Tag: மண்

  • ஈஸ்வரன்

    காசி நஸ்ருல் இஸ்லாம் – இந்த மகாகவிஞன் எந்தச் சிமிழிலும் அடங்காதவன். இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தீவிரவாதி. ஐநூறுக்கும் மேலான இந்து பஜன்களை இயற்றியவன். மகன்களுக்கும் மகளுக்கும் இந்து-முஸ்லீம் பெயர்களை இணைத்துச் சூட்டியவன். மூத்த மகனுக்கிட்ட பெயர் – கிருஷ்ண முகம்மது. வங்கதேசத்தின் தேசிய கவி. துர்காபூர் விமான நிலையத்துக்கு இவன் பேர் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கமும் வங்க தேசமும் போட்டியிட்டு இவனைச் சொந்தம் கொண்டாடுகின்றன. மகனும் மகளும் டாக்கா சென்று சேர்வதற்குள் கவிஞன் அடக்கம் செய்யப்பட்டு விட, அவனுடைய புதைக்கப்பட்ட தகனப்பெட்டியை மீண்டும் தோண்டியெடுத்து இந்தியாவுக்கு கொண்டு வந்து புதைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கரடுமுரடான நஸ்ருல் இஸ்லாமின் கவிதைகளின் அழகியல் குருதேவ் தாகூரின் அதிநவீன பாணியுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானது. நவீன வங்க மொழியில் சமஸ்கிருதமயமான சொற்களை பயன்படுத்தி வந்த காலத்தில் பர்சிய-அரபு மூலச்சொற்களை பயன்படுத்துகிறான் என்பதால் இவன் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனம் செய்தார் குருதேவ் ரவீந்திரர். “கூன்” (ரத்தம்) எனும் பர்சிய மூலச் சொல்லை இஸ்லாம் பயன்படுத்தியதால் விளைந்த மிகப்பெரிய இலக்கியச் சண்டை இது. “ரக்தோ”(ரத்தம்) என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவில்லை என்று வங்க இலக்கிய உலகமே இரண்டு பட்டது. 1941இல் ரவீந்திரர் மறைந்த போது கண்ணீர் விட்டு அழுதான். செயலாற்றிய இருபதாண்டுகளில் எண்ணற்ற கவிதைகளை பாடல்களை கட்டுரைகளை எழுதிக் குவித்தான். தன்னுடைய பாடல்களுக்கு தானே இசையமைத்து கிராமபோன் ரிகார்டுகளை HMV நிறுவனம் மூலமாக கொண்டு வந்தான். வங்காள மொழியின் திரைப்படம் இயக்கிய முதல் முஸ்லீம் இயக்குனராகவும் திகழ்ந்தான். தாகூர் இறந்த ஓராண்டில் இஸ்லாமை ஒரு வித நோய் பீடித்தது. ஐம்பதுகளை மனநோய் மருத்துவமனையில் கழித்தான். பின்னாளில் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்ற போது இந்தியாவில் அவனுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று ஐரோப்பிய மருத்துவர்கள் தெரிவித்தனர். நோயிலிருந்து மீளாமல் 1976 வரை வாழ்ந்தான். 1972இல் வங்கதேசம் தனி நாடான போது புது அரசு டாக்காவுக்கு அழைத்துச் சென்று அவனைப் பார்த்துக் கொண்டது.வங்க தேசத்தின் தேசிய கவி என்றும் அறிவித்தது.

    ஈஸ்வரன்

    இறைவனுக்காக
    வானையும் மண்ணையும்
    தேய்த்துப் பார்ப்பவன் யார்?
    மலையுச்சிகளில் ஏறியும்
    காடுகளில் உலவியும்
    திரிந்து கொண்டிருக்கும் நீ யார், துறவியே!
    புதையலை உன் மார்பில் கட்டிக்கொண்டு
    அதனை அனைத்திடங்களிலும் தேடித் திரிகிறாய்
    படைப்பு உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
    நீயோ உன் கண்ணைப் பொத்திக் கொண்டுள்ளாய்
    படைத்தோனைத் தேடும் உன் முயற்சியில்
    நீ உன்னையேதான் தேடிக் கொண்டிருக்கிறாய்
    விருப்பக் குருடனே !
    கண்ணைத் திற
    உன் வடிவை கண்ணாடியில் பார்
    அவனது நிழல்
    உன் முழு வடிவிலும் வார்க்கப்பட்டிருக்கும்
    வேதத்தின் அதிகாரிகள் மீது
    மலைப்போ அச்சமோ கொள்ள வேண்டியதில்லை
    நாயகனே!
    இறைவனின் செயலர்கள் இல்லை அவர்கள்
    அனைத்திலும் வெளிப்படும் அவன்
    அனைத்தின் மத்தியிலும் இருக்கிறான்
    நான் என்னைப் பார்க்கிறேன்
    காணாத என் படைப்பாளியை
    அடையாளம் கண்டுகொள்கிறேன்
    கடல்-வழி வணிகர்கள்
    நகை வர்த்தகம் புரிகின்றனர்
    அவர்கள் நகை வணிகர்கள்
    நகை செய்தவனை அறிந்தோம்
    என்று பாசாங்கு செய்கிறார்கள்
    முத்து விளையும் கடல்களின்
    ஆழத்தில் என்றும் அவர்கள் மூழ்கியதில்லை
    நூல்களை ஆராய்வதற்குப் பதிலாக,
    உண்மைக் கடலில் ஆழ்ந்துவிடு நண்பனே

  • சரணடைதலின் கண்ணீர் – நிஷா மன்சூர்

    நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதை. அவர் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது.

    ————————————————————

    ஆதித்தந்தை உகுத்த கண்ணீர்
    இன்னும் மழையாய்ப் பொழிந்து
    மண்ணை நெகிழ வைத்து
    இறைஞ்சுதலால் விண்ணை நிரப்புகிறது,
    “எமது கரங்களாலேயே
    எமக்குத் தீங்கிழைத்துக் கொண்டோம் ரட்சகனே”

    யூப்ரடீஸ் நதியில் ஓடிக் கொண்டிருந்த
    யாகூபின் கண்ணீர் நதி
    கிணற்றில் வீசப்பட்ட முழுநிலவின்
    வியர்வையை நுகர்ந்தபின் அருள்நதியானது.

    யூசுஃபின் பின்சட்டைக் கிழிசலில் சம்மணமிட்டிருக்கும்
    ஒழுக்கத்தின் முத்திரை
    ஆழியூழி காலம்வரை
    வல்லிருளை வெல்லுமொளியாக
    நின்றிலங்கிக் கொண்டிருக்கும்.

    ஹூத் ஹூதின் சொற்கள் மலர வைத்தன
    சுலைமானின் புன்னகையை.

    முகமறியா பெருமகனின் ஆன்ம வலிமை
    கொணர்ந்தது,
    கண்ணிமைக்கும் நேரத்தில் பல்கீசின் சிம்மாசனத்தை.

    சிற்றெரும்புகள் புற்றேகித் தஞ்சமடையும் தருணம்
    பூமியதிர்ந்து பதிந்தன,
    சுலைமானின் குதிரைப்படைக் குளம்புகளின் தடங்கள்.

    கரையான்கள் அரித்து அஸா உதிர்ந்து சுலைமான் சரியும்வரை
    ஜின்கள் உணரவில்லை,
    சுவாசமின்மையின் தடயத்தை

    எறும்புகளை உதாரணம் காட்டத் தயங்காத பரம்பொருள் கேட்டது,
    “மனு ஜின் கூட்டத்தாரே உங்கள் இறைவனின் அருட்கொடைகளில்
    நீங்கள் எதனைப் பொய்யாக்குவீர்கள் ?”

    எம் இதயமும் உயிரும் சமர்ப்பணமாகும்
    முகில் கமழும் நயினார் முஹம்மது ரசூல் பகர்ந்தார்,
    “உங்களது வெற்றியின் மீது
    நான் பேராவல் கொண்டுள்ளேன்”*

    ஜகமெங்கும் ஒலிக்கிறது,
    வெற்றியின் ஓங்கார முழக்கம்.

    “மற்றவர்கள் எத்தகையினராயினும் என்கொடிய
    வல்வினை அகற்ற வசமோ
    மலை இலக்கென நம்பினேன் நம்பினேனென்று
    வந்தெனுட் குடிகொள்குவையோ.”*

    #

    *திட்டமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்’. (9:128).

    *குணங்குடி மஸ்தான் பாடல் வரிகள்.