Tag: சீக்கியர்

  • புல்லே ஷா எனும் மனிதநேயர்

    புல்லே ஷாவைப் பற்றி அறியப்படும் தகவல்கள் தொன்மங்கள் போல தொனிக்கின்றன. அவர் பிறந்த துல்லியமான தேதி மற்றும் பிறந்த இடம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே உடன்பாடு இல்லை. அவரது வாழ்க்கை பற்றிய சில “தகவல்கள்” அவரின் எழுத்துக்களிலிருந்தும் பிற “தகவல்கள்” வாய்வழி மரபுகள் வாயிலாகவும் பெறப்பட்டவை.

    ஷா ஹுசைன் (1538 – 1599), சுல்தான் பாஹு (1629 – 1691), மற்றும் ஷா ஷரஃப் (1640 – 1724) போன்ற கவிஞர்களின் வரிசையில் பஞ்சாபி கவிதையின் சூஃபி பாரம்பரியத்தை செழுமைப்படுத்தியவர் புல்லே ஷா.

    பிரபல சிந்தி சூஃபி கவிஞரான ஷா அப்துல் லத்தீப் பட்டாய் (1689-1752) வாழ்ந்த காலத்திலேயே புல்லே ஷா வாழ்ந்தார். அவரது ஆயுட்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பிற கவிஞர்கள் – ஹீர் ரஞ்சா காவியப் புகழ், பஞ்சாபி கவிஞர் வாரிஸ் ஷா (1722 – 1798), சாச்சல் சர்மஸ்த் எனும் புனைபெயரோடு புகழ்பெற்ற சிந்தி சூஃபி கவிஞர் அப்துல் வஹாத் (1739 – 1829). உருது கவிஞர்களில், புல்லே ஷா வாழ்ந்த காலத்திலேயே ஆக்ராவில் மிர் தாகி மிர் (1723 – 1810) வாழ்ந்தார்.

    புல்லே ஷாவின் காலத்தில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையேயான வகுப்புவாத மோதல்கள் வலுத்தன. அந்த நேரங்களில் பாபா புல்லே ஷா பஞ்சாப் குடிமக்களுக்கு நம்பிக்கை மற்றும் அமைதியின் கலங்கரை விளக்கமாக இருந்தார். புல்லே ஷா பாண்டோக்கில் இருந்தபோது, ​​சீக்கியர்களால் சில முஸ்லிம்களைக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, தங்கள் கிராமத்தின் வழியாகச் சென்ற சீக்கிய இளைஞனை முஸ்லிம்கள் கொன்றனர். பாபா புல்லே ஷா அந்த அப்பாவி சீக்கியரின் கொலையைக் கண்டித்தார். அதனால் பாண்டோக்கின் முல்லாக்கள் மற்றும் முஃப்திகளால் கண்டிக்கப்பட்டார். வன்முறைக்கு வன்முறை பதில் அல்ல என்று சொன்னதோடு ஔரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய குரு தேக் பகதூர் ஒரு காஜி (இஸ்லாமிய மதப் போர்வீரர் என்பதற்கான சொல்) என்றும் புல்லே ஷா வர்ணித்தார்.

    ஔரங்கசீப் இசை மற்றும் நடனத்தை தடைசெய்து இவை ​​இஸ்லாத்தில் ஹராம் என்று அறிவித்தார். தடையை மதிக்காது பஞ்சாபில் கிராமம் கிராமமாகச் சென்று தனது காஃபிகள்ளைப் பாடி நடனமாடினார் புல்லே ஷா.

    சீக்கியர்களின் கடைசி குருவாகிய குரு கோவிந்த் சிங்கின் புரட்சிகர உணர்வைப் பாராட்டினார், அவரை மத சுதந்திரத்தின் ‘பாதுகாவலர்’ என்று அழைத்தார். அதை ஒரு நுட்பமான நையாண்டியில் கூறினார்:

    நஹ் கரூன் அப் கீ,
    நஹ் கரூன் பாத் தாப் கீ.
    கர் நா ஹோத்தே குரு கோவிந்த் சிங்,
    சுன்னத் ஹோதி சப் கீ.

    நான் நேற்று அல்லது நாளை பற்றி பேசவில்லை;
    இன்று பற்றி பேசுகிறேன்.
    கோவிந்த் சிங் மட்டும் இல்லாதிருந்தால்,
    அவர்கள் அனைவரும் இஸ்லாமியராகியிருப்பர்

    கடைசி வரியின் நகைச்சுவை தமிழ் பொழிபெயர்ப்பில் சரியாக வாராது. “இஸ்லாமைத் தழுவ கட்டாயப்படுத்தப்பட்டிருப்பர்” என்ற அர்த்தத்தைத் தரும் வகையில் சுன்னத் என்ற விருத்த சேதனத்துக்கான சொல்லைப் பயன்படுத்தினார்.

    பண்டா சிங் பைராகி (கடைசி சீக்கிய குருவுக்குப் பின் வந்த சீக்கியப் படைகளின் தளபதி) புல்லே ஷாவின் சமகாலத்தவர். குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்கள் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, சாதாரண முஸ்லிம்களைக் கொன்று பழிவாங்கினார். அவர் தனது பழிவாங்கும் பிரச்சாரத்தை கைவிட பண்டா சிங் பைராகியை சமாதானப்படுத்த முயன்றார் பாபா புல்லே ஷா. குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் மீதும், அப்பாவி சீக்கியர்கள் மீது விழுந்த அதே வாள் அப்பாவி முஸ்லிம்கள் மீதும் விழுந்ததாக புல்லே ஷா அவரிடம் கூறினார். எனவே அப்பாவி முஸ்லீம்களைக் கொல்வது அவுரங்கசீப்பின் அடக்குமுறைக்கு தீர்வாகாது என அறிவுறுத்தினார்.

    புல்லே ஷாவின் எழுத்துக்கள் அவரை ஒரு மனிதநேயவாதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன – அவரைச் சுற்றியுள்ள உலகின் சமூகவியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குபவராக, தாய்நாடான பஞ்சாப் கடந்து சென்று கொண்டிருக்கும் கொந்தளிப்பை விவரிப்பவராக, அதே நேரத்தில் கடவுளைத் தேடுபவராக. ஷரியாத் (பாதை), தரீகத் (கவனித்தல்), ஹகீகத் (உண்மை) மற்றும் மர்ஃபத் (ஒன்றுபடல்) ஆகிய நான்கு நிலைகளில் மூலம் அவரது சூஃபித்துவ ஆன்மீகப் பயணத்தை அவரது கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கை மற்றும் மனிதநேயம் குறித்த சிக்கலான அடிப்படைப் பிரச்சினைகளை தன் எழுத்தில் எளிமையுடன் அவர் கையாண்ட விதம் அவர் மேல் பஞ்சாபிகளுக்கு இருந்த ஈர்ப்பின் பெருங்காரணம். எனவேதான், அவரது காஃபிகளை (அவர் எழுதிய பஞ்சாபி கவிதையின் ஈரடி வடிவம்) பலர் இசைப்படுத்தயுள்ளனர் – சாதாரண தெருப் பாடகர்கள் முதல் புகழ்பெற்ற சூஃபி பாடகர்களான வடாலி சகோதரர்கள், அபிதா பர்வீன் மற்றும் பத்தனே கான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிய கலைஞர்களின் ஒருங்கிணைந்த டெக்னோ கவாலி ரீமிக்ஸ்கள் முதல் ராக் இசைக்குழு ஜூனூன் வரை.

    புல்லே ஷாவின் பிராபல்யம் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என சமச்சீராக அனைத்து வகுப்பினரிடையேயும் பரவியிருக்கிறது. இந்த சூஃபியைப்பற்றி நமக்கு கிடைக்கும் பெரும்பாலான எழுத்துகள் இந்து, சீக்கிய எழுத்தாளர்கள் அவரைப்பற்றி எழுதியவை.

    ராபி ஷெர்கில் கிடாரை வைத்துக்கொண்டு பாடும் இசைவீடியோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் – புல்லா கீ ஜானா மேய்ன் கோன்! புல்லே ஷாவின் மிகப்பிரசித்தமான கவிதையின் இசைவடிவம் அது. மிகப்பிரபலமான பாடல். லின்க் கமென்டில்.

    சூபி ஞானி புல்லே ஷாவின் தர்கா (கசூர், பாகிஸ்தான்)
  • குளம் கோவில் புத்தகம்

    golden temple 1
    கருணையுள்ளம் பருத்தியாகி
    திருப்திகுணம் நூலாகி
    தன்னடக்கம் முடிச்சாகி
    வாய்மை முறுக்காகி
    அமைந்த பூணுலொன்று
    உங்களிடம் இருந்தால்
    அதை எனக்கு அணிவியுங்கள்
    அது அறுந்து போகாது ;
    அது அழுக்காகாது ;
    எரிந்து போகாது ;
    தொலைந்தும் போகாது ;
    நானக் சொல்கிறான்
    அத்தகைய பூணூலை அணிந்தோரே
    ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
    -குரு நானக்

    ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது.ஆம்.அமிர்தம் நிரம்பிய குளம் என்று அர்த்தம் பெறும் அமிர்த சரஸ் என்கிற அம்ரித்சர் தான் அந்தக் குளத்தின் பெயர். நகரின் பெயரும் அதுவே!

    ”எப்போது பார்த்தாலும் நேற்று கட்டியது போன்ற தோற்றத்தைத் தரும் கோயிலது” என்று பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பஞ்சாபி நண்பர் என்னிடம் சொன்னது கோயிலுக்குள் நுழைந்ததும் ஞாபகம் வந்தது. மேற்கு வாசலில் இருந்து உள் நுழைந்தேன். மக்களே சேவகர்களாக பணியாற்றி யாத்திரிகர்களின் செருப்பை வாங்கி வைப்பதைப் பார்க்கையில் பணிவு பேசுவதில் இல்லை ; சேவை செய்வதில் இருக்கிறது என்கிற சிந்தனை நம்முள் ஊடுருவுகிறது. கைகளை கழுவி நீர்ப்பாதையில் கால்களைப் பதித்து சுத்தம் செய்து விலாசமான கோயில் வளாகத்தினுள் நுழைந்தால் பிரம்மாண்டமான குளம், அதற்கு நடுவில் தங்கத் தகடுகள் மேவிய ஹர்மந்திர் சாஹிப், குளத்தைச் சுற்றி நடையிடும் ஆயிரக் கணக்கிலான பக்தர்கள், காற்றில் அலைந்து நம் காதுகளை நிரப்பும் குர்பானி, – பொற்கோயிலின் சூழல் நம் மனதை இலேசாக்கி நெகிழ்வு நிலையை நோக்கி செல்ல வைக்கிறது.

    golden temple 2

    கூட்டம் அலை மோதும் கோவில்கள் என்னுள் ஒரு பதற்றத்தையே ஏற்படுத்தும். எப்போது இக்கூட்டத்தில் இருந்து வெளிவரப்போகிறோம் என்ற எண்ணத்திலேயே கடவுள் தரிசனத்தின் போது மனம் அலை பாய்ந்தவாறு இருக்கும். நம் மீது வந்து மோதும் பக்தர்களின் மீது வெறுப்பும் கோபமும் எழும்.

    அகால் தக்த்துக்கு எதிரில் துவங்கும் பக்தர் வரிசையில் நின்று மெதுவாக ஹர்மந்திர் சாஹிப்பை நோக்கி நகர்கையில் ஒரு வித அமைதி நம்மை ஆட்கொள்கிறது. குர்பானி-கீதம் நம்முள் சாந்தவுணர்வை விதைத்து, கூட்டத்தின் மேல் வெறுப்பு தோன்றாமல் செய்கிறது. ஹர்மந்திர் சாஹிப்பில் நுழைந்த பிற்பாடும் யாரும் முட்டி மோதி நம்மை தள்ளுவதில்லை. புனித கிரந்தத்தை விசிறியால் விசிறி பக்தி பண்ணுகிறார்கள் கிரந்திகள். கிரந்தி என்றால் கவனித்துக் கொள்பவர் என்று பொருள். சீக்கிய சமயத்தில் பூசாரிகள் இல்லை.

    ஹர்மந்திர் சாஹிப்பின் இரண்டாம் மட்டத்திலும் மூன்றாம் மட்டத்திலும் பக்தர்கள் அமைதியாக குர்பானியை கேட்டுக் கொண்டோ அல்லது குரு கிரந்த் சாஹிப்பின் சில பகுதிகளை வாசித்துக் கொண்டோ அமர்ந்திருக்கிறார்கள்.

    ஹர்மந்திர் சாஹிப்புக்கு வெளியே பிரசாதம் தரப்படுகிறது. பிரசாதத்தின் இனிப்பு அனுபவத்தின் இனிப்புடன் ஒன்று சேர்கிறது.

    Akaal Takht Akaal Takht

    ஹர்மந்திர் சாஹிப்புக்கு நேர் எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க அகால் தக்த் இருக்கிறது. அங்கும் பக்தர்கள் குரு கிரந்த் சாஹிப்பை வாசித்தவாறு உட்கார்ந்திருக்கிறார்கள். அகால் தக்த் என்றால் காலமிலா அரியணை என்று பொருள். அகால் தக்த் சீக்கிய மதத்தின் மிக உயர்ந்த சமய அதிகார பீடம். சீக்கிய மதத்தின் பத்தாவது குரு – குரு கோபிந்த் சிங் – அகால் தக்தை தோற்றுவித்தார். குரு கோபிந்த் சிங்குடன் பத்து குருக்களின் வரிசை முற்றுப் பெறுகிறது. இதற்குப் பின் சீக்கிய மதத்தை வழி நடத்துபவையாக – குரு கிரந்த் சாஹிப்பும், அகால் தக்த்தும், சீக்கிய புண்யத்தலங்களும் – இருக்கின்றன.

    1984-இல் ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்த போது நடைபெற்ற அழிவில் அகால் தக்த்துக்கு வெளியே இருந்த சீக்கியர்களின் புனித கிணறும் ஒன்று. அகால் தக்த் திரும்ப கட்டப்பட்டபோது அக்கிணறை காக்கும் முகமாக அகால் தக்த்துக்குள்ளேயே கிணறு இணைக்கப்பட்டு மாற்றி கட்டப்பட்டது. ஒரு கிரந்தியிடம் அக்கிணறு எங்கிருக்கிறது என்று விசாரித்தேன். அகால் தக்த்தின் அடித்தளத்தில் ஒரு சுரங்கம் மாதிரியான படிகளில் இறங்கி அக்கிணறை தரிசித்தேன். கிணற்றில் ஏதோ வேலை நடந்து கொண்டிருந்தது.

    பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டுகளில் முகலாயர்களின் அதிகாரத்துக்கெதிரான அரசியல் அரணாக அகால் தக்த் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அதன் விளைவாக பல தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. அவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுபது ஆப்கானிய மன்னன் அஹ்மத் ஷா அப்தாலியின் தாக்குதல். கோவிலின் தூய்மைக்கு பங்கம் விளைவிக்க நூற்றுக் கணக்கான பசுக்களை வதை செய்தானாம் அப்தாலி. 18ம் நூற்றாண்டில் ஆப்கானிய மன்னனின் தூண்டுதலில் பொற்கோயிலுக்குள் குடியாட்டம் போட்டு கோவிலை அசுத்தப்படுத்திய மஸ்ஸார் ரங்கார் என்ற அதிகாரியையும் கோவிலுக்கு பங்கமேற்படுத்தியவர்களில் ஒருவனாகச் சொல்வார்கள். 1984இல் நிகழ்ந்த ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் போது அகால் தக்த் பீரங்கிகளால் சுடப்பட்டு சின்னாபின்னப் படுத்தப்பட்டது. இந்நிகழ்வு சீக்கியர்களின் மனதில் ஆறா காயத்தை ஏற்படுத்தியிருப்பதை அகால் தக்த்துக்கு வெளியேயிருந்த கல்வெட்டை வாசிக்கும் போது நன்கு உணர முடிந்தது.

    குளத்திற்கருகே பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். புஷ்டியான ஆரஞ்சு நிற மீன்கள் கரைக்கருகே வாய்களை திறந்தவாறு நீந்திக்கொண்டிருந்தன. அக்குளத்தின் நீரைக் கைகளில் பிடித்து சிறிது அருந்தி, தலையில் தெளித்துக் கொண்டேன். நிஷான் சாஹிப் வாசலுக்கருகே விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் சிறிது நேரம் இளைப்பாறினேன்.

    சீக்கிய நூலகம் எங்கிருக்கிறது என்று யாத்திரிகர் ஒருவரிடம் கேட்டேன். ”இன்று ஞாயிற்றுக் கிழமை ; நூலகம் திறந்திருக்காது” என்று சொன்னார். நுழைவு வாயிலுக்கு மேல் சீக்கிய மியுசியம் இருந்தது. சீக்கியர்களின் வரலாற்றை ஓவியங்கள் வாயிலாக சித்தரித்திருந்தார்கள். பல அரிய தகவல்கள் அறியக் கிடைத்தன.

    செருப்பணிவதற்காக போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீக்கியர் ஒருவர் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். மஹாராஷ்டிராவில் உள்ள நந்தேத் நகரிலிருந்து வந்திருக்கிறார். (நந்தேத் குரு கோபிந்த் சிங் அமரரான தலம் ; புகழ்பெற்ற ஸ்ரீ அஸூர் சாஹிபு குருத்வாரா அங்கு இருக்கிறது.) என்னைப் போலவே அவருக்கும் அம்ரித்சர் வருவது இது தான் முதல்முறை, சீக்கியராக இருந்தாலும் இதற்கு முன் ஹர்மந்திர் சாஹிப் வர சந்தர்ப்பம் அமையவில்லையாம். ’எனக்கும் தான்’ என்றேன். தன் டர்பனைக் காட்டி ”இதை அணிந்தவன் இவ்வளவு காலம் கழித்து வருவது சரியில்லை தானே!” என்று சொல்லி முறுவலித்தார். “நீங்கள் டர்பன் அணிந்திருக்கிறீர்கள் ‘ நான் அணிந்திருக்கவில்லை..அது ஒன்றைத் தவிர வேறு என்ன வித்தியாசம்” என்றேன். அவர் ’மிக சரியாகச் சொன்னீர்கள்’ என்று சொல்லி கையில் வைத்திருந்த சிறு புத்தகத்தை திறந்து குரு கோபிந்த் சிங்கின் ஷபத் ஒன்றை வாசித்துக் காட்டினார். இனிமையான பஞ்சாபி மொழியின் சத்தம் நெஞ்சை நிறைத்தது. அவரிடமிருந்து அந்த ஷபத்தின் அர்த்தத்தை சுருக்கமாக விளங்கிக் கொண்டேன். பின்னர் இணையத்தில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை விகிபீடியாவில் வாசித்தேன்.

    “வெவ்வேறு தோற்றங்கொண்டவரானாலும் அனைத்து மனிதரும் ஒருவரே.
    வெளிச்சமானவர்களும், இருண்டவர்களும் ; அழகானவர்களும் அழகற்றவர்களும்,
    வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்ததனாலேயே
    இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள்.
    எல்லா மனிதர்களுக்கும் அதே கண்கள், அதே காதுகள் ;
    பூமி, காற்று, தீ, நீர் – இவற்றால சமைக்கப்பட்டதே நம் உடல்கள்.
    அல்லாவும் பகவானும் ஒரே கடவுளின் நாமங்கள்
    புராணங்களிலும் குரானிலும் இதுவே சொல்லப்பட்டிருக்கிறது
    எல்லா மனிதர்களும் ஒரே கடவுளின் பிரதிபலிப்புகளே
    முழு மனித இனமும் ஒன்றே என்று உணர்”

    golden temple4