Tag: பிரதி

  • காதலும் பிற பூதங்களும்

    Of Love and other demons –1510இல் ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட The Four Books of Amadius of Gaul எனும் புதினம் பற்றிய ஒரு குறிப்பு நாவலில் வருகிறது. பிஷப்பின் தேவாலயத்தில் பாதிரி-நூலகராக இருக்கும் டீலோரா அந்நாவலை பல ஆண்டுகளுக்கு முன் பாதி வாசித்திருக்கிறார். அந்த நாவலுக்கு கத்தோலிக்க சர்ச்சுக்கள் உலகெங்கும் தடை விதித்திருக்கின்றன. தமது சர்ச் நூலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் வரிசையிலிருந்து அந்நாவலின் பிரதி தொலைந்து போய் விடுவதால் நாவலின் முடிவு என்ன என்பதை அவர் அறியமுடியவில்லை. பின்னர் ஒருமுறை அந்நாவல் பிரதி அவர் கண்ணில் கிடைக்கிறது. அதனை கையில் ஏந்தி தடவிப்பார்க்கிறார். Chivalric Romance எனும் இலக்கிய வகைமைப் புதினப் பிரதியைப் பார்த்த பிறகு ஒரு ரீஜண்ட் போல சாகசவுணர்வுடன் அவர் எடுக்கும் முடிவுகள் துன்பியல் முடிவைத் தருகிறது. பாதி வாசித்த புதினத்தின் இளவரச-நாயகனாய்த் தன்னை டிலோரா கற்பனை செய்து கொண்டிருக்கக் கூடும்.

    அடிமை வியாபாரம் உச்சத்தில் இருக்கும் தென் அமெரிக்கத் துறைமுக நகரத்தில் செல்வந்த ஜோடியொன்றின் மகள் சீர்வா மரியா வீட்டில் இருக்கும் அடிமைகளால் வளர்க்கப்படுகிறாள். ஆப்பிரிக்க அடிமைகள் பேசும் யோருபா போன்ற மொழிகளைச் சரளமாகப் பேசும் மரியாவை வித்தியாசமாகப் பார்க்கிறது காலனீய சமூகம். அவளை ஒரு வெறிநாய் கடித்த பின்னர் கண்டிப்பாக அவளுக்கு Rabies பீடிக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அது பீடிக்காத போது மரியாவைப் பேய் பிடித்துக் கொண்டதாக கத்தோலிக்க சர்ச் பேயோட்டுவதற்காக இழுத்துச் சென்று விடுகிறது.

    1740களின் தென் அமெரிக்கத் துறைமுக நகரமொன்றில் கொடூரமான கத்தோலிக்க தேவாலயத்தால் ஓர் அப்பாவியான, ஆதரவற்ற 13 வயது சிறுமி மீது சமய நிறுவனம் இழைக்கும் வன்முறையின் உருவப்படம் இந்த நாவல். மதம் மற்றும் தார்மீகப் பிரச்னைகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான கதைக்கருவை – மத ஆதிக்கத்தின் மூலம் அடையப்பட்ட தென் அமெரிக்காவின் மீதான ஸ்பானிய காலனித்துவத்தின் சூழலில் – உருவாக்கியிருக்கிறார் மார்க்கேஸ்.

    நாவல் பேசும் அடிப்படை பிரச்னையை நாத்திகம் பேசும் மருத்துவர் அப்ரெனுன்ஸியோ ஓர் உரையாடலில் அழகுற சுருக்கிக் கூறிவிடுகிறார் – “மரணத்தின் மதம் உங்களிடம் உள்ளது, அதை எதிர்கொள்ளும் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் அது உங்களுள் நிரப்புகிறது. நான் அவ்வாறு இல்லை; உயிருடன் இருப்பது மட்டுமே அத்தியாவசியமான விஷயம் என்று நம்புபவன் நான்.”

    அவள் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் பல இரவுகள் மரியாவுடன் கழிக்கும் டிலோரா ஏதாவது ஓர் இரவில் ரகசியமாகத் தான் வரும் வழியாக அவளை அழைத்துச் சென்றிருக்கலாமே என்று யோசித்துக் கொண்டே வாசிக்கையில் அந்த வழியைப் பயன்படுத்தி வேறொருவர் தப்பித்துச் சென்றுவிட பாதிரியார் பயன்படுத்தும் சுரங்க வழி அடைபட்டுவிடுகிறது. நாவலின் முடிவில் பேயோட்ட வரும் பிஷப்பின் வயிற்றை மரியா எட்டி உதைக்கும் கட்டம் கண நேர மகிழ்வைத் தருகிறது. கலக உணர்வுகளை அடக்கும் அதிகாரத்தின் மூர்க்கத்தனத்தை நாவலில் பதிவு செய்கிறார் மார்க்கேஸ்.

  • இந்தியா எனக்கு என்ன?

    இந்தியா எனக்கு என்ன?

    – நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம்
    – சிறு குறை கொண்ட என் மகன்
    – தொடர் வெற்றி காணும் என் மகள்
    – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு
    – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி
    – சாலையோர வாக்குவாதம்
    – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை
    – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம்
    – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி
    – மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை
    – பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு
    – நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம்
    – பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை
    – நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை
    – ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல்
    – பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு
    – ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம்
    – குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை
    – வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு.
    – இன்னும் நிறைய…..
    மிக முக்கியமாக என் சுவாசம்

    அனைவர்க்கும் குடியரசு தின நல் வாழ்த்துகள்