Tag: நாடகம்

  • இந்தியா எனக்கு என்ன?

    இந்தியா எனக்கு என்ன?

    – நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம்
    – சிறு குறை கொண்ட என் மகன்
    – தொடர் வெற்றி காணும் என் மகள்
    – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு
    – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி
    – சாலையோர வாக்குவாதம்
    – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை
    – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம்
    – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி
    – மேடு பள்ளங்களாலான அழகிய மலைப்பாதை
    – பெரும்பாறைகளைத் தாவி நகரும் காட்டாறு
    – நெடிதுயர்ந்த கோபுரத்தின் துளைகளில் ஒதுங்கி நிற்கும் பறவைக் கூட்டம்
    – பிரகாரச் சுவர்களில் வீசும் புராதன வாசனை
    – நகர நதிக்கரையில் தேங்கும் மாசு நுரை
    – ரூஃப் டாப்பிலிருந்து தெரியும் குடிசைக் கடல்
    – பணி நிலையங்களின் கீபோர்ட் கீச்சு
    – ராம் – ரஹீமீன் ஊடல்களும் கூடல்களும் நிறைந்த முடிவற்ற நாடகம்
    – குல்லாக்களின் டர்பன்களின் நிறம் படிந்த நெற்றிகளின் டிசைன் கலவை
    – வித்தியாசங்களுக்கு பெயரளித்து கூறு செய்யப்பட்டு நடக்கும் அணிவகுப்பு.
    – இன்னும் நிறைய…..
    மிக முக்கியமாக என் சுவாசம்

    அனைவர்க்கும் குடியரசு தின நல் வாழ்த்துகள்

  • காத்திருத்தல் எனும் நாடகம்

    எதிர்பார்க்கின்ற நிகழ்வுக்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள இடைவெளி,
    காலவோட்டத்துடன் எதிர்பார்ப்பு சேரும்போது உருவாகும் உள்ளுணர்ச்சி
    காத்திருத்தல் !
    காத்திருத்தல் அவஸ்தை
    காத்திருத்தல் சுகம்

    +++++

    எதிர்பார்ப்பு மறைந்தால் காத்திருப்பும் இறந்துபோகும்.
    காத்திருத்தல் இல்லாவிடில்
    காலவோட்டத்தின் வெறுமை பூதாகரமாய் காட்சியளிக்கும்.
    காலவோட்டத்தின் உணர்வு கலந்த அர்த்தப்படுத்தலே எதிர்பார்ப்பு

    +++++

    எதிர்பார்ப்பு சுயநல வண்ணம் கொண்டு
    நாடகம் போல முன்னரே எழுதப்பட்ட
    ஒவ்வொரு காட்சியும் நிகழ்வாகவேண்டுமென்று அடம்பிடிக்கும்.
    எதிர்பார்ப்பு லட்சிய வண்ணம் பூண்டு
    காட்சிகள் எப்படி நகர்ந்தாலும் கவலையுறாமல்
    உச்சக்காட்சியின் சுபத்தையே கனவு காணும்.

    +++++

    எதிர்பார்ப்பே இல்லையென்றாலும் நிகழ்வுகள் இருக்கும்.
    நிகழ்வுகள் நாடகக்காட்சிகளின் ஒழுங்குடன் நகரா.
    உச்சக்காட்சி என்ற ஒன்றுமிராது.
    முடிவிலா நாடகமாய் நிகழ்வுகள்.
    காட்சியின் கதையின் அர்த்தங்களை
    நடிகர்களே கற்பித்துக்கொள்வார்கள்.

    அர்த்தம் கற்பித்தலில் எதிர்பார்ப்புகள் உருவாகின்றன.
    எதிர்பார்ப்புகள் உச்சக்காட்சியை அடையாளம் காட்டும்.

    +++++

    களைத்துப்போன நடிகர்கள்
    கிளைக்கதையின் முடிவையே
    காவிய முடிவென்று அறிவித்துவிட்டு
    இளைப்பாற போய்விடுவார்கள்.