இந்தக் கதை ஒரு வினோதம். Tlon, Uqbar, Orbius Tertius – கதையைவிட எளிதில் அணுகத்தக்கது. பெரிய அளவில் தத்துவச் சித்திரிப்பு இதில் இல்லை. ஓர் உளவுக் கதை. மர்மக் கதையும் கூட. எட்கர் ஆலன் போ, ஜி கே செஸ்டர்டன் – இவர்களின் மகாரசிகனாக இருந்த போர்ஹேஸ் உளவுக் கதையின் வேகத்தை எளிதில் கதையின் துவக்கத்திலேயே நிறுவி விடுகிறார். முழுக்கதையும் தூக்கிலிடப்படுவதற்காக காத்திருக்கும் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தின் வடிவில் கூறப்படுகிறது. உளவாளி தூக்கிலிடப்படப் போகிறான் என்ற பிரக்ஞையில் நாம் வாசிக்கத் தொடங்குகிறோம் என்றாலும் சாகசத்தின் சூட்டில் உளவாளி மீதான ஆதரவு துளிர் விட்டு கடைசியில் அவனுடைய உளவுச்செயல்திறனை எண்ணி வியக்கிறோம். கதையில் வரும் சாகசத்தின் இறுதியில் உளவாளி தப்பிவிடப் போகிறான் என்ற லேசான உணர்வுடனும் படிக்கிறோம். பாதிக்கதை விறுவிறுவென நகர்ந்து ஒரு சமயத்தில் surreal தன்மையை எய்துவது போல் தோன்றும். கேயாஸ் கோட்பாடு, குவாண்டம் மெக்கானிக்ஸ் – இவற்றின் பாதிப்பை நிகழ்த்தியவாறு நகர்கிறது கதை.
டெலிபோன் டைரக்டரியிலிருந்து ஆல்பர்ட் என்ற பெயருள்ளவரை random-ஆக தேர்வு செய்து அவரைத் தேடிப்போகும் உளவாளியிடம் அவனுடைய பாட்டனார் எழுதிய நாவல் ஒன்றைப் பற்றிப் பேசுகிறார் ஆல்பர்ட். ஆல்பர்ட்டைத் தேடி உளவாளி ஏன் வந்தான் என்பது இதுவரை வாசகர்களுக்குத் தெளிவு செய்யப்படுவதில்லை. அனைத்து சாத்தியங்களின் வழிகளையும் ஒரே நேரத்தில் தேர்வு செய்வது பற்றிய அந்த நாவலில் ஒவ்வொரு சாத்தியமும் ஒவ்வொரு விதமான முடிவுக்கு இட்டுச் செல்வதை தொடர்ச்சியற்று பேசுவதாக உளவாளியிடம் விளக்கம் கொடுக்கிறார் ஆல்பர்ட்.
இதற்குள் உளவாளியைத் தேடிக் கொண்டிருக்கும் எதிரி நாட்டுக்காரன் ஆல்பர்ட்டுடன் இருக்கும் உளவாளியைத் தேடி வந்துவிடுகிறான். அவன் உள்ளே நுழைவதற்கு ஓரிரு நிமிடங்களே உள்ளன. உளவாளி அப்போது நாம் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்கிறான்.
டெலிபோன் டைரக்ட்டரியில் ஒரு பெயரைத் தேடுதல் எனும் random செயல் ஒரு random தேர்வுக்கு வித்திட்டு ஆல்பர்ட்டின் random முடிவுக்கு எடுத்துச் செல்கிறது. ஆல்பர்ட்டுக்கு உளவாளியின் பாட்டனாரின் வாழ்க்கை பற்றித் தெரிந்திருப்பது யதேச்சை. உளவாளியின் ஆச்சரியமும் தன்னுடைய தாத்தா குறித்துப் பேசுவதில் அவன் அடையும் மகிழ்ச்சியும் கதையில் பதிவு செய்யப்படுகின்றன.
“எண்ணற்ற எதிர்காலங்களை நோக்கி காலம் என்றென்றும் தன்னைப் பிரித்துக் கொண்டிருக்கிறது, அத்தகைய ஒரு பிரிவில் நான் உங்கள் எதிரி.”- என்று ஆல்பர்ட் சொல்கிறான். “அந்த எதிர்காலம் இப்போது இங்குள்ளது” என்கிறான் உளவாளி.
குவாண்டம் கோட்பாட்டை எதிரொலிக்கும் விதத்தில், குறிப்பாக, ஷ்ரோடிங்கரின் பூனை சொல்லும் கருத்தை எதிரொலிக்கும் வகையில், கதாபாத்திரங்கள் ஒரே நேரத்தில் இறந்தும், உயிருடனும் உள்ளன. ஒரு அத்தியாயத்தில் மட்டுமே கொல்லப்பட்டு அடுத்த அத்தியாயத்தில் உயிருடன் திரிகின்றன. ஒவ்வொரு கதை சாத்தியத்தையும் உள்ளடக்கிய ஓர் எல்லையற்ற கதையை உருவாக்குவதே, உளவாளியின் தாத்தாவின் யோசனை மட்டுமல்ல, போர்ஹேஸினுடையதும் போல. இது உளவாளியின் கதையா, மர்மக்கதையா என்று கேட்டால் இரண்டுக்கும் விடை ஆம்தான். சற்று கூர்மையாக யோசித்தால், இந்தக் கதை கதை சொல்லலின் இயல்பைப் பற்றிய கதை என்றும் சொல்லலாம்.
—
The Garden of Forking Paths – சிறுகதையில் வரும் உளவாளி டாக்டர் யூ ஒரு சிக்கலான பாத்திரம். அவன் ஏன் உளவுத் தொழிலில் ஈடுபட்டான் என்பது கதையில் கூறப்படவில்லை. கதையில் வரும் அவனது சில எண்ணவோட்டங்கள் வாயிலாக அவன் உளவில் ஈடுபட்ட காரணத்தை சற்று ஊகிக்க முடியும். ஜெர்மனிக்காக இங்கிலாந்திலிருந்து உளவு பார்த்த யூ அடிப்படையில் சீனன். அவன் இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவனை சந்தித்ததாக குறிப்பிடும் போது அவன் ஜெர்மனியில் இருந்தபோது உளவாளியாக பணியமர்த்தப்பட்டான் என்று யூகிக்க முடியும். அவனைச் சந்தித்த போது ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அந்த ஒரு மணி நேரம் சந்தித்த மனிதன் ஜெர்மன் தத்துவவாதி Goetheயாக தொனித்ததாகவும் யூ கூறுகிறான். ஜெர்மனி மீது கொண்ட நேசத்தின் காரணமாக உளவுப் பணியை ஏற்றுக் கொண்டதாக அவன் நினைக்கவில்லை. ஜெர்மனி பற்றி பெரிய மதிப்பேதும் அவனுக்கில்லை. Barbarous என்று ஜெர்மனி பற்றி வர்ணிக்கிறான். சீனாவிலிருந்து அவன் ஏன் ஐரோப்பா வந்தான் என்பதற்கு ஒரு காரணமும் தரப்படுவதில்லை. அகதியாகவோ அரசியல் காரணத்துக்காக நாடு கடத்தப்பட்டவனாகவோ இருக்கலாம். ஒரு வித தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருக்கலாம் என்று கதையில் வரும் இரு வரிகள் நம்மை எண்ண வைக்கின்றன.
“I did it because I sensed that the chief somehow scorned the people of my race – …….I wanted to prove to him that a yellow man could save his armies.”
தேசம் என்ற கருத்தியல் மீது அவனுக்கு குறிப்பிடத்தக்க நாட்டம் எதுவும் இருந்திருக்க முடியாது என்று அவனுடைய எண்ணவோட்டம் நமக்குத் தெரிவிக்கிறது.
“I thought that a man can be an enemy of other men, of the moments of other men, but not of a country : not of fireflies, words, gardens, streams of water, sun sets.”
அவனுடைய குடும்ப மூத்தோர் ஒருவர் சீனாவின் யுன்னான் பிராந்தியத்தின் கவர்னராக இருந்தார் என்ற தகவல் வருகிறது. சீனாவிலிருந்து ஜெர்மனிக்கு உயர் படிப்பு படிக்க வந்தவனாகவும் அவன் இருந்திருக்கலாம்.
—
“In a riddle whose answer is chess, what is the only prohibited word?”
I thought a moment and replied, “The word chess.” - from the short story - The garden of forking paths (by borges)

