Tag: நடனம்

  • கண் திற

    ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும் – எம் டி முத்துக்குமாரஸ்வாமி
    தமிழ்வெளி வெளியீடு

    குளிரூட்டப்பட்ட காருக்குள் மேற்கத்திய இசையில் லயித்து மதுவருந்தியபடி, பெண்ணொருத்தியின் அங்கங்களை, சிணுங்கல்களை கற்பனையில் ஏற்றிக் கொண்டு கண் மூடிப் பயணம் செய்கிறான். உமது திருச்சட்டத்தில் உள்ள அற்புதங்களை நான் காண என் கண்களைத் திற. – என்கிறது ஒரு விவிலிய வசனம். உடலின் ஒளியாகிய கண் மூடிக்கிடக்கும்போது எதைக் காணவியலும்? 

    ஓட்டைக்கண்ணைத் திறந்து ஜன்னல் வழிப் பார்க்கிறபோது அவன் காணும் காட்சி அவனுள் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. ஜன்னல் வழி அவன் பார்க்கும் முதியவனின் முகம் அவனுடைய முகத்தை ஒத்திருக்கிறது. அவன் பார்ப்பது அவனுடைய பிரதிபலிப்பவையேவா? சில வினாடிகளுக்கு முன்னர் போதையுணர்வில் ஆழ்ந்திருந்த அவனை புரட்டிப்போடும் அந்த ஜன்னல் வழி தெரியும் உருவம் நிஜமா, அல்லது அவன் கற்பனை செய்து கொள்ளும் அவனுடைய பிரதிபலிப்பா? 

    ஒரு கணத்தில் அவன் தன்னைப் பற்றிய தற்சோதனையில் ஈடுபட்டிருக்கக் கூடுமா? அதற்கான ஒரு சங்கேதமும் அந்தத் தருணத்துக்கு முன் கவிதையில் சித்திரிக்கப்படவில்லை. தீடீர் பெருமாற்றம் நிகழ ஒரு நொடி போதும் என்ற கருத்தை கவிதை சொல்ல வருகிறது என்றுதான் மேல் நோக்காகத் தோன்றுகிறது.

    ஆனால், கவிதை சொல்ல வருவது அதனை மட்டுமில்லை என்பதற்கான பல வாசிப்புச் சாத்தியங்களை இக்கவிதை தன்னகத்தே கொண்டுள்ளது. 

    கவிதையின் வரும் சில முக்கியக் குறிச்சொற்களைப் பார்ப்போம்.

    நகரத்தின் பொறி

    முகத்தின் முதிய சாயல்

    அழியும் தற்போதம்

    தன்னழிவு

    இறுதி ஊர்வலம்

    சாவு நடனம்

    ஓட்டைக் கண்பார்வை

    எலிப்பொறியில் சிக்கிக் கொள்ளும் எலிக்கு அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை நினைத்து ஏற்படும் கிலியுணர்வைத் தான் நகரத்தின் பொறி நமக்குள் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது. ஓர் இருத்தலியல் சிக்கலின் குறியீடாகப் போக்குவரத்து நெரிசல் கவிதையின் ஆரம்பத்தில் நிகழ்கிறது. கார் நகராமல் அந்த நெரிசலில் காத்திருக்கும். காருக்குள்ளிருக்கும் பயணி நிலைமையின் உதவியற்ற தன்மையை மறுப்பவன் போல “ஜோஷுவா பெல்லின் வாசிப்பில் சாய்க்கோவ்ஸ்கியின் வயலின் இசையை கன்சர்ட்டோ சிங்கிள் மால்ட் விஸ்கியுடன்” உள்ளிறக்கிக் கொண்டிருக்கிறான்.

    கார் ஜன்னலுக்கப்புறம் தீடீரென்று வெகுஅருகே வந்து உள்ளே நோக்கும் உருவங்கள் பொதுவாகவே திடுக்கிட வைக்கும். இங்கோ இசையும், மதுவும் பெண் சிந்தனையும் அளைய ஓட்டைக் கண் திறந்து பார்த்தவுடன் தோன்றும் திடுக்கிடல் தடாலென அவனுள் மாற்றத்தை நிகழ்த்திவிடுகிறது. அவன் பார்க்கும் கிழ உருவம் அவனுடய முகத்தின் முதிய சாயல் என்பதாக இருந்தது என்ற குறிப்பு கவிதையில் உள்ளது. யாசகம் செய்யும் பிச்சைக்காரக் கிழவனுடனான உருவ ஒற்றுமையாக அதைப் பார்த்தாலும், மதுவின் போதையில் ஆழ்ந்திருந்தவன் ஓட்டைக் கண்ணைத் திறந்து புறம் நோக்கினானா, அல்லது தன்னுள் நோக்கினானா?

    ஒருவனுடைய தற்போதம், அதாவது தன்னினைவு அல்லது ஆணவம் எப்போது அழியும்? போதையுணர்வில் அவனுடைய தற்போதம் நீங்க வாய்ப்பு உண்டெனினும், அப்போதையுணர்விலிருந்து அவன் நீங்க அவனுக்கு மனம் வந்திருக்குமா என்பது சந்தேகம். அழியும் தற்போதம் அகத்தினுள் தன்னுடைய முகத்தின் முதிய சாயலைத் தரிசித்ததனால் விளைந்தது என்பதாகப் பொருள் கொள்ள கவிதை வாய்ப்பளிக்கிறது.

    தன்னழிவு என்றால் என்ன? பொதுவாக எதிர்மறைச் சொல்லாக கருதப்படும் பதம் – தன்னழிவு. தற்கொலை, தீக்குளிப்பு முதலான செயல்கள், சுயவதை என்பன போன்றவற்றைத் தன்னழிவு என்ற சொல்லால் குறிப்பர். இக்கவிதையில் சுயத்தின் அழிவு என்பதான அர்த்தத்தில் வாசிக்க இடமிருக்கிறது. மேட்டிமை அடையாளங்களை உடனடியாக இழந்து (யாரோ ஒருவரின்) இறுதி ஊர்வலத்தில் அவன் தன்னை மறந்து நாக்கைத் துருத்திக் கொண்டு சாவு நடனம் ஆடியதில் அவன் இழந்தது எதை? அந்தத் தன்னழிவு தன்னை அழித்துக் கொண்டதைக் குறிக்கிறதா? அல்லது சுயத்தின் அழிப்பைக் குறிக்கிறதா?

    “உள், அகநிலை சுயம் மற்றும் வெளி உலகிற்கு இடையே”யான பாலமாக நீண்ட காலமாகவே கண்களைக் கருப்பொருளாகக் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  கவனம், உண்மை, தெளிவு, ஒளி, பார்வை, தீர்க்கதரிசனம், விழிப்புணர்வு மற்றும் அவதானிப்பு ஆகிய    கருத்துக்களை நனவில் பரப்பும் கற்பனையைத் தூண்டுவதற்கு முயற்சிக்கும் கலைஞர்களுக்கு கண் ஒரு சரியான அடையாளமாகத் திகழ்கிறது. “பொய்க் கண்ணாடி” என்ற மிகப் புகழ் பெற்ற கண்ணோவியம் ஒன்று உண்டு.  ஓர் உயிர்ப்பில்லா கண். அதற்கு புருவமில்லை. அதன் கண்மணி கடுங்கருப்பு நிறத்தில் இருக்கிறது. அதற்கு மாறாக கருவிழி மேகம் பரவிய நீல வானம். உயிர்ப்பற்ற ஒரு கண்ணில் சுதந்திர வானம் தெரிந்தாலும் அதை ரசிக்கவோ உத்வேகம் கொள்ளவோ முடியுமா?  முதல் உலகப் போரை அசை போடும் ஓவியர் போரில் சிக்கிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பார்வையாளனின் உயிரற்ற சித்தரிப்பைப் பயன் படுத்திக் கொள்ளுகிறார். பயத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாளை அந்தக் கண் நோக்கும்போதும் அது உயிரற்றுக் கிடக்கிறது. 

    ஜன்னலில் தெரிந்த அவனுடைய முகத்தின் முதிய சாயல் கொண்ட உருவம் வெறித்து நோக்கிய இவனுடைய கண் பொய்க்கண்ணாடியா? ஓட்டைக் கண் திறந்ததும் பொறியிலிருந்து தப்பி சுதந்திரமாக ஓடும் எலி போல சாவின் நடனத்தில் பங்கு பெறுகிறான் காரில் இருந்தவன். இம்மாறுதல் அவன் கார் ஜன்னல் வழி ஒட்டைக் கண் திறந்ததனால் சாத்தியமாயிற்று. இருத்தலியல் பயம் படிந்து உயிர்ப்பில்லாத மூடிய ஓட்டைக் கண் பார்வை சற்று திறந்ததும் அங்குமிங்கும் மேகம் பரவிய நீல வானத்தின் உண்மையான தரிசனம் கிட்டி வாழ்வின் உயிர்ப்பைத் தழுவிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான் காருக்குள்ளிருந்தவன். அடுத்தவரின் இறப்பில் கலந்துகொண்டு சாவு நடனம் ஆடுகிறான். மேற்கத்திய இசை, வசதி, பெண் சுகம் – இவ்வனைத்தும் தப்பித்தல்கள். வாழ்வின் நிகழ்வில் முழுமையாக இருத்தலே இருத்தலியல் தவிப்பின் உண்மையான ஆற்றுப்படுத்தல்கள் என்று Moral of the story பாணியில் எழுதி விடுதல் போல இக்குறிப்பை முடித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், கவிதையின் அர்த்த அடுக்கை மேலும் விரிவாக்குகிறது இன்னுமொரு வினா. நெரிசல் மிக்க சாலையில் இறப்பு ஊர்வலம் செல்கிறது. யாசகம் கேட்கும் முதியவர் கார் ஜன்னலைத் தட்டிப் பிச்சை கேட்பது போல் இருக்கிறது. ஆனால் அம்முதியவர் காருக்குள்ளிருக்கும் இவனை வெளியே அழைப்பது போலவும் உடன் அவர் அழைப்பை ஏற்று அவன் வெளிச் சென்றது போலவும் உள்ளது. இறுதி ஊர்வலத்தில் செல்லும் பிணம், இவன் முகத்தின் சாயல் கொண்ட அந்த முதியவர், காருக்குள் இருந்து இறங்கி சாவு நடனமாடும் இவன் – மூவரும் ஒருவரோ?

  • தீயை நோக்குதல்

    திருநெடுங்கோதை – தொகுப்பிலிருந்து – பரமேசுவரி – யாவரும் பதிப்பகம்

    உணர்வு, மாற்றம், அழிவு, புதுப்பித்தல் முதலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த, இலக்கிய நடைமுறைகளில் நெருப்பு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பொருளாக உவமையாக நெருப்பு பன்னெடுங்காலமாக கவிதைகளில் உலவி வந்திருக்கிறது. சமய இலக்கியங்களிலும் நெருப்பு முக்கியமான அந்தஸ்தைக் கொண்டிருந்தது.

    ரிக் வேதத்தில் வரும் ஒரு துதிப்பாடலில் இப்படி வருகிறது : 

    “யாகங்களின் பிரதான ஆசாரியனும், தெய்வீகமானவனும், பூசாரியாக காணிக்கைகளை  (தெய்வங்களுக்கு) சமர்ப்பிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை ஏத்துகிறேன்.”

    வேத உபடநிடதங்களை மொழியாக்கம் செய்ய முயன்ற பாரதியார் அதற்கென வகுத்துக்கொண்ட வடிவத்தை வசனகவிதை என்று அழைத்தார். தீயைப் பற்றிய ஒரு வசன கவிதையில் விரிவான அக்னி சடங்கில் இடப்படுவனவற்றை குறிப்பிட்டு நன்கு எரியுமாறு தீக்குப் பணிக்கிறார்.  

    தீயின் இயல்பே ஒளி. 

    தீ எரிக. 

    அதனிடத்தே நெய் பொழிகின்றோம். 

    தீ எரிக. 

    அதனிடத்தே தசை பொழிகின்றோம். 

    தீ எரிக

    அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம் 

    தீ எரிக. 

    அதற்கு வேள்வி செய்கின்றோம். 

    தீ எரிக. 

    வைதீக சமயத்தின் தீ வேள்விகளை தினமும் புரியும் ஆயிரம் பிராமணர்களை பௌத்த நெறியைத் தழுவ வைத்த பிறகு அவர்களுக்கு என்ன போதிப்பது என்று யோசித்த ததாகதர் அவர்களின் வேள்வித்தீயையே கருப்பொருளாக வைத்து புத்ததம்மத்தை விளக்குகிறார். அவரின் ஞானக்கண்ணில் சம்சார உலகே தீப்பிடித்து எரிகிறது. எரிவதை ஞானப்பார்வையில் நோக்கி சம்சார உலகின் இயல்பை விவரிக்கும் “ஆதித்த பரியாய சுத்தத்தை”க் கூறுகிறார். இது பாலி நெறிமுறையின் மிக முக்கியமான சுத்தம். இந்த சுத்தத்தின் வரிகளைத் தம் புகழ்பெற்ற கவிதையில் குறிப்பாகப் பயன்படுத்தும் கவிஞர் டி எஸ் எலியட் – கிறித்துவத்தின் மலைப் பிரசங்கத்துக்கு ஒப்பானது – என்கிறார்.

    “துறவிகளே, அனைத்தும் எரிகின்றன. என்னவெல்லாம் எரிகின்றன? கண் எரிகிறது. வடிவங்கள் எரிகின்றன. கண்ணின் உணர்வு எரிகிறது. கண்களின் தொடர்பு எரிகிறது. மேலும் கண்ணில் உள்ள தொடர்பைச் சார்ந்து எழுவது எதுவாக இருந்தாலும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ – அதுவும் எரிகிறது, எதில் எரிகிறது கண்? மோக நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால்,  நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.

    “காது எரிகிறது, ஒலிகள் எரிகின்றன …

    “மூக்கு எரிகிறது, நறுமணம் எரிகிறது …

    “நாக்கு எரிகிறது, சுவைகள் எரிகின்றன …

    “உடல் எரிகிறது, தொட்டுணரக்கூடிய உணர்வுகள் எரிகின்றன …

    “புத்தி எரியும். யோசனைகள் எரியும். புத்தியில் உணர்வு எரியும். புத்தியில் தொடர்பு எரியும். மேலும் புத்தியின் தொடர்பைச் சார்ந்து எழும் அனைத்தும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ இல்லை. வலி – அதுவும் எரியும், எதில் எரிகிறது? பேரார்வத்தின் நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால், நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.”

    நோக்குமிடமெல்லாம் தீ! எனவே தான், பட்டினத்தார் பாடுகிறார் :-

    முன்னை இட்ட தீ முப்புரத்திலே 

    பின்னை இட்ட தீ தென் இலங்கையில் 

    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே 

    யானும் இட்ட தீ மூள்க மூள்கவே 

    எப்போதெல்லாம் எரியும் நெருப்பு நோக்கப்படுகிறது?  – சமைக்கையில், கொண்டாட்டகாலங்களில் ஏற்றப்படும் விளக்குகளில், முகாம்களில் பற்றவைக்கப்படும் கேம்ப் பயர்-களில், குளிரின்போது வாழ்விடங்களை  வெம்மைப்படுத்த தீ மூட்டப்படுகையில், உலோகத்தை உருக்குதல் போன்ற தொழில் துறை செய்முறைகளில், மதநிகழ்வுகளில் செய்யப்படும் சடங்குகளில், பண்டிகைக்கால ஒளிக்காட்சிகளில், காட்டுத்தீ முதலான விபத்துகளில், தீப்பந்தங்களில் – இது போன்று பல்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு சூழல்களில் நெருப்பு கவனிக்கப்படுகிறது. 

    பக்தியுடன் அல்லது பயத்துடன் அல்லது பற்றற்று பார்க்கப்படும் தீ போலில்லை – கவிஞர் பரமேசுவரி “தீயின் அழிபசி” கவிதையில் வரும் தீ. கவிதைசொல்லி தீயை ஓர் அழகான பொருளைப் பார்ப்பது போல ரசிக்கிறார். அழகின் நிமித்தம் தீயை நோக்குவது ஒரு புதுக்கூறு. 

    கவிதை சொல்லி வீட்டின் கூரையில் அவராகவே தீ வைத்துவிட்டு அது எரிவதை ரசனையுடன் நோக்கிக் கொண்டிருக்கிறார். “நான் அங்கேதான் அமர்ந்திருக்கிறேன்” என்று சொல்கிறார். முதலில் அதை வாசித்தபோது தற்கொலை நிகழ்வை மரணத்தை விருப்பத்துடன் தழுவிக் கொள்ளும் முயற்சி போலத் தொனிக்கிறது, ஆனால், நல்ல வேளை “ஓரமாய் அமர்ந்து” எனப் பின்வரும் வரிகளில் குறிப்பிட்டுவிட்டதால், தற்கொலை இல்லை என்று நிம்மதியடைகிறோம். 

    ‘ஒன்றைப்பற்றி ஒன்று 

    மெல்ல மெல்ல மேலேறிக் 

    கவ்வும் அழகை வியந்திருந்தேன்”

    ஒரு கை இன்னொரு கையைப் பற்றி மேலேறும் நூறு கைகளின் நடனம்!

    கொழுந்துகளின் நாட்டியம், அழலின் ஆட்டம், தழலின் வெப்பம் – அனைத்தையும் கண்ணெடுக்காது ரசிக்கிறார் கவிதைசொல்லி – தழலின் வெப்பத்தை எப்படி கண்ணால் காண முடியும் என்ற கேள்வி எழுகிறது. உணரத்தானே முடியும்!

    தழல் அடங்கிவிடுகிறது. கவிதைசொல்லி அங்கிருந்து நகர்வதாயில்லை. ஒன்றும் இலாமல் அனைத்தையும் தின்று தீர்த்த தீயின் பசி அத்தனை அழகாயிருந்ததாம்!

    பரமேசுவரியின் இந்தக் கவிதையை வாசித்த பிறகு ராபர்ட் ப்ராஸ்ட் எழுதிய புகழ் பெற்ற ஆங்கிலக் கவிதை – தீயும் பனியும் ஞாபகத்துக்கு வந்தது. உலகம் அழியப்போகும் நாளை அக்கவிதையில் கற்பனை செய்கிறார் கவிஞர். உலகம் தீயால் அழியும் என்று சிலர் எண்ணுகின்றனர். வேறு சிலரோ பனியால் அழியும் இவ்வுலகு என்கின்றனர். ஆசைகளைச் சுவைத்தவன் என்பதால் தீயால் அழியும் என்பவர் கட்சியில் தானிருப்பதாகச் சொல்கிறார் கவிதைசொல்லி. ஆனால் இவ்வுலகம் இருமுறை அழியும் என்றிருக்குமானால் போதுமான அளவுக்கு வெறுப்பு பற்றி அறிந்தவன் என்பதால் பனியினால் இவ்வுலகம் அழிவதும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் கவிதைசொல்லி. ஆசையை நெருப்பாக உவமிக்கும் ராபர்ட் ப்ராஸ்ட் போலவே எண்ணற்ற கவிஞர்கள் தீயை ஆசைக்கு உருவகமாக்கியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்திலும் இதற்கு உதாரணம் உண்டு.

    அற்புதத் திருவந்தாதியில் சிவ பெருமான் இருக்கும் இடமாக காரைக்காலம்மையார் சொல்லும் சுடுகாட்டில் ஒரு பேய் இருந்தது. அதனால் சிவனேயென்று இருக்க முடியவில்லை.  ஒரு கள்ளிப் புதரின் நடுவில் படுத்துக் கொண்டிருந்த பேய் சும்மா இராமல், எரிகின்ற சிதைக்கட்டையை எடுத்து அதில் படிந்திருந்த மையை எடுத்து கண்ணில் மையாகப் பூசி அழகாக உணர்ந்தது. சில வினாடிகள் தாம்! சிதைக்கட்டையின் தீப்பொறி அதன் கண்ணில் பட்டுவிடுகிறது. சூடு பொறுக்க முடியாமல் சினக்கிறது. சத்தம் போட்டு அலறுகிறது. அங்கும் இங்கும் துள்ளிக் குதிக்கிறது. தீயை அணைக்க முயல்கிறது. இத்தகைய காட்டில் இருக்கிறானாம் எம்பெருமான் என்கிறார் காரைக்காலம்மையார். ​​ 

    யார் அந்த பேய் ? ஆசையுள்ளோர் அந்தப் பேய். இந்த உலகம் தான் சுடுகாடு. ஒவ்வோர் ஆசையும் ஒவ்வொரு கொள்ளிக் கட்டை. அனுபவிக்கும் போது முதலில் கொஞ்ச நேரம் இனிமையாக இருக்கும். அப்புறம், சூடு தாங்காமல் எரியும். எதை வேண்டும் என்று எடுத்தோமோ அதையே வேண்டாம் என்று தூக்கி ஏறிய நினைக்கிறோம்.

    கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்

    கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை

    விள்ளவெழுதி வெடுவெடென்ன

    நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்

    துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்சுட்டிட 

    முற்றுஞ் சுளிந்து பூழ்தி

    அள்ளி அவிக்க நின்றாடும்

    எங்கள்அப்பனிடந் திரு ஆலங்காடே

    “தீயின் அழிபசி” கவிதையில் வரும் கவிதைசொல்லி பதற்றமோ சினமோ கொள்ளவில்லை. மாறாக, அமைதியாய் தீ எரிவதை நோக்குகிறார். அவரே சொல்வது போல அது “அத்தனை அழகாக இருந்தது”. எரிந்து போனது அவர் வாழ்ந்த வீடாகக்கூட இருந்திருக்கலாம்! அவருடைய உடமைகள் எல்லாம் அழிந்து போயிருக்கலாம். ஆதித்த பரியாய சுத்தத்தில் புத்தர் விளக்கிய சம்சார உலகின் வெறுமையை உணர்ந்து அமைதிக்குள் புகுந்த தேரியின் மனநிலையை கவிதைசொல்லி “தீயின் அழிபசி” கவிதையில் பிரதிபலிப்பதாக நாம் வாசிக்கலாம். தேரிகதாவில் தேரி ஸுஜாதா கூறுவது போல் –

    தூசியற்ற, மரணமில்லாத,

    உண்மையான தர்மத்தை அறிந்து,

    நான் வெளியே சென்றேன்,

    வீட்டிலிருந்து விலகி வீடற்றவள் ஆனேன்.