Tag: மனம்

  • வொஹு மனோ-வின் தூய்மை

    இனத்தின் தூய்மைக்கு
    மாறாக
    மனத்தின் தூய்மையையே
    நான் விரும்புகிறேன்

    அஹுரா மஸ்டாவின்
    அருளை இழப்பதைவிட
    மனிதர்களின் கோபத்தை
    எதிர்கொள்வது மேல்
    உலகம் முழுவதும்
    நாம் கண்டுபிடித்துவரும்
    பண்டைய நாகரிகங்கள்
    மனத்தின் தூய்மைக்கு
    நேரடி சாட்சி

    மனம் ஒரு வலைப்பின்னல்
    திரும்பத்திரும்ப
    ஒவ்வொரு வினாடியும்
    குறுக்கும் நெடுக்குமாக எண்ணங்கள்
    நல்ல எண்ணங்களை
    உலவ விடுங்கள்
    கெட்ட எண்ணங்களின்
    சுழற்சி இல்லாது போகட்டும்

    வெறுக்கத்தக்க எண்ணங்களில்
    எதிர்மறை உணர்ச்சிகளில்
    மனத் தூய்மை வீணாகியிருந்தால்
    ஒருபோதும்
    பண்டைய நாகரிகங்கள்
    கண்டுபிடிக்கப்பட்டிரா!


    Copyright ©2008 Farida Bamji

    Translation in Tamil : by the blogger

  • ஊர்பேர்

    சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக வந்து விழுந்தன. நஜஃப்கர் தாண்டியதும் குறுகலான சந்தில் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கினோம். சற்று தூரத்தில் காரில் சிஎன்ஜி குறைவு என்பதால் அதை நிரப்புவதற்காக நின்ற போது யாரோ எனக்கு போன் செய்தார்கள். யார் போன் செய்தது? மனைவியோ குழந்தைகளோ நிச்சயமாக இல்லை. அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எண்ணுகிறேன். ஞாயிற்றுக்கிழமை அல்லவா பயணமானோம்? அலுவலகத்திலிருந்தோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அழைப்பு வந்திருக்க முடியாது. சிஎன்ஜி நிரப்பிய பின்தான் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கிக் கொண்டோமோ? ஊர் பேரை நினைவுபடுத்திக் கொள்ளச் சென்ற மனப்பயணம் வேறு சிலவற்றையும் நான் மறந்து போகிறேன் என்பதை புலப்படுத்தியது.

    எந்த ஊரை நோக்கிப் பயணம் என்பது மூலவினா. அதற்கு விடையளிக்கும் வழியில் நிறைய துணைவினாக்கள். யார் போன் செய்தார்கள்? எனக்கு ஓட்டுனர் பெயரும் ஞாபகமில்லை. காய்கறிச் சந்தை நெரிசல் முதலில் வந்ததா? சிஎன்ஜிக்காக நின்றது முதலில் வந்ததா? தெளிவு என்பது கூரான ஞாபக சக்திதான். இல்லை..அப்படியும் சொல்லிவிட முடியாது. தெளிவு என்பது தெளிவான மன நிலை. நினைவுத் துல்லியம் தெளிவின் முக்கிய அங்கம் என்று சொல்லிக் கொள்ளலாம். 

    சிஎன்ஜி ஸ்டேஷனுக்கப்பால் என் மனப்பயணம் நின்றுபோனது. எதையாவது பற்றி நிற்காவிடில் கீழே விழுந்துவிடுவோமில்லையா?  பிடி தளர்ந்து தடுமாறுகையில் ஏதாவது ஒரு நினைவைப் பிடித்துக் கொண்டால் நம் இருப்பு உறுதியாகும்.

    குர்கான் வரைபடத்தை விரித்தேன். பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன?  நஜஃப்கரை நோக்கி விரலை நகர்த்தினேன். அதைச் சுற்றி பல ஊர்கள், கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ரோகிணி, பகதூர்கர், பவானா……வெறும் பெயர்கள்…..எல்லாம் பெயர்கள்…தலையை அசைத்தேன். பெயர்கள் வைக்காவிடில் ஊர்களுக்கென தனித்த அடையாளம் ஏதேனும் இருக்குமா? வீடுகளும், வயல்களும், குளங்களும், மேடுகளும் பள்ளங்களும் – அவற்றின் எண்ணிக்கைகளும், வடிவங்களும், அமைப்புகளும் மாறுந்தன்மையை வைத்து…குழப்பமாய் இருக்கிறது…என் உடல் எங்கே? நான் இருக்கிறேனா…எனக்கு நினைவிருக்கிறது..எனவே நான் இருக்கிறேன்…எதையோ உதறுவது போல் சைகை செய்தேன்…

    “உடம்பை அசைக்காதீங்க” – எனக்கு யாரோ ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள். முக கவசம் அணிந்திருந்தனர். 

    சற்றுத் தள்ளி ஒரு பெண் சதுர கண்ணாடி பதித்த கதவினுடே நோக்குகிறாள். ஒரு வித பயத்துடன் நின்றிருந்தாள். கண்ணில் நீர் படிந்திருந்தது. மனக்காட்சி மாறிவிட்டதா? ஊர் பெயர் மறந்ததை நான் இன்னும் மறக்கவில்லை. புதுக்காட்சியிலும் பழைய காட்சியைத் தொடர விழைந்தேன். 

    என் தலையை யாரோ நேராகப் பிடித்துக் கொண்டனர். கதவு பக்கம் என் முகத்தை திருப்ப முடியவில்லை. வெண்ணிற திரையை….சுவரை வெறித்து மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதும் “என்ன பெயர் என்ன பெயர்” என்று மனதில் அசை போட்டபடியிருந்தேன். என் கால்களை யாரோ தூக்கினார்கள். எதையோ யாரோ தூக்குவது மாதிரி எடையற்று உணர்ந்தேன். 

    “நான் எந்த ஊருக்குப் போனேன். ” – என்று உரக்கக் கேட்டேன். உதடு மட்டும் அசைந்ததா எனத் தெரியவில்லை. நான் சொன்னது யார்க்கும் கேட்கவில்லை. யாரும் கேட்க பிரயாசப்பட்டதாகவும் தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கதவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது. காட்சிகள் இல்லாத புதுக்காட்சியா? இல்லை…நானே என்னை இந்த இருட்டுக்குள் என்னைத் தள்ளிக்கொண்டேனோ?

    பித்ரு கடன் செய்யும் போது ஓதும் மந்திரங்கள் எங்கிருந்தோ ஒலித்தன. என் பெயர், என் தந்தையார் பெயர், தந்தையாரின் தந்தையார் பெயர் – இவற்றைச் சொல்லி வசு, ருத்ர, ஆதித்யர்களாக உருவகிக்கும் மந்திரங்களின் உச்சரிப்பு…பெயர்கள்…பெயர்கள்…பெயர்கள்.

    நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/amp/)

  • திருவண்ணாமலை

    நாம் கவனமாக இருக்கிறோம். மரியாதையாகப் பேசுதல், கடுஞ்சொற்களை பயன்படுத்தாதிருத்தல், எல்லா குறைகளையும் பொறுமையாக செவிமடுத்தல், எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் உரிய  விளக்கங்களை இயன்ற வரை தருதல், உயர்மட்டம் எடுக்கும் முடிவுகளை பூச்சுகள் எதுவும் இல்லாமல் உடனுக்குடன் அறியத்தருதல், விடுப்பு வேண்டுகோள்களை நிராகரிக்காமல் இருத்தல், கான்பரன்ஸ் அறையின் கதவை மூடாமல் சர்வஜாக்கிரதையாக சந்திப்புகளை நிகழ்த்துதல், தப்பித்தவறி கூட சொந்த வாழ்க்கை குறித்து எதுவும் கேட்டுவிடாதிருத்தல்..….இதற்கு மேல் என்ன செய்ய….…பிஓஎஸ்எச் கையேட்டின் ஒரு ஷரத்தைக் கூட இதுவரை மீறியதில்லை.   ஆனால் இவர்கள் வேலையை விட்டுச் செல்லும்போது சேற்றை வீசிவிட்டு செல்வார்கள்…நிலமென்னும் நல்லாள் காட்டும் அதே பொறுமையை கடைபிடிப்பதோடு அல்லாமல் கூடவே மாறாப் புன்னகையைச் சூடிக் கொண்டு வழியனுப்ப வேண்டும்.  

    நிரந்தரமாகவே நம்மைப் பற்றி கீழே, பக்கவாட்டில், வெளியே என அனைவரிடமும்  விசாரித்தவாறே இருக்கும்  மேலதிகாரிகள் இத்தகைய சமயங்களில் சும்மாவா இருப்பார்கள்?

    இப்போதே இங்கிருந்து நீங்கிச் சென்றுவிட வேண்டும்! உடனடியாக…எவன் கண்ணிலும் படாமல்…ஆனால் முடியவேயில்லையே! கண்ணுக்குப் புலப்படா சங்கிலிகள் உடலெங்கும் கட்டப்பட்டுள்ளன. அந்தச் சங்கிலிகளுக்கு  பயம் என்று  பெயர் வைத்துக் கொள்ளலாமா? பயம் எங்கு உள்ளது? மனத்திலா? அல்லது உடலிலா? 

    சென்ற வாரம் ஒரு நண்பருடன் போனில் நடத்திய உரையாடல் நினைவில் வந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த நண்பருக்கு போன் செய்திருந்தேன். திருவண்ணாமலையில் இருப்பதாகச் சொன்னார். கொச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர் அவர். நிறுவனத்துக்கு என்னாயிற்று என்று கேட்டேன். வேலையாட்களிடம் ஒப்படைத்துவிட்டதாகச்  சொன்னார். அடேங்கப்பா….கிட்டத்தட்ட 25 கோடி வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் முதலாளி வேலையாட்களிடம் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறாரே என்று அவருடைய தைரியத்தை வியந்தேன். திருவண்ணாமலையில் வேறு ஏதாவது தொழில் தொடங்கியிருக்கிறாரோ! இல்லையாம்! ஓர் ஆசிரமத்திற்கருகே வீடெடுத்துத்  தங்கி ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்துவருகிறாராம்! மனைவியும் மகனும் கூட  விரைவில் அவருக்கு ஒத்தாசையாக அவர் பணி செய்யும் ஆசிரமத்துக்கே  வந்துவிடப் போகிறார்களாம்! 

    “எதிர்காலம் குறித்து பயம் இல்லையா” என்ற என் கேள்விக்கு –

    “திருவண்ணாமலை வந்து சில நாட்கள் தங்கிப்பார்…உடல் குறித்த பயம் நீங்கிவிடும்” என்றார் 

    “பயம் மனத்தில் அல்லவா இருக்கிறது?” 

    “பயம் உடலில் இருக்கிறது. உடலிலிருந்து பயம் நீங்கும் போது மனதிலிருந்து நீங்கிவிடும்”

    கீழ்ப்படியாமை சொட்ட கடும் சொற்களை தாங்கியவாறே “நான் வேலையை விட்டுச் செல்ல நீதான் காரணம்” என்னும்படி நீண்ட குற்றச்சாட்டு பட்டியலுடன் வந்த ராஜினாமா மின்னஞ்சலை வாசித்த போதும், இதை மேலதிகாரிக்கு அனுப்பியபின் அவரிடமிருந்து வரவிருக்கும் “சிசிடிவி ஏன் சரியாக வேலை செய்யவில்லை? அதை நீ அணைத்து வைத்திருக்கிறாயா?” என்பது போன்ற ஐயம் பொங்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிச்சொல்லி இன்னொரு அக்கினிப்பிரவேசம் செய்ய வேண்டிய சாத்தியக்கூறை யோசித்தபோதும், அடிவயிற்றில் “விர்விர்” என்று ஏதோ உள்ளூர இழுக்கும் மெல்லிய ஆனால் மிகத் தெளிவான வலியற்ற வலி உணர்வை உற்று கவனித்த போது, நண்பர் சொன்னது சரியென்றுபட்டது. உடலில் உள்ளது பயம். உடலில்தான் உள்ளது பயம். திருவண்ணாமலை செல்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டரைக்கு நான்கு கண்ணாடி அறையை உடனடியாக திருவண்ணாமலையாக மாற்ற ஏதேனும் உபாயம் உண்டா என நண்பனிடம் அடுத்த தொலைபேசி உரையாடலில் கேட்கவேண்டும்.

    நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-2/amp/)

  • மனம்-மட்டும்

    mind-quotes-buddha

    லங்காவதார சூத்திரம் நூலில் விவரிக்கப்படும் மன அமைப்பு பற்றி ஒரு குறிப்பு முன்னர் எழுதியிருந்தேன் (http://wp.me/pP1C7-hU) அதன் தொடர்ச்சியாக மனம்-மட்டும் கோட்பாடு பற்றி எழுத எண்ணம். பேராசிரியர் சுஸுகி எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்தாலும் அதில் வரும் கலைச்சொற்களின் தெளிவான புரிதல் இன்னும் கிட்டவில்லை. நன்கு புரியாமல் கட்டுரை எழுத வேண்டாமே என்று கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறேன்.

    நேற்றிரவு உறக்கம் வராமல் புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களை நோண்டிக் கொண்டிருந்த போது இரண்டு வருடம் முன்னர் ஜப்பான் சென்ற போது தங்கியிருந்த ஓட்டல் அறையிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த “The Teaching of Buddha” (Published by Bukkyo Dendo Kyokai – http://www.bdk.or.jp ) என்ற புத்தகம் என் கால் பெருவிரல் மேல் வந்து விழுந்தது. பொருளடக்கத்தை மேய்ந்தால் மனம்-மட்டும் கோட்பாட்டைப் பற்றிய குறிப்புகள் அப்புத்தகத்தில் இருப்பது தெரிய வந்தது. மகாயான பௌத்தத்தின் மிக முக்கியமான கருத்தாக்கமான மனம்-மட்டும் என்ற கோட்பாடு பற்றி தத்துவ கலைச்சொற்கள் இல்லாமல் எளிய வாசகர்களுக்கு புரியும் படியாக கட்டுரை எழுதப் பட்டிருந்தது. இது ஓர் அறிமுகமே! இதே சப்ஜெக்டில் விளக்கமான விரிவான கட்டுரையொன்று எழுத வேண்டும் என்ற எண்ணம் ஓயவில்லை.

    +++++

    பல வித உருவங்களையும் காட்சிகளையும் ஓவியமாக தீட்டும் ஓர் ஓவியன் போல நம் மனதும் பல்விதமான வடிவங்களை தனக்குள்ளாகவே உண்டு பண்ணிக் கொள்கிறது. நம் மனம் உருவாக்காத ஏதும் இவ்வுலகில் இல்லை. நம் மனதைப் போன்றவனே புத்தன் ; எல்லா உயிரினங்களும் புத்தனைப் போன்றவர்களே. மனம், புத்தன், உயிரினங்கள் – இவர்களுக்கு நடுவில் விஷயங்களை உருவாக்கிக் கொள்ளும் தன்மையில் ஒரு வித்தியாசமும் இல்லை.

    அழியும் தன்மையதான மனம் செய்து கொள்ளும் கற்பனைகளை அல்லது உருவாக்கிக் கொள்ளும் விஷயங்களைப் பற்றிய சரியான புரிதல் புத்தனுக்கு இருக்கும். இக்கூற்றை அறிந்தவர்கள் உண்மையான புத்தனைக் காணுதல் சாத்தியம்.

    சுற்றுச்சூழலை உருவாக்கும் மனம் எப்போதுமே நினைவுகளிலிருந்தும், பயங்களிலிருந்தும் குறைகளிலிருந்தும் இறந்தகாலத்தில் மட்டுமல்லாது, நிகழ் மற்றும் வருங்காலத்திலும் – என்றும் விடுபடுவதில்லை ; ஏனெனில் அந்நினைவுகள், பயங்கள் மற்றும் புலம்பல்கள் எல்லாம் அறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்தும் எழுவன.

    அறியாமையிலிருந்தும் பேராசையிலிருந்துமே ஒரு மயக்கமாக இவ்வுலகம் திரிக்கப்பட்டிருக்கிறது ; பரந்து பட்ட, சிக்கல் வாய்ந்த ஒன்றையொன்று பிணைந்திருக்கும் காரணங்களும் சூழல்களும் மனதிற்குள்ளேயே இருக்கின்றன ; வேறெங்கிலும் இல்லை.

    வாழ்வு, மரணம் – இவ்விரண்டுமே மனதிலிருந்து எழுகின்றன ; மனதிற்குள்ளேயே இருக்கின்றன. மரணம், வாழ்வு பற்றிய கவலையில் நிறைந்திருக்கும் மனம் இல்லாமல் போகும் போது, வாழ்வும் மரணமும் மிக்க உலகமும் இல்லாது போகிறது.

    தானுருவாக்கிய மயக்கமிக்க உலகத்தில் உழன்று குழப்பமுற்றிருக்கும் மனம் உள்ளொளியற்ற வாழ்க்கையை தோற்றுவிக்கிறது. மனதுக்கு வெளியே மயக்கமிக்க உலகம் இல்லையென்பதை அறியும் போது, குழப்பம் கொண்ட மனது தெளிவு பெறுகிறது ; தூய்மையற்ற காரணங்களையும் சூழல்களையும் உருவாக்குவதை நிறுத்தும் போது ஞானம் வந்தடைகிறது.

    இப்படித்தான், மனதால் உருவாக்கப்பட்டு, அதன் அடிமையாக வாழ்வும் மரணமும் நிறைந்த உலகம் கட்டியாளப்படுகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் மனமே எஜமானனாக இருக்கிறது. துக்கம் நிறை உலகம் மயக்கமிகு அழியக் கூடிய மனதால் உண்டு பண்ணப்படுகிறது.

  • மனம் – மகாயான பௌத்தப் பார்வை

    bodhidharma

    மன அமைப்பு
    ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர் பார்ப்பவற்றையெல்லாம் தன் காமிராவில் பதிந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார். தலைமை அலுவலகம் காமிராவில் பதிந்த காட்சிகளையும் வர்ணனைகளையும் பார்த்து கிரகித்து நல்ல செய்தியா கெட்ட செய்தியா, செய்தித்தாளில் இடம்பெறத் தக்கதா இல்லையா என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுக்கும்.

    மனம் இயங்குவதும் இப்படித்தான்! ரிப்போர்ட்டர் என்பது புலன்கள் (கண், காது, வாய், மூக்கு, தொடுவுணர்ச்சி)! ரிப்போர்ட்டர் தன் காமிராவில் பதிந்த செய்திக்குறிப்பு அப்புலன்களை ஒட்டிய மனங்கள். மகாயான பௌத்தம் ஒவ்வொரு புலனுக்கும் ஒரு மனமிருப்பதாக சொல்கிறது. கண் ஒரு பூனையைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது பூனை, அது கருமை நிறமுள்ளதாக இருக்கிறது. அதன் கண்கள் சிவப்பாக இருக்கின்றன என்றெல்லாம் கண் பார்த்தவற்றின் தகவல்-அர்த்தங்களை பட்டியலிட அக்கண்ணுடன் சேர்ந்த ஒரு மனம் இருக்கிறது. அது கண் – மனம்; இது போலவே மற்ற புலன்களுக்குத் துணையாகவும் மனங்கள் இயங்குவதாக லங்காவதார சூத்திரம் சொல்கிறது. தலைமை அலுவலகமாக இயங்கி புலன்கள் பதிவு செய்தவை, கிரகித்தவையெல்லாவற்றையும் எத்தகைய தன்மை கொண்டவை, அவை நல்லனுபவங்களா, வேண்டுவனவையா, என்றெல்லாம் பகுத்து, புலன் – மனங்களின் உயர் அடுக்காக செயல் பட்டுவரும் மனம் ஒன்று இருக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் புலன் மனங்கள் வந்திணையும் மையப்புள்ளி! அது தான் பகுக்கும் அல்லது சிந்திக்கும் மனம். நன்மை-தீமை, நல்லது-கெட்டது, சுகம்-துக்கம், வேண்டியது – வேண்டாதது என்றவாறு ஐம்புலன்-மனதினால் அறியப்பட்ட / பெறப்பட்ட அனுபவங்களை பகுக்கின்ற இயல்பு கொண்டதால் பகுக்கும் மனம் என்று அது கொள்ளப்படுகிறது.

    அனுபவங்கள் பகுக்கப்பட்ட பிறகு அவற்றின் மேல் தீர்ப்புகள் இடப்படுகின்றன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கேற்றவாறு அவ்வனுபவம் விரும்பத்தக்கதாகவோ வெறுக்கத்தக்கதாகவோ ஆகிறது. இவ்வாறு தொடர்ந்தும் பின்னிப்பிணைந்தவாறும் மனம் எனும் முழு அமைப்பும் இயங்குகிறது.

    மன அமைப்பின் இயக்கம்

    மன அமைப்பின் இயக்கங்களை மூன்று வழிகளில் பிரிக்கலாம்.

    மனத்தின் இயக்கங்கள் சாதாரணமாக புறவுலகில் காணும் பொருளின் தக்க கூறுகளை முதலில் கிரகித்துக் கொள்ளும். புலன் மனதில் அதற்கேற்ற புரிதலும் உணர்ச்சியும் எழும் ; மற்ற புலன்களிலும், புலன் – மனங்களிலும் கூடவோ குறையவோ புரிதலும் உணர்ச்சியும் எழும், ஒவ்வொரு தோல் துளைகளிலும்…ஏன் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் கூட புரிதலும் உணர்ச்சியும் தோன்றும். பொருட்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்று தளம் முழுமையும் புரிந்துணர்ந்து கொள்ளப்படுகிறது.

    இரண்டாம் இயக்கமாக இப்புரிந்துணர்வுகள் பகுக்கும் மனதுடன் எதிர்வினை புரிந்து ஈர்ப்புகள், வெறுப்புகள், உணர்ச்சிகள், செயல்கள் மற்றும் பழக்கங்கள் முதலானவற்றை தோற்றுவிக்கின்றன.

    மூன்றாவது இயக்கம் பகுக்கும் மனதின் வளர்ச்சி, முன்னேற்றம், துவக்கமிலா காலம் முதல் திரட்டப்பட்டு வளர்ந்த பழக்க சக்தி – இவற்றைப் பொறுத்ததாக எழும்.. திரட்டப்பட்ட பழக்க சக்தி உலகளாவிய மனதிலிருந்து பெறப்படுவதாக மகாயான பௌத்தம் விவரிக்கிறது. உலகளாவிய மனம் என்றால் என்ன? உலகளாவிய மனத்தை சமஸ்கிருதக் கலைச்சொல் – ஆலயவிஞ்ஞான – என்ற பிரயோகத்தின் மூலம் சுட்டுகிறது லங்காவதார சூத்திரம். மன – அமைப்பின் முக்கியமான கருத்தாக்கம் – வாசனைகள் (‘வாசனா’) வாசனா என்பது ஞாபகம். ஒரு செயல் செய்த பின் எஞ்சியிருப்பது தான் வாசனா. எஞ்சியிருப்பது ஒரு மனோகாரணியாக இருக்கலாம் அல்லது பின்னால் எழப்போகிற ஜடம் அல்லது நிகழ்வுக்கான மூலக்கூறாக இருக்கலாம். செயல்களின் எச்சங்கள் வெடித்தெழ தயார் நிலையில் இருக்கிற உள்ளார்ந்த ஆற்றலாக ‘ஆலயத்துக்குள்’ சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஞாபகங்களின் குவியல் அல்லது பழக்கங்களின் ஆற்றல் ஒரு தனி உயிருக்கானது மட்டுமில்லை. எல்லா உயிர்களினாலும் அனுபவிக்கப்பட்ட ஞாபகங்களின், பழக்கங்களின் மொத்த குவியலாக அது இருக்கிறது. துவக்கமிலா காலம் முதல் எல்லா நிகழும் எல்லாவற்றையும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் ஒரு தனி உயிரை மட்டும் சார்ந்தது என்று சொல்ல முடியாது. தனி உயிரைத் தாண்டி எல்லா உயிருக்கும் பொதுவானது. ஆதியில் ‘ஆலயம்’ தனித்தன்மை வாய்ந்த அறிவு மற்றும் பீடிப்பு போன்ற மாசுக்கள் எட்ட முடியாத தூய்மை கொண்டதாக இருந்தது. தூய்மை என்பது தருக்கபூர்வமாக பொதுத்தன்மையை குறிக்கிறது ; மாசு என்பது வெவ்வேறு வடிவங்களில் பற்றுதலை ஏற்படுத்தும் தனிப்பண்புகொள்ளும் தன்மையை குறிக்கிறது. சுருக்கமாக, இவ்வுலகம் ஞாபகத்தில் இருந்து துவங்குகிறது ; ஞாபகம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ‘ஆலயம்’ தீங்கானது இல்லை. தவறாக பகுக்கும் தன்மையின் தாக்கத்திலிருந்து விலக முடியுமானால், ‘ஆலயத்தை’ மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கும் மன அமைப்பானது உண்மையான ஞானத்தை நோக்கி பிரிந்து செல்லமுடியும் என்பது தான் லங்காவதார சூத்திரத்தின் சாரம்.

    அனாத்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பௌத்தம் உலகளாவிய மனம் என்ற கருப்பொருள் பற்றி பேசுவது தகாதது என்று தேரவாத பௌத்தர்கள் இக்கருத்தியலை ஒப்புக்கொள்வதில்லை. தேரவாதத்துக்கும் மகாயானத்துக்குமான முக்கியமான வேறுபாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது,

    மகாயான பௌத்தர்கள் இக்குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்கிறார்கள்?

    பேராசிரியர் D.T Suzuki சொல்கிறார் : அனாத்ம வாதத்தை புறவுலகிற்குப் பொருத்தி விரிவுபடுத்துவதன் விளைவாக எழும் கிளைக் கருத்தியலே உலகளாவிய மனம். இரண்டு கருத்துகளுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தாம். எல்லா பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆன்மா இல்லை என்று சொல்வது எல்லா இருத்தல்களுக்கும் இடையே ஒரு சிக்கலான உறவுமுறை இருப்பதை அங்கீகரிப்பதாகும். சார்புடைத் தோற்றத்தை கண்டறிந்த போதே இச்சிக்கலான உறவு முறையை புத்தர் கவனித்திருக்கிறார், ஆனாலும் அவருடைய உடனடி ஆர்வம் சீடர்களின் பேதைமைகளை பற்றுதல்களை விலக்குவதிலேயே இருந்த படியால், அனாத்மாவாதத்தின் முதற்படிகளை விளக்குவதோடு புத்தர் நின்றுவிட்டார். பௌத்த மதச் சிந்தனைகள் அனுபவங்களின் வளர்ச்சியினால், மனோதத்துவம் மீப்பொருண்மையையியலாக வளர்ந்தது ; சூன்யதா கோட்பாடு மகாயான பௌத்தர்களின் கருத்தில் அமர்ந்தது. அனைத்து பொருட்களும் ஆன்மா என்கிற சுயமற்றவை என்பதை வேறு மாதிரியாக சொல்லும் வழிதான் சூன்யதா தத்துவம். அனாத்ம வாதம் நிறுவப்பட்டபிறகு மகாயான பௌத்தர்களின் சூன்யதா (All things are empty), நிஷ்வபாவம் (without self-substance), அனுத்பாதம் (unborn) போன்ற கோட்பாடுகள் முக்கியமான அனுமானங்களே”

    இச்சிறு கட்டுரையை எழுத உதவிய நூல்கள் : (1) பேராசிரியர் D.T Suzuki எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகள், (2) அவருடைய மாணவர் Dwight Goddard எழுதிய லங்காவதார சூத்திரம் ; சுருக்கம்

    lankavatara

  • மாயை – ராம் சின்னப்பயல்

    நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.

    மாயை

    எந்த மனநிலையிலிருப்பினும்
    ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,
    இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும்
    ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,
    எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்
    வெகு உயரே பறக்கும் ஒரு பறவை
    என்னை அவதானிக்கவைத்துவிடுகிறது,
    மனம் போன போக்கில்
    எங்கு சென்றாலும் எதோ ஒன்று
    என் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.

    இப்படியாகவே இருக்கும்
    என்னைத்தொடர்ந்தும்
    உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு
    ஒரு காட்சியாகவே
    எப்போதும் நான்
    இருந்துகொண்டுதானிருக்கிறேன்.

    நன்றி : வல்லினம்