Tag: மரபு

  • நந்த் ரிஷி

    கஷ்மீரின் இஸ்லாமியமயமாக்கம் 14ம் நூற்றாண்டில் தொடங்கியது. இந்து-பவுத்த மக்கள் பெரும்பான்மையாக இருந்த நிலப்பரப்பு எப்படி இஸ்லாமியமயமானது என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிப்போனபோது கிடைத்தது – அலீ ஹம்தானி – எனும் பெயர். இரானிலிருந்து எழுநூறு சீடர்களோடு வந்து சாதாரண கஷ்மீரிகளை இஸ்லாம் பக்கம் ஈர்த்தவர் ஹம்தானி.

    காஷ்மீரின் ஆளும் ஷா மிர் வம்சத்து மன்னர்களை இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைபடுத்தி முழுக்க முழுக்க கஷ்மீரை இஸ்லாமியமயமாக்க வலியுறுத்தினார். இருப்பினும், இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் வேகம் பற்றி மிர் சயீத் அலி ஹமதானி-க்கும் சுல்தான் குதுப் அல்-தீனுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது. கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்து கொள்ள முடியாமல் சயீத் அலி ஹமதானி காஷ்மீரை விட்டு வெளியேறினார்.

    இரானின் உயர் கலாச்சாரத்தை கஷ்மீர் பண்பாட்டு நிலப்பரப்பில் புகுத்த ஹம்தானிக்குப் பின் வந்த சீடர்கள் தொடர்ந்து முயன்ற போது எழுந்த மக்கள் இயக்கம் ரிஷி மரபு. இவ்வியக்கத்தின் நிறுவுனர் – நந்த் ரிஷி என்று அழைக்கப்படும் நூருத்தின் வலி. ஷேக் உல் ஆலம் எனும் சிறப்புப் பெயராலும் இவர் அறியப்படுகிறார்.

    நந்த் ரிஷி காஷ்மீரிகளின் ஆன்மீக மற்றும் சமூக விவகாரங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது கவிதைகள் மற்றும் போதனைகள் பாமர மக்களை பரவலாக சேர்ந்தடைந்தன. உள்ளூர் மக்களால் நந்த் ரிஷியின் பல்வேறு பாடல் வரிகள் அன்றாட வாழ்வில் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டது. இது இன்றளவும் தொடர்கிறது. ஆன்மிகம், பக்தி, உண்மைத் தேடல் ஆகிய கருப்பொருள்களைத் தம் கவிதைகள் வாயிலாக ஆராய்ந்தார் நந்த் ரிஷி.

    நந்த் ரிஷியின் சம காலத்தவர் லல்லா எனப்படும் லால் டேட். சைவ சமய சித்தரான லல்லா கஷ்மீரி மொழியின் முதல் இலக்கியவாதியும் கூட. நந்த் ரிஷி லல்லாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்றும் ரிஷியின் தாயார் லல்லாவின் நெருங்கிய தோழி என்றும் கூறப்படுகிறது. இந்து லல்லா – இஸ்லாம் நந்த் ரிஷி – இவர்கள் பற்றி ஏராளமான தொன்மைக்கு கதைகள் கஷ்மீர் மண்ணில் புழங்குகின்றன. ஆபப்ரம்ஷ – பிராகிருத மொழியை விட்டு கஷ்மீரி மொழியைப் பேசத் தொடங்கியிருந்தது கஷ்மீர். இந்து-பவுத்த சமூகத்திலிருந்து இஸ்லாம் சமயத்தின் பரவலாக்கத்தையும் கண்டு கொண்டிருந்தது பள்ளத்தாக்கு. நிலம் அதிரும் மாற்றங்களுக்கு நடுவே தூர வெளிச்சமாய் கஷ்மீரின் பண்பாட்டுத் தொடர்ச்சியை உறுதி செய்தனர் இந்த இரு ஆளுமைகள். லல்லாவின் “வாக்”, ரிஷியின் “ஷ்ருக்” – தனித்துவமிக்க வடிவங்களில் இருவரும் புனைந்த கவிதைகள் “கஷ்மீரியத்”தின் வேர்கள்!


    மரணம் ஒரு சிங்கம்
    எப்படி அதனிடமிருந்து தப்பிக்க முடியும்?
    ஆட்டு மந்தையிலிருந்து
    ஆட்டுக்குட்டியைப் போல அது உன்னைத் தூக்கிச் செல்லும்

    ——————————————————————

    பயம், பற்று, வன்முறை எண்ணம்
    நான் தவிர்த்தவை
    வாழ்நாள் முழுதும்
    நான் நடந்தது
    ஒற்றைப்பாதை
    சிந்தனையின் நீரில் குளித்து
    ஆனந்தத் தனிமை எனும்
    தங்குமிடம் நோக்கி நடந்தேன்

    ——————————————————————

    முடிந்தால் பசித்தவர்க்கு உணவளி
    அம்மணமானவரின் ஜாதியைக் கேட்காதே
    ஆயிரம் மடங்கு அறத்தை ஆதாயமாய்ப் பெறு
    அன்புச் சகோதரரே, நந்தா
    அதை ஒருபோதும் இழக்க மாட்டீர்

    ——————————————————————

    வீட்டு வாசலில்
    விழிப்பில் அமர்ந்திருப்பவருக்கு
    அவரது சொந்த சர்பத்தை
    அவர் வழங்குவார்:
    அவருடைய பக்தர்கள் வேறு யாரோ, ஆனால்
    ஒரே ஒரு பிரார்த்தனையில்
    அவர் ஆசீர்வதிப்பவர்,
    செழிப்படைவார்

    ——————————————————————

    என் பக்கத்தில் அவன்
    அவன் பக்கத்தில் நான்
    அவனுடன் ஆனந்தமாக உணர்கிறேன்
    வீணில், அவனைத் தேடி எங்கோ சென்றேன்
    என் நண்பனோ எனக்காக
    என் வீட்டில் எழுந்தருளினான்

    ——————————————————————

    “சிவ சிவ”வெனும் கோஷம்
    சிவனை எழுப்பாது
    காங்கிர் கங்குகளில் நீயிடும் நெய்யை
    உட்கொண்டு வலுவாக இரு அல்லது
    உனக்குத் தேவையில்லையெனில்
    மற்றவர்க்குக் கொடு

    ——————————————————————

    One of the oldest Sufi Shrine in Kashmir, dedicated to Nund Rishi – Charar e Sharif
    Srinagar International Airport is named after Nund Rishi – Sheikh ul Alam Airport
  • இரு மரங்கள் 

    தன்னுடைய ஞான முயற்சியின் சகாவாக போதி மரத்தை ஒரு வாரத்துக்கு நன்றியுணர்ச்சியுடன் புத்தர் நோக்கிக் கொண்டிருந்தார் என்று பௌத்த மரபு சொல்கிறது. பிற்காலத்தில் அந்த போதி மரத்தைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பினார் அசோக மாமன்னர். போதி மரத்தின் மேல் அசோகர் கொண்டிருந்த அளவற்ற பக்தியை சகிக்க இயலாமல் அவருடைய அரசிதிஸ்ஸாரக்காபோதி மரத்தின் கீழ் முள் செடிகளை வளர்த்ததாகவும் அதன் காரணமாக மிக விரைவில் போதி மரம் பட்டு வீழ்ந்ததாகவும் தொன்மக் கதை ஒன்று உண்டு. அதே இடத்தில் இன்னொரு போதி மரம் வளர்ந்ததாகவும் அந்த மரம் புஷ்யமித்ர சுங்கன் என்னும் மன்னனால் வெட்டி எறியப்பட்டதாகவும், பின்னர் அடுத்து வளர்ந்த போதி மரம் கி பி ஆறாம் நூற்றாண்டில் கௌட மன்னன் சசாங்கனால் வெட்டி எறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அசோகர் காலத்தில் இருந்த மூல போதிமரத்தின் கிளை இலங்கைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுராதாபுரத்தில் நடப்பட்டு இன்றளவும் உயிருடன் உள்ளது. உலகின் மிகப்பழமையான தாவரம் என்று தாவரவியல் வல்லுநர்கள் அனுராதாபுரத்தின் போதிமரத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

    புத்தருக்கு பல  நூற்றாண்டுகளுக்கு  முன்பாக  இன்றைய  கிழக்கு இரானில் புழங்கியவரும் இறைத்தூதர் என போற்றப்படுபவரும்  சரதுஷ்டிரர் என்றும் ஜொராஸ்டர் என்றும் குறிப்பிடப்படும் ஜொராஸ்ட்ரிய சமயத்தின் நிறுவுனர் சுவர்க்கத்திலிருந்து ஒரு சைப்ரஸ் மரக்கிளையை எடுத்து வந்ததாக ஷாநாமாவில் பிர்தவுசி குறிப்பிடுகிறார். நாட்டின் மன்னனாக இருந்த விஷ்டாஸ்பா ஜொராஸ்டிர மதத்தை தழுவியவுடன் அக்கிளையை இன்றைய இரானில் உள்ள காஷ்மர் எனும் இடத்தில் ஜொராஸ்டிரர் நட்டார் என்பது ஜொராஸ்டிர மரபு. ஜொராஸ்டிரர்கள்  அதை புனித மரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வணங்கி வழிபட்டு வந்தனர். கி பி 861 இல் அப்பாஸித் காலிஃபா அல்முத்தகீல் அம்மரத்தை வெட்டிச்சாய்த்து அதன் மரக்கட்டைகளை சமாராவில் (இன்றைய இராக்) அவர் கட்டிய அரண்மனையின் உத்திரமாக பயன்படுத்திக் கொண்டார். அந்த கோட்டை சமாராவில் இன்னும் நின்று கொண்டிருக்கிறது.