Tag: பூரணம்

  • ஆகாசஜன்

    turner-snowstorm
    மகாப்பிரளயத்தில் எல்லாரும் அழிந்துவிட்டனர்
    கொல்லாமல் விடப்பட்ட ஜீவர்களைத்தேடி
    ஒருவர் விடாமல் அழித்து வந்தான் மிருத்யூ.
    அவன் பாசக்கயிறிட்டு
    எல்லாரையும் அழித்துவிட்டான்.
    ஒரே ஒருவனைத் தவிர,
    “பிரம்ம”ப்பிரயத்தனம் செய்தும் முடியவில்லை.
    எஜமானன் எமன் முன்னர் சென்று முறையிட்டான்.
    “எல்லோரையும் நீ
    அழித்துவிட இயலாது.
    ஜீவர்களின் கருமங்களை நீ அறிந்தால் மட்டுமே
    அவர்களின் ஆயுட்காலத்தை நீ அறியமுடியும்”
    என்றான் எமன்.
    சாகாமல் எஞ்சியிருந்தவனின்
    கருமங்களைத் தேடி பிரபஞ்சமெங்கும்
    தேடி அலைந்தான் மிருத்யூ
    எஞ்சிய கருமங்கள்
    ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
    வெறும் கையுடன்
    எமனிடம் திரும்பினான் மிருத்யூ
    “அந்த மனிதனின் அடையாளங்களை சொல்கிறேன்
    அவன் தானாவென்று சொல்”
    எமன் அடுக்கத் தொடங்கினான்
    ”நிர்மல சொரூபம் ;
    பஞ்சபூதங்களுடன் தொடர்பில்லை
    அமைப்பும் உருவமும்
    அவனுக்குக் கிடையாது
    யாருமறியா
    மூல காரணத்தை தழுவியவன்
    பிரத்யேக காரியங்கள் புரியாதிருப்பவன்
    மாற்றமென்றால் என்ன என்று அறியாதவன்
    கர்ம அனுபவம் அறவே இல்லாதவன்
    சித்த அசைவு சுத்தமாக இல்லை அவனுக்கு
    காண்போரின் கண்ணுக்கு
    அவனின் பிராணம் அசைவது போல தோற்றமளிக்கும்
    ஆனால் அதில் ஒரு நோக்கமும் இராது.
    சித் சொரூபமாக இருக்கிறான்
    எனவே அவனுக்கு அழிவில்லை.
    மரண நினைவுள்ளவனுக்கு மட்டுமே
    மரணம் சம்பவிக்கிறது
    இவனோ
    நினைவுகள் இலாத ஞான சொரூபனாகவும் இருக்கிறான்.”
    மிருத்யு ஆம் / இல்லை என்றேதும் சொல்லவில்லை.
    எமன் தொடர்ந்தான்
    ”உதவிக் காரணங்களின்றி
    சுயசொரூபத்தில்
    சூன்யத்தில்
    நிற்கிறான்
    பின்னர் எப்படி அவன் உன் வசப்படுவான்?”
    தன் முயற்சிகள்
    ஏன் வியர்த்தமாயின
    என்று மிருத்யுவிற்குப் புரிந்தது.
    எமன் மேலும் உரைக்கிறான் :
    ”பிரளயத்தில்
    சர்வமும் ஐக்கியமான பிறகு
    எது மிஞ்சும்?
    சூன்யத்தை தவிர வேறென்ன?
    காரண-காரியங்கள் நசித்துப் போகையில்
    மிஞ்சுவதென்ன? அதுவும் சூன்யம் தானே?
    சொப்பனத்தில் அனுபவிப்பதெல்லாம் என்ன?
    காரணம் சூன்யமாக இருந்தும்
    ஸ்தூலம் அசைவது காணப்படுகிறதல்லவா?
    சூன்யத்தை பூரணமாகவும் கொள்ளலாம்.
    உற்பத்தி தோற்றமும்
    நாசமாகும் தோற்றமும்
    சூன்ய-பூரணத்தில் இருந்தே தோன்றுவன.
    உற்பத்தி – நாசம்
    இவ்விரண்டும் நிகழுகையில்
    இவ்விரண்டின் பின்புலத்தில்
    நிலையாயும் சாட்சியாகவும்
    ஒன்று இருந்தாக வேண்டும்
    சாட்சியென்றால்
    அது விகல்பமாகாததாகவும் இருத்தல் வேண்டும்
    அது
    நம் புத்திக்கு புலப்படுவதில்லை.
    இச்சூன்ய-பூரணத்தில் இருந்து
    எழும் பிரம்மாண்டம்
    அழியும் தோற்றத்தையும் கொண்டதாய் இருக்கிறது…
    இப்போது சொல்
    உன்னால் அழிக்க முடியாத
    அது எது அல்லது யார்?”
    மிருத்யு
    மௌனத்தை பதிலாய்த் தந்தான்.

    (யோக வசிஷ்டத்தின் உற்பத்திப் பிரகரணத்தில் வரும் ஆகாசஜன் கதையிலிருந்து)