Tag: பறவை

  • காபா காக்கப்பட்டது

    இது நடந்தது நபிகளார் பிறந்த ஆண்டு. பல கடவுள் வழிபாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் காபா இருந்த காலம். இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில்-லும் நிர்மாணித்த அமைப்பு – ஆதி காலத்தில் ஆதம் நபி முதன் முதலாக வழிபட்ட பிரார்த்தனைத் தலம் – பல கடவுள் வழிபாட்டில் திளைத்த குரைஷிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்திலும் அது அரேபிய நிலத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஏமன் மட்டுமல்லாது அபிசீனியா போன்ற ஆப்பிரிக்க பிரதேசங்களிலிருந்து யாத்திரிகர்கள் காபாவுக்கு வருவார்கள். காபா பிரதேச பொருளாதாரத்தின் முக்கிய அங்கம்.

    அப்போது ஏமனில் உள்ள சனாவை ஆட்சி செய்த அபீசீனியாவை பூர்வீகமாய்க் கொண்ட மன்னன் அப்ரஹாவுக்கு காபாவுக்கு இணையாக வேறொரு புனித த்தலத்தை கட்டி விட வேண்டும் என்ற எண்ணம். சினாயில் ஒரு தேவாலயத்தை அமைத்து, அதை அல்-குலைஸ் எனப் பெயரிட்டான். அரபு யாத்திரிகர்கள் மக்காவின் கஅபாவில் திரளாமல், அல்-குலைஸில் திரளச் செய்ய வேண்டும் என்று எண்ணினான். காபாவை அழித்தால் தான் இது சாத்தியம் என ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு காபாவை நோக்கிப் புறப்பட்டான்.

    காபாவின் வாயிலுக்கு சற்று தூரத்தில் நல்ல கூட்டம். குரைஷிகள் எதிர்க்கத் தயாராக நிற்கிறார்கள் என்று தோன்றியது! முத்தலீப் என்ற அவர்களின் தலைவர் அப்ரஹாவைச் சந்தித்து தமது கால்நடைகளை கூட்டிக் கொண்டு மக்காவின் மலைப்பிரதேசங்களுக்குச் சென்று விடுவதாகவும் தமது மக்கள் குழுவைத் தாக்க வேண்டமென்றும் கேட்டுக் கொண்டார். அப்ரஹாவுக்கு ஓரே சிரிப்பு! “சரியான பயந்தாங்கொள்ளிகள் இவர்கள்” என்று நினைத்துக் கொண்டான்.

    அவனிடம் மிகப் பிரம்மாண்டமான ஆப்ரிக்க யானை ஒன்று இருந்தது. அதனை அடக்கி தன் படையின் பிரதம யானையாக வைத்திருந்தான். குரைஷிகள் நகரை விட்டு விலகிச் செல்லும் முன் படைகளை அனுப்பாமல் தனது பிரதம யானையை காபாவை நோக்கி முன்னகர்த்தினான். அப்போது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. தனது கால்களை மடக்கிக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டது யானை. படை வீரர்கள் அதனை எழுப்பி ஓட வைக்க முயன்றனர். யானையோ ஏமன் போகும் திசையில் ஓடத் துவங்கியது. அதனைப் பிடித்து காபாவின் திசையில் துரத்தினாலோ அது சில அடிகள் ஓடி மறுபடியும் நின்று விட்டது. அதே சமயம் வானில் திடீரென ஆயிரக்கணக்கில் கடற் பறவைகள்! அவற்றில் அலகிலும் கால்களிலும் சிறுசிறு கற்கள்! வானிலிருந்து அப்ரஹாவின் படைகள் மீது கல் மழை! கற்களின் அளவு பச்சைப் பட்டாணியின் அளவாக இருந்தாலும் யார் மீதெல்லாம் அக்கற்கள் பட்டனவோ அவர்கள் வலியில் துடித்தனர். ஒரு சிலரின் கண்களில் கற்கள் பட்டு பார்வையிழந்தனர். அப்ரஹா திகைத்தான். “குரைஷிகள் ஓடி விட்டனர்! பறவைகளின் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை! யார் ஏவுகின்றனர் இவர்களை?” – படைகள் பயந்து போய் பின் செல்லத் தொடங்கின. அப்ரஹா அவர்களை ஓட வேண்டாமெனச் சொன்னான். அவனது வீர ர்கள் பயந்திருந்தனர். ஏமனை நோக்கித் திரும்பி ஓடினர். அவர்கள் கடந்து வந்த ஒவ்வொரு நிலத்திலும் அவர்களின் உடல் பாகங்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. அப்ரஹாவின் விரல் நுனிகள் விழத் தொடங்கின. ஒவ்வொரு விரல் நுனியும் விழுந்த பிறகு, அதைத் தொடர்ந்து சீழும் இரத்தமும் வெளியேறியது. அவர்கள் யேமனை அடைந்தபோது வெகு சிலரே எஞ்சியிருந்தனர். சில நாட்களில் அப்ரஹா இறந்து போனான்.

    பின் வந்த சில பத்தாண்டுகளில் காபாவின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கப் போகும் நபியின் பிறந்த ஆண்டில் நடந்தது இது. காபாவின் அருகில் வாழ்ந்தவர்கள் பலதெய்வவாதிகள் – சிலைகளை வணங்கியவர்கள். அப்ரஹாவினுடைய படைகளின் அழிவு என்னும் அற்புத அடையாளம் – காபாவினருகில் வாழ்ந்தவர்களுக்காக அல்ல – அதே ஆண்டில் பிறந்த நபிக்காக நடந்தது.

    “நபியே! யானை(ப் படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கிவிட்டான்.” (105:1-5)

    ரம்ஜான்போஸ்ட் – 6.3.25

  • மரம் வெட்டும் திருவிழா

    மரம் வெட்டும் திருவிழா

    காலனியில் இன்று

    இனிப்பு விநியோகம்

    முன்வாசலில் நின்ற

    வயதான மரங்கள்

    வெட்டப்பட்டு

    கட்டிட பால்கனிகளில்

    வெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ;

    கலைந்த கூடோன்றுள்

    கிடந்த பறவை முட்டைகளை

    வீசியெறிந்து விளையாடி

    குழந்தைகள் குதூகலிப்பதை

    மரங்களின் இடத்தடையின்றி

    நகர்ந்த வாகனங்களின்

    உறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு

    சுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்தத்தின் பின்னணியில்

    பால்கனிக்காரர்கள்

    கண்டு களித்தார்கள்

    மரண தினத்தை

    கொண்டாடும் மரபு

    மரம் மரணித்த அன்றும்

    மாறாமல் தொடர்ந்தது

    ​@ studiothirdeye.com

    செயல்முறை

    சிந்தனைப்பாத்திரத்தில்

    நிரம்பி வழிந்த சொற்கள்

    காகிதப் பக்கங்களில் ஒட்டிக் கொண்டு

    பின்னர்

    வாசிப்பின் உஷ்ணத்தில்

    எண்ணங்களாக ஆவியாகி

    இன்னொரு சிந்தனைப் பாத்திரத்துள்

    புகுந்து கொண்டன

  • ஏரி – கவிஞர் சல்மா

    ஸல்மா

    ஏரி
    ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு
    ஏரி சலனமற்றிருக்கிறது
    சில நாட்களுக்கு முன்
    தயக்கமின்றி உன்னிடமிருந்து
    காலியான மதுக்கோப்பைகளை
    விட்டெறிந்திருந்தாய் அதில்
    மறுக்காமல் பெற்றுக்கொண்டது
    ஏரி
    பிறகொரு நாள்
    நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்
    கழுவிச் சாம்பலையும் கரைத்தாய்
    நேற்றுகூடக்
    கசந்துபோன நம் உறவினை
    இகழ்ந்து எச்சில் துப்பினாய்
    தண்ணீரில்
    எந்தக் காலமொன்றில்லாமல்
    எல்லாக் காலங்களிலும்
    உன் கழிவுகளைக் கொட்டி
    உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய்
    இன்று இதில் எதையும்
    நினைவுறுத்தாது
    உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்
    உன் அசுத்தங்களை
    அடித்துக் கொண்டுபோக
    இது நதியில்லை
    ஏரி
    சலனமற்றுத் தேங்கிய நீர்
    பத்திரமாய்ப் பாதுகாக்கும்
    ஏதொன்றும் தொலைந்துபோகாமல்
    எனது வண்ணத்துப் பூச்சிகள்
    அறைச் சுவரில்
    நான் விட்டுச் சென்ற
    எனது வண்ணத்துப் பூச்சிகள்
    தமது பசை உதிர்ந்து
    பறந்து சென்றிருக்கலாம்
    நான் திரும்புவதற்குள்
     

    பாதைகள்

     அலமாரியில்
    அறைச் சுவரில்
    சுழலும் மின்விசிறியில்
    மோதித் தெறிக்கும் வெளவால்
    பல்லாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து
    கடலின் நீலத்தையும்
    மலைகளின் கூட்டங்களையும்
    கடந்து வரும் பறவைகள்
    இதுவரை
    தொலைத்ததில்லை
    தம் வழியை
     
    பிறழ்வு
    நான் பார்த்தறியாத
    உலகைக்
    குற்றவுணர்வுகளின் சங்கடங்களின்றி
    எனக்குத் திறந்துவிடும்
    உன் ஆர்வத்தில் தொடங்கிற்று
    நமது உறவின் முதலாவது பிசகு
    வெகுவான பிரயாசைகளுக்கும்
    மூச்சு முட்டல்களுக்கும் பிறகே
    உருவாக்குவேன்
    துளியளவு ஆட்சேபணையை
    வாழ்வின் எழுதப்படாத ஒழுங்குகளைக்
    காதோரத்தில் கிசுகிசுத்துக்கொண்டேயிருக்கும்
    அசரீரிகள்
    இன்றைய உணவை
    இக்காலத்தின் எனது உடைகளை
    அவற்றின் வேலைப்பாடுகளை
    இன்னும் என் உடலில் மறைக்கப்பட
    வேண்டிய அவயவங்களை
    காலில் சுற்றி வீழ்த்தும்
    கண்ணுக்குப் புலப்படாத வேலிகள்
    அச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை
    தன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு
    இந்த இருப்பின் தடங்களை
    நாளையும் சரிபார்க்கவென மட்டுமே
    அஸ்தமிக்கும் இந்தப் பொழுது
    யாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற
    நேற்றைய உணவின்
    விதியிலிருந்து விலகி
    கூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு
    இந்த வெற்றுப் படுக்கைகளை
    தந்துவிட்டு
    வெட்டவெளியொன்றில்
    தூங்க ஓரிடம் தேடினால் என்ன?
    இன்று
    ஒரு நாளைக்கேனும்
    இந்த சங்கடங்கள் தன்னால்தானென
    நம்மில் ஒருவர்
    பொறுப்பேற்றால் என்ன
    அல்லது
    நம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல
    இன்னொருவர் உதவினால் என்ன
    இதில் ஏதும் இல்லையெனில்
    ஏதேனும் வழியொன்றைத்
    தேட முயல்வோம்
    இந்த இரவை விடியாமல் செய்ய
    காலப் பதிவு

    விபத்திலிருந்து மீண்ட நாளின் உடை

    நாம் சந்தித்துக் கனிந்திருந்த
    வேளையில் பகிர்ந்திருந்த உணவு
    நெருங்கியவரின் மரணச் செய்தி
    வந்து சேர்க்கையில்
    என் கண்களைக் கடந்த
    சிவப்பு வண்ணக் கார்
    நகர்வதில்லை காலம்
    படிந்து உறைகிறது
    ஒவ்வொன்றின் மீதும்
     (இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)
  • நம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி

    தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது.

    இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து மலேசியாவிலோ அமெரிக்காவிலோ செட்டில் ஆகிவிடுவார்; குடும்பத்தின் வறுமையை வெளிநாட்டு பணம் அனுப்பி போக்குவார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் தனிமையை அனுபவிப்பார். அவருக்கு அங்கு விவாகரத்து நிகழும் அல்லது அவள் காதலித்த வெள்ளைக்காரப் பெண்ணை இந்தியாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினர் ஏற்காமல் போவார்கள். அயல்நாட்டில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் கதைகளில் ஒரு பலமான இந்திய இணைப்பு இருக்கும்.

    அறுபதுகளில் எழுதப்பட்ட “புயலில் ஒரு தோணி”யை நான் சமீபத்தில்தான் வாசித்தேன் என்பதை இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

    அயல்நாட்டுப் பின்புலத்தில் முழுக்க முழுக்க அயல் நாட்டுப் பாத்திரங்கள் ஏன் தமிழ்க்கதைகளில் உலவக் கூடாது?

    amuttulingam_newa

    இனப்பிரச்னையின் காரணமாக உலகெங்கும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அத்தகைய கதைகள் தொண்ணூறுகளில் எழுதப்பட காரணமாயினர். அனுபவங்களின் சேகரத்துக்குப் பிறகே அது இலக்கியம் ஆகிறது . இலங்கைத் தமிழர்களின் கூட்டு அனுபவம் தமிழ் இலக்கியத்திற்கு சமகாலப் போர் அவலங்கள், புலம் பெயர் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்கள், அனுசரிப்புகளையும் பற்றிய புது முன்னோக்கிலான படைப்புகள் வந்தடையக் காரணமானது. உலகமயமாக்கலும் சர்வதேச கண்ணோட்டத்தில் கதைகள் புனையப்பட இன்னொரு காரணம்.
    அ.முத்துலிங்கத்தின் – மகாராஜாவின் ரயில் வண்டி– அருமையான சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட அழகு கொண்டவை.. சில முக்கியமான சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. மகாராஜாவின் ரயில் வண்டி, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, கடன், பூர்வீகம், ஐந்தாவது கதிரை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    இத்தொகுதியில் உள்ள “நாளை” என்ற சிறுகதை பெயர் சொல்லப்படாத தேசமொன்றில் நிகழும் போரில் பாதிக்கப்பட்ட இரு சகோதரர்கள் பற்றிய சிறுகதை. பாத்திரங்களுக்கு பெயர்கள் தரப்படவில்லை.
    பெரியவர்கள் பாதிக்கப்படும் அனைத்து வகைகளிலும் யுத்தங்கள் சிறுவர்களையும் பாதிக்கின்றன என்றாலும் சிறுவர்கள் வேறுபட்ட வழிகளில் யுத்தங்களினால் அவதியுறுகின்றனர். பராமரிப்பு, புரிதல் மற்றும் அன்பு இவைகளுக்காக சிறுவர்கள் பெரியவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். பெற்றோரின் மரணம் காரணமாகவோ, குடும்பத்தின் ஜீவனத் தேடுதலில் பெற்றோர் தீவிரமாக ஈடுபடும் காரணமாகவோ, மன அழுத்தத்துக்காளான பெற்றோரின் உணர்வு ரீதியான கவனமிழப்பின் காரணமாகவோ பெற்றோர்-சிறுவர்களுக்கிடையான இணைப்பு போர்க்காலங்களில் அறுபடுகிறது.

    பெற்றோரைத் தொலைத்த சிறுவர்கள் தெரிந்த ஒருவரின் அரவணைப்பில் இருக்கலாம் ; அல்லது உறவினர் யாருடனோ இருக்கலாம் ; அல்லது அனாதை விடுதிகளில் இருக்கலாம். குறிப்பிடத்தக்க விகிதத்தில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரியவர்களின் பாதுகாப்பை இழந்துவிடுகின்றனர். புகலிடச் சூழலில் இவர்கள் “துணையற்ற குழந்தைகள்” (unaccompanied children) என்று அழைக்கப்படுகின்றனர்.

    பெரியவனும் சின்னவனும் துணையற்ற குழந்தைகள். ஆனால் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கியிருக்கவில்லை. இம்முகாம்களிலிருந்து பல மைல்கள் தாண்டி ஒரு கராஜில் வசிக்கின்றனர். பெரியவனுக்கு பதினோரு வயது ; சின்னவனுக்கு ஆறு வயது. தினமும் பல மைல்கள் நடந்து வேறு வேறு முகாம்களுக்கு சென்று உணவு சேகரிக்கிறார்கள்.

    ஒரு முகாமில் உணவு வண்டியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். சனங்கள் ஒழுங்கின்றி நின்று வரிசையை குலைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    பெரியவனின் தலையில் சின்னவனின் பொறுப்பு. ஒழுங்கற்ற வரிசையில் சின்னவனை நிற்க விடவில்லை. சின்னவன் எங்கே தொலைந்து போய் விடுவானோ என்ற பயம் பெரியவனுக்கு.

    “அந்த தொக்கையான மனுஷி நாலு பிள்ளையையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன் கூட்டியே போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்”

    உணவு சேகரிப்பதற்காக ஒழுங்கற்று திரண்டு நின்றிருந்த சனத்திரளை அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகத்துடன் தடித்த உருவங்கொண்ட பெல்ட், தொப்பி, ஓவர்கோட் அணிந்த ஒரு மனிதன் தன் குரலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். சிறிது நேரம்தான். திரும்பவும் சனவெள்ளம் பெரியவனைத் தள்ள, சின்னவனின் கைப்பிடி தளர, அவன் தள்ளிக் கொண்டு போகப்படுகிறான். சின்னவனை ஓர் அதிகாரி அழைத்து ஒரு கூடாரம் முன்னர் நிறுத்தி வைக்கிறார். அரை மணி நேரம் சின்னவன் அங்கு காத்திருக்கிறான். அந்த அதிகாரி அண்ணனை தம்பியிடம் சேர்த்து வைக்கிறார்.

    இதற்குள் பல புது வரிசைகள் தோன்றியிருக்கின்றன. எல்லோரும் பெரியவர்களாக நின்றிருக்கிறார்கள். சின்னவனை வரிசையில் நிறுத்தாமல் வேலி ஓரத்தில் நிற்க வைத்து. பெரியவன் தன் பார்வையால் சின்னவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    பெரியவனின் கையில் ஒரு நெளிந்த டின் மட்டுமே. அவனிடம் பாத்திரங்கள் இருந்திருந்தால் அவனுக்கு கொஞ்சம் அதிகமாக சூப் கிடைத்திருக்கும். ஒரு மீசைக்காரன் பெரியவன் கையில் இருந்த அடையாள அட்டையைப் பரிசோதித்து, “இது இங்கே செல்லாதே!” என்று சொல்கிறான்.“இனிமேல் வராதே” என்று அறிவுறுத்தப்படுகிறான். இருந்தாலும் அவனுக்கு ரொட்டியும் சூப்பும் வழங்கப்படுகின்றன.

    சூப் ஊற்றுபவரிடம் “ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று” என்று கேட்டுக் கொள்கிறான். சின்னவனுக்கு இன்று சூப்பில் இறைச்சித் துண்டு கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருந்தான் பெரியவன். ரொட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது; ஒரு பங்கை பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். மீதி இரு பகுதிகளை இருவரும் உண்கிறார்கள். சூப்பில் அன்றும் இறைச்சித் துண்டு கிடைக்கவில்லை.
    முகாமில் இருந்து திரும்புகையில் நெடுஞ்சாலையெங்கும் ராணுவ வீரர்கள் காணப்படுகிறார்கள். சிகரெட் புகைத்தபடி நின்றிருந்த ஒரு வீரனை பெரியவன் அணுகுகிறான். ராணுவ வீரன் ஒரு சிகரெட்டை எடுத்து வீசுகிறான். பெரியவன் சிகரெட்டை பற்ற வைத்து புகைக்கிறான். சின்னவனுக்கும் புகைக்க ஆசை. பதினோரு வயதுப் பெரியவன் “நீயும் என்னைப் போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ப நல்ல பிள்ளையாம்” என்று அறிவுரை சொல்லுமிடம் நம் மனதை இலேசாக்குகிறது. சிறு புன்னகையை நம்முள் தோற்றுவிக்கிறது.
    அவர்கள் கராஜை எட்டும்போது ஒரு நாய் வந்து அவர்கள் அருகில் நிற்கிறது. அக்காட்சி போர், பசி, துயர், அவலம் நிறைந்த காட்சிகளுக்கு நடுவே மனித கருணையின் சாத்தியப்பாட்டின் படிமமாக விரிகிறது.
    ”சின்னவன் கையை நீட்டி ‘அதோ, அதோ’ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதி நாய்தான். பதிவு கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கி தயங்கி வந்தது.

    ‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா?” என்றான் சின்னவன்.‘வேண்டாம், பேர் வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும்’ பையில் இருந்த ரொட்டியை எடுத்து சரி பாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியை தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது’
    கராஜ் பாதுகாப்பாக இருக்கிறது. உள்ளே வாடையும் இருட்டுமாக இருக்கிறது. பழைய கம்பளிகளை விரித்து படுத்துக் கொள்கிறார்கள். காலையில் சின்னவன் அழும்போது அவனுக்குக் கொடுப்பதற்காக, மீதமான ரொட்டியைப் பெரியவன் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறான். சின்னவன் தூங்கி விட்டானென பெரியவன் எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென ஊர்ந்து வந்து சின்னவன் கட்டிக் கொள்கிறான். சின்னவன் அழுகிறான். “உன்னைவிட்டு ஒரு நாளும் போக மாட்டேன்” என்று பெரியவன் அவனை அணைத்துக் கொள்கிறான். ’துணையற்ற குழந்தைகளான’ இருவரும் வயதில் மிகச் சிறியவர்கள், எனினும் பெரியவனின் முதிர்ச்சி மற்றும் பரிவு இருட்டான கராஜை நம்பிக்கையொளியால் நிறைக்கும் கணம் அது.
    நாளை என்பது இன்னொரு நாளாக இருக்கலாம்.. ஆனால் நம்பிக்கை நாளை இன்றைய நாளைகளைத் தாள உதவும் நன்னாட்களை நிறைக்கலாம். பெரியவன் அடுத்த நாள் பத்து மைல் தொலைவிலிருந்த இன்னொரு முகாமுக்கு செல்லத் திட்டமிடுவதோடு கதை நிறைவு பெறுகிறது.

    “அங்கே கட்டாயம் இறைச்சி கிடைக்கும். அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்”

    ”மகாராஜாவின் ரயில் வண்டி” மனித உணர்வுகளின் பல நிறங்களை வார்த்தைகளால் படம் பிடிக்கும் அரிய சிறுகதைகளின் சிறப்பான தொகுப்பு.

    மொழி, இனம் தாண்டிய பொதுவான மனிதப் பிரச்சினைகளை, அழகியலைப் பேசவருகையில் பெயரிலா பாத்திரங்கள் பேசுபொருளின் எல்லையற்ற தன்மையை விவரிக்க மிகவும் உகந்தவை என்று இச்சிறுகதைகளை வாசிக்கையில் எனக்கு தோன்றியது.

    “நாளை” சிறுகதை போலவே “தொடக்கம்” சிறுகதையிலும் கதை நிகழும் நாடோ, கதைசொல்லியின் இன அடையாளங்களோ சுட்டப்படுவதில்லை. உலகமயமாகிய வியாபாரச்சூழலில் மும்மாத நிதியறிக்கைகளும், பங்குகளின் விலை வரைபடங்களும் மட்டுமே முக்கியமானவையாகப் போன காலத்தில், காலக்கெடுக்களை சந்திப்பதற்கான ஓட்டங்கள் மட்டுமே சாசுவதம் என்றாகி விட்டபிறகு, உலக மையமே அலுவலகமும் அதில் இருப்பவர்களும் என்று ஆகிவிடுகிறது. உலகத்தை நோக்குவது அலுவலக அறையின் ஜன்னலின் பரப்பளவைச் சார்ந்ததாகவும் ஆகிவிடுகிறது, வெறுமை மிஞ்சி தீரா வேலைப்பளு தரும் அழுத்தத்தில் சலித்துப்போய் கதைசொல்லி திறந்திருந்த அலுவலக ஜன்னலின் வழி நுழைந்து இறந்துபோன பறவையின் சொந்த ஊர், அது எந்தெந்த தேசங்களின் மேல் பறந்தது என்பன போன்ற விவரங்களை இணையத்தில் (”வையவிரிவலை” – ஆசிரியரின் மிக அழகான சொற்பிரயோகம்!) சேகரிக்கிறான். போர்டு ரூமில் முதலாளிகள் அவனுடைய பிரெசெண்டேஷனுக்காக பொறுமையின்றி காத்திருக்கின்றனர். ஆறஅமர பறவை பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டுபோய் போர்ட் மீட்டிங்கில் பறவை பற்றிய சிறு சொற்பொழிவாற்றுகிறான்.

    “ஆயுள்” கதையின் தொடக்கத்தில் “இது காதல் கதையல்ல” என்ற குறிப்பு வாசிக்கக் கிடைக்கிறது. கதையின் கடைசி பத்தி வரை ஒரு காதல் கதை போல நகரும் கதை. இலக்கிலாமல் சதா பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடோடி வரலாற்றுக்கு முந்திய காலம் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் குடுவை எல்லாருடைய கவனத்தையும் கவர்கிறது – ஹொன்ஸா கூல் என்கிற ஆதிவாசிப் பெண்ணைத் தவிர.
    நாடோடிக்கு அவள்மேல் ஈர்ப்பு. வழக்கத்திற்கு மாறாக அப்பெண்ணின் கிராமத்திலேயே தங்கிவிடுகிறான். இயற்கை சார்ந்த கிராமவாசிகளின் வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. “என்னை மண்ந்து கொள்வாயா?” என்று அவன் கேட்கும்போது ஹொன்ஸாகூல் அவனை விரட்டிவிடுகிறாள் .நாடோடி அசரவில்லை. ஹோன்சாகூலை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை தெரிவிக்கிறான். அவருக்கு ,சம்மதம்தான். ஆனால் கிராம மரபுப்படி ஹோன்சாகூலின் சம்மதத்தைப் பெற்றால்தான் திருமணம் சாத்தியம்.

    மழைக்காலம் துவங்கும் அறிகுறி தோன்றவும், அங்கிருந்து கிளம்ப முடிவெடுக்கிறான், போகுமுன்னர் ஹோன்ஸாகூலை மீண்டுமொரு முறை சந்தித்து அவளிடம் பிளாஸ்டிக் குடுவையை நீட்டுகிறான். ஹொன்சாகூல் அவன் தந்த குடுவையின் நேர்த்தியில் மனதைப் பறிகொடுக்கிறாள். “குடுவையை என் ஞாபகமாக வைத்துக் கொள். நான் திரும்பி வந்து உன்னை திருமணம் செய்து கொள்வேன்” என்று நாடோடி சொல்கிறான்.
    இரு வருடங்கள் காத்திருந்தும் நாடோடி திரும்பி வரவில்லை. அவள் கிராமவாசியொருவனை மணக்கிறாள். சீக்கிரமே மணத்தை முறித்துக் கொண்டு விடுகிறாள். அவள் மணமுடித்த கணவன், அவளுடைய தந்தை – ஒவ்வொருவராக இறந்துவிடுகிறார்கள். குடுவை அவளுடைய குடிசையிலேயே கிடக்கிறது. ஒரு நாள் அவளும் இறந்து போனாள். பல வருடங்கள் கடக்கின்றன. குடிசையும் சிதிலமாகி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. சடலங்களும் மண்ணோடு மண்ணாகின. அந்த குடுவையும் மண்ணில் புதைந்து விடுகிறது. ஆனால் சாகவில்லை. அதன் ஆயுள் நானூறு ஆண்டுகள். நூறு வருடம்தான் கழிந்திருக்கிறது. அது அழிந்துபோக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. “ஆயுள்” நிச்சயமாக காதல் கதை இல்லை!

    மார்பகப் புற்றுநோயின் காரணமாக மார்பகம் நீக்கப்பட்ட பெண்களின் மனவலியை நுணுக்கமாகச் சொல்லும் அழகிய சிறுகதை – பூர்வீகம். யுக்ரேய்ன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் வசிக்கும் அனா என்கிற அன்னலட்சுமி சேரகோவ் ”பூர்வீகம் தேடுவதை இனி விட்டுவிட வேண்டும். இன்னும் நூறு வருடங்களில் எல்லோரும் ஒரே இனம்தான்” என்று சொல்லிக்கொண்டே வைன் குடிப்பாள். அவள் அதிகம் குடித்து நிதானமிழக்கவும், கதைசொல்லியும் மற்றவர்களும் அவளை அழைத்துக்கொண்டு அவளுடைய ஓட்டல் அறையில் விடுவார்கள். அப்போது கண்ணகி போன்று தன்னிரு மார்பையும் கழட்டி அவர்கள் மீது அனா வீசுவாள். பஞ்சு போன்ற அவளின் மார்பகங்களின் ரகசியம் கதைசொல்லிக்கு ஆறு மாதம் கழித்து அனாவின் மரணச்செய்தியைப் படிக்கும்போதுதான் தெரிய வருகிறது.

    தம்பதிகளுக்கிடையே ஏற்படும் சுவையான பாலியல் அரசியலை அழகுறச் சொல்லும் ”ஐந்தாவது கதிரை”

    வெளிப்பூச்சில் அதி நவீனமாக வளைய வரும் குடும்ப அங்கத்தினர்களின் உண்மையான வண்டவாளம் இரவில் தெரிய வரும் “மகாராஜாவின் ரயில் வண்டி” சிறுகதையின் கதைசொல்லி எல்லாவற்றையும் பார்த்து துல்லியமாகப் பகிர்ந்து கொண்டாலும் அந்நிகழ்வுகளை அவன் எவ்வளவு புரிந்து கொண்டான் என்பதை நாம் அறிய மாட்டோம். ரோஸலின் என்கிற பதின்பருவ அழகி வாயைத் திறந்தால் பொய்! தான் படிக்கும் பள்ளியைப் பற்றிக் கூட அளந்து விடும் பகட்டு ! கதை சொல்லிக்கோ அவளின் பெயரை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவாள் என்று கேட்கவில்லையே என்ற ஏக்கம். கதை சொல்லிக்கு பல வருடங்களுக்குப் பிறகு யூகமாகப் புரிந்தாலும், நீள் சதுர பிஸ்கட்டை சாப்பிடும் போதெல்லாம் (ரோஸலின் வாசித்த) கிட்டாரின் மணம் வருவதை இன்னும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

    மகாராஜாவின் ரயில் வண்டி சிறுகதைத் தொகுதியை வாங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. புதுப்புத்தகங்களை முகர்ந்தால் ஒரு மணம் வரும் ;புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கமுள்ள எனக்கு இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய இப்புத்தகத்தில் இருந்து இன்னும் வாசனை வந்து கொண்டேயிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்களும் வாங்கி முகர்ந்து பார்க்கலாம்!

    புத்தகம் : மகாராஜாவின் ரயில் வண்டி
    ஆசிரியர் : அ.முத்துலிங்கம்
    வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=29293)

  • மாயை – ராம் சின்னப்பயல்

    நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.

    மாயை

    எந்த மனநிலையிலிருப்பினும்
    ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,
    இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும்
    ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,
    எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்
    வெகு உயரே பறக்கும் ஒரு பறவை
    என்னை அவதானிக்கவைத்துவிடுகிறது,
    மனம் போன போக்கில்
    எங்கு சென்றாலும் எதோ ஒன்று
    என் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.

    இப்படியாகவே இருக்கும்
    என்னைத்தொடர்ந்தும்
    உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு
    ஒரு காட்சியாகவே
    எப்போதும் நான்
    இருந்துகொண்டுதானிருக்கிறேன்.

    நன்றி : வல்லினம்

  • வாசல்

    சிற்றூரில்

    வாழ்ந்திருந்த சிறுவயதில்

    விடியற்காலம்

    வாசற்படியில்

    நான் படிக்கும் சத்தத்தோடு

    விதவிதமான பறவைகளின்

    சத்தங்களும் சேரும்

    சேவலின் கூவல்

    காகங்களின் கரைச்சல்

    குருவி, மைனாக்கள், மற்றும்

    பெயர் தெரியா பறவைகள்

    வரும் பகலுக்காக

    ஆயத்தமாகும் சத்தங்கள்

    இப்போதெல்லாம்

    விடியற்காலத்தை

    சந்திப்பதேயில்லை

    பறவைகளின்

    சத்தமும் கேட்பதேயில்லை

    வாசல் மட்டும் இருக்கிறது….

    பக்கத்து ஃப்ளாட்டின்

    செருப்புகள் சிதறி