Tag: சட்டம்

  • நந்த் ரிஷி

    கஷ்மீரின் இஸ்லாமியமயமாக்கம் 14ம் நூற்றாண்டில் தொடங்கியது. இந்து-பவுத்த மக்கள் பெரும்பான்மையாக இருந்த நிலப்பரப்பு எப்படி இஸ்லாமியமயமானது என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிப்போனபோது கிடைத்தது – அலீ ஹம்தானி – எனும் பெயர். இரானிலிருந்து எழுநூறு சீடர்களோடு வந்து சாதாரண கஷ்மீரிகளை இஸ்லாம் பக்கம் ஈர்த்தவர் ஹம்தானி.

    காஷ்மீரின் ஆளும் ஷா மிர் வம்சத்து மன்னர்களை இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைபடுத்தி முழுக்க முழுக்க கஷ்மீரை இஸ்லாமியமயமாக்க வலியுறுத்தினார். இருப்பினும், இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் வேகம் பற்றி மிர் சயீத் அலி ஹமதானி-க்கும் சுல்தான் குதுப் அல்-தீனுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது. கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்து கொள்ள முடியாமல் சயீத் அலி ஹமதானி காஷ்மீரை விட்டு வெளியேறினார்.

    இரானின் உயர் கலாச்சாரத்தை கஷ்மீர் பண்பாட்டு நிலப்பரப்பில் புகுத்த ஹம்தானிக்குப் பின் வந்த சீடர்கள் தொடர்ந்து முயன்ற போது எழுந்த மக்கள் இயக்கம் ரிஷி மரபு. இவ்வியக்கத்தின் நிறுவுனர் – நந்த் ரிஷி என்று அழைக்கப்படும் நூருத்தின் வலி. ஷேக் உல் ஆலம் எனும் சிறப்புப் பெயராலும் இவர் அறியப்படுகிறார்.

    நந்த் ரிஷி காஷ்மீரிகளின் ஆன்மீக மற்றும் சமூக விவகாரங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது கவிதைகள் மற்றும் போதனைகள் பாமர மக்களை பரவலாக சேர்ந்தடைந்தன. உள்ளூர் மக்களால் நந்த் ரிஷியின் பல்வேறு பாடல் வரிகள் அன்றாட வாழ்வில் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டது. இது இன்றளவும் தொடர்கிறது. ஆன்மிகம், பக்தி, உண்மைத் தேடல் ஆகிய கருப்பொருள்களைத் தம் கவிதைகள் வாயிலாக ஆராய்ந்தார் நந்த் ரிஷி.

    நந்த் ரிஷியின் சம காலத்தவர் லல்லா எனப்படும் லால் டேட். சைவ சமய சித்தரான லல்லா கஷ்மீரி மொழியின் முதல் இலக்கியவாதியும் கூட. நந்த் ரிஷி லல்லாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்றும் ரிஷியின் தாயார் லல்லாவின் நெருங்கிய தோழி என்றும் கூறப்படுகிறது. இந்து லல்லா – இஸ்லாம் நந்த் ரிஷி – இவர்கள் பற்றி ஏராளமான தொன்மைக்கு கதைகள் கஷ்மீர் மண்ணில் புழங்குகின்றன. ஆபப்ரம்ஷ – பிராகிருத மொழியை விட்டு கஷ்மீரி மொழியைப் பேசத் தொடங்கியிருந்தது கஷ்மீர். இந்து-பவுத்த சமூகத்திலிருந்து இஸ்லாம் சமயத்தின் பரவலாக்கத்தையும் கண்டு கொண்டிருந்தது பள்ளத்தாக்கு. நிலம் அதிரும் மாற்றங்களுக்கு நடுவே தூர வெளிச்சமாய் கஷ்மீரின் பண்பாட்டுத் தொடர்ச்சியை உறுதி செய்தனர் இந்த இரு ஆளுமைகள். லல்லாவின் “வாக்”, ரிஷியின் “ஷ்ருக்” – தனித்துவமிக்க வடிவங்களில் இருவரும் புனைந்த கவிதைகள் “கஷ்மீரியத்”தின் வேர்கள்!


    மரணம் ஒரு சிங்கம்
    எப்படி அதனிடமிருந்து தப்பிக்க முடியும்?
    ஆட்டு மந்தையிலிருந்து
    ஆட்டுக்குட்டியைப் போல அது உன்னைத் தூக்கிச் செல்லும்

    ——————————————————————

    பயம், பற்று, வன்முறை எண்ணம்
    நான் தவிர்த்தவை
    வாழ்நாள் முழுதும்
    நான் நடந்தது
    ஒற்றைப்பாதை
    சிந்தனையின் நீரில் குளித்து
    ஆனந்தத் தனிமை எனும்
    தங்குமிடம் நோக்கி நடந்தேன்

    ——————————————————————

    முடிந்தால் பசித்தவர்க்கு உணவளி
    அம்மணமானவரின் ஜாதியைக் கேட்காதே
    ஆயிரம் மடங்கு அறத்தை ஆதாயமாய்ப் பெறு
    அன்புச் சகோதரரே, நந்தா
    அதை ஒருபோதும் இழக்க மாட்டீர்

    ——————————————————————

    வீட்டு வாசலில்
    விழிப்பில் அமர்ந்திருப்பவருக்கு
    அவரது சொந்த சர்பத்தை
    அவர் வழங்குவார்:
    அவருடைய பக்தர்கள் வேறு யாரோ, ஆனால்
    ஒரே ஒரு பிரார்த்தனையில்
    அவர் ஆசீர்வதிப்பவர்,
    செழிப்படைவார்

    ——————————————————————

    என் பக்கத்தில் அவன்
    அவன் பக்கத்தில் நான்
    அவனுடன் ஆனந்தமாக உணர்கிறேன்
    வீணில், அவனைத் தேடி எங்கோ சென்றேன்
    என் நண்பனோ எனக்காக
    என் வீட்டில் எழுந்தருளினான்

    ——————————————————————

    “சிவ சிவ”வெனும் கோஷம்
    சிவனை எழுப்பாது
    காங்கிர் கங்குகளில் நீயிடும் நெய்யை
    உட்கொண்டு வலுவாக இரு அல்லது
    உனக்குத் தேவையில்லையெனில்
    மற்றவர்க்குக் கொடு

    ——————————————————————

    One of the oldest Sufi Shrine in Kashmir, dedicated to Nund Rishi – Charar e Sharif
    Srinagar International Airport is named after Nund Rishi – Sheikh ul Alam Airport
  • மலை பிரசங்கம்

    பலன் வினையைச் சார்ந்தது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மிக சட்டங்களுக்கு உட்பட்டது. இவ்விரண்டு கூற்றுக்களும் உண்மையெனில், தனி மனிதன் நிஜமாகவே சுதந்திரமானவனா? சுதந்திரமும் இவ்விரண்டு கூற்றுக்களும் வெவேறானவை அல்ல.

    வினையை தெரிவு செய்யும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அதே சமயம், நமது தெரிவுக்கு நாமே பொறுபேற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.

    மலையிலிருந்து குதிக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அப்படி குதித்தால் எலும்பு நொறுங்கி இறக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவியல் உண்மை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

    “அது எனக்கு தெரியும். தெரிந்தே குதித்து பார்க்கும் ஆசை எனக்கு இருக்கிறது” என்று எவனாவது ஒருவன் சொல்வானே ஆனால், தற்கொலையை அனுமதிக்காத, சமூகவியல் சட்டத்தை மதிக்காதவனாக ஆகிவிடுகிறான். அவன் குதிக்கப் போகிறான் என்று காவல் துறையினருக்கு தெரிய வருகிறது என்றால், அவன் கைது செய்யப்படுவான்.

    காவல் துறையினருக்கு தெரியாத பட்சத்தில், அவன் மலை உச்சிக்கு செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் மலையுச்சியை அடைகின்றபோது, ஓர் ஆங்கிலேயரை சந்திக்கிறான். உடம்பில் கயிறைக் கட்டிக்கொண்டு, ஓர் இழுவை மூலம் குதிப்பவரைக் கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு, குதித்து, பறந்து, அந்தரத்தில் தொங்கும் சாகச ஆனந்தத்தை அளிக்கும் “Bungee Jumping” என்று சொல்லப்படும் விளையாட்டை அவர் சில இளைஞர்களுக்கு பயிற்றுவிக்கும் காட்சியை காண நேர்கிறது. அப்போது அவன் அடைய நினைத்த இலக்கு அல்லது பலன் என்ன என்று சரிவர புரிய வருகிறது. அவன் சாகவோ, காவலரால் கைது செய்யப்படவோ ஆசை படவில்லை. அவனது தேவை “சுதந்திரம்” என்ற இயற்க்கை உணர்வை சாகச விளையாட்டின் மூலம் அனுபவிப்பது. தன்னை பற்றியும் தன்னுடைய அவாவை பற்றியும் ஓர் ஆழமான தெளிவை அந்த மலைக்காட்சி அவனுக்கு அளிக்கிறது. அந்த ஆங்கிலேயரிடமே அவ்விளையாட்டை கற்றுத்தேர்ந்து நம்பிக்கை மிகுந்த bungee jumper ஆக மாறுகிறான். சில வருடங்களில் அதே இடத்தில அவன் ஒரு சாகச விளையாட்டு கேந்திரத்தை நிறுவினானேயானால், அறிவியல் மற்றும் சமூகவியல் சட்டங்களுக்குட்படாத அவனது விசித்திர ஆசை வழியாகவே (மனிதருக்கு எளிதில் புரிபடாத) ஆன்மீக சட்டம் இலக்குக்கு அவனை வழி நடத்தி இருக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும்?

    மலையிலிருந்து குதிக்கும் உதாரணம் என்னவோ மிகையானதுதான். ஆனாலும் ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஆழ்மன ஆசையை உதாசீனபடுத்த்தினால், உண்மையான, நிம்மதி கலந்த மகிழ்ச்சியை வாழ்வில் அடைய முடிவதில்லை. பெரும்பாலான தொழிற்சம்பநதப்பட்ட அதிருப்திகள் ஆழ்மன ஆசையை அங்கீகரிக்காததால் நிகழ்வன.

    ஒவ்வொரு மனிதனின் தொழில் சம்பந்தப்பட்ட விருப்புக்கள் அவனுடை ஆழ்மன ஆசையை தொட்டனவாகவே இருக்கின்றன. சிலர் கேட்கலாம் -“அப்படியானால் ஒரு கொலைகாரன் அவன் ஆழ்மன ஆசையை அடையும்போது ஏன் குற்றவாளி என்று கருதப்படுகிறான்?”. வக்கில்தனமான வாதம்.

    இதற்கு இரண்டு விடைகள். ஒன்று, பலன் அறிவியல் சட்டங்களுக்கும் சமூகவியல் சட்டங்களுக்கும் உட்பட்டன. சமுகம் கொலை செய்யும் அதிகாரத்தை யாருக்கும் கொடுக்கவில்லை. இரண்டு, அந்த மனிதன் ஆழ்மன ஆசையை சரியாக உணர்ந்து அறிந்தானா? குற்றவியல் நிகழ்வுகள் பெரும்பாலும் சிலகணங்களின் நிதானமிழப்பினால் ஏற்படுபவை. கோபம் மற்றும் அளவுக்கு மீறிய வெறி அம்மனிதனை சில நிமிடங்களுக்கு மிருகமாக்கி இருக்கலாம். கொலை செய்த பிறகு நிதானம் திரும்பிய பிறகு, தன்செயலின் தீவிரம் அவனை உலுக்கியிருக்கும். சமுகத்தில் தனது நிலை தாழ்ந்துவிடும் என்ற உண்மை அவனை அக்கொலையை மறைக்கும் முயற்சிகளிலும், ஓடி ஒளியும் தற்காப்பு சம்பந்தப்பட்ட வினைகளிலும் தூண்டி இருக்கும்.

    ஆழ்மன ஆசையை ஒருவன் சரியாக உணர்ந்து அறிவது எங்ஙனம்? இதற்கேதும் சுருக்கு வழி உண்டா என்றால் இல்லை. கிரேக்க தத்துவஞானிகள் சொன்ன மாதிரி, தன்னை அறிவதை தவிர வேறு வழியில்லை.

    தன்னை அறியும் முயற்சிகள் பல வகைபட்டன. ஹிந்து மதமும் மற்ற மதங்களும் தன்னை இப்பிரபஞ்சத்தை அறியும் பல்வேறு வழி முறைகளை ஆன்மீக ரீதியாக போதிக்கின்றன. தன்னை அறியும் முயற்சியில்தான் சாமியார்களும், ஆன்மீகவாதிகளும் ஈடுபடுகிறார்கள். அவர்களின் விழைவை பற்றி நாம் பேசப்போவது இல்லை. இச்சமுகத்தில் வாழ்ந்து பொருளிட்டும் பொறுப்பு வாய்ந்த ஒவ்வொரு குடிமகனும் கூட தன்னை நன்கு ஆழமான அளவில் அறிவது இன்றியமையாதது.

    தன்னை அறியும் முயற்சியில் முதற் கட்டமாக இருப்பது சிந்தனை உலகம் என்று சொல்லப்படும், நம் உள்ளுலகில் உறைந்திருக்கும் அல்லது அவ்வப்போது எழும் உணர்வுகளை முழுக்க உணர்வது அல்லது மனக்கண்ணால்   உற்று நோக்குவது.

    ஓர் உணர்வை தன்னில் தானே உற்று நோக்கும் தருணத்தில் அவ்வுணர்வின் வலிமையைப பொறுத்து அவ்வுணர்வு தொடர்ந்து வளருமா அல்லது சீக்கிரமே மடிந்து போகுமா என்பது தெளிவுற  தெரிகிறது. வலிமையற்ற உணர்வுகள் கணநேர ஆயுள் மட்டுமே பெற்றவை. நம்முடைய  உணர்வுகளை சரியாக  புரிந்து கொள்ளாத வரை, இத்தகைய உணர்வுகள் நம்முள் இருக்கின்றன என்ற பிரக்ஞ்சை இல்லாதவரை நாம் முழு தெளிவில்லாத வினைகளிலேயே ஈடுபடுகிறோம். இத்தகைய வினைகளின் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பது அறிவியலின், சமுகத்தின் விதிமுறைகளை ஒட்டியே அமைகிறது.

    மலையிலிருந்து குதிக்க ஓடியவனுக்கு தான் செய்ய நினைத்திருக்கும் காரியத்தின் அறிவியல் விளைவும் தெரியும். காவலர்கள் கைது செய்வார்கள் என்றும் தெரியும். இருந்தாலும் அவன் உள்ளுலகின் உந்துதலால் மலை உச்சிக்கு போனான். ஓர் எதிர்பார்ப்பு. அங்கு எதுவோ  நிகழப் போகிறது என்ற உள்ளுணர்வு. – இவ்விரண்டின் காரணத்தால் மலையில் கண்ட கட்சி அவனுக்கு முழு தெளிவை அளித்தது. இந்த தெளிவை அடைவதில், அவனுடைய திறந்த, விரிந்த எண்ணப்பாங்கும் ஒரு காரணம். மூடிய எண்ணவோட்டம் உள்ளவர்கள், பெரும்பாலும் முக்கிய தருணங்களில் தெளிவை இழந்து விடுகிறார்கள்.  

    அவன் இன்னொரு குணத்தையும் மலைகாட்சியை காணும் நேரத்தில் வெளிபடுத்தினான். அதுதான் நிகழ்காலத்திலேயே சஞ்சரிக்கும் குணம். சஞ்சரிப்பது என்பது வெறும் நடப்பது மட்டும் அல்ல. எண்ணவோட்டம், பிரக்ஞ்சை மற்றும் தன்னை சுற்றி நடப்பவற்றில் முழு ஈடுபாடு. நம்மில் பலர் பல சமயங்களில் நிகழ்காலததிலேயே  இருப்பதில்லை. நடந்து முடிந்த சம்பவங்களை பற்றிய குற்ற உணர்வும் வரப்போகும் சம்பவங்களை பற்றிய கவலையிலும் பொழுதைக் கழிக்கிறோம்.

    நிகழ் காலத்தின் முழு விழிப்புணர்வும் உள்ளோடும் உணர்ச்சிகளின் தெளிவுமே, ஆன்மீக சட்டத்தின் மௌனமான நடைமுறைகளை அறிய உதவுகிறது. வாழ்வில் வெல்ல உதவுகிறது.