Tag: சுவர்க்கம்

  • தொழுகை விரிப்பு

    ஆகா ஷாஹித் அலி – ஆங்கிலத்தில் எழுதிய கஷ்மீரக் கவி. அரசியல் கவியாக இருந்தாலும், சமயம் மற்றும் கலாசாரக் கருப்பொருட்களில் இணக்கமாயிருந்தவர். அவரின் “தொழுகை விரிப்பு” என்னும் கவிதை மிகப்புகழ் பெற்றது. இஸ்லாமிய வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் தொழுகையைப் பற்றிய இக்கவிதையை வாசிக்கும்போது விசுவாசமும் ஆனந்தமும் நிரம்பிய மனவுணர்வுடன் தொழுகை விரிப்பில் முழங்கால்படியிட்டு இந்தக் கவிதையில் ஏறக்குறைய நாம் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ​​​​​​மதக் குறிப்புகள் மற்றும் படிமங்களைப் பயன்படுத்தி தொழுகைச் சடங்கின் வீரியம் மற்றும் முக்கியத்துவத்தின் உணர்வை கவிதையினுள் உருவாக்குகிறார் ஷாஹித். தனது பாட்டிக்கு கவிதையை அர்ப்பணிக்கும் ஷாஹித், ஹஜ்ஜின் வருடாந்திர விழாவை, மக்காவுக்கான முஸ்லீம் புனிதப் பயணத்தை, சோகம் மற்றும் சோர்வு ஆகியவற்றின் தொனிகளுடன் இணைக்கிறார்.

    சென்ற வருடம் இக்கவிதையை மொழிபெயர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சியை கைவிட வேண்டியதாயிற்று. இன்று மாலை கவிதையை மீண்டும் மொழியாக்கம் செய்ய முயன்றேன். முயற்சி எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

    தொழுகை விரிப்பு

    தினத் தொழுகைகளுக்கு நடுவே
    அந்த ஐந்து இடைவெளிகள்

    வீட்டின் பெண்கள்
    காய்கறிகளினூடே
    இழுக்கும் தடித்த இழைகள்

    குளிர்காலத்துக்கென இலையுதிர் காலத்தில் உலரும்
    இஞ்சியின் ஜெபமாலை
    சலசலக்கும் மிளகாய்கள்

    அந்த இடைவெளிகளில்
    மடிக்கப்படும் விரிப்பு –
    பாட்டி கொண்டுவந்த
    வரதட்சணையின் ஒரு பகுதி –
    ஆக, சாத்தானின் நிழல்
    புனிதம் குலைக்காமலிருக்க –
    கருஞ்சிவப்பில் நெய்த
    தங்க மினாராக்களுடன் மக்கா

    பின்னர் சூரியாஸ்தமன
    பிரார்த்தனைக்கு அழைப்பு

    வேலைக்காரர்களின் தொழுகை –
    அவிழ்க்கப்பட்ட வைக்கோல் விரிப்புகளில்
    அல்லது தோட்டத்தில்

    கோடையில் புற்களின் மீது
    பிரார்த்தனைகள் முடிய விரும்பும்
    குழந்தைகள்

    ஆபிரகாமுடைய
    தியாகத்தின் பட்டுக்கல்லை
    ஸ்பரிசித்த
    பெண்களின் நெற்றிகள்

    சுவர்க்கத்திலிருந்து இறங்கிய
    கருப்புக் கல்லைச் சுற்றி வரும்
    வெள்ளையணிந்த பக்தர்கள்

    இந்த ஆண்டு என் பாட்டி
    ஒரு யாத்ரீகர்
    மக்காவில் அவள் அழுகிறாள்

    கல்லின் திரை விலக்கப்படுகையில்
    தூண்களைப் பிடித்துக்கொண்டு
    அவள் அழுகிறாள்

    மூலத்தை வாசிக்க : https://www.poetryfoundation.org/poems/43277/prayer-rug

    Agha Shahid Ali, “Prayer Rug” from The Half-Inch Himalayas. Copyright © 1987 by Agha Shahid Ali.

    Agha Shahid Ali (1949-2001)
  • கதவுடன் ஒரு மனிதன் – சச்சிதானந்தன்

    சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

    1996 முதல் தில்லியில் வசிக்கிறாராம். தில்லியில் வசிப்பது பற்றி அவரிடம் கேட்ட போது “எனக்கும் தில்லிக்குமான உறவு அன்பு – வெறுப்பு இரண்டுங் கலந்தது” என்று பதிலளித்தார்.

    இச்சந்திப்புக்கு முன்னர் அவருடைய கவிதைகளைப் படித்ததில்லை. எம்டிஎம் சச்சிதானந்தனின் எழுத்தை சிலாகித்துப் பேசினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகளை இணையத்தில் வாசித்தேன். அவருடைய கவிதை நூல்களை வாங்கி ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. அவருடைய மூன்று கவிதைத் தொகுதிகளின் தமிழாக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன என்று அவருடைய இணைய தளம் (http://www.satchidanandan.com/index.html) சொல்கிறது. வாங்க வேண்டும்.

    கவிஞர் சச்சிதானந்தனின் அனுமதியுடன் “A man with a door” என்ற அவருடைய கவிதையின் தமிழாக்கம் கீழே.

    கதவுடன் ஒரு மனிதன்
    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    அவன் அதனுடைய வீட்டை தேடுகிறான்.

    அவனின் மனைவியும்
    குழந்தைகளும் நண்பர்களும்
    அக்கதவின் வழி உள்ளே வருவதை
    அவன் கனவு கண்டிருக்கிறான்.
    இப்போதோ முழுவுலகமும்
    அவனால் கட்டப்படாத வீட்டின்
    கதவினூடே நுழைந்து செல்வதை
    அவன் பார்க்கிறான்.

    கதவின் கனவு
    உலகை விட்டு மேலெழுந்து
    சுவர்க்கத்தின் பொன் கதவாவது.
    மேகங்கள்;வானவிற்கள்
    பூதங்கள், தேவதைகள் மற்றும் முனிவர்கள்
    அதன் வழி நுழைவதை
    கற்பனை செய்கிறது,

    ஆனால் கதவுக்காக காத்திருப்பதோ
    நரகத்தின் உரிமையாளர்.
    இப்போது கதவு வேண்டுவது
    மரமாக மாறி
    இலைச்செறிவுடன்
    தென்றலில் அசைந்தவாறே
    தன்னைச் சுமந்திருக்கும்
    வீடற்றவனுக்கு
    சிறு நிழலைத் தருவதே.

    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    ஒரு நட்சத்திரம் அவனுடன் நடக்கிறது.

    MDM&KSatchidananthan

    (எம்டிஎம், நான், கவிஞர் சச்சிதானந்தன்)