Tag: பொருள்

  • சத்தம் அநித்தியம்

    சத்தம் அழியக்கூடிய பொருள் எனும் விவாதம் நிறைய பவுத்த நூல்களில் இடம் பெறுகின்றன

    …. சத்தம் அநித்தம் என்றல்
    பக்கம், பண்ணப் படுத லாலெனல்
    பக்கத் தன்ம வசனமாகும்…

    (மணிமேகலை, 29 : 68-71)

    திக்நாகர் சொல்கிறார் : “அநித்ய: ஸப்தைதி பக்ஷ வசனம் க்ருதகத்வாத்இதி பக்ஷதர்ம வசனம்” (ப்ரமாண சமுச்சய)

    கிட்டத்தட்ட மொழியாக்கம் செய்தவை போல தோன்றுகிறதல்லவா?

    சத்தம் நிரந்தர பொருளல்ல ; அழியக்கூடியது, ஏனெனில் அது யாராலோ எதனாலோ எழுப்பப் படுபவை.

    இந்த வாதத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? வேத ஒலிகளுக்கு நித்தியத் தன்மை வழங்கிய இந்து தத்துவ பள்ளிகளுக்கு (மீமாம்சை, ந்யாய) நேரடி எதிர்வினை தரும் முகமாக பவுத்தம் எழுப்பிய வாதம் இது. குமாரில பட்டர் போன்ற மீமாம்சை தத்துவ வாதிகள் வேத மந்திரங்கள் நித்தியத்தன்மை கொண்டவை என்றனர். அச்சத்தங்கள் உருவாக்கப்படாதவை (அபௌருஷேய) என்றும் கூறினர். ஒலி நித்தியம் ஏனெனில் அது கண்ணுக்குப் புலனாகாதவை, ஆகாசம் போல.

    திக்நாகரும் அவரது சீடர் தர்மகீர்த்தியும் இதைக் கையிலெடுத்துக் கொண்டு முக்கூற்று வாத முறையில் சத்தம் அழியக்கூடியது என்று வாதாடினர்.

    பக்கம் (Skt.Pratijna) : “சத்தம் அநித்தியம்”

    ஏது (Skt.Hetu) : “ஏனெனில் அது எழுப்பப்படுவது”

    உதாரணம் : “பானையைப் போல்”

    பண்ணப்படுவது எதுவும் (“பேச்சு”, “ஆயுதம்”) அழியக்கூடியவை, எனவே அநித்தியமானவை.

    “ஒலியை” பௌத்தர்கள் குறி வைத்ததற்கான காரணங்கள் – (1) வேதங்களின் காலமின்மை என்ற மீமாம்சகர்களின் வாதத்தை முறிப்பது. (2) சார்பியல் தோற்றத்தை (ப்ரதித்ய சமுத்பாதம்) நிரூபிப்பது (3) மீமாம்சகத்தின் சடங்கு உலகம் வேத மந்திரங்களின் நித்தியத்தன்மை கொள்கையைச் சார்ந்திருந்தது

    பின்னர் வந்த வைதீக தத்துவவாதிகள் (நியாய – வைசேசிகர்கள்) தமது நிலைப்பாட்டை சற்று செம்மைப் படுத்திக் கொண்டு நித்ய சத்தம், அநித்திய சத்தம் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தினர். பௌத்தர்களோ அதற்கும் பதிலடி கொடுத்தனர் – “அனைத்து சத்தங்களும் அழியக்கூடியவை தாம்; வெளிப்படாத ஒலி என்பது கருத்தியல் புனைகதை” என்றனர்.

    இவ்விவாதம் வெறும் ஒலியியல் பற்றியது மட்டுமல்ல. “சுருதி” -“பௌத்த அனுமானகம்”, நித்தியவாதம் – அநித்தியவாதம் – ஆகியவற்றுக்கிடையிலான மோதல். “சத்தம் அநித்தியம்” எனும் Syllogism வைதீக பள்ளிகளின் மீப்பொருண்மையியல் கூற்றுகளைத் தகர்க்கும் கருவியாக பயன்பட்டது.

  • நாலடிப் பிரபஞ்சம்

    ருபையாத் அல்லது ருபாயியாத் உமர் கய்யாம் எழுதினார். மஸ்னவி ரூமி எழுதினார். ருபாயியாத், மஸ்னவி – இரண்டும் நூலின் அல்லது தொகுப்பின் தலைப்பு என்றே பொதுவாகக் கொள்ளப்படுகிறது. ருபாயியாத் என்றாலே உமர் கய்யாம் எழுதியது என்று நானும் பல வருடங்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். ருபாயியாத் என்பது யாப்பு வடிவம் என்று எனக்குத் தெரிந்தது சில வருடங்களுக்கு முன்னரே. ரூமியும் ருபாயியாத் எழுதியிருக்கிறார் என்னும் தகவலும் பின்னர்தான் தெரியவந்தது. 


    சீர்மை பதிப்பகம்
    பக். 324
    ரூ. 520

    சீர்மை பதிப்பகம் “ரூமியின் ருபாயியாத்” தமிழாக்க நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஸூபித்துவம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் தொடர்ந்து இயங்கிவரும் ரமீஸ் பிலாலி “ரூமியின் ருபாயியாத்”களை பார்சி மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்த்துள்ளார்.  

    நூலில் நானூறுக்கும் மேற்பட்ட கவிதைகள். தொடர்ச்சியற்ற கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வோர் அறை. ஒவ்வோர் அறையும் மிகப் பிரம்மாண்டமானது. அறையின் சிறு பகுதியின் தரிசனத்தை மட்டுமே பகிர்வதாகவே அதன் விவரிப்பு இருக்க முடியும். பிரபஞ்சத்தின் மொத்த அனுபவத்தை எப்படி நம்மால் வடித்திட முடியும்? நூலின் பின்னட்டையில் ரூமி  பிரபஞ்ச மகாகவி என்று வர்ணிக்கப்படுகிறார். ஒவ்வொரு துளியிலும் கடல் உள்ளது என்பார்கள். ஒவ்வொரு கவிதையிலும் பிரபஞ்சம்.

    மஸ்னவித் தொகுப்புக்கும் ருபாயியாத் தொகுப்புக்கும் யாப்பு வடிவம் என்பதற்கு மேலாக ஏதேனும்  வித்தியாசங்கள் உள்ளதா என்பதை அறிய ஆர்வமாய் இருந்தது. ரூமியை ஆங்கில மொழிபெயர்ப்புகள் வாயிலாகவே அறிந்தவன் நான். ஒரு சாதாரண கவிதை வாசிப்பாளனின் அணுகுமுறையில் ரூமியை அணுகுபவனாகவே இருக்கிறேன். 

    ரமீஸ் பிலாலியின் மொழியாக்கத்தில் ரூமியின் ருபாயியாத்-துக்கு அறிமுகப்படும் வாசகன், என்னைப் போலவே, The Essential Rumi – என்னும் ஆங்கில மொழியாக்கம் வாயிலாக ருமியின் உலகத்துக்கு அறிமுகமானவனாக இருப்பான் என்பது என் யூகம். கஜினி மாமூதால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்து இளைஞன், அல்லது யாரை மணப்பது என்ற சிக்கலுக்கு குழந்தைகளுடன் விளையாடும் ஷைக்’கிடம் ஆலோசனை கேட்கும் இளைஞன் போன்ற எண்ணற்ற கதைக்கருப்பொருட்களுக்கு கவிதை நிறம் பூசி உலகின் கூட்டு நினைவில் நிரந்தரமாக நிலைத்து நிற்பவர் ரூமி. 

    மஸ்னவி – நிறைய கதைகளைப் பேசுகிறது. உலகக்கவிஞர் என்னும் அவருடைய புகழ் மஸ்னவியின் கதை கூறும் தன்மையிலிருந்தே எழுகிறது என்பது என் எண்ணம். கறுப்பு யானைகளின், கருங்கூந்தலின், கவிதைகளை நாம் வாசிக்கும் போது எழும் விறுவிறுப்பு, கதை வடிவத்தில் உள்நுழைந்து படிமங்களாக உலவி குறியீட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்லும் மாயம் ரூமியின் தனித்துவம். இதனைப் பிற கவிஞர்கள் செய்யவில்லை என்று கூற வரவில்லை. ஆனால் ரூமியின் வல்லமை தனித்துவமிக்கது. இன்று நவீன உலகத்தின் வாசகனின் மனதிலும் எதிரொலிக்கத் தக்கதாய் உள்ளது.

    ஒரு கதைப் பின்ணனி. அது சமய மரபிலிருந்து பெற்ற தொன்மக் கதையாக இருக்கலாம், அல்லது ஏதேனும் வரலாற்று நிகழ்வாக இருக்கலாம். அதை அப்படியே எடுத்துக் கையாளாமல் அதனை மறு ஆக்கம் செய்து மறு கூரலாகக் கவிதையைத் துவக்குவார். அதன் சூழலை செயல்திறனோடு பயன்படுத்திக் கொண்டு கவிதையைச் செறிவாக்குவார். இறுக்கமில்லாமல் அனைத்து திசையிலும் சிதறும் கவித்துவத்தை அழகியலை கருப்பொருளோடு நேர்த்தியாகச் சேர்க்கும் தருணம் அவருடைய மஸ்னவி கவிதைகளின் உச்சம். 

    மஸ்னவி தரும் அனுபவத்தை ருபாயியாத் தரும் அனுபவத்தோடு ஒப்பிட முயல்கிறேன். உதாரணத்துக்கு ரூமியின் ஒரு ருபாயீ-யை (ருபாயியாத் பன்மை, ருபாயீ ஒருமை) ஆராய்வோம். 

    ஈரானிய அமெரிக்க எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் ஸரா ஹோஷ்மண்டு பார்சியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ருபாயீ ஒன்று கீழ் வருவது –

    I asked you for one kiss, you gave me six.

    What teacher taught you, that you’re such an expert?

    You’re so deep a source of goodness, so kind

    That you’ve set the world free a thousand times.    (Zara Hoshmand, #1993)

    மஸ்னவியின் அடிப்படைத் தன்மையான கதைப் பின்னணி இருக்கிறதா? இருக்கிறது. கதை சொல்லி ஓர் அனுபவத்தைப் பெறுகிறார். அதற்குப் பின்னர், பெற்ற அனுபவம் குறித்து அனுபவத்தை ஏற்படுத்தித் தந்தவரிடம் அல்லது அனுபவத்தில் பங்கு பெற்றவரிடம் தன் மகிழ்ச்சியை வார்த்தையால் பகிர விழைகிறார். அதன் மறுவிளக்கத்தை வாசகர்களிடமே விட்டுவிடலாம்!

    மேற்சொன்ன கவிதையை ரமீஸ் பிலாலி பின் வருமாறு தமிழாக்கம் செய்கிறார் –

    ஒன்றுதான் கேட்டேன்

    ஆறு முத்தங்கள் தந்தாய்

    இத்துணைத் திறமை காட்ட

    யாரின் மாணவன் நீ?

    எத்துணைக் கச்சிதமாய் அமைந்துள்ளது

    நன்மையும் கருணையும் உன்னில்!

    உலகம் உன்னால்

    ஆயிரம் விடுதலைகள்

    அடைந்துவிட்டது

    (பக்கம் 266, 410.(#1993))

    முன்றாம், நான்காம் அடிகளை “காதலரின் விளையாட்டுத்தனம்” தொனிக்க தமிழ்ப்படுத்தியிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. ஆனால், ரமீஸ் பார்சி மொழி தெரிந்தவர்.  சரிபார்க்கும் நோக்கத்துக்காக ஒரு துணையாக மட்டுமே ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை பயன்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறார். முன்னுரையில் அவர் கூறுவது – “பார்சி மூலத்துடன் ஒப்பு நோக்கும் போது ஏ.ஜெ.ஆர்பெர்ரி, ஸரா ஹோஷ்மண்டு ஆகியோரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பல இடங்களில் சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன். அத்தகு இடங்களில் எல்லாம் மூலத்தின் சொற்கள் தரும் வெளிச்சத்திலேயே என் தமிழாக்கம் அமையுமாறு பார்த்துக் கொண்டேன்.” (பக்கம் 11).

    இன்னுமொரு ருபாயீயை ஆராய்வோம்!

    உன்னை நினைவுகூர்ந்தால்

    அந்த நினைவின் நடுவில் 

    நீயே இருக்கிறாய்

    பேச வாய் திறந்தால்

    அந்தத் திறப்பினில்

    நீயே இருக்கிறாய்

    களிப்படைகிறேன் எனில்

    என் களிப்பின் ரகசியமாய் 

    நீயே இருக்கிறாய்

    சாக்குப்போக்கு 

    தேடுகிறேன்

    அதைக் கற்பிக்கும்

    ஆசானாய்

    நீயே இருக்கிறாய்  

    (பக்கம் 265, 409.(#1992))

    இதுவும் முன்பு மேற்கோள் காட்டிய கவிதை போலவே ஒலிக்கிறது. சிலேடைக் கவி போல ஒலிக்கும் இக்கவிதையின் உள்ளுறை பொருள் – சூபிஸத்தின் இறைவனை நினைவுகூர்தல் (Dhikr) – என்னும் தியானச்சடங்கை விவரிக்கிறது. கடவுளை நினை, அவன் நாமத்தை உச்சரி, கடவுளின் உள்ளார்ந்த ஞானத்தில் லயித்திரு, சாக்குபோக்கு சொல்லாதே

    கதைப் பின்னணி இதில் காணப்படுகிறதா? சற்று யோசித்தால் இதன் கதைப் பின்னணி நமக்குப் புரிந்து விடுகிறது. நேரடியான பொருள் தமிழ்ச்சங்க இலக்கிய வகைமையாகிய “அகம்” எனும் வகைமையில் வரும் என்பதால் கதைப் பின்னணியைக் குறிப்பால் பின்னிவிட முடிகிறது!

    உன் வேதனையின் 

    எரிச்சலிடமிருந்து

    ஒரு தகனம் தேடுகிறேன்

    உன் வாசலின் 

    புழுதியிலிருந்து

    ஒரு கம்பளம் தேடுகிறேன்

    துயரங்கள் அடைந்துவிட்டேன்

    போதும்போதும் என்ற அளவு

    உன் சகவாசத்தில் இப்போது

    மகிழ்ச்சியைத் தேடுகிறேன்.

    (பக்கம் 182, 245 (#1133))

    “அனைத்து கட்டுப்பாட்டையும் தாண்டிய ஆற்றலான காதல் ஒரு தீ, காலிபே!

    அதனை இஷ்டப்படி அணைக்கவோ மூட்டவோ முடியாது” – என்கிறார் மிர்ஸா காலிப்

    வேதனையின் எரிச்சலிலிருந்து விடுபெற தகனம் ஏன் வேண்டுகிறான் கவிதை சொல்லி? காதலின் ஏழு நிலைகளில் கடைசி நிலையான “மௌத்” (அழிவு – சுயத்தின் குறியீட்டு அழிவு) அடைவதற்கு முன்னம் – போற்றுதல், வழிபாடு, பித்து – இவற்றை அனுபவிக்க வேண்டாமா? புழுதியிலிருந்து அவன் ஏன் கம்பளம் வேண்டுகிறான்? வழிபாட்டின் குறியீடா கம்பளம்? சகவாசம் (companionship) -தான் கவிதை சொல்லியின் இறுதி இலக்கா? அவன் கம்பளத்தினூடே வேண்டுவது சகவாசம் – இறைவனுடனான சகவாசம். ரூமியின் ருபாயியாத்தும் மஸ்னவி போல கதையனுபவத்தினூடே எழும் கவித்துவத்தை வாசகனுக்கு நல்குகிறது.

    ருபாயியாத் எனும்போது உமர் கய்யாமோடு ஒப்பிடும் ஆர்வமும் மேலெழுகிறது. பொதுவாக நோக்குகையில் போகத்தைக் கருப்பொருளாக அதிகம் கையாளும் உமர் கய்யாம் தனது கவிதைகளில் அதிகம் சிந்தித்தது – அழிவு, இறப்பு, அர்த்தமிகு வாழ்க்கை வாழும் வழிமுறைகள், நிலையாத்தன்மை, தற்காலிகத்தன்மை.

    இதற்கு மாறாக, ரூமியின் கவிதைகள் தெய்வீக, மறைஞானக் கருப்பொருட்களைக் கையாள்கின்றன. காதலரை வர்ணிக்கின்றன. கவிஞரே ஒரு காதலராக இக்கவிதைகளில் பேசுகிறார். காதல் வயப்பட்ட காதலர் தான் காதலிப்பவரை வர்ணிப்பது போல ரூமியின் ருபாயியாத்துகள் ஒலிக்கின்றன. ரூமியின் கவிதைகளில் காதலிக்கப்படுபவர் இறையாகவே அர்த்தங்கொள்ளப்படுகிறார்.

    சீர்மை வெளியிட்டுள்ள ரூமியின் ருபாயியாத் நேரடியாக பார்சி மூலத்திலிருந்து தமிழ்ப்படுத்தப்பட்டுள்ள அரியத்தொகுப்பு. அடிக்குறிப்புகள் அளிக்கும் விளக்கம் கவிதையைப் பொருள் கோடலில் மிகவும் உதவுகிறது. பார்சி மூலத்தின் தமிழ் transliteration-ஐயும் நூலில் இணைத்துள்ளது தமிழ் வாசிப்புப் பரப்புக்கு மொழிபெயர்ப்பாளரின் முக்கியப்பங்களிப்பு. “என் ஒவ்வொரு அங்கத்திலும் காதலியின் அடையாளம் உள்ளது” (பக்கம் 101) என்று ரூமியார் சொல்லுவது போல மொழிபெயர்ப்பாளரின் ஒவ்வொரு வரியிலும் (முன்னுரை முதற்கொண்டு) பிரபஞ்சக்கவி மீதான வியப்பை மேலதிகம் உயர்த்தும் மெனக்கெடல் நமக்கு உணரக் கிடைக்கின்றது.  

    நன்றி : காலச்சுவடு

  • Tlön, Uqbar, Orbis Tertius – ஒரு வாசிப்பு

    போர்ஹேஸ் எழுதிய சிறுகதையொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி வைக்குமாறு நண்பர் Vasu Devan அவர்களிடம் கேட்டிருந்தேன். அதன் தலைப்பு – Tlon, Uqbar, Orbius Tertius. பொதுவாக போர்ஹேஸின் சிறுகதைகளில் வரிக்கு வரி நிறைய குறிப்புகள் அடங்கியிருக்கும். இந்தக் கதையிலும் இது போலத்தான். நொடிக்கு நொடி இணையத்தில் தேடி அந்தக் குறிப்புகளின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சில குறிப்புகளைப் புரிந்து கொள்ள சில கட்டுரைகளை வாசிக்க வேண்டியிருந்தது. வாசிப்பாளரின் உழைப்பைக் கோரும் கதைகளையே போர்ஹேஸ் எழுதியுள்ளார். இணையம் எல்லாம் இல்லாத நாட்களில் எழுதப்பட்ட சிறுகதை. இத்தகைய கதைகளை எழுதுவதற்கு எத்தனை வாசித்திருக்க வேண்டும்! அவரின் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது தோன்றும் வியப்புணர்வும் மலைப்புந்தான் இன்றும் தோன்றியது. இந்தக் கதைக்கு நான் வந்தடைந்ததும் ஒரு கட்டுரையில் படித்த குறிப்பு வாயிலாகத்தான். யாருக்கும் தெரியாமல் ஒரு பேரரசன் கொல்லப்பட அவனைப் போல பாவனை காட்டும் ஒரு போலி அரசனாக இன்னொருவன் வாழ்ந்திருக்க அவன் போலி என்று சரியாக ஊகித்து அவனைக் கொன்று அக்கமெனிட் வம்சத்தின் அரசனானார் முதலாம் டேரியஸ். இந்த சம்பவத்தை டேரியஸ் பெஹிஸ்துன் மலைகளில் செதுக்கிய கல்வெட்டுகளில் பதிவு செய்திருக்கிறார். கிரேக்கர் ஹெரடோடஸும் இதைப்பற்றி எழுதிவைத்துள்ளார். இது பற்றி ஏராளமான தொன்மக் கதைகளும் இருக்கின்றன. போலியாக வேடமிட்டு மன்னனான ஜொராஸ்ட்ரிய சமய பூசாரி பற்றிய குறிப்பை மேல் சொன்ன கதையில் போர்ஹேஸ் பயன்படுத்தியுள்ளார் எனுந்தகவலே இந்தக் கதையிடம் என்னைக் கொண்டு போய் சேர்த்தது. குறிப்புகளிலிருந்து கதைகளுக்குச் சென்று குறிப்புகளைத் தரிசித்து இதன் வாயிலாக மேலும் பல குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டு….குறிப்புகளில் தொலைந்து….போர்ஹேஸின் இந்தச் சிறுகதை சேர்க்கப்பட்டுள்ள தொகுப்பின் தலைப்பு Labyrinths….தேடல்களின் பாதையை இதைவிடப் பொருத்தமாக வர்ணித்துவிட முடியுமா?

    “Of the historical names, only one: the impostor magician Smerdis, invoked more as a metaphor.”

    ஐபோனை தொலைத்தல் ஓர் அனுபவம். மனித வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு சோக ரசத்தை நாம் தொலைத்த ஐபோனும் நமக்குத் தரும். ஊபர் டாக்ஸியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த போனில் எனக்குத் தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டேன். அது தான் அந்த போன் என் கைகளில் இருந்த கடைசி நினைவு. சாலையில் நல்ல போக்குவரத்து நெறிசல். டாக்ஸி ஊர்ந்து கொண்டிருந்தது. எப்போது கண்களை மூடினேன் என்று தெரியவில்லை. போன் என் மடியிலிருந்து கார் சீட்டில் விழுந்திருக்கலாம். இதெல்லாம் இப்போது அந்த போன எப்படி தொலைந்து போயிருக்கும் என்று யோசித்து யோசித்து கற்பனையில் அரைகுறை ஞாபகத்தில் உருவாக்கி வைத்துள்ள காட்சிகள். டாக்ஸியில் வீடு வந்திறங்கிய போது இருட்டியிருந்தது. தெரு விளக்கு அன்று எரியாமல் இருந்தது என்ற ஞாபகம் தெளிவாக இருந்தது. காரிலிருந்து இறங்குவதற்கு முன்னம் ஒரு முறை உள்ளே நோட்டம் இட்டிருக்க வேண்டும். இது இப்போது புரிகிறது. காரிலிருந்து இறங்கும் போது ஐபோனை இழக்கப்போகிறேன் என்று முன்னமே தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். பத்து நிமிடங்கள் கழித்து போனை தொலைத்துவிட்டோம் என்ற பிரக்ஞை வந்த பிறகு மறுபடியும் என் வீட்டுவாசலுக்கு வரும் வரை அந்த டாக்ஸி அங்கேயே காத்திருந்திருக்கலாம்.

    அதை இழந்த குற்றவுணர்ச்சி பல மாதங்கள் தொடர்ந்தது. ஐபோனை எவனும் தொலைப்பானா? எத்தனை விலை கொடுத்து வாங்கினோம்?…..என் மேல் நான் கொண்ட கோபம் சில நாட்களுக்கு குறையவேயில்லை. இனிமேல் ஒரு போனும் வாங்குவதில்லை என்ற விரதம் வேறு எடுத்துக் கொண்டேன்.

    அந்த ஐபோன் என் ஞாபகத்தில் நிரந்தரமாக நிலைத்துவிட்டது. அதை நிஜமாகவே தொலைத்தேனா? தொலைத்திருந்தால் அது அடிக்கடி என் ஞாபகத்தில் ஏன் வரப் போகிறது? 

    அந்த ஐபோன் அந்த டாக்ஸியின் அடுத்த பயணியின் கையில் கிடைத்ததெனில் அந்த ஐபோன் என் ஐபோனா? இல்லை அந்தப் பயணிக்கு கிடைத்த ஐபோன். நான் தொலைத்த நேரத்திலிருந்து இன்னொரு பயணியின் கையில் அது கிடைக்கும் நேரம் வரை அந்த ஐபோன் இருந்ததா? இருக்கவில்லை என்று கொள்வோமானால் பயணிக்கு கிடைத்த போன் எந்த போன்? அது நான் தொலைத்த போனின் நகல். இருந்தது என்பது பதிலானால் – தொடர்ச்சியை அந்தப் பொருளுக்கு நாம் வழங்குவதனால் – மறைந்த நிலையில் அந்த ஐபோன் மனிதர்களின் உணர்வாற்றலின் எல்லைக்குள் சிக்காமல் எங்கேனும் இருந்திருக்கும்….Tlos, Uqbar, Orbis Tertius – சிறுகதை ஏற்படுத்திய எண்ண வெடிப்புகளிலிருந்து ஓர் இழையைத் திரிக்கப்போக சிறுகதையில் வரும் ஒன்பது தாமிர நாணயங்கள் ஒன்றிணைந்து  ஐபோனாக நகலெடுத்தது. தொலைத்தல் என்ற வினையே இல்லாத ஒரு பிரதேசத்தை, ஒரு நாட்டை அல்லது ஒரு கோளை நாம் சிருஷ்டிக்க முடியுமானால்…..நிற்க, பொருட்களை எப்படி தொலைக்காமல் இருக்க முடியும்? தொலைத்தால் அது நம் அகத்திலிருந்து நாம் தொலைத்ததாகவே இருக்கும்…அது தொடர்ந்து ஞாபகத்தில் இருக்குமானால் அது எங்கு தொலைந்தது? “இழத்தல்” “கண்டுபிடித்தல்” எனும் வினைச்சொற்கள் ஐபோனுக்கென ஓர் அடையாளத்தை அனுமானிப்பதாலேயே எழுபவை.  ஐபோன் அனெக்டோட் நான் அறியாமலேயே போர்ஹேஸின் கதைக்குள் புகுந்துவிட்டது.  

    __

    மிக சுருக்கமாக, Tlönic கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு  கூறலாம்: a. நேரம் எனும் கருத்தியல் இல்லை. ஒரு ட்லோனிக் சிந்தனைப் பள்ளி நாம் காலவரையறையற்ற, கடந்த மற்றும் எதிர்காலமாக பிரிக்கப்படாத நித்திய நிகழ்காலத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது, மற்றொரு பள்ளி  எல்லா நேரமும் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுவிட்டதாகவும், நாம் வாழ்வது நினைவுகளில் மட்டுமே என்றும் வலியுறுத்துகிறது. b. இந்தக் கருத்தின்படி அடையாளம் என்பது கற்பனைக்கு எட்டாதது, ஏனென்றால் எந்தப் பொருளும் காலப்போக்கில் அதன் தொடர்ச்சியை நீட்டிப்பதில்லை (“தொலைந்த ஐபோன்” – முந்தைய ஸ்டேடஸை பார்க்கவும்) c. நேரம் அல்லது பொருளின் தொடர்ச்சி மறுக்கப்படும் உலகில் வேறு எந்த பொது வகையினங்களும் இருக்க முடியாது.

    ட்லோனின் சிந்தனையாளர்களும் ஞானிகளும்  ஒரு இலட்சியவாத உலகக் கண்ணோட்டத்தை ஆதரிக்கின்றனர். ட்லோனின் கலாச்சாரத்தில் உள்ள அனைத்தும் தத்துவ இலட்சியவாதத்தை முன்னிறுத்துகின்றன. Tlönic மொழியியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளின் விளக்கத்தில் போர்ஹெஸ் மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்துகிறார். வெளி என்பது தொடர்ச்சியானதில்லை என்றும், இடைவெளி என்பது வரையறையின்படி தொடர்ச்சியற்றது என்றும், காலத்தின் கண்ணோட்டத்தில் விண்வெளியில் உள்ள இடம் அல்லது பொருள் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்றும் ஞானிகள் கற்பனை செய்திருக்கிறார்கள். இது அடையாளத்தின் தர்க்கரீதியான கொள்கையையும், உலகத்தை உணர்ந்து அதன் பொருள்களை மதிப்பிடுவதற்கு நாம் பழகிய விதத்தையும் பாதிக்கிறது. (நாம் பயன்படுத்தும் ஐபோன் நேற்று நாம் பயன்படுத்திய அதே ஐபோன்தான் என்று நாம் நினைக்கிறோம், ஏனென்றால் அந்த அடையாளத்தை முன்னிறுத்துவது நமக்கு மிகவும் வசதியாக உள்ளது.) 

    Tlön இல், காரணம் மற்றும் விளைவு போன்ற கருத்துகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அடையாளக் கொள்கை பாதிக்கப்பட்டால், இடஞ்சார்ந்த அல்லது தற்காலிக தொடர்ச்சி இல்லை என்றால், அறிகுறிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு இடையே எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாது: எரியும் சிகரெட், புகை மற்றும் நெருப்பு ஆகியவை தொடரியல் அல்லது படிநிலையில் பிணைக்கப்படாத ஒரு வரிசையில் தனித்துவமான தருணங்கள் . Tlön கிரகத்தில் அடையாளம் மற்றும் காரணத்தைப் பற்றிய சுருக்கக் கருத்துக்களைக் கருத்திற்கொள்ளும் சாத்தியம் இல்லை. இந்த வரையறையின்படி, அறிவியல் சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, als ob (“as if”) கொள்கையில் அடித்தளமிட்ட நூற்றுக்கணக்கான தத்துவங்கள் வெளிப்புறக் குறிப்புடன் எந்தத் தொடர்பையும் கோராத அழகான அமைப்புகளாக வளர்கின்றன – கற்பனாவாத இலக்கியத்தின் அடிப்படை அமைப்பைக் கொண்டவைகளாக. als if கொள்கை என்பது கற்பனாவாத மற்றும் டிஸ்டோபியன் புனைகதை உத்திகளின் அடிப்படையான ஒன்றாகும், அங்கு “எப்படி” எனும் கருதுகோள் அந்தக் கதையின் கண்டுபிடிப்பைத் தொடங்குகிறது. நேரத்தையும் இடத்தையும் தொடர்ச்சியாகக் கருதுவதற்குப் பதிலாக இடைவிடாதவையாகக் கருதுவது Tlonஇன் அடிப்படை உலகக் கண்ணோட்டமாகும், அதே சமயம், ‘als ob’ அடிப்படையிலான கற்பனையான இடத்தைக் கண்டுபிடிப்பதை இது அனுமதிக்கிறது.

     Tlön இல் உள்ள இரண்டு மொழிகளுக்கும் பெயர்ச்சொற்கள் இல்லை. இரு மொழிகளில் ஒன்று கூட்டு உரிச்சொற்களை அடிப்படையாகக் கொண்டது; மற்றொன்று, கூட்டு வினைச்சொற்களில். பெயர்ச்சொற்கள், கொள்கையளவில், சாத்தியமற்றது, ஏனெனில் ஒரு பெயர்ச்சொல்லுக்கான அனுபவ/தருக்க அடிப்படையை வழங்கக்கூடிய தொடர்ச்சியான பொருள் எதுவும் இல்லை. பெயர்ச்சொற்கள் தற்காலிக நிலைகளைக் குறிக்கும் உரிச்சொற்களின் திரட்சியிலிருந்து ட்லோனில் எழுகின்றன.  நிச்சயமாக, இந்த வகை பெயரடை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட முடியும், ஏனெனில், வரையறையின்படி, எந்த நிலையும் காலக்கண்ணொட்டத்தில் மீண்டும் நிகழாது.

    ‘கண்டுபிடிப்பது’ மற்றும் ‘இழப்பது’ போன்ற சில வினைச்சொற்களிலும் இதுவே நடக்கும். இரண்டு செயல்களும் Tlön இல் நினைத்துப் பார்க்க முடியாதவை, ஏனெனில், பொருள்களுக்கு இடையே அடையாளம் இல்லை மற்றும் இடம் மற்றும் நேரம் தொடர்ச்சி இல்லை என்றால், எந்த பொருளையும் இழக்க முடியாது; மீண்டும் கண்டுபிடிக்க முடியாது. ‘இழந்தது’ என்று நாம் கருதும் ஒன்று ஒரு பொருளுக்கு நிகழும்போது, ​​ஒரு வகையான இரண்டாம் நிலைப் பொருள் (இழந்த ஒன்றிலிருந்து தெளிவற்ற வேறுபட்டது) பெருகத் தொடங்குகிறது. இந்த உருத்தோற்றங்கள் Hrönir என்று அழைக்கப்படுகின்றன. அவை கடந்த காலத்தை கண்டுபிடிப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் பயன்படுத்தப்படலாம், இது Tlön இல் தொல்பொருளியலை ஆக்கிரமிக்கிறது.

    ஒரு வருடம் கழித்து இன்னொரு ஐபோன் வாங்கினேன். பழைய கறுப்பு நிற ஐபோனின் நகலாக நினைத்து அதன் மேல் வாஞ்சையை செலுத்தாமல், புதுப்பொருள் மீது புதுக்காதல் கொண்டவனாக மகிழ்ச்சியானேன். சிறுகதையின் இறுதியில் வருவது மாதிரி பூமி இன்னும் முழுமையாக Tlon-இன் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. 

    போர்ஹேஸின் மிக நீளமான கதைகளில் ஒன்றான, ‘Tlön, Uqbar, Orbis Tertius’ பெரும்பாலும் ஊகப் புனைகதை அல்லது சில சமயங்களில் ‘அறிவியல் புனைகதை’ என்று முத்திரை குத்தப்படுகிறது.

    தொலைந்த ஐபோன் பற்றி விலாவாரியாகப் புலம்பிவிட்டு அடுத்த சில பத்திகளிலேயே “உண்மையில் நான் வைத்திருந்தது ஐபோன் இல்லை. வேற்று கிரகத்திலிருந்து வந்த யாரோ விட்டுவிட்டுப் போன திசை காட்டும் கருவி” என்று சொல்லி பின்னர் ஐபோனை மறந்துவிட்டு அந்த வேற்றுக் கிரகம் பற்றி பல தகவல்களை அடுக்கி…..கிரகம் ஒரு கற்பனை என்று அறிவித்துவிட்டால்…அடுக்கிய தகவல்கள் அனைத்தும் கற்பனையென்று தானே ஆகும்……ஐபோன் கதைக்குள் விரியும் ஒரு கோள் பற்றிய கதை….இதைச் “சட்டகக் கதை” என்று வகைப்படுத்துவார்கள்…..ஒரு கதையை வகைப்படுத்துவது போர்ஹேஸுக்கு ஒவ்வாத விஷயம்…..இக்கதையை வகைப்படுத்த வேண்டுமென்றால் போர்கேஸியக் கதை என்று தான் வகைப்படுத்த வேண்டும். ​​​​​​ போர்ஹேஸின் எழுத்து முரண்பாடுகள், கண்ணாடிகளினுடே விரியும்  எல்லையற்ற பிரதிபலிப்புகள், சிக்கலான புதிர்ப்பாதைகள்  ஆகியவற்றால் நிரம்பியிருக்கும். 

    ‘Tlön, Uqbar, Orbis Tertius’ இல், போர்ஹெஸ், ‘பிஷப் பெர்க்லி’ என்று அழைக்கப்படும் ஜார்ஜ் பெர்க்லியைக் குறிப்பிடுகிறார். இந்த ஐரிஷ் தத்துவஞானி அவரது அகநிலை கருத்தியல் கோட்பாட்டிற்கு (‘Subjective Idealism’) மிகவும் பிரபலமானவர். அவரது பெயர் ஒரு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு – பெர்க்லி – இடப்பட்டுள்ளது. பெர்க்லி விவரித்த கோட்பாட்டை சுருக்கமாக ஒரு கேள்வி வடிவத்தில் விளக்குவார்கள் – “​​காட்டில் மரம் விழுந்தால், அதைக் கேட்க யாரும் இல்லை என்றால், அது ஒலி எழுப்புமா?” – என்பது தான் அந்தக் கேள்வி. இதற்கு பெர்க்லியின் பதில் ‘இல்லை’ என்பதாக இருக்கும், ஏனெனில் அவை மனிதர்களால் அந்த ஒலி உணரப்படும்போது மட்டுமே அது ஒலிக்கும்.

    பெர்க்லிக்கும், ட்லோனில் வசிப்பவர்களுக்கும், பொருள் அல்லது பொருட்கூறு – அதாவது, பௌதீகப் ‘பொருள்’ – இல்லை. அது மனத்தால் உணரப்பட்ட ஒரு யோசனை மட்டுமே. நான் வைத்திருந்த ஐபோன் இல்லை, ஆனால் அது இருப்பதை நான் உணர்கிறேன். அவ்வளவே. அது ‘தொலைந்து போனதற்கு அழுத நேரத்திலும்” அது என்னுடனேயே ‘இருந்தது’. நிச்சயமாக, Tlön மக்கள் ஒரு கற்பனை. எனவே முரண்பாடாக, அவர்கள் சொல்வது சரிதான் (அவர்கள் இல்லாமல் இருந்தாலும்): அவர்களின் உலகம் போர்ஹேஸ் வாயிலாக, அவரது கதையின் பக்கங்கள் மூலம் நாம் உணரும் உணர்வுகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது.

    ‘Tlön, Uqbar, Orbis Tertius’ இல் போர்ஹெஸ் குறிப்பிடும் பலர் உண்மையான அர்ஜென்டினா நாட்டு ஆளுமைகள். 1940 இல் Sur இதழில் இந்தக் கதையை முதன்முறையாக வாசித்த வாசகர்கள் உண்மை மற்றும் புனைகதை, யதார்த்தம் மற்றும் குழப்பம் – இவற்றின் திசைதிருப்பும் கலவையாக இருப்பதைக் கண்டு அதிர்ந்திருப்பார்கள். 

    தியரியெல்லாம் எழுதியாயிற்று. இந்தக் கதை ஏன் பிடிக்கிறது? 

    – குறிப்புச் சிதறல்கள்

    – தகவல்களைக் கதையில் செதுக்கியுள்ள லாவகம்

    – வகைமைப்படுத்த முடியாத இதன் வடிவம்

    – தத்துவங்களைப் பின்னி ஒரு கதையில் கோர்த்திருக்கும் செயல் திறன்

    – கருவின் விரிந்த தன்மை

    – படித்த வெகுநேரம் கழித்தும் வாசகனை அசை போட வைக்கும் தன்மை

    – மர்மக்கதை போலத் தொடங்கி, அறிவியல் புனைவாக மடை மாறி, தத்துவம், மனோதத்துவம், தொல்லியல் என்று பல துறைகளையும் தொட்டு பின்னர் ஒரு புரளியாக வடிவங்கொண்டு டிஸ்டோபியன் முடிவை எட்டும் அபூர்வம்  

    -செறிவான ஓர் எளிமையான புனைவு