Tag: காட்சி

  • நினைவேக்கத்தின் அரசியல்

    இந்தச் சிறு கட்டுரையை கடந்த சனிக்கிழமை எழுதத் தொடங்கிய போது இயக்குனர் ஷியாம் பெனகல் மறைந்திருக்கவில்லை. ஷியாம் பெனகல் இயக்கிய அதிகம் பேசப்படாத படம் ஒன்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் கடந்த சனிக்கிழமை ஏன் என்னுள் உதித்தது?

    —-

    Three Icons of Parallel Cinema – Mrinal Sen, Shyam Benegal, Satyajit Ray

    “த்ரிகால்” படம் எழுத்தாளர் ரஸ்கின் பாண்டின் கதைகளை நினைவு படுத்தியது. “த்ரிகால்” திரைக்கதையில் ரஸ்கின் பாண்ட்-தனம் இருந்ததாக எனக்குப் பட்டது. ஆங்கிலோ-இந்தியக் குடும்பங்களின் வாழ்க்கையை அதிகம் பதிவு செய்யும் ரஸ்கின் பாண்ட்-டின் கதைகளில் நினைவேக்கம் முக்கியக் கூறாக உள்ளது.. மசூரியிலோ டேராடூனிலோ களம் கொண்டிருக்கும் அவரது கதைகள். “த்ரிகால்” திரைக்கதை அறுபதுகளின் கோவாவில் நிகழ்கிறது. போர்ச்சுகல்-லின் காலனியாக இருக்கும் கோவாவை இந்தியாவுடன் இணைக்கும் போராட்டம் உச்சத்தில் இருக்கிறது. எங்கே போர்த்துகீசியர்கள் கோவாவை இந்தியாவுக்கு கொடுத்து விடுவார்களோ என்று ஒரு குடும்பத்தின் முதியவர்கள் கவலையில் இருக்கிறார்கள். சில குடும்பங்கள் போர்ச்சுகலுக்கு குடி பெயர்ந்துவிட்டன. குடும்பத்தின் இளைஞர்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்கிறார்கள். அவர்களின் உணவு மேசை வாக்குவாதங்கள் – ஆதரவும் எதிர்ப்புமாக – நடக்கும் காட்சி எனக்கு பாமுக்கின் “பனி” நாவலில் வரும் உணவு மேசை வாதங்களை – இஸ்லாமிஸ்டுகளுக்கும் ராணுவத்தினர்க்கும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் – நினைவு படுத்தின. ரூயிஸ் பாத்திரம் ஓர் இளம்பெண்ணை மயக்கி கர்ப்பமாக்கி விட தன் கர்ப்பத்தை மறைத்து அவசர அவசரமாக இளம்பெண் பாத்திரம் ஒரு முதியவரைத் திருமணம் செய்து கொண்டுவிடும். இருபது வருடங்களுக்குப் பின் – படத்தின் இறுதிக் காட்சியில் – கோவாவுக்கு வரும் ரூயிஸ் பாத்திரம் பாழடைந்த தாம் வசித்த பழைய மாளிகையை நோக்குகையில் அவனுடைய பின்-குரலில் ஒலிக்கும் வசனம் – “காலம் தவறுகளை மறக்கவைத்து ஓர் இன்பமான சிறு நினைவாய் மாற்றிவிடும்”

    ஷியாம் பெனெகல் இயக்கத்தில் வெளிவந்த “த்ரிகால்” திரைப்படத்தில் வசனங்கள் இல்லாத நேரங்களில் ஒளி-நிழல் இயக்கங்கள், குறுகலான அறைகள், பாத்திரங்களின் உடைகள் திரைப்படத்தின் கதையைப் பேசின. சிறிது நேரம் ஒலியை அனைத்து விட்டு மௌனப் படத்தை நோக்கினாலும் படத்தின் சில அதிர்வுகள் குறைவுபடாது என்று கூறிவிட முடியும். அப்படிக்கூற ஒரு முகாந்திரம் இருக்கிறது. 1987இல் முதன்முறையாக தூர்தர்ஷனில் பார்த்தேன். அப்போது என்னால் இந்தியின் ஒரு சொல்லையும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு வரியும் புரியாமல் முழுப் படத்தையும் பார்த்தது நன்கு நினைவிருக்கிறது. படம் பார்த்து முடித்தபின் மனதில் காட்சிகளை அசை போடும்போது கதையின் முக்கியக் கருப்பொருட்களாகிய நினைவேக்கமும் இறந்த காலத்தில் சஞ்சரித்தலும் உணர்வின் ஆழத்தில் எதிரொலித்தன. இறுதிக் காட்சியில் நசீருத்தின் ஷா ஏற்று நடித்த ரூயிஸ் பாத்திரம் கோவாவுக்கு வந்து பார்க்கும் போது அந்த பழைய வீடு சோகத்துடன் பார்வையாளர்களை நோக்கிக் கொண்டிருப்பது போல் இருந்தது. இது எப்படி சாத்தியம்? இறந்த காலத்தை காட்டும் “பிளாஷ் பேக்குகள்” நிறைந்த படங்களில் நிகழ் காலத்துக் காட்சிகளுக்கும் இறந்த காலக் காட்சிகளுக்கும் இடையே ஒரு வித்தியாசமும் இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம். இறந்த காலம் கதையின் பாத்திரங்களுக்குள் ஏற்படுத்தும் ஏக்கம் பார்வையாளர்களின் மனதிலும் நுழைந்தது எப்படி?
    வெறும் நினைவேக்கம் மட்டுந்தானா “த்ரிகால்”?

    ஒரு காதல் படமோ, வீரசாகச சோகப்படமோ இல்லை “த்ரிகால்”. ஹ்யூமனிச கதையைச் சொன்னாலும் சில அரசியல் கருத்துகளை கதை தன் அடித்தளத்தில் மறைத்து வைத்துக் கொண்டுள்ளது “த்ரிகால்”. இப்போதைய சில வெகுசன தமிழ்த்திரைப்படங்களில் வருவது மாதிரி பாத்திரங்களின் வாயில் வசனங்களாகத் திணிக்கப்பட்டு அரசியல் கருத்துகள் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.

    மீஸோன் சீன் (mise en scene) எனும் பிரெஞ்சு சொற்றொடரின் நாடகவியல் சார்ந்த பயன்பாடு பின்னர் திரைப்படக் கலைக்குள்ளும் பிரவேசித்தது. ஒரு ப்ரேமில் தெரியும் அனைத்து காட்சிக்கூறுகளின் உள்ளடக்கத்தை மீஸோன் சீன் எனலாம். சொற்றொடரின் நேரடி அர்த்தம் – “மேடையில் வைத்தல்” அல்லது “காட்சியில் வைத்தல்”. எந்தெந்த காட்சிக்கூறுகளை காட்சியில் வைக்கலாம்?

    காட்சியமைப்பு:
    கதை நிகழும் இடத்தையும் காலத்தையும் வரையறுக்கும் சூழ்நிலையும் பொருட்களும், பாத்திரங்களின் உடை அணிகலன்களும்

    ஒளி:
    மனநிலைகளையும் சூழ்நிலைகளையும் வெளிப்படுத்த உதவும் ஒளி – நிழல் பயன்பாடு.

    நடிப்பு:
    நடிகர்களின் உடல் மொழி, முகபாவங்கள் மற்றும் குரல் வேறுபாடுகள்.

    பெனகல் பயன்படுத்தியுள்ள “மீஸோன் சீன்” வெறும் பின்னணியாக மட்டுமல்லாமல், கதையை உயிர்ப்பும், சுவாசமும் உள்ள கதையாடலின் பகுதியாக செயல்படுவதாலேயே “த்ரிகாலை” ஓர் அசாதாரணத் திரைப்படமாகிறது. படத்தின் ஒவ்வொரு விவரமும், – காட்சியின் இட மேலாண்மையிலிருந்து பாத்திரங்களின் வடிவமைப்பு வரை – மரபு, அடையாளம், மாற்றம் குறித்த கதையினுடைய ஆய்வினை ஆழமாக்குகிறது.

    1961இன் கோவாவில் போர்த்துகீசிய அரசு வீழ்ச்சியடைந்த நாட்களில், சொந்த வாழ்க்கை சார்ந்த, பொது அரசியல் சார்ந்த மாற்றங்களுக்கு நடுவே சிக்கியிருக்கும் ஒரு பணக்கார, கத்தோலிக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதைச்சூழலைக் கொண்டுள்ள படத்தில் காட்டப்படும் சிதைந்து கொண்டிருக்கும் மாளிகை காலனித்துவ உயரடுக்கின் உருவகம். பெனகலின் நுணுக்கமான செட் டிசைன் அக்காலத்தின் செல்வச்செழுமையையும் கொஞ்சங்கொஞ்சமாக மங்கிக் கொண்டிருக்கும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. வீட்டில் நிறைந்து கிடக்கும் பழங்கால மரச்சாமான்கள், மதச்சின்னங்கள், குல தெய்வங்களின் பிரதிமைகள் நழுவிக்கொண்டிருக்கும் மரபுகளை இறுகப் பற்றிக் கொள்ளும் முயற்சிகளின் படிமங்கள். இடிந்து விடும் என்பது போலிருக்கும் சுவர்களும் அவற்றின் மங்கலான நிறங்களும் உணர்ச்சி சார்ந்த, சமூகச் சிதைவைப் பிரதிபலிக்கின்றன.

    பாத்திரங்கள் அணியும் ஆடை அணிகலன்கள் பழைய உலகின் அழகை வளர்ந்து வரும் நவீன யுகத்தோடு வேறுபடுத்திக் காட்டுகின்றன. குடும்பத்தின் பழைய தலைமுறையினர் போர்த்துகீசிய செல்வாக்கை பிரதிபலிக்கும் பழமைவாத, பாரம்பரிய உடைகளை அணிகின்றனர். இளைய கதாபாத்திரங்கள் காலனித்துவ விழுமியங்களிலிருந்து முறித்துக் கொண்டு ஒரு புதிய அடையாளத்தை நோக்கி நகர்வதைக் குறிக்கும் சமகால உடைகளை அணிகின்றனர். இந்தக் காட்சி இயக்கவியல் கதையின் அடிநாதமான தலைமுறை பதட்டங்களுக்கு இணையாகச் செல்கிறது.

    நினைவேக்கவுணர்வைத் தூண்டும் வண்ணம் மென்மையான இயற்கை ஒளியை பெனகல் பயன்படுத்துகிறார். இரகசியங்களின், சொல்லப்படாத பதட்டங்களின் சுமையை வலியுறுத்த இருண்ட, நிழல் படிந்த உட்புறங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார். கதையின் முக்கியக் கருப்பொருளாகிய – தோற்ற, யதார்த்த இரட்டைத் தன்மையை – பிரதிபலிக்க ஒளியின் நிழலின் இடையீட்டை உபயோகிக்கிறார்.

    குடும்பச் சந்திப்பு காட்சிகளில் பாத்திரங்களின் ஒழுங்கமைவு அவற்றுக்கிடையேயான உறவுகளையும் உணர்ச்சி தூரங்களையும் அடிக்கோடிடுகிறது. எடுத்துக்காட்டாக, அதிகார உருவங்கள் பெரும்பாலும் முன்புறத்தில் நிற்கின்றன. மாறுபட்ட குரல்களும், தனிமைப்படுத்தப்பட்ட பாத்திரங்களும் பின்னணியில் நிற்கின்றன. மாளிகையின் குறுகிய இடங்களில் கதாபாத்திரங்கள் நகரும் விதம், உடல் மற்றும் உணர்ச்சித் தளங்களில் அவற்றின் சிறைபட்ட நிலையை அதிகரித்துக் காட்டுகிறது.

    காட்சிகளில் அடிக்கடி வரும் மதப் பொருட்களின் பயன்பாடு குண நலன்கள் சிதைந்து கொண்டிருக்கும் குடும்பத்தின் ஆழமான கத்தோலிக்க நம்பிக்கையை முன்னிலைப்படுத்துகிறது. இந்திய பாதிப்புகளுடன் சேர்ந்து ஒலிக்கும் பாரம்பரிய போர்த்துகீசிய பாடோ பாணி இசை கோவாவின் கலாசார சந்திப்புகளைக் கோடிடுகிறது.

    கோவாவின் பாரம்பரியத்தை, அதன் காலனித்துவ கடந்தகாலத்தை நுணுக்கமாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டி, பார்வையாளரை அதன் உலகில் ஆழமாக மூழ்கச் செய்கிறது “த்ரிகால்”. ஓர் இலக்கியப்படைப்பையொத்த தனித்துவமான பிரதிபலிப்பை பார்வையாளர்க்கு வழங்குவதாலேயே மறைந்த இயக்குனர் ஷியாம் பெனகல் இயக்கிய முக்கியமான படங்களுள் ஒன்றாகிறது “த்ரிகால்”. அவரின் வழக்கமான கூட்டாளிகளாகிய ஸ்மிதா பாடில், ஓம் புரி, ஷபானா ஆஸ்மி போன்றோர் இப்படத்தில் நடிக்கவில்லையென்பது கூடுதல் தகவல். நசீருத்தின் ஷா மட்டும் ஒரே ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

  • வேகத்தின் சாட்சி – உள்ளே வெளியே

    கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின் அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை – புத்தகம் என்னை ஈர்த்தது. ஆன்மீகத் தத்துவ தொனி தூவிய அவரது “சுற்றுவழிப்பாதை” நாவலை இதற்கு முன்னர் வாசித்துள்ளேன். அனேகமாக அவரது கவிதைத் தொகுப்பில் நிறைய ஆன்மீக கருப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகள் இருக்கும் என்பது ஊகம் (எதிர்பார்ப்பும் கூட, இப்போது வரும் கவிதைத் தொகுதிகளில் ஆன்மீக கருப்பொருள் அதிகம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்பது ஒரு குறை!).

    350 பக்கங்கள் கொண்ட நூலில் ஏராளமான கவிதைகள். புத்தகம் வந்தடைந்ததும் இயைபின்றி ஒரு கவிதையை எடுத்து வாசித்தேன்.

    வேகம்

    பூமியைப் பிளந்து

    வெடித்துச் சிதறி

    வான் நோக்கிப் பாய்கிறது

    தென்னை மரம்

    உச்சியில் நாற்புறமும்

    மட்டையும் ஓலையுமாய்

    பீய்ச்சி அடிக்கிறது

    சொட்டுச்சொட்டாய்

    துளிர்த்து உடன்

    வளர்கின்றன 

    தேங்காய்க் குலைகள்

    மலைகளும் மடுக்களும்

    கண்ணெதிரெ உருவாகும்

    கதி மாறிய உலகில்

    உள்ளே சுற்றுமுற்றும்

    பார்த்து வியந்து நிற்கிறேன்

    என்னை மட்டும்

    காணவில்லை

    (“ வானம் கீழிறங்கும்போது”, காலச்சுவடு பதிப்பகம், ஆசிரியர்: ஆனந்த்)

    ஆறு நாட்களில் இறைவன் பிரபஞ்சத்தை உண்டு பண்ணின விவிலியத் தொன்மத்தில் எல்லாம் வேகவேகமாக உருவாக்கப்பட்டிருக்கும். பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் மரங்கள் நிமிஷக்கணக்கில் வளர்ந்து மலர் பூத்து கனி விளைக்கும் மரஙளின் காட்சியை மானிடன் ஒருவன் பார்த்திருப்பானே ஆயின் அவன் வியந்திருப்பானா? மனிதனும் பிரபஞ்சத்தின் பங்கேற்பாளர்களில் ஒருவனாக மட்டும் படைக்கப்பட்டிருப்பானெனில், வியப்புணர்வுக்கு இடம் இருந்திருக்காது. வியப்புணர்வுக்கு இடம் இருந்ததெனில் பிரபஞ்சத்தின் பார்வையாளனாக, உற்று நோக்குபவனாக அவனுக்கொரு பாத்திரம் தரப்பட்டிருப்பதாகக் கருதலாம். பிரபஞ்சமும் மனிதனும் ஒரே நேரத்தில் உருவாயினரா என்பது வேறு கேள்வி. பரிணாமவியலும் சமயத் தொன்மங்களும் இக்கேள்விக்கு வெவ்வேறு விதங்களில் விடையளிக்கும்.

    விடுவிடென்று நிமிடங்களில் வளர்ந்து கனி குலைக்கும் மரம் – ஸ்ராவஸ்தியில் புத்தர் செய்த அற்புதங்களில் ஒன்று – இது போன்ற ஒரு தென்னை மரம் “வேகம்” கவிதையில் வருகிறது. கவிதைசொல்லி வேகவேகமாக வளரும் தென்னை மரத்தைப் பார்ப்பதாகச் சொல்கிறான். கவிதைக்காட்சிக்குள் பங்கேற்பவனாக கவிதைசொல்லியைப் பார்த்தால் அவன் ஒரு சாட்சி. கவிதைக்காட்சிக்கு வெளியே நின்று அந்தக் காட்சியை வெறும் விவரிப்பவனாக கவிதைசொல்லி இருந்தால் கவிதைக்காட்சிக்குள் அவன் இருக்க மாட்டான். கவிதைக்காட்சியைத் தன் மனதுக்குள் சிருஷ்டித்து அதை அவன் தெரியப்படுத்தும் போது அந்தக் கவிதைக்காட்சி அவனுக்குள்ளேயே இருக்கிறது.

    பங்கேற்பவன் எப்படி சாட்சியாக முடியும்? சாட்சி என்பது உணர்வு நிலை. “நான் இக்காட்சியில், நிகழ்வில் பங்கு பெறுகிறேன்” என்று சொல்லிக் கொள்வது உணர்வு நிலையிலிருந்து எழுவது. பங்கேற்கும் காட்சியில் இருந்துகொண்டே சாட்சியாக இருக்கும் வசதியை நம் உணர்வு நிலை நமக்குத் தருகிறது.

    கவிதையின் தலைப்பு “வேகம்”. வேகம் என்பது காலத்தோடு தொடர்புள்ளது. குறைந்த காலத்தில் அதிக இயக்கம் நிகழ்ந்தால் அதிக வேகம். காலம் என்ற ஒன்று பிரபஞ்ச வடிவம் நம் மேல் நிகழ்த்தும் நையாண்டியாக இருக்கலாம் என்று நியூட்டனிய இயற்பியலுக்குப் பின் வந்த இயற்பியல் முன்னேற்றங்களிலிருந்து நாம் அனுமானித்துவிடலாம். நேரம் முழுமையானது அல்ல, அது ஒரு சார்பியல் கோட்பாடு. வெவ்வேறு பார்வையாளர்களுக்கு அவர்களின் ஒப்பீட்டு இயக்கத்தைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது.

    கவிதையின் இறுதியில் வியப்பின் உச்சியில் அங்கு தான் இல்லை என்று கவிதை சொல்லி அறிவிக்கும் போது அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

    ஒன்று – ஒரு மரம் வளர்ந்து காய்கனிகள் விளைக்கும் காலத்தை விட மலைகளும் மடுவும் தோன்ற அதிக காலம் பிடித்திருக்கும் என்று தர்க்க ரீதியாக அனுமானிக்க முடியும். மனிதன் வளரும் வேகம் அவன் ஆயுட்காலம். ஒரு மரமோ, மடுவோ, மலையோ வாழும் காலத்துடன் ஒப்பு நோக்கினால் மனிதனின் ஆயுட்காலம் குறைவு. “மலைகளும் மடுக்களும் கண்ணெதிரே உருவாகும் கதிமாறிய உலகில்” அவை உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் “கவிதைசொல்லியாகிய” மனிதனும் நொடியின் சிறு பகுதியில் உருவாகி மறைந்திருப்பான். எனவே, அவன் இக்கவிதையில் அவன் காணப்பட மாட்டான்.

    இரண்டு – கவிதைசொல்லி கவிதைக்கு வெளியே இருப்பானாயின் கவிதைக்காட்சியை அவன் தன் கற்பனையில் சிந்தித்திருக்கிறான் என்று கொள்ளலாமல்லவா?. வெளியே இருந்து கவிதைக்காட்சியை அவன் பார்த்து ஒரு சாட்சியாக “வேகத்தை” ரிப்போர்ட் செய்கிறான் எனில், அவன் பங்கேற்பாளனாக இருக்க முடியாது. 

    கவிதை ஒரு துணைக்கருத்தையும் நிகழ்த்திக் காட்டுகிறது. வேகமாகத் தோன்றும் மரம், மலை, மடு – கவிதையின் ஒற்றைப் படிமம் – பௌத்தத்தின் மூலக்கருத்தான – பாய்வுத்தன்மையில் மாற்றங்களின் குவியலாக இருக்கும் இப்பிரபஞ்சத்தின் தன்மையை பிரதிபலிக்கிறது.

    பங்கேற்கும் சாட்சிக்கும், காட்சிக்கு வெளியே இருக்கும் சாட்சிக்கும் இடையிலான ஒப்புநோக்கல் கவிதைக்கு புதிர்த்தன்மையை ஈந்து, தத்துவ ஆழத்தை நல்கி இக்கவிதை மீதான வாசகனின் தொடர்-ஈடுபாட்டுக்கான வாயிலாகவும் இருக்கிறது.   

  • தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – ஈரானிய நாவல் குறித்து

    தெஹ்ரானில் ஒரு உயரமான கட்டிடம். மிகவும் வேறுபட்ட சமூக நிலைமைகள், மத அல்லது மத சார்பற்ற நோக்குநிலைகள், தார்மீக அல்லது ஒழுக்கக்கேடான நடத்தைகளை பிரதிபலிக்கும் அண்டை வீட்டார். பழமைவாத குடும்பங்கள், மூர்க்கத்தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட இளைஞர்கள் (மது, போதைப்பொருள், தேவையற்ற டீனேஜ் கர்ப்பம்), தொழில்முறை குற்றவாளிகள், ஏன் ஒரு செக்ஸ் வொர்க்கர் கூட – எல்லாம் கலப்பு, எல்லாம் முரண், எல்லாம் புதிர்.

    ரேடியோவில் மதச் சொற்பொழிவு ஒலிபரப்பை கேட்டுக்கொண்டே கொடூரமான கொலையைச் செய்கிறார்கள் குற்றவாளிகள். அந்தச் சொற்பொழிவில் வரும் மேற்கோள் – “தொழுநோயாளியின் கையில் பன்றி எலும்பு” – மனித இருப்பின் பரிதாபகரமான தன்மையின் வரையறை – ஷியா இஸ்லாமின் புனித இமாம்களில் ஒருவர் தந்தது. செக்ஸ் வொர்க்கர் நம்பிக்கையின்றி காதலிக்கிறாள். படித்த தாய் மூடநம்பிக்கை மற்றும் அதிசய சிகிச்சையின் மூலம் நோய்வாய்ப்பட்ட குழந்தை நலம்பெற ஆசைப்படுகிறாள். மிதமிஞ்சிய பணம் புரளும் குற்றவுலகம், அதில் ஊழலும் கலந்துள்ளது. பின்னணியில், சத்தமில்லாத, மிகவும் மாசுபட்ட பெருநகரத்தின் இடைவிடாத ஓசை. ஈரான் அதன் அனைத்து முரண்பாடுகளிலும் சிக்கலான தன்மையிலும், அங்கு வாழ்ந்த அனைவருக்கும் சாட்சியமளிக்கிறது. எனினும், இறுதி முடிவு விரக்தி தருவதல்ல. ஆனால் மனித பலவீனங்களை இரக்கத்துடன் நோக்குவது.

    மையத்தன்மையற்ற கதை சொல்லல். ஒரு திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் போல எழுதப்பட்டுள்ள நாவல். ஒரு காட்சிப் பொருளாய் ஒரு புறநகர்ச் சமூகத்தின் சித்திரிப்பு. நூறு பக்கம் மட்டுமே. இரண்டாயிரங்களின் முக்கிய ஈரானிய எழுத்தாளராக மொஸ்தஃபா மஸ்தூரை நிலை நிறுத்திய படைப்பு.

    நிச்சயமாக ஈரான் எனும் தேசம் சாடர்கள் (Chador) /அயத்துல்லாக்கள் நிரம்பிய தேசம் மட்டுமல்ல, அதே நேரம் இளம் ட்வீட்டர்கள் மற்றும் மேற்கத்திய சார்பு மதச்சார்பின்மைவாதிகள் மட்டுமே நிரம்பிய தேசமுமல்ல.

    அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் அல்லது பத்திரிகையாளர்களை விட அதிகம் உண்மையைச் சொல்ல முனைபவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள். அவர்களைக் கேட்போம். மொஸ்தஃபா மஸ்தூர் ஈரானைப் பற்றிச் சொல்வதைக் கேட்போம்.

    தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் – மொஸ்தஃபா மஸ்தூர்
    தமிழில் – பீ எம் எம் இர்ஃபான்
    சீர்மை பதிப்பக வெளியீடு

  • ஊர்பேர்

    சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக வந்து விழுந்தன. நஜஃப்கர் தாண்டியதும் குறுகலான சந்தில் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கினோம். சற்று தூரத்தில் காரில் சிஎன்ஜி குறைவு என்பதால் அதை நிரப்புவதற்காக நின்ற போது யாரோ எனக்கு போன் செய்தார்கள். யார் போன் செய்தது? மனைவியோ குழந்தைகளோ நிச்சயமாக இல்லை. அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எண்ணுகிறேன். ஞாயிற்றுக்கிழமை அல்லவா பயணமானோம்? அலுவலகத்திலிருந்தோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அழைப்பு வந்திருக்க முடியாது. சிஎன்ஜி நிரப்பிய பின்தான் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கிக் கொண்டோமோ? ஊர் பேரை நினைவுபடுத்திக் கொள்ளச் சென்ற மனப்பயணம் வேறு சிலவற்றையும் நான் மறந்து போகிறேன் என்பதை புலப்படுத்தியது.

    எந்த ஊரை நோக்கிப் பயணம் என்பது மூலவினா. அதற்கு விடையளிக்கும் வழியில் நிறைய துணைவினாக்கள். யார் போன் செய்தார்கள்? எனக்கு ஓட்டுனர் பெயரும் ஞாபகமில்லை. காய்கறிச் சந்தை நெரிசல் முதலில் வந்ததா? சிஎன்ஜிக்காக நின்றது முதலில் வந்ததா? தெளிவு என்பது கூரான ஞாபக சக்திதான். இல்லை..அப்படியும் சொல்லிவிட முடியாது. தெளிவு என்பது தெளிவான மன நிலை. நினைவுத் துல்லியம் தெளிவின் முக்கிய அங்கம் என்று சொல்லிக் கொள்ளலாம். 

    சிஎன்ஜி ஸ்டேஷனுக்கப்பால் என் மனப்பயணம் நின்றுபோனது. எதையாவது பற்றி நிற்காவிடில் கீழே விழுந்துவிடுவோமில்லையா?  பிடி தளர்ந்து தடுமாறுகையில் ஏதாவது ஒரு நினைவைப் பிடித்துக் கொண்டால் நம் இருப்பு உறுதியாகும்.

    குர்கான் வரைபடத்தை விரித்தேன். பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன?  நஜஃப்கரை நோக்கி விரலை நகர்த்தினேன். அதைச் சுற்றி பல ஊர்கள், கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ரோகிணி, பகதூர்கர், பவானா……வெறும் பெயர்கள்…..எல்லாம் பெயர்கள்…தலையை அசைத்தேன். பெயர்கள் வைக்காவிடில் ஊர்களுக்கென தனித்த அடையாளம் ஏதேனும் இருக்குமா? வீடுகளும், வயல்களும், குளங்களும், மேடுகளும் பள்ளங்களும் – அவற்றின் எண்ணிக்கைகளும், வடிவங்களும், அமைப்புகளும் மாறுந்தன்மையை வைத்து…குழப்பமாய் இருக்கிறது…என் உடல் எங்கே? நான் இருக்கிறேனா…எனக்கு நினைவிருக்கிறது..எனவே நான் இருக்கிறேன்…எதையோ உதறுவது போல் சைகை செய்தேன்…

    “உடம்பை அசைக்காதீங்க” – எனக்கு யாரோ ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள். முக கவசம் அணிந்திருந்தனர். 

    சற்றுத் தள்ளி ஒரு பெண் சதுர கண்ணாடி பதித்த கதவினுடே நோக்குகிறாள். ஒரு வித பயத்துடன் நின்றிருந்தாள். கண்ணில் நீர் படிந்திருந்தது. மனக்காட்சி மாறிவிட்டதா? ஊர் பெயர் மறந்ததை நான் இன்னும் மறக்கவில்லை. புதுக்காட்சியிலும் பழைய காட்சியைத் தொடர விழைந்தேன். 

    என் தலையை யாரோ நேராகப் பிடித்துக் கொண்டனர். கதவு பக்கம் என் முகத்தை திருப்ப முடியவில்லை. வெண்ணிற திரையை….சுவரை வெறித்து மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதும் “என்ன பெயர் என்ன பெயர்” என்று மனதில் அசை போட்டபடியிருந்தேன். என் கால்களை யாரோ தூக்கினார்கள். எதையோ யாரோ தூக்குவது மாதிரி எடையற்று உணர்ந்தேன். 

    “நான் எந்த ஊருக்குப் போனேன். ” – என்று உரக்கக் கேட்டேன். உதடு மட்டும் அசைந்ததா எனத் தெரியவில்லை. நான் சொன்னது யார்க்கும் கேட்கவில்லை. யாரும் கேட்க பிரயாசப்பட்டதாகவும் தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கதவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது. காட்சிகள் இல்லாத புதுக்காட்சியா? இல்லை…நானே என்னை இந்த இருட்டுக்குள் என்னைத் தள்ளிக்கொண்டேனோ?

    பித்ரு கடன் செய்யும் போது ஓதும் மந்திரங்கள் எங்கிருந்தோ ஒலித்தன. என் பெயர், என் தந்தையார் பெயர், தந்தையாரின் தந்தையார் பெயர் – இவற்றைச் சொல்லி வசு, ருத்ர, ஆதித்யர்களாக உருவகிக்கும் மந்திரங்களின் உச்சரிப்பு…பெயர்கள்…பெயர்கள்…பெயர்கள்.

    நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/amp/)

  • சுட்டுணர்வு

    சில வாரங்களுக்கு முன்னர் நான் வலைப்பதிவிட்ட “தர்மகீர்த்தியின் பரிசோதனை”  கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது ; அதில் வரும் pure sensation எனும் கலைச்சொல்லை தூய உணர்ச்சி என்ற உரிச்சொல்லாக மொழி பெயர்த்திருந்தேன். தூய உணர்ச்சி என்னும் சொல் முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கட்டுரையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க சரியான நேரம் அமையவில்லை.

    நேற்று ஒரு முகநூல் உரையாடலின் போது மணிமேகலையின் 29-ம் அத்தியாயத்தில் ஒன்றைத் தேட வேண்டியிருந்தது. எதையோ தேடும் போது முன்னர் தேடிக் கிடைக்காது போன பொருள் கண்ணுக்குத் தட்டுப்படுமே அது மாதிரி கீழ்க்கண்ட வரிகள் என் பார்வையில் பட்டன.

    ஆதி சினேந்திர னளவை யிரண்டே

    ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்

    சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி

    விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்

    மற்றவை யனுமா னத்துமடை யும்மென    (29 : 47-51)

    “ஒரு பொருளின் பொருண்மை மட்டும் கண்டுணரும் உணர்வை காட்சியளவை என்று மேற்கொண்டு பிறராற் கொள்ளப்படும் பெயர், சாதி, குணம், தொழில் என்பவை கருத்தளவையிலும் அடங்கும் என அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர்”

    – ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை

    Pure sensation என்ற சொற்றொடரை சுட்டுணர்வு என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும் ; மணிமேகலை ஆசிரியர் வேறோர் இடத்திலும் சுட்டுணர்வை வரையறுத்திருக்கிறார்.

    “சுட்டுணர் வெனப்படுவது ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்” (26 : 61-62)

    சுட்டுணர்வு நிர்விகற்ப காட்சி ; நாம சாதிக் குணக்கிரியையின் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி. இவற்றை முறையே இந்திரிய ஞானம் என்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுவர். திக்நாகர் நாம சாதி முதலியவற்றை “பஞ்சவித கற்பனை” என்று குறிப்பிடுகிறார். சுட்டுணர்வென்பது சவிகற்ப காட்டிக்கு அடிப்படை ; சுட்டுணர்வு சவிகற்ப காட்சிக்கு வித்திடாவிடின் அது குறையுடையதாகும். இக்குறையை தருக்கவியல் நூலார் “பிரமாணாபாசங்கள்” எட்டனுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.

  • மாயை – ராம் சின்னப்பயல்

    நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன்.

    மாயை

    எந்த மனநிலையிலிருப்பினும்
    ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது,
    இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும்
    ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது,
    எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும்
    வெகு உயரே பறக்கும் ஒரு பறவை
    என்னை அவதானிக்கவைத்துவிடுகிறது,
    மனம் போன போக்கில்
    எங்கு சென்றாலும் எதோ ஒன்று
    என் அனுமதியின்றி நடந்து கொண்டுதானிருக்கிறது.

    இப்படியாகவே இருக்கும்
    என்னைத்தொடர்ந்தும்
    உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருப்பவனுக்கு
    ஒரு காட்சியாகவே
    எப்போதும் நான்
    இருந்துகொண்டுதானிருக்கிறேன்.

    நன்றி : வல்லினம்