒத்தாசையாய் இருப்பேன். ஆனால், துறவிகளின் கோபத்துக்கு ஆளாவதை எண்ணி அஞ்சுகிறேன். அவர்கள் பல மந்திர சக்திகளை பெற்றவர்களாக இருந்தால்..அவர்கள் நிஜமாகவே கடவுளின் மனிதர்களாக இருந்தால்..”

    “முட்டாள்தனமாகப் பேசாதே…இது கலியுகம்…இவ்வுலகத்தில் புனிதர்கள் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அனைவரும் ஏமாற்றுக்காரர்கள். ஆன்மீகத்தை வியாபாரமாக ஆக்கிவிட்டவர்கள்”

    +++++

    மர்தானா மகிழ்ச்சியாயிருந்தான். அவனுடைய வேண்டுகோளுக்கு பாபா செவி மடுத்தது அவனுக்கு உற்சாகத்தை தந்தது. பாபாவுடன் பேச முயன்றான். பாபா பதிலேதும் அளிக்காமல் எதை பற்றியோ யோசனையில் இருந்தார். மர்தானாவுக்கு குற்றஉணர்வு ஏற்பட்டது. அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவரை சத்திரத்துக்குள் அழைத்து வந்துவிட்டது தான் பாபாவின் மௌனத்துக்கு காரணமாக இருக்கும் என்று நினைத்தபோது அளவிலா வருத்தம் மேலிட்டது. அறையின் ஓர் ஓரத்தில் பதான்கள் மீட்டும் ரூபாப் இசைக்கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து மீட்டத் தொடங்கினான் மர்தானா. உருக்கமான இசை பிறந்ததும் பாபா கண்ணை மூடியவாறே தியானம் செய்பவர் போல இருந்தார். சில நிமிடங்களில் மர்தானாவின் இசையோடு அவரின் குரலும் சேர்ந்து கொண்டது. அவர் உதட்டிலிருந்து புனித குர்பானி வெளிப்பட்டது.

    “பித்தளை ஒளிரும், பளபளக்கும், ஆனால் தேய்த்தால், அதன் கருந்தன்மை தோன்றுகிறது. கழுவினால், அதன் அசுத்தம் அகல்வதில்லை, ஆயிரம் முறை கழுவினாலும் ; என்னுடன் பயணப்படுபவர்கள் மட்டுமே என் நண்பர்கள் ; எங்கு கணக்குகள் கேட்கப்படுகின்றதோ, அங்கு அவர்கள் என்னுடைய வரிசையில் நிற்பார்கள்"

    பாபா பாடலை நிறுத்திய பின்னும் மர்தானாவின் ரூபாப் இசை தொடர்ந்தது. பாபாவின் களைப்பு நீங்கிவிட்டது போலிருந்தது. அவர் வெளிப்படுத்திய சொற்கள் அவரின் களைப்பை முற்றிலும் உறிஞ்சிவிட்டதோ என்னமோ! மர்தானாவுக்கு தெளிவாகத் தெரிந்தது. பாபாவின் வரிகள் தன்னை நோக்கியது. அவரின் செய்தி தனக்காகத்தான் என்று அவன் உணர்ந்தான். அவன் கண்ணிலிருந்து அமைதியாக கண்ணீர் உருண்டோடியது. இசையின் சத்தத்தில் தன் உணர்ச்சிகளை கரைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

    அறைக்கு வெளியே கையில் கத்தியுடன் காத்துக் கொண்டிருந்த சஜ்ஜனுக்கும் கஜ்ஜனுக்கும் கூட பாபாவின் குர்பானி காதில் விழுந்தது. அறைக்குள்ளிருக்கும் இருவரை மிரட்டி அவர்கள் தம் உடைமைகளை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை கேட்டுக் தெரிந்து கொண்டு பின்னர் தீர்த்துக் கட்டிவிடும் நோக்கத்துடன் அறைக்கு வெளியே வந்து நின்றவர்களை கட்டிப் போட்டது பாபா பாடிய குர்பானி. மர்தானா அளவுக்கு நெகிழவில்லையெனினும் சஜ்ஜனுக்கு பாபா பாடுவது தம்மைப் பற்றியோ எனும் சந்தேகம் துளிர் விட்டது. இசை நிற்கட்டும் எனக் காத்திருக்கலானான்.

    பாபா மீண்டும் பாடத் துவங்கினார்

    “ எல்லா பக்கங்களிலும் வர்ணம் பூசப்பட்ட வீடுகள், மாளிகைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் உள்ளன; ஆனால் அவை உள்ளே காலி, பயனற்ற இடிபாடுகள் போல நொறுங்குவன அவை. வெள்ளை இறகுகள் கொண்ட ஹெரோன்கள் புனித ஆலயங்களில் வாழ்பவை, அவை உயிரினங்களைக் கிழித்து சாப்பிடுகின்றன, எனவே அவை வெள்ளை என்று குறிக்கப்படுவதில்லை. என் உடல் செமல் மரம் போன்றது; என்னைப் பார்த்து, மற்றோர் முட்டாளாகிறார்கள். அதன் பழங்கள் பயனற்றவை-என் உடலின் குணங்களைப் போலவே. குருடன் ஓருவன் பாரமான சுமையைச் சுமக்கிறான், மலைகள் வழியாக அவன் பயணம் மிக நீளமானது. என் கண்களால் பார்க்க முடியும், ஆனால் என்னால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எப்படி மேலே ஏறி மலையை கடக்க முடியும்? சேவை செய்வதிலும், நல்லவராக இருப்பதிலும், புத்திசாலித்தனமாக இருப்பதிலும் என்ன நன்மை இருக்கிறது? ஓ நானக், கடவுளின் நாமத்தை ஜெபித்தவாறிருங்கள், அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.”

    அறைக்கு வெளியே கத்தியுடன் நின்றிருந்த சஜ்ஜனின் உடலில் ஓர் அதிர்வு. "மாமா என்னாச்சு" என்று கேட்டான். சஜ்ஜன் அதற்கு பதில் சொல்லாமலேயே கதவை லேசாகத் தொட்டான். திறந்து கொண்டது. பாபா இருந்த அறை தாழிடப்பட்டிருக்கவில்லை. அறைக்குள் நுழைந்தான் சஜ்ஜன். அவன் கையில் இருந்த கத்தியைப் பார்த்து மர்தானாவுக்கு உதறல். ஆனால் அடுத்த கணம் வேறு அதிசயம் நடந்தது. தரையில் அமர்ந்திருந்த பாபாவின் பாதத்துக்கருகே கத்தியை வைத்துவிட்டு அவர் காலில் வந்து விழுந்தான். பாபா அமைதியாய் இருந்தார். அவரில் ஒரு சலனமும் இல்லை.

    மாமாவின் செய்கைகள் கஜ்ஜனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. மாமாவின் வழியில் மாறாமல் செல்லும் மருமகனுக்கு வேறென்ன தெரியும்!. மாமாவைப் போல அவனும் பாபா முன்னர் மண்டியிட்டான்.

    பாபா அன்று மாலை உதிர்த்த பெயரை அறையில் இருந்த அனைவர் காதில் விழும்படி மீண்டும் உதிர்த்தார்.

    "தரம்பால்….தரம்பால்"

    சுல்தான்பூரில் பாபா இல்லறவாசியாக இருந்தபோது திவானின் அலுவலகத்தில் கொள்முதல் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் கம்பளம் விற்க வந்த தரம்பாலுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு பற்றி மர்தானா ஏற்கனவே அறிந்திருந்தான். பாபாவைச் சந்திக்க சுல்தான்பூர் வரும் சமயங்களில் அவனும் தரம்பாலை ஓரிரு முறை சந்தித்திருக்கிறான்.

    சஜ்ஜனுக்கு ஒருவாறு புரிந்தது.

    "எத்தனை பேரைக் கொன்றிருப்பேன் என்பதற்கு ஒரு கணக்கு கிடையாது" – அவனாகவே ஒப்புக்கொண்டான்.

    "ஹ்ம்ம்..இந்த கம்பளம்" என்று பாபா சொன்னபோது அவனுக்கு இன்னும் நன்கு புரிந்தது.

    "பாபா..நீங்கள் யார்"

    "என் பெயர் நானக்"

    +++++

    அடுத்த நாளிலிருந்து சத்திரம் கடவுள் இல்லமாக மாறியது. சமய வேற்றுமை பாராமல் அனைவர்க்கும் அங்கே இடமளிக்கப்பட்டது. உணவு இலவசமாக வழங்கப்பட்டது. செல்வந்தன் – வறியவன் என்னும் வேற்றுமைகள் அங்கே பாராட்டப்படவில்லை. சாதி வேறுபாடுகள் கடவுள் இல்லத்தில் அனுமதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் புதிய பெயர் பொறிக்கப்பட்டது. குருத்வாரா. சீக்கிய மரபின் முதல் குருத்வாரா அது. பாகுபாடின்றி உணவளிக்கும் பழக்கம் முதல் குருத்வாராவாகிய சஜ்ஜன் – கஜ்ஜன் சத்திரத்திலிருந்து தொடங்கியது. இதுவே லங்கர் மரபாக இன்றைய குருத்வாராக்களிலும் தொடர்கிறது.

    +++++

    நன்றி : சொல்வனம்