Tag: தற்செயல்

  • The Lottery of Babylon

    இதற்கு முன் வாசித்த இரு கதைகளைப் போல The Lottery of Babylon சிக்கலான கதையில்லை. அது கூற வருவதை நேரடியாக கையாள்கிறது. அதன் வடிவம் ஒரு தொன்மக்கதை பாணியிலிருக்கிறது. இதனை ஒரு நவீனத் தொன்மம் என்று வகைப்படுத்தலாம். பாபிலோன் எனும் தொன்ம நாட்டிலிருந்து வெளியேறிய ஒருவன் சொல்லும் கண்ணோட்டத்தில் அமைந்திருக்கிறது கதை. பாத்திரங்கள், நிகழ்வுகள் என்று எதுவும் இல்லை. ஒரு பத்திபோல எழுதப்பட்டிருக்கிறது கதை.

    எதுவும் கிடைக்கும் என்ற ஒழுங்கு நிலவிய பூமியில் எப்போது “சந்தர்ப்பம்” எனும் தன்மை உள்நுழைந்தது? “சந்தர்ப்பம்” என்பதை யார் நிர்வகிக்கிறார்கள்? அது தானாகவே நிகழும் “தற்செயல்” என்று ஏன் ஏற்பதில்லை நாம்? அது ஏன் விளைந்தது எனும் கேள்விக்கு பதில் தேடும் உணர்வு நம்முள் இரண்டாம் இயல்பாக இருக்கிறது. தான் செய்த நல் வினைகளால் நடந்த நல்விளைவென்றும், யாரோ ஒருவர் நம் மீது செய்த தீங்கு எனவும் காரணம் கற்பித்துக் கொற்கிறோம்.

    “சந்தர்ப்பம்” என்ற காரணி இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு சலிப்பாக இருந்திருக்கும்! செய்யும் காரியம் எல்லாமே ஒரே விளைவைத் தரும் என்றிருந்தால், அதனுள் தோல்விக்கான வாய்ப்பு அறவே இல்லாமல் இருந்தால் மனிதனின் சாதனையுணர்வு மறைந்து போய்விடுமல்லவா? அப்படியானால் “சந்தர்ப்பம்” என்னும் காரணியை மனிதனே வரிந்து கொண்டானா? அல்லது ஏதொவொரு பிரபஞ்ச சக்தி “சந்தர்ப்பத்தை” கட்டுப்படுத்துகிறதா? கட்டுப்பாட்டை அந்த பிரபஞ்ச சக்திக்கு அவனாகவே தந்தானா? (ஏடன் தோட்டத்துக் கதை போல). தான் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வு அவனுள் “லாட்டரி”யில் இருந்து கிடைக்கும் பரிசு தரும் அதே சிலிர்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறதா? “தண்டனை” என்ற ஒன்று இருப்பதனால்தான் “வெகுமதி” அதிபூரிப்பை தருகிறதோ?

    “லாட்டரி” விளையாட்டை நிர்வகிக்க ஒரு “கம்பெனி’ இருப்பது போல் நம் வாழ்வின் “சந்தர்ப்பங்களை” இயக்கவும் “அதிகார மையம்” என்ற ஒன்று இருக்கிறதா? அதிகாரத்தை “லாட்டரியின்” நுகர்வோர்கள் தான் “கம்பெனிக்கு” ஆதியில் அளித்தார்கள். அதிகாரம் வந்து நுகர்வோர் தம்மை சுய-பலி செய்து கொண்டபோது “கம்பெனி” விஸ்வரூபங்கொண்டு சர்வ வல்லமையால் மனித இனத்தையே கட்டியாள்கிறது. ஆனால், “கம்பெனி” ஒரு இரகசியம். அது எங்கிருக்கிறது என்று யாரும் அறிகிலர். “ஒரு புனிதமான கழிப்பறைக்குள்ளிருந்து “கம்பெனி” செல்லும் வாயில் இருக்கிறது” – புனிதத்தன்மை இங்கு எதைச் சுட்டுகிறது? சர்வாதிகாரத்தை? மத அதிகாரத்தை? இறை வல்லமையை?

    Kafka-பாணியில் சொல்லப்படும் கதைக்குள் Kafkaவுக்கு tribute செலுத்தப்படுகிறது. அந்தப் புனித கழிப்பறையின் பெயர் – Qaphqa.