Tag: காதல்

  • ஐக்கியமும் எதிர்ப்பும்

    From Waris to Heer – நாவலை வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த வினா ஒன்று தான் – மத ரீதியாக பிளவுபட்ட ஒரு பண்பாடு பஞ்சாபி மொழிக் காவிய நூலொன்றினால் மீண்டும் ஒன்றிணைந்துவிடக் கூடுமா? நூல்கள் என்றும் இத்தகைய மந்திரங்களை நிகழ்த்தியதில்லை. ஆனால் வினாவின் கற்பனையில் லயித்திருப்பது ஒன்றும் புதிதில்லையே!

    சீக்கிய சமய நூல்களைச் சரி பார்த்து தொகுத்ததில் வரலாற்றுப் பங்களித்தவர் பாய் மணி சிங். சீக்கிய மதத்தின் கடைசி குரு – குரு கோபிந்த் சிங் – அவர்களின் பால்யத் தோழர். லாகூர் நகரில் முகலாயர்களின் பிரதிநிதியாக இருந்த ஸகாரியா கான் பாய் மணி சிங்-கை சிறைப்பிடிக்கிறான். பொதுமக்கள் முன் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பாகமாக பாய் மணி சிங் – கின் அவயங்கள் வெட்டியெறியப்படுகின்றன. அடுத்து வந்த பிற வருடங்களில் “ஹீர் ராஞ்சா” காதல் காவியத்தை பஞ்சாபி மொழியில் எழுதப்போகிற வாரிஸ் ஷா இளைஞனாக பாய் மணி சிங்-கின் கொடூர மரணத்தை லாகூரின் வீதியொன்றில் கண்ணுறும் காட்சியிலிருந்து நாவல் துவங்குகிறது.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து சீக்கிய போராளிக் குழுக்கள் (ஒன்றிணைந்த) பஞ்சாப் கிராமங்களின், நகரங்களின் மீது கொரில்லா தாக்குதல்களை நடத்தத் தொடங்கின. பஞ்சாப் மீதான முகலாயர்களின் பிடி ஆட்டம் கண்டது. மராத்தியர்கள் ஆட்சி தில்லியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆப்கானிய மன்னன் நாதிர் ஷா இந்துஸ்தான் மீது படையெடுத்து வர வேண்டும் என்ற எண்ணம் இஸ்லாமிய அறிவுஜீவிகளுக்கு மத்தியில் பலப்பட்டு வந்தது. முகலாயர்கள் “நல்ல முஸ்லிம்களாக” இல்லாதது தான் இந்துஸ்தானில் முஸ்லிம்களின் ஆட்சி பலவீனமடைந்ததற்கு காரணமாக சொல்லப்பட்டு வந்தது. இந்த அறிவுஜீவிகள் “சூஃபி ஞானி” ஷா வலியுல்லாவின் கருத்துகளை துணைக்கழைத்துக் கொண்டனர். மராத்தியர்களின் அரசியல் வளர்ச்சியை அறவே வெறுத்தார் ஷா வலியுல்லா. இஸ்லாமியரல்லாதவரின் சமய ஊர்வலங்களை விழாக்களை தடை செய்ய வேண்டும் என்று முகலாய மன்னர் அஹ்மத் ஷாவுக்குப் பரிந்துரைத்தார். அவரின் கருத்துக்களுக்கு எதிரும் புதிருமாக பஞ்சாபின் அறிவுஜீவிகளுக்கு நடுவே உரையாடல்கள் நிகழ்ந்தன. இதனை மூன்று பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலாக பதிவு செய்கிறார் நாவலாசிரியர் ஹரூன் காலித்.

    கசூர் நகரில் உள்ள ஒரு மத்ரஸாவில் ஒன்றாகப் படிக்கும் மூன்று மாணவர்கள் – வாரிஸ், உமர், அஃப்தாப். வாரிஸ் தான் ஹீர் ராஞ்சா காவியத்தை பிற்காலத்தில் இயற்றப்போகிறவர். அஃப்தாப் இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு படிக்கும் இந்து மாணவன். ஷா வலியுல்லாவின் புத்தகங்களை வாசித்த அஃப்தாப் வாரீஸிடம் சில கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை அளிக்க முயல்கிறான்.

    “பாபா ஃபரித் கஞ்ஜ் பற்றி ஷா வலியுல்லா என்ன சொல்வார்? பாபா ஃபரித் கவ்வாலி பாடினார். தமால் (நடனம்) ஆடினார். பாடும் ஆடும் மரபுகள் எங்கிருந்து வந்தன? இந்து பஜனைக்கும் கவ்வாலிக்கும் இடையில் உள்ள தொடர்பு விளங்கவில்லையா? தமாலுக்கும் சிவ தாண்டவத்துக்கும் உள்ள தொடர்பும் இதே போலத்தானே? இந்த நடைமுறைகளை புது சமயத்தின் மொழியில் விவரிப்பதன் வழியாகவும் புறச்சமயங்களின் நடைமுறைகளை உட்புகுத்தியதன் வாயிலாகவும் சமயத்தைக் கெடுத்தார்களா என்ன சிஷ்டிகள்1? பாபா ஃபரித் தூய முஸ்லீம் இல்லையென்றும் தூய இஸ்லாத்தைப் பின்பற்றாதவர் என்றும் ஷா வலியுல்லா தைரியமாகச் சொல்வாரா?”

    வாரீஸின் பதில் – “பாபா ஃபரீதைப் பற்றி ஷா வலியுல்லா அப்படிச் சொல்ல மாட்டார். ஆனால் பாபா ஃபரீதும் பிற சூஃபி குருமார்களும் புறச்சமயத்தின் நடைமுறைகளை இரவல் பெற வேண்டியிருந்தது என்பார். ஏனெனில் துணைக்கண்டத்துக்கு அந்தக் காலகட்டத்தில் இஸ்லாம் புதிது. உள்ளூர் ஜனங்களுக்கு இஸ்லாத்தைப் புரிய வைக்க உள்ளூர் சமயத்தின் சின்னங்களை அந்த சூபிக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போதோ துணைக்கண்டத்தில் இஸ்லாம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு விட்டது எனவே புறச்சமயங்களின் நடைமுறைகளை உதறித்தள்ளுவதில் ஓர் இழப்பும் இல்லை என்று ஷா வலியுல்லா சொல்வார்”

    அஃப்தாப் சொல்கிறான் – “ஆம். அவர் மறுகண்டுபிடிப்புச் செய்ய விழையும் மூல சமயத்தை தேடிக் கண்டுபிடித்தல் சாத்தியமில்லை என்பதை நீ ஒப்புக்கொள்ள மாட்டாயா? பதினெட்டாம் நூற்றாண்டு தில்லியின் சொந்த அனுபவங்களால் மூலச் செய்தியின் கண்ணோட்டம் கறை படிய வாய்ப்புள்ளதல்லவா? நீ கூறிய படி பாபா ஃபரித் புதிய மதத்தை அக்கால மக்களுக்கு போதிக்க நேர்கையில் அவர்களின் ஆன்மீக மொழியைப் பேச வேண்டியிருந்தது. இந்த ஆன்மீக மொழியை புறச்சமயத்திடமிருந்து அவர் இரவல் பெற வேண்டியிருந்தது.”

    அஃப்தாபின் கருத்துப்படி ஒரு மதத்தின் அசல் சாரத்தை மீள்-கண்டுபிடிப்பது சிரமம். ஏனெனில் இது போதகரின் சொந்த அனுபவங்களால் சூழமைவினால் வடிவமைக்கப்படுகிறது. எது தூய்மை எது கலப்படம் என்ற ஆராய்ச்சி உறுதியான முடிவை என்றும் தரப்போவதில்லை!

    “பஞ்சாபியத்”-தின் சாரம் ஒன்றிணைந்த கலாச்சாரம். அது தப்பிப்பிழைத்தவாறே தன் பயணத்தை வரலாற்றுப்பாதையில் தொடர்கிறது. அதற்கு நிறையவே தடங்கல்களும் இடைஞ்சல்களும் விளைந்த வண்ணமுள்ளன. ஆனால் இல்லாமல் ஆகிவிட்டதொன்றல்ல அது. புல்லே ஷா-வின் காஃபி2 வடிவச்செய்யுட்களில் அது இன்னமும் உயிருடன் இருக்கிறது. இந்த பஞ்சாபி சூபியின் மனித நேய உணர்வு மிக்க பாடல்கள் ஊர் தோறும் பாடப்பட்டாலும் ஆச்சாரவாதிகளின் ஏளனத்துக்கு அவர் உள்ளானார். மத அதிகார சக்திகள் லாகூர் நகரத்தின் ஸ்திரத்தன்மைக்கு அவர் ஓர் அச்சுறுத்தல் என்று கதை கட்டின. பல வருடங்களுக்கு லாகூர் நகருக்கு வராதபடி புல்லே ஷா மீது தடை விதிக்கப்பட்டது.

    ஷா இனாயத் காத்ரி எனும் சூபியைக் கண்டதும் ஆடினார் புல்லே ஷா. கஞ்சரி என்னும் நாட்டியக்காரியின் வீட்டில் தங்கி அவர் கற்றுக் கொண்ட தமால், ஷா இனாயத் மீதான அன்புப்பெருக்கில் அவரை மீறி வெளிப்பட்டது. அவரின் உதட்டிலிருந்து கவ்வாலி பிறக்கிறது.

    “என் ராஞ்சாவின் பெயரை அழைத்து அழைத்து

    நானே ராஞ்சாவாகிவிட்டேன்

    என்னை ராஞ்சாவென்றழை

    நான் இனி ஹீர் இல்லை”

    புல்லே ஷாவின் சமகாலத்தவர் வாரிஸ் ஷா என்று நாவலில் கூறப்படுகிறது. ஹீர் – ராஞ்சா கதையை வாரிஸ் ஷா-வுக்கு முன்னம் – அதாவது அக்பர் ஆண்ட காலத்திலேயே – தாமோதர் என்பவர் செய்யுள் வடிவில் எழுதிவிட்டார். எனினும் வாரிஸ் ஷா எழுதிய ஹீர் ராஞ்சா அடைந்த பிரபலம் மகத்தானது. வாரிஸ் ஷாவின் ஹீர்-ராஞ்சா பஞ்சாபி இலக்கியத்தில் ஒரு தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது. அதன் பாடல் அழகும் மொழியின் பயன்பாடும் தத்துவ ஆழமும் பஞ்சாபி இலக்கிய, கலாச்சார பாரம்பரியத்தின் மைல்கல்லாக நிலைநாட்டியுள்ளன.

    புல்லே ஷா போல ஹீர் ராஞ்சா கதையும் பஞ்சாபியத்தின் அணையாச் சுடர். ஒரு தொன்மக் கதை அல்லது நாட்டார் கதை எப்படி ஒரு மாகாணக் கலாச்சாரத்தின் அடையாளமாகும்?

    மத எல்லைகளைத் தாண்டி, இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கிய மரபுகள் இணைந்து வாழும் பஞ்சாபின் ஒத்திசைவான கலாச்சாரத்தை இந்தக் கதை பிரதிபலிக்கிறது. ராஞ்சாவின் பாத்திரப் படைப்பு பகவான் கிருஷ்ணரையொட்டி அமைந்துள்ளது. ராஞ்சா மாடு மேய்க்கிறான். கண்ணனுக்கு கோபிகைகள் போல ஹீரின் தோழிகளனைவருடனும் அவன் ஓடி விளையாடுகிறான். கண்ணனுடைய கோபிகைகள் போலவே ஹீரின் தோழிகள் அனைவரும் ராஞ்சாவைக் காதலிக்கின்றனர். ஆனால் அவனோ ஹீரை மட்டுமே காதலிக்கிறான். ராதையின் அச்சுஅசலானவள் ஹீர்.

    ஹீர் – ராஞ்சாவின் காதல் பெரும்பாலும் தெய்வீக இணைப்புக்கான, மனித ஆன்மாவின் ஏக்கத்திற்கான ஓர் உருவகமாக பார்க்கப்படுகிறது. சூஃபித்துவம், சீக்கிய மதம் மற்றும் பக்தி இயக்கங்களின் ஆன்மீக மரபுகளுடன் எதிரொலிக்கும் ஒரு கருப்பொருள் இது.

    18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாரிஸ் ஷாவின் ஹீர்-ராஞ்சாவின் பதிப்பு சூஃபி தத்துவத்தில் ஆழமாக ஊன்றியுள்ளது. அலைந்து திரியும் ஃபகீர் (சூஃபி துறவி) – ஆக சித்தரிக்கப்படும் ராஞ்சா இறையுடன் கூடுதலைத் தேடும் ஆன்மாவின் ஆன்மீகப் பயணத்தைக் குறிக்கிறான். காதல், துன்பம் மற்றும் தெய்வீகக் கூடல் போன்ற சூஃபி இலட்சியங்களை உள்ளடக்கிய கதையாக ஹீர் ராஞ்சா விளங்குகிறது.

    ஹீர்-ராஞ்சாவில் வரும் தடைசெய்யப்பட்ட காதல், சமூக எதிர்ப்பு மற்றும் தியாகம் ஆகிய கருப்பொருள்கள் உலகளாவியவை. மத, கலாச்சார பிளவுகளைத் தாண்டி அனைவரின் கருத்தையும் ஈர்ப்பவை. சமூக விதிமுறைகளுக்கு எதிரான காதலர்களின் போராட்டம் – சுதந்திரம், அடையாளம் மற்றும் சத்தியத்திற்கான பரந்த மனித தேடலைச் சுட்டுவதுமாகவும் உள்ளது.

    சாதி பிளவுகள், கடுமையான ஆணாதிக்க விதிமுறைகள் போன்ற ஒடுக்குமுறை சமூக கட்டமைப்புகளுக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக இந்த கதையை வாசிக்க முடிகிறது. பஞ்சாபில் புழங்கும் பெரும்பாலான நாட்டுப்புறக் கதைகள் அதிகாரத்தின் விமர்சனங்களாக செயல்படுகின்றன. அவற்றுள் ஹீர் ராஞ்சா தொன்மக்கதை முக்கிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

    ஹரூன் காலித் தனது எழுத்து நிறத்தால் பஞ்சாபியத்தின் ஓவியத்தை சில புதிய உத்திகளைக்கொண்டு வரைந்துள்ளார். சித்திரத்தின் பன்முகத்தன்மையை நிகழ்த்திக்காட்டுகிறது ஹரூன் காலித்தின் நாவல். கம்பனின் வாழ்க்கைக் கதையையும் ராமாயணத்தையும் இணைத்து ஒரே கதையாக எழுதுவது போன்ற ஓர் உத்தியை இந்நாவலில் கையாண்டுள்ளார். ஒன்று வரலாற்று நாவல், இன்னொன்று பஞ்சாப் மண்ணின் புகழ் பெற்ற காதல் கதை. ராமாயணத்தின் ஒவ்வோர் அத்தியாயத்தையும் அந்த அத்தியாயத்தில் தோன்றும் ஒவ்வொரு பாத்திரத்தின் கண்ணோட்டத்திலும் சொல்வதாகக் கொண்டால் விளையக் கூடிய அற்புதத்தை ஹீர் – ராஞ்சா காவியத்தின் மறுகூறலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் ஹரூன். செனாப் நதிக் கரையில் நடந்த ஒரு காதல் தொன்மத்தின் முதல் அங்கத்தை செனாப் நதியே கூறுகிறது. கவிதை மொழியும் வரலாற்றுக்குறிப்புகளும் வளமான வாசிப்பனுபவத்தை நமக்கு நல்குகிறது.

    பெரும்பான்மைவாதத்தின் குரல் ஓங்கும்போது அதனை மட்டுப்படுத்தும் பொறுப்பு பெரும்பான்மை சமூகத்தின் அங்கத்தினர்களினுடையது. பெரும்பான்மைவாதத்தால் சிறுபான்மையின் கழுத்து கவ்வப்படும் போது பெரும்பான்மை சமூகத்தினுடைய தாராளவாதிகளின் கைகள் உதவிக்கு வர வேண்டும் என்று உறைக்கத்தக்க விதத்தில் கதையில் ஒரு சம்பவம் சொல்கிறது. ஹரூன் காலித் அவ்வரிகளைத் தம் நாட்டு பெரும்பான்மையர்களுக்கு அறிவுறுத்துவதற்காக எழுதியிருக்கக் கூடும். எல்லையின் இரு புறங்களுக்கும் அறிவுரை பொருந்தும் – புல்லே ஷாவின், வாரிஸ் ஷா-வின் கவிதைகளைப் போலவே!

    From Waris to Heer

    Author : Haroon Khalid

    Publisher : Penguin Random House India

    Price : Rs 499/-

    நன்றி : கனலி

    1. சிஷ்டிகள் இஸ்லாத்தின் முக்கியமான சூஃபிகளின் வரிசையைக் குறிக்கிறது. ஆன்மீகம், அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் திறந்த உள்ளம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் சிஷ்டிகள். 10ம் நூற்றாண்டில் நவீன ஆப்கானிஸ்தானின் ஹேரத் நகருக்கருகில் உள்ள சிஷ்ட் என்ற இடத்தில் உருவான சூஃபி மரபு என்பதால் சிஷ்டி என்று அடையாளப் பெயர் இந்த சூஃபி குருக்களின் வரிசைக்கு சேர்ந்துவிட்டது. அஜ்மீரின் மொய்னுதின் சிஷ்டி போன்றவர்களால் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் சிஷ்டி வரிசை பிரபலமடைந்தது. உலகளாவிய அன்பின் செய்தியை ஊக்குவிப்பதற்காக அறியப்படுபவர்கள் சிஷ்டிகள். மத, கலாசார எல்லைகளை மீறுபவர்கள். தொண்டு, மனிதக்குலத்திற்கான சேவை, தன்னலமற்ற பக்தி ஆகியவற்றை வலியுறுத்துபவர்கள். “கவ்வாலி” (சூஃபி பக்தி இசை) அவர்களின் ஆன்மீக நடைமுறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கிறது. ↩︎
    2. காஃபி என்பது இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக பஞ்சாப், சிந்த் பகுதிகளில் உருவான சூஃபி பக்தி கவிதை மற்றும் இசையின் ஒரு வடிவமாகும். இது பொதுவாகப் பஞ்சாபி, சிந்தி, சிராய்கி மொழிகளில் எழுதப்பட்டது. காஃபி செய்யுள்களும் கீதங்களும் தெய்வீக அன்பின் கருப்பொருட்களைக் கையாள்பவை. கடவுளுடன் ஒன்றிணைவதற்கான ஏக்கம் இவ்வடிவக் கவிதைகளில் அதிகம் வெளிப்படும். பாபா பரீத், ஷா ஹுசைன், ஷா அப்துல் லத்தீப் பிட்டாய், புல்லே ஷா போன்ற பெருங்கவிஞர்கள் காஃபி வடிவத்தைத் தமது கவிதைகளின் வடிவமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ↩︎
  • மோகமும் முக்தியும்

    Rab2

    ஒரு கலைப்படைப்பை ரசிப்பதோ கணிப்பதோ அதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது. புரிந்து கொள்ளும் விதம் மாறும் போது அப்படைப்பை பற்றிய நம் முந்தைய கணிப்பும் மாறும். இதன் செயல் முறை விளக்கம் ஒன்று சமீபத்தில் நடந்தேறியது. 2008-இல் பார்த்த திரைப்படம். பார்த்துவிட்டு பொருளற்ற பொழுதுபோக்குப் படம்  என்று நான் பொருட்படுத்தாமல் விட்டுவிட்ட படம். மீசை மாற்றினால் ஆளே மாறிவிடுகிறானாக்கும்! நாயகிக்கு இரண்டு பேரும் ஒருவர் தான் என்று புரிந்து கொள்ளமுடியவில்லையாக்கும்! காதுல பூ! என்று குறை சொல்லிக் கொண்டே rab ne bana di jodi படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியே வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

    2009 இலிருந்து பஞ்சாபி பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம் மற்றும் வரலாறு பற்றிய சில புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுஃபி இஸ்லாம் பற்றி இத்ரிஸ் ஷா எழுதிய புத்தகங்கள், புல்ஹே ஷாவின் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள், சீக்கியர்களின் புனித கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள சுபி மகானின்  பாடல்கள் போன்றவையும்  அறியக் கிடைத்தன.

    இரண்டொரு மாதங்கள் முன்னம் 2008 இல் பார்த்த  rab ne bana di jodi திரைப்படம் பற்றி நினைத்துக்கொண்டிருந்த போது “உருவகக்காதல் வழி தெய்வக் காதலைச் சொல்லும் படம்” என்று அப்படத்தை புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் மின்னல் வெட்டாக தோன்றி மறைந்தது. படத்தை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்தப் புரிதலை சரி பார்த்து விட முடியும் என்றிருந்தேன். அந்த வாய்ப்பு நேற்று அமைந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.

    +++++

    எதிர்பாராத விபத்தில் காதலித்தவர் இறந்து போதல், திருமணம் நின்று விட்ட அதிர்ச்சியில் மரணப்படுக்கையில் தந்தை என ஒன்றன் பின் ஒன்றாக வாழ்க்கையின் அதிர்வுகளில் தனிமைப் பட்டுப் போன தானி (அனுஷ்கா ஷர்மா) தந்தையின் கடைசி ஆசைக்கிணங்கி சுரி (ஷாரூக் கான்) யைத் திருமணம் செய்து கொள்கிறாள். சுரி நல்லவன். சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அவன் ஹீரோ இல்லை. தூர நின்று அவளுக்கு வேண்டியதைச் செய்து பரிவு காட்டுகிறான். சுரிக்கு அவள் மேல் காதல். ஏனென்று கேட்டால் அவனுக்கு தானியின் முகத்தில் rabb (இறைவன்) தெரிகிறார். தானி அவன் உலகுக்குள் வந்த பிறகு இறைவனைக் கண்டால் தோன்றும் பரவச நிலையைப் போன்ற ஓர் ஆனந்த உணர்வை அவன் அடைகிறான். அவளுக்கு அவன் மீது காதல் இல்லை. அவனிடம் அன்பைக் காட்ட தன்னிடம் அன்புணர்வேதும் எஞ்சியிருக்கவில்லை என்று தானி சொல்கிறாள். சிறிது காலம் காத்திருந்தால் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு பழைய தானியை அழித்துக் கொண்டு ஒரு புதிய மனுஷியாய் அவனுடைய மனைவியாய் வலம் வருவேன் என்கிறாள். சுரி காதலிப்பதோ பழைய தானியை ; அவள் ஏன் மாற வேண்டும்? அவள் மாறாமல் முன்னம் அவளுள் இருந்த உற்சாகத்துடன் வளைய வர வேண்டும் என்று விரும்புகிறான் சுரி. அவள் மேல் தனக்கிருக்கும் அன்பை பிரியத்தை வார்த்தைகளால் காட்டாமல் ஒரு விளையாட்டில் சுரி ஈடுபடுகிறான். தன்னுடைய முடியை திருத்திக் கொண்டு, இருக்கமான கால்சட்டை மாட்டிக் கொண்டு தானி நடனம் கற்றுக் கொள்ளும் இடத்துக்கு ராஜ் என்கிற பெயரில் செல்கிறான். உயிர் நண்பன் பாபியின் சலூனில் ராஜின் மேக்-அப்பை போட்டுக்கொள்கிறான். சுரியின் மனசாட்சி போல கூடவே இருந்து துணையாகவும் அவனுடைய நெஞ்சின் குரல் போன்றும் வருபவன்  பாபி (வினய் பாடக்). சுரியின் குணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு Macho personality யாக, ஆட்டமும் உல்லாசமும் கேளிக்கையுமாக  தானியிடம் நட்பு கொள்கிறான். நட்பு வளர்கிறது. ராஜ் தான் சுரி என்ற உண்மை தானிக்கு தெரியவிடாமல் அவன் நாடகம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ராஜ் அவளிடம் தான் காதலை தெரிவிக்கிறான். தானி சஞ்சலமுறுகிறாள். ராஜின் காதலை ஏற்பதா? அல்லது கணவர் சுரியுடனேயே இருப்பதா என்ற  குழப்பம்! படம் நெடுக மூன்று முறை பொற்கோயில் வருகிறது. அங்குதான் வள் குழப்பத்துக்கு விடை கிடைக்கிறது. பொற்கோயிலின் குளத்துக்கருகே இறைவனை பிரார்த்தனை செய்தவாறு மூடியிருக்கையில் சுரியின் முகத்தில் இறை தெரிவதாக உணர்கிறாள். அவளை அழைத்துப் போவதற்காக வரும் ராஜிடம் “உன்னுடன் ஓடினால் சுரியிடமிருந்து சென்று விடலாம் ; ஆனால் இறைவனிடமிருந்து சென்றுவிட முடியுமா? சுரியின் முகத்தில் எனக்கு இறைவன் தெரிகிறான்” என்று சொல்கிறாள். படத்தின் இறுதிக்காட்சியில்  தானியிடம் சேர்ந்து ஆடுவதற்காக அழைக்கப்படும் ராஜின் இடத்தில் இப்போது சுரி. தானியிடம் சேர்ந்து சுரி ஆடுகிறான். தானிக்கு எல்லாம் தெளிவாகிறது.

    அன்பின் சமயமே இறைவனின் ஒரே சமயம் என்னும் பொருள் படும்மத்தபி இஷ்க்என்ற கருதுகோள் பாரசீக இலக்கியத்தில் நான்காம் நூற்றாண்டிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. இரு வகை அன்பு அல்லது காதல் பற்றி பேசின சுபி இலக்கியங்கள்இஷ்க்ஹகிகி மற்றும் இஷ்க்மஜாஸி. முன்னது இறை மேல் கொண்ட காதல், பின்னது பிற உயிர்கள் மேல் கொண்ட காதல். பக்திக்காதலை அலசிய சுபி ஞானிகள் மனிதர்களின் பிற உயிர்களின் காதலை இறைக்காதலின் படிமமாக்கிக் கொண்டார்கள்.  கண்ணுக்கெட்டா இறைவனை கொடூரக் காதலி எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்கள் ;  காதலை வருத்தம் தரும் நோய் என வர்ணித்தார்கள். “ப்யார் ஏக் தர்த்” – “காதல் ஒரு வலிஎன்று தானி பல இடங்களில்  கூறுவதை படத்தில் பார்க்கலாம்.     

    தெய்வீகத்தைப் பேசுகையில் அழகை (“ஜமால்) காதலியின் முக்கியமானதொரு வெளிப்பாடாக சுபி ஞானிகள் சித்தரித்தார்கள். இது ஒரு பித்து நிலை. இந்த நிலையில் சில மனிதர்களை அவர்கள் தெய்வீகத்தின் மறுவடிவமாக ஏற்றிப் பார்க்கவும் செய்தார்கள். இஸ்லாமிய இறையியல் மறுக்கின்றஅவதாரம்என்ற நோக்கில் அவர்கள்  பார்க்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

    சுபி ஞானியின் பித்த நிலையை சித்தரிப்பாக சுரியின் முகத்தில் இறையைக் காண்பதாக தானி உணர்வதைக் கொள்ளலாம். இறைக்காதலை நாடும் சுபி தத்துவத்தின் படிமமாக மனிதக் காதலாகிய ராஜுடனான காதலை   நிராகரித்து இறைக்காதலின் படிமமாகிய சுரியுடனான காதலை உறுதி செய்யும் தானியின் இறுதித் தேர்வாகக் காண முடியும்.

    புல்ஹே ஷா, வாரிஸ் ஷா போன்ற சுஃபிக் கவிஞர்களால் ஞானிகளால் செறிவுற்றது பஞ்சாபி இலக்கியம். சுபிக் கருத்துகளின் தாக்கம்  சீக்கிய சமயத்திலும் விரவியிருக்கிறது. சுபியின் அடிப்படைக்  கருத்தான உண்மை ஒன்றே என்பதை குரு நானக் சீக்கியர்களின் புனிதச் சின்னமான “ஓர் ஓங்காரம்” என்ற எழுத்திலக்கத்தில் பதிவு செய்கிறார். சுபிக்களைப் போன்றே சீக்கியர்களின் வழிபாடும் இசையையொட்டியே அமைந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த செவ்வியல் பஞ்சாபி இலக்கியத்தின் முன்னோடியும் சுபி ஞானியுமாகிய பாபா பரீத்-தின் 112 ஈரடிகளை 4 செய்யுட்களை சீக்கிய மதத்தின் ஐந்தாம் குரு – குரு அர்ஜன் – புனித கிரந்தத்தின் அங்கமாக்கியதும் சுபி இஸ்லாமுடன் சீக்கிய மதத்துடனான நெருங்கிய கருத்தியல் தொடர்பைக் காட்டுகிறது.

    Rab ne bana di  jodi – படத்தில் பொற்கோயில் மூன்று இடங்களில் வருவதாக முன்னரே சொன்னேன். சலூன் காட்சிகள் அனைத்திலும் சுவரில்  தொங்கும் குருநானக்-கின் திருவுருவம் பின்னணியாக இருக்கிறது.

    பஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார்  :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)   

    தெய்வக்காதலை மனிதக்காதலிலிருந்து பிரித்துப் பார்க்கும் கண்ணை இன்னும் பெற்றிராத தானி வெறும் மீசையை மட்டும் எடுத்து விட்டு ராஜ்-ஆக மாறும் சுரியைக் கண்டு பிடிக்காமல் இருப்பது கதையின் நிகழ்த்து அம்சம்  என்பதை படத்தை முதல் முறை பார்த்த அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    என்னைப் பொறுத்த வரையில், இரண்டு – மூன்று காட்சிகளை நீக்கியிருந்தால் இந்தப்படம் இன்னும் சிறப்புற்றிருக்கும். சுமோ பயில்வானுடன் சுரி பொருட்காட்சியில் சண்டையிட்டு தானியைக் கவர நினைப்பது, பிறகு, தானி “Macho” அல்ல தான் நாடுவது என்று தெளிவுபடுத்துவது, இறுதியாக ஜப்பானில் தேனிலவு கொண்டாட சென்று வந்ததாக சுரி கொடுக்கும் நகைச்சுவை வர்ணனைகள் – இவையெல்லாம் தேவையற்ற காட்சிகள். ஜப்பான் சுற்றுலாவை விளம்பரம் செய்வதற்காக  ஸ்க்ரிப்ட்டை நீர்க்கச் செய்திருக்கவேண்டாம்!

    Rab ne

  • காதல் காலமும் காலமான காதலும்

    அவளின் உதடுகள் மூடியிருந்தும்

    அவள் சிரிப்பு காணக் கிடைக்கிறது.

    விழிகள் திறந்திருக்கின்றனவே !

    உறங்குகையிலும்

    அவளின் சிரிப்பு தொடருமோ

    என்றறிய ஆவல்

    எனது ஆவலை அவள் அறிந்தாளில்லை.

    தோள் தருகிறேன்

    தோழி தன் கவலைகளை சொல்லி அழ

    மனப்பாரம் தீர்ந்தவுடன்

    நன்றி சொல்லி நகர்ந்து விடும் தோழி.

    மனதை பாரமாக்கி சென்று விடுகிறாள்

    பாரத்தை இறக்கி வைத்தால்

    தோழி தொலைந்து போய் விடுவாளோ?

    அலை புரளும் குழல்கள் – அவற்றை

    ஒதுக்கி விடும் விரல்கள்

    நெருங்கி வரும் பார்வை – அது

    அணியுமொரு போர்வை

    முத்துப் பல் வரிசை – கண்டு

    தர நினைப்பேன் பரிசை

    நட்பிற்கு ஒர் எல்லை – அதை

    தாண்ட இயலா தொல்லை.

    +++++

    சில வருடம் போன பின்னர்

    பெற்றோர் பார்த்த பெண்ணாய்

    அவளே வந்தாள்

    அவள் உறக்கம் காண

    அவள் கவலைகளை கேட்க

    இன்றெனக்கு பொறுமையில்லை

    என் வீட்டுக் கடன் அடைக்கும்

    அவளின் பொறுப்பிருக்கிறதே!

    அமெரிக்கா ப்ராஜெக்டில்

    அவளை நிலைத்திருக்கச் சொன்னேன்.

    மூன்று வருடம் கழித்து

    எனக்கும் அமெரிக்கா வர

    சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நானும்

    ஸ்கைப் இருக்க பயமேன்

    என்று அவளும் பேசிக் கொண்டிருந்தோம்.