Tag: காற்று

  • குருதி – Naomi Shihab Nye

    Naomi Shihab Nye – எனக்கு மிகப்பிடித்தமான கவிஞராகி வருகிறார். அவர் எழுதிய Blood கவிதையை மொழிபெயர்க்க விரும்பினேன். பாலஸ்தீனிய வம்சாவளியில் வந்த அமெரிக்கர் அவர். அமெரிக்கரா அரபியா என்ற அடையாளக் குழப்பம் அவருடைய கவிதைகளில் அடிக்கடி நிகழும் கருப்பொருள். Blood கவிதையிலும் இதே குழப்பம் தொடர்ந்தாலும், என்ன அடையாளம் கொண்டிருந்தாலும் “உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்” என்ற கடைசி வரியில் அடையாளத்தை தாண்டிய மனிதத்தை நோக்கி கவிதை பயணிக்கிறது.

    குருதி

    “ஓர் அசல் அரபிக்கு கைகளினால் ஈயைப் பிடிக்கத் தெரியும்”
    என் தந்தை சொல்வார். நிரூபிக்கவும் செய்வார்,
    ஈக்கொல்லியை ஏவ நிற்கும் விருந்தோம்பியின் கை சுழலும் முன்பே
    இரைச்சலிடும் பூச்சியை நொடியில் கையில் இறுக்கிக் கொள்வார்

    பாம்புகள் போன்று வசந்தங்களில் உள்ளங்கைகள் தோலுரிக்கும்
    தர்பூசணி ஐம்பது நோய்களுக்கு தீர்வு என்று உண்மையான அராபியர் நம்புவர்
    சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு இவற்றை மாற்றிக்கொண்டேன்.

    ஒரு பெண் கதவைத் தட்டி
    அந்த அரபியைச் சந்திக்க விரும்பினாள்
    இங்கு யாருமில்லை என்று சொன்னேன்
    அதற்குப்பின், என் தந்தை தாம் யாரென எனக்குச் சொன்னார்
    “ஷிஹாப்”-”சுடும் நட்சத்திரம்”
    நல்ல பெயர், வானத்திலிருந்து பெற்றது
    ஒரு முறை சொன்னேன் – “நாமிறக்கும் போது, அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோமா?
    ஓர் அசல் அரபி அதைத்தான் சொல்வான் என்றார்.

    இன்று தலைப்புச் செய்திகள் என் குருதியை உறைய வைக்கின்றன
    ஒரு சின்ன பாலஸ்தீனியன் முகப்புப் பக்கத்தில் சரக்கு வண்டியைத் தொங்கவிடுகிறான்
    அடிவேரிலா அத்தி மரம், மோசமான வேரின் பேரழிவு எங்களுக்கு மிகப்பெரிது.
    எந்தக் கொடியை நாம் அசைப்பது?
    நீலத்தில் பின்னிய மேசைத்துணியிலான
    கல்லையும் விதையையும் சித்திரிக்கும் கொடியை அசைக்கிறோம்

    என் தந்தையை அழைக்கிறேன்,
    செய்திகளைச் சுற்றிச்சுற்றியே எம் பேச்சு,
    அவருக்கு அது மிக அதிகம்
    அவரின் இரு மொழிகளாலும் அதை அடைய முடியவில்லை
    ஆடு, மாடுகளைத் தேடி நான் வயற்புறங்களுக்குச் செல்கிறேன், காற்றோடு புலம்ப:
    யார் யாரை நாகரீகமானவர் என்றழைப்பது?
    அழும் இதயம் எங்கு சென்று மேயும்?
    உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்?

  • புனே டயரி

    நேற்று நடந்தது

    புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க மறந்துவிட்டேன். “ஃபால்ஸ் அலார்ம்” என்கிறார் வாட்ச்மேன். மற்ற பிளாட்டுகளிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. “இது இங்கே அடிக்கடி நடக்கிறது தான்” என்று வாட்ச்மேன் சொன்னதும் “எது? சாவி வீட்டுக்குள்ளேயே இருக்க கதவு வெளியிலிருந்து மூடிக் கொள்வதா?” என்று கடுப்புடன் கேட்கிறேன். “விசிட்டர் லௌன்ஜில் உட்கார்ந்துகிட்டே தூங்குங்க நாளைக்காலை பார்ப்போம்” என்கிறார். விசிட்டர் லௌன்ஜில் காற்றின் சத்தம் கேட்கவில்லை. மழை சத்தம் இல்லை. ரிசப்ஷனில் உறங்கும் வாட்ச்மேனின் பலமான குறட்டை சத்தம் மட்டும். எனக்கு கோபம். போர்வையை எடுத்து வந்திருக்க வேண்டும்! சட்டையையாவது அணிந்து வந்திருக்க வேண்டும். சாவியை மறக்காமல் எடுத்து வந்திருந்தால் செருப்பு அணியாததோ சட்டை அணியாததோ பெரிய தப்பாக தெரிந்திருக்காது. இரு கோடுகள் தத்துவம் என்று ஏதோ சொல்வார்களே!

    புனே ஹார்ரர்

    நகரத்துக்கு நான் வேண்டா விருந்தாளியோ! என் கேள்வியில் நியாயமிருக்கிறது என்றே நம்புகிறேன். திகிலிசை போன்று வீசும் காற்று, தானே மூடித் தாழ் போட்டுக்கொள்ளும் கதவு, ஆளரவமற்ற, காலியான ப்ளாட்டுகள், ம்….வார இறுதியில் இன்னொரு ஹார்ரர்…அறையில் தனித்திருந்து சலித்துப் போய் ஆறு மணியளவில் வாக்கிங் போகலாம் எனக்கிளம்பினேன். நேற்றிரவு இருந்த வாட்ச்மேனைக் காணோம். வரவேற்பு லாபியில் ஈ, காக்காய் இல்லை. நானூறு மீட்டர் தொலைவில் இருந்த கேட் வரை ஒருவரும் காணவில்லை. கேட்டைத் தாண்டி சாலையில் வந்தாலும் நிலைமையில் மாற்றமில்லை. ரோடில் கார்களோ, லாரிகளோ, ஆட்டோ ரிக்ஷாக்களோ- எவற்றையும் காணோம். ஒரு (மஹாராஷ்டிர) வடைக் கடை இருந்தது. ஷட்டர் போட்டிருந்தார்கள். ஷட்டரை லேசாகத் திறந்து வெளியில் நின்றிருந்த ஆளுக்கு ஒரு பொட்டலத்தை கடைக்காரர் மர்மமான முறையில் கொடுத்துக் கொண்டிருந்தார். பொட்டலத்தை வாங்கிக் கொண்டவர் அடுத்த கணம் காணாமல் போனார். அவர் போன ஸ்கூட்டர் சத்தமிட்டதா என்று இப்போது ஞாபகமில்லை. கடைக்குச் சென்று ஷட்டரைத் தட்டி “டீ கிடைக்குமா?” என்று கேட்டேன். என் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என்பது போல் பார்த்தார். “டீ இல்லை, வடை பாவ் மட்டும் இருக்கிறது” என்று சொல்லி யோஜிம்போ திரைப்படத்தில் வரும் விடுதிக்காரர் பாத்திரத்தின் எக்ஸ்பிரஷனைத் தந்தார். நான் டோஷிரோ மிஃபுனே இல்லையே! வேகவேகமாக நடந்து அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டேன். வார இறுதி லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும்?

    வாஷிங் மெஷின் புதிர்

    தங்கச்சங்கிலி இரவல் வாங்கினா- பாமா விஜயம் படப்பாடலை நான் வாழ்வேன் என்று நினைத்ததில்லை. புனேவுக்கு குடி புகுந்த பிறகு வாஷிங் மெஷினை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். வீட்டு புரோக்கர் குல்வீர் அறைகலன்களையும் வாடகைக்கு தருகிறேன் என்றான். ஐந்தாறு நாட்களாயின. வாஷிங் மெஷின் வந்த பாடில்லை. ஆடைக்குவியல் வளர்ந்து கொண்டிருந்தது. தினமும் சாவியை கேட்டில் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். சாயந்திரம் கேட்டிலிருந்து சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது “குல்வீர் வந்தாரா” எனக் கேட்பேன். யாரும் வரவில்லை என்று விடை கிடைக்கும். ஒரு நாள் பால்கனியில் நீல நிற வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. பழைய மெஷின். எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே கண்களையிழந்து பிதுங்கியிருந்தது. ஆடைக்குவியலில் அன்று அணிந்திருந்த ஆடையும் சேர்ந்தது. அடுத்த நாள் விழி பிதுங்கிய மெஷினின் இடத்தில் இன்னொரு மெஷின். அதற்கு பிளாஸ்டிக் ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்தேன். தண்ணீர் பிய்ச்சியடித்து தொப்பலாக நனைந்து போனேன். வாஷிங் மெஷின் உருவில் வந்த வாஷிங் “பேசின்” அது என்று புரிந்தது. அடுத்த நாள் வாஷிங் “பேசின்” அங்கேயே கிடந்தது. ஆனால் கூடவே இன்னொரு வாஷிங் மெஷின் சேர்ந்திருந்தது. புதிது போல் தோற்றம் அதற்கு. ஆடைக்குவியலின் உயரத்தை பார்த்து வெட்கம் தாளாமல் சில துணிகளை எடுத்து புதிதாகச் சேர்ந்திருந்த வாஷிங் மெஷினுள் போட்டேன். வரும் வார இறுதியில் தோய்த்துவிட வேண்டும். குல்வீர் சாவியில்லாமல் எப்படி வீட்டுக்குள் வருகிறான் என்ற கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது.

    தொடரும் ஹார்ரர்

    இது முற்றிலும் புதிது. இரண்டு வார இறுதிகளாக நிகழ்வுகளுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் ஒரு கதை சொல்லல் நிகழ்வு. முரகாமியின் the elephant vanishes கதையை யாரோ வாசிப்பதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கதை பற்றிய கருத்துகள் பகிரப் படுமாம். இந்த வாரம் toast masters federation-இன் ஒரு நிகழ்வு. Cyber security பற்றி சக அலுவலர் ஒருவர் உரையாற்றப் போகிறாராம்! இவையொன்றும் புதிதல்ல. எது புதிது எனில் வாராது வந்த இரண்டு அழைப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருப்பதுதான் புதிது.

  • ஔரங்கசீப் சாலை

    aurangzeb-road_647_082815051544

    தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு
    வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு
    பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு
    கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு….
    +++++
    தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை
    இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை
    குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது
    தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா?
    +++++
    கல்லறையிலிருந்து எழுந்து
    வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும்
    இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து
    குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும்
    நடுவழியில் சந்தித்துக் கொண்டன
    ஒன்றின் ஆவேசமும்
    இன்னொன்றின் உவகையும்
    ஒரு தெருவின் பெயர் மாற்றம் பற்றியதென
    இரண்டும் புரிந்து கொண்டபோது
    பெயரற்ற ஒரு காட்டுக்கிடையே இருந்த
    ஓர் இடுகாட்டை அடைந்திருந்தன
    திறந்திருந்த இரு குழிகளுக்குள் இறங்கி
    இளைப்பாற கண் மூடியவை
    பெயர் தெரியா காற்றடித்து
    பெயர் தெரியா மணல் மூடி
    பெயர் தெரியாமல் மறைந்து போயின

  • அர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை

    Jagannath Pantheon
    Jagannath Pantheon

    வான் வெளியைப் போர்த்தி
    பூமியில் இரவாக்கி
    சிறு சிறு துளைகளில்
    வெண்தாரகைகள் வைத்து
    உயிர்களுக்கு நித்ரை தருகிறாள்
    பறவைகளைப் பள்ளியெழுச்சி
    பாடவைத்து இருள் போக்குகிறாள்
    மகாமாயையை ஏவி
    யோகமாயை
    நடத்தும் அளவிலா விளையாட்டு
    இரவும் பகலும் அனவரதமும்

    +++++

    ஒருமுறை
    நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி
    கருவொன்றை மாற்றி
    தன்னைப் புகுத்திக் கொண்டு
    சிசுவாய் வெளிப்பட்டு
    காற்றாய் மறைந்து
    அசரீரியாகி……

    +++++

    இன்னொரு முறை
    சுபத்திரையாகத் தோன்றி
    ஒற்றைப் பார்வையில்
    அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி
    சன்னியாச வேடமிடத் தூண்டி
    அண்ணன் கண்ணனின் சம்மதம் பெற வைத்து
    ரதமொன்றில் ஓட்டிச்செல்லும் எண்ணம் தந்து….

    இயக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மூளா
    ஓயா இயக்கம்
    திரௌபதியின் மௌன அங்கீகாரம்
    அபிமன்யுவெனும் வீர மகனின் பிறப்பு
    புத்திர சோகம்
    மாயை அருள்பவள்
    மாயைக்குட்பட்டாள்

    +++++

    இன்னொரு முறை
    யோக மாயை
    வெள்ளை யானையை
    கருவாய்த் தாங்கி
    சித்தார்த்தனைப் பெற்றெடுத்தாள்

    மகாமாயையுடன் தொடர்பு விலகாமல்
    பிடியில் சிக்காமல்
    நடு வழியில் நடந்து சித்தார்த்தன்
    தர்மச்சக்கரத்தைச் சுழற்றி புத்தனானான்

    +++++

    “மகாமாயை கொண்டு உன்னை இயக்கிய
    யோக மாயையை நான் இயக்கினேன்
    என்னை நீ இயக்குகிறாய்”
    கண்ணன் சிரிக்கிறான்

     

     

    நன்றி : பதாகை

  • தெரு – றியாஸ் குரானா

    http://afremov.com/product.php?productid=18321
    http://afremov.com/product.php?productid=18321

    றியாஸ் குரானா

    தெரு

     

    இங்கிருந்து தொடங்குகிறது தெரு.

    இல்லை, இது தெருவின் நடுவிலோர் இடம்.

    அந்த தெருவின் முடிவடைகிற இடம்.

    ஒன்று போல் தென்பட்டாலும்,

    ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு

    பெயர்களாலும், அடையாளங்களாலும்

    நீண்டு கொண்டே இருக்கிறது.

    எனது தெருவாகத் தொடங்கி

    உனது தெருவாக முடிவடைவதுகூட

    ஒரு வசதிக்காகத்தான்.

    யாருடைய தெருவில் நாம் நிற்கிறோம்?

    அதைக் கண்டு பிடிக்கும் போது

    அடையாளமொன்றை பெற்றுக் கொள்கிறோம்.

    எங்கிருந்து தொடங்குகிறது

    இந்தத் தெரு என ஒரு குழந்தை

    கேட்கும் போது,

    எல்லாமே விளையாட்டாகிவிடுகிறது.

    அப்போது, சலிப்பின்றி விளையாடுவதே

    எங்கிருந்தும் தொடங்கலாம் என்பதாகும்.

     

    இரு துளி வெயில்

     

    துளித்துளியாக விழுந்து கொண்டிருக்கிறது வெயில்.

    சில துளிகளை எடுத்து வந்து கோப்பைக்குள்

    வைத்திருக்கிறேன்.

    ஒன்றில் மற்றது கலந்து விடாமல்

    தனித்தனியே உருண்டபடி இருக்கின்றன.

    இன்னும் சில நாட்களில் ஒலியெழுப்பவும்

    பழக்கிவிடுவேன்.

     

    நினைவில் இறந்தவர்

     

    நினைவை உருட்டிச் செல்கிறது காற்று

    மலை உச்சியிலிருந்து

    கீழே தள்ளி விடப்பார்க்கிறது

    காப்பாற்ற முயற்சிக்கிறேன்

    முடியவில்லை

    ஆகையால் நினைவை

    சோதிக்கிறேன்

    அதனுள் எத்தனை யோசம்பவங்கள்

    எத்தனையோ மனிதர்கள்

    நினைவின் ஒரு மூலையில்

    பல கவிஞர்களும் பல எழுத்தாளர்களும்

    பரிதவித்தபடி

    காப்பாற்ற முடியவில்லை என்பதால்

    நான்திட்டமிட்டுக் கொன்றேன்

    என்றுயாரும் கருதக்கூடாது

    மலையிலிருந்து கீழே

    நினைவு விழுந்துவிட்டது

    விழும் போது கடைசியாக

    எனது காதுகளில் கேட்ட மரண ஓலம்

    ,,,,,,,,,,,,,,,,,னுடையது.

    இனி புதிதாக நினைவுகளை

    நீரூற்றி வளர்க்க வேண்டும்.

     

    அடுத்ததாக நான்

     

    எனக்கு முன் இந்தப்புத்தகத்தை

    புரட்டிப் பார்த்து விட்டுச்

    சென்றது காற்று

    இத்தனை வேகமாக

    புத்தகத்தை விட்டு தப்பிச் சென்றது ஏன்

    என யோசிக்கிறேன்

    இறகொன்றை ஏற்றிச் செல்வதற்கான

    நேரம் நெருங்கி விட்டதால்

    போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது

    எதற்கும் புத்தகத்தை

    புரட்டிப் பார்க்கலாம்

    முதல் அத்தியாயம்

    காற்று தப்பிச் சென்ற காதை.

     

  • சார்பியல் : ஒரு வரைபட கையேடு

    (RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்)

    இடம் காலம் என்ற

    இரட்டை தொடர்ச்சிகள்

    பிரக்ஞை என்றொரு

    மறைபொருளின்

    நூல் பொம்மைகள்

    நரைத்த மீசை

    இரைந்த முடி கொண்ட

    இயற்பியல் மேதை

    உணர்ந்து சொன்னான்.

    +++++

    சுவரில் சாய்ந்து

    அமர்ந்த படி உறங்கியபோது

    அண்ட வெளியில்

    பறந்தேன்.

    சட்டைப்பையிலிருந்து

    விடுபட்ட

    என் எழுதுகோலும்

    நிலையான சித்திரம் போல்

    என்னுடன் சேர்ந்து பறந்தது.

    வெகு நேரமாகியது தரையைத்தொட.

    குப்புறவிழுந்த நான்

    எழச்சிரமப்பட்டேன்.

    அறை உருள ஆரம்பித்தபோது

    ஒரு மூலையிலிருந்து

    எதிர் மூலையில் போய் விழுந்தேனாம்

    சில வினாடிகளில் நடந்தேறியதாம்.

    உருண்ட அறையிலிருந்து

    என்னை மீட்டவர்கள் சொன்னார்கள்.

    வெகு நேரமாக பறந்து கொண்டிருந்தேனே!

    சில வினாடிகள் மட்டும் கழிந்தன

    என்பது எங்ஙனம் சாத்தியம்?

    இடங்களின் தூரமும்

    கால அளவைகளும்

    வெவ்வேறு யதார்த்த தளங்களில்

    வேறுபடும் எனில்

    யதார்த்தம் என்பதே பிரக்ஞை தானோ?

    +++++

    அறை உருளுதல்

    எப்படி சாத்தியம் என்று

    விழித்தவுடன் வினவப்போகும்

    உனக்கு ஒரு சமிக்ஞை !

    RELATIVITY : A GRAPHIC GUIDE

    கட்டிலுக்கு பக்கத்தில்

    தரையில் விழுந்து கிடக்கும்.