Tag: மாலை

  • ஒரு நிமிஷம்

    அலுவலக நண்பர்களுடன் மாலைப் பொழுதுகளைக் கழிப்பது இப்போதெல்லாம் சிறு பதற்றத்தை தருகிறது. இரு நாட்கள் முன்னம் நண்பர் ஒருவருடன் உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். பல வருடம் வெளிநாடுகளில் வேலை செய்தவர். அலுவலக வதந்தி, வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எனப் பாதுகாப்பாகப் போய்க்கொண்டிருந்த உரையாடல் எப்போது சமூகநீதி நோக்கித் திரும்பியது என்று தெரியவில்லை.

    • இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல
    • உயர் சாதிக்காரங்க பிற்படுத்தப்பட்டவர்களுக்கு விட்டுத் தராங்க இல்லாட்டி பகிர்ந்துக்கறாங்க
    • எல்லோர்க்கும் சம நீதி வந்துட்டா எல்லாம் சரியாயிடும்
    • என்னோட கேரியர்ல யாரோட சாதியையும் கேட்டதில்ல
    • நம்ம தாத்தாக்கள் எக்ஸ்ப்ளாய்ட் பண்ணியிருக்கலாம். இப்ப யாரும் பண்றாங்கன்னு தோணலை. நான் பார்த்ததில்லை.
    • கல்யாணம் என்பது கலாசாரம் சார்ந்தது. ஒருத்தன் அவன் சாதிக்காரப் பெண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டான்னா அவன் தலித்துகளை அவமானப்படுத்துகிறான் என்று அர்த்தமில்லை. நவீனத்துவத்தால இந்தச் சிக்கலை தீர்க்க முடியலை. கல்லூரியில் படித்த தாராளவாத அறிவொளி பெற்ற மேற்கத்திய நாட்டவர் ஒருவர் கீரை பறிக்கும் மெக்சிகன் தொழிலாளியை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்வது மிகவும் அரிது.
    • இதில் எனக்கு சில தீவிரமான கருத்துக்கள் உள்ளன.. அனைவரையும் ஒரே நேரத்தில் பிராமண+க்ஷத்ரிய+வைஷா+சூத்திரராக்கும் நேரம் இது என்று நினைக்கிறேன். இது நடக்க வேண்டுமானால், சமுதாயத்தை தட்டுப்படுத்தும் சட்டங்கள் தேவை.

    சகிப்புத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. நானும் லால் சிங் சத்தா, கரீனா கபூர், என்று உரையாடலின் – இதை இப்படிக் குறிப்பிட தயக்கமாக இருக்கிறது. ஒருவரே பேசிக் கொண்டிருப்பது எப்படி உரையாடல் ஆகும்? – மையத்தை கலைக்க முயன்று கொண்டிருந்தேன். டேய் வாயை மூடுடா என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

    அவர் பேச்சு “ரிசர்வேஷன்” என்ற சப்ஜெக்டுக்குள் நுழைந்தது. என் பதற்றம் அதிகரித்தது. Affirmative Action, Sense of Entitlement போன்ற சொற்களின் தாத்பர்யத்தை உணராமல் அவர் பேசிக் கொண்டு போனார்.

    கிளாஸில் எஞ்சியிருந்ததை வாயில் கவிழ்த்துக் கொண்ட பின் சத்தத்துடன் மேசையில் வைத்தேன்.

    ஒரு நிமிஷம்! என்று சொல்லி அவர் பேச்சை இடைமறித்தேன். நான் ஏதோ அவர் மீது வாந்தியெடுத்துவிடுவேனோ என்று அவர் நினைத்திருக்க வேண்டும். கொஞ்சம் பின்னுக்குச் சென்று நாற்காலியின் மீது சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

    எனக்கு தொண்டை எரிவது போல் இருந்தது.

    ஒரு நிமிஷம்! – எச்சிலை விழுங்கிக் கொண்டேன்.

    அவர் கவனம் முழுதும் என் மீது இருப்பதை உறுதி செய்த பின்னர் –

    “தயவு செய்து திறந்த மனதுடன் பின்தங்கியவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதைப் பரிவுடன் படியுங்கள். உங்கள் அனுபவத்தின் கண் கொண்டு மட்டுமே எல்லாவற்றையும் பார்க்காதீர்கள். நமது அனுபவம் மற்றும் சொந்தப் பார்வையை விட இந்த உலகம் மிகப் பெரியது. முங்கேகர், நூன், ஓம்வெல்ட் போன்ற தலித் அறிவுஜீவிகளின் புத்தகங்களையும், மாபெரும் ஆளுமையான பாபா சாஹேப் அம்பேத்கரின் புத்தகங்களையும் படிக்குமாறு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அம்பேத்கரின் The Annihilation of Caste வாசித்த பிறகு எனது நிலைப்பாடு மற்றும் கருத்துகளை வெகுவாக மாற்றிக்கொண்டேன். என்னை வரையறுக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டிருந்த பிறப்பு சார்ந்த அடையாளத்திலிருந்து வெளியே வர முடிந்தவரை முயற்சி செய்வது என்று அப்போதுதான் முடிவெடுத்தேன்..”

    அவர் எதுவும் பேசாமல் என்னைச் சில கணங்கள் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய உளறல்களுக்கு இது தான் மிகச் சிறந்த come back என்று தோன்றியது.

    Fair enough என்று முணுமுணுத்தார்

    எனது நெஞ்செரிச்சல் குறைந்து சற்று குளிர்ச்சி பாய்ந்தது.

  • அர்ஜுனன் காதல்கள் – உலூபி

    @ Dolls of India
    @ Dolls of India

    வளைந்தோடும் நதியின் கரையில்
    நீராடும் பார்த்தனின்
    இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம்.
    வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய்
    அது பாதத்தை தீண்டிடவும்
    நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான்.
    ஒளி ஊடுருவும் மாளிகையின்
    அறையில் விழித்தான்
    வெளியே நாற்புறமும்
    மீன்களும்
    நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன
    பார்த்தனின் முன் எரிகுண்டம் ;
    நெய்யிட்டு
    தீ வளர்த்தான்.
    அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது
    அருகிருந்த பாம்பின் கண்களில்
    படர்ந்திருந்த இச்சைத்தீ.
    கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம்
    பாம்பு
    பெண்
    பாம்புப்பெண்
    தீச்சடங்கு முடியவும்
    “இது சாட்சி” என்ற சங்கல்பத்துடன்
    பார்த்தனை நோக்கினாள்
    திரௌபதியும் யுதிஷ்டிரனும்
    இணைந்திருந்த அறையினுள்
    விபத்தெனவே நுழைந்ததனால்
    விதித்துக் கொண்ட வனவாசம் ;
    கவர்ந்திழுக்கும்
    சர்ப்பப்பெண்ணுடன்
    கூடுதல் முறையாகுமா?
    பாம்புப்பெண்
    அவனின் மனதோடு மௌனமாய்ப் பேசினாள்
    “சாபமில்லை ; மூத்தோர் சொல்லில்லை
    உமக்கு நீரே வழங்கிக்கொண்ட
    வனவாசத்தில்
    உம் மேல் ஆசையுற்று அணுகுபவளைக்
    கூடுதலில் பாவமில்லை”
    மாலையென காலடியில் சுருண்டது சர்ப்பம்
    மானிடப் பெண்ணாக எழுந்து
    இதழ் குவித்து நெருங்கினாள்
    அர்ஜுனன்
    காமநோய் தீர்க்கும் வைத்தியனானான்.
    நதியின் உயிரினங்கள்
    அறையின் திரையாகின

    oOo

    பின்னொருநாளில்
    நதிக்கரை மேடொன்றில்
    வலியுடன் கண் விழித்தான்
    விஷ பாணம் தாக்கி
    புண்ணான அவனுடலை
    பாம்புப்பெண்
    நாவால் வருடினாள்
    சற்றருகே ஒரு வாலிபன்
    வில்லும் அம்புமாய்
    பின்னே ஒரு வெள்ளைக் குதிரை
    யாரிவன் என்னைப் போல்?
    எங்கிருக்கிறோம்?
    கனவிலா? நனவிலா?
    உடலெங்கும் பாம்பு
    ஊர்ந்து வைத்தியம் பார்த்தது
    சலசலக்கும் நதியில்
    முதலைகள் மூன்று நீந்திச் சென்றன.
    இவைகளை முன்னர் சந்தித்திருக்கிறோமோ?
    இறந்தகால நிகழ்வுகளும்
    நிகழ்கால பிரக்ஞையும்
    ஒன்றிணைந்து குழம்பாகி
    வேறுபாடு காணவியலா கலவையாயின

    oOo

    “விஷமற்ற பாம்பினங்களில்
    நான் அனந்தன் ;
    ஆயிரம் பிரபஞ்சங்கள்
    கடுகளவில் என் தலையில் சுழலுகின்றன”
    கண்ணன் சிரிக்கிறான்

     

    நன்றி : பதாகை