Tag: கல்

  • சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி – எமிலி டிக்கின்ஸன்

    சாலையில் தனித்து அலைந்து திரியும்
    இந்தச் சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!
    தொழிற்கள் குறித்து கவலையின்றி,
    அவசரங்களைக் கண்டு பயப்படாமல் !
    அதன் தனிமப்பழுப்பு நிற உடையைத்தான்
    கடந்து செல்லும் இப்பிரபஞ்சமும் அணிந்துள்ளது.
    சூரியனைப் போல சுதந்திரமாக,
    இணைந்தோ அல்லது தனியே ஒளிர்ந்தோ,
    சாதாரண எளிமையில்
    முழுமையான ஆணையை நிறைவேற்றுகிறது


    எமிலி டிக்கின்ஸன்

  • குருதி – Naomi Shihab Nye

    Naomi Shihab Nye – எனக்கு மிகப்பிடித்தமான கவிஞராகி வருகிறார். அவர் எழுதிய Blood கவிதையை மொழிபெயர்க்க விரும்பினேன். பாலஸ்தீனிய வம்சாவளியில் வந்த அமெரிக்கர் அவர். அமெரிக்கரா அரபியா என்ற அடையாளக் குழப்பம் அவருடைய கவிதைகளில் அடிக்கடி நிகழும் கருப்பொருள். Blood கவிதையிலும் இதே குழப்பம் தொடர்ந்தாலும், என்ன அடையாளம் கொண்டிருந்தாலும் “உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்” என்ற கடைசி வரியில் அடையாளத்தை தாண்டிய மனிதத்தை நோக்கி கவிதை பயணிக்கிறது.

    குருதி

    “ஓர் அசல் அரபிக்கு கைகளினால் ஈயைப் பிடிக்கத் தெரியும்”
    என் தந்தை சொல்வார். நிரூபிக்கவும் செய்வார்,
    ஈக்கொல்லியை ஏவ நிற்கும் விருந்தோம்பியின் கை சுழலும் முன்பே
    இரைச்சலிடும் பூச்சியை நொடியில் கையில் இறுக்கிக் கொள்வார்

    பாம்புகள் போன்று வசந்தங்களில் உள்ளங்கைகள் தோலுரிக்கும்
    தர்பூசணி ஐம்பது நோய்களுக்கு தீர்வு என்று உண்மையான அராபியர் நம்புவர்
    சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு இவற்றை மாற்றிக்கொண்டேன்.

    ஒரு பெண் கதவைத் தட்டி
    அந்த அரபியைச் சந்திக்க விரும்பினாள்
    இங்கு யாருமில்லை என்று சொன்னேன்
    அதற்குப்பின், என் தந்தை தாம் யாரென எனக்குச் சொன்னார்
    “ஷிஹாப்”-”சுடும் நட்சத்திரம்”
    நல்ல பெயர், வானத்திலிருந்து பெற்றது
    ஒரு முறை சொன்னேன் – “நாமிறக்கும் போது, அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோமா?
    ஓர் அசல் அரபி அதைத்தான் சொல்வான் என்றார்.

    இன்று தலைப்புச் செய்திகள் என் குருதியை உறைய வைக்கின்றன
    ஒரு சின்ன பாலஸ்தீனியன் முகப்புப் பக்கத்தில் சரக்கு வண்டியைத் தொங்கவிடுகிறான்
    அடிவேரிலா அத்தி மரம், மோசமான வேரின் பேரழிவு எங்களுக்கு மிகப்பெரிது.
    எந்தக் கொடியை நாம் அசைப்பது?
    நீலத்தில் பின்னிய மேசைத்துணியிலான
    கல்லையும் விதையையும் சித்திரிக்கும் கொடியை அசைக்கிறோம்

    என் தந்தையை அழைக்கிறேன்,
    செய்திகளைச் சுற்றிச்சுற்றியே எம் பேச்சு,
    அவருக்கு அது மிக அதிகம்
    அவரின் இரு மொழிகளாலும் அதை அடைய முடியவில்லை
    ஆடு, மாடுகளைத் தேடி நான் வயற்புறங்களுக்குச் செல்கிறேன், காற்றோடு புலம்ப:
    யார் யாரை நாகரீகமானவர் என்றழைப்பது?
    அழும் இதயம் எங்கு சென்று மேயும்?
    உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்?

  • காபா காக்கப்பட்டது

    இது நடந்தது நபிகளார் பிறந்த ஆண்டு. பல கடவுள் வழிபாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் காபா இருந்த காலம். இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில்-லும் நிர்மாணித்த அமைப்பு – ஆதி காலத்தில் ஆதம் நபி முதன் முதலாக வழிபட்ட பிரார்த்தனைத் தலம் – பல கடவுள் வழிபாட்டில் திளைத்த குரைஷிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்திலும் அது அரேபிய நிலத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஏமன் மட்டுமல்லாது அபிசீனியா போன்ற ஆப்பிரிக்க பிரதேசங்களிலிருந்து யாத்திரிகர்கள் காபாவுக்கு வருவார்கள். காபா பிரதேச பொருளாதாரத்தின் முக்கிய அங்கம்.

    அப்போது ஏமனில் உள்ள சனாவை ஆட்சி செய்த அபீசீனியாவை பூர்வீகமாய்க் கொண்ட மன்னன் அப்ரஹாவுக்கு காபாவுக்கு இணையாக வேறொரு புனித த்தலத்தை கட்டி விட வேண்டும் என்ற எண்ணம். சினாயில் ஒரு தேவாலயத்தை அமைத்து, அதை அல்-குலைஸ் எனப் பெயரிட்டான். அரபு யாத்திரிகர்கள் மக்காவின் கஅபாவில் திரளாமல், அல்-குலைஸில் திரளச் செய்ய வேண்டும் என்று எண்ணினான். காபாவை அழித்தால் தான் இது சாத்தியம் என ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு காபாவை நோக்கிப் புறப்பட்டான்.

    காபாவின் வாயிலுக்கு சற்று தூரத்தில் நல்ல கூட்டம். குரைஷிகள் எதிர்க்கத் தயாராக நிற்கிறார்கள் என்று தோன்றியது! முத்தலீப் என்ற அவர்களின் தலைவர் அப்ரஹாவைச் சந்தித்து தமது கால்நடைகளை கூட்டிக் கொண்டு மக்காவின் மலைப்பிரதேசங்களுக்குச் சென்று விடுவதாகவும் தமது மக்கள் குழுவைத் தாக்க வேண்டமென்றும் கேட்டுக் கொண்டார். அப்ரஹாவுக்கு ஓரே சிரிப்பு! “சரியான பயந்தாங்கொள்ளிகள் இவர்கள்” என்று நினைத்துக் கொண்டான்.

    அவனிடம் மிகப் பிரம்மாண்டமான ஆப்ரிக்க யானை ஒன்று இருந்தது. அதனை அடக்கி தன் படையின் பிரதம யானையாக வைத்திருந்தான். குரைஷிகள் நகரை விட்டு விலகிச் செல்லும் முன் படைகளை அனுப்பாமல் தனது பிரதம யானையை காபாவை நோக்கி முன்னகர்த்தினான். அப்போது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. தனது கால்களை மடக்கிக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டது யானை. படை வீரர்கள் அதனை எழுப்பி ஓட வைக்க முயன்றனர். யானையோ ஏமன் போகும் திசையில் ஓடத் துவங்கியது. அதனைப் பிடித்து காபாவின் திசையில் துரத்தினாலோ அது சில அடிகள் ஓடி மறுபடியும் நின்று விட்டது. அதே சமயம் வானில் திடீரென ஆயிரக்கணக்கில் கடற் பறவைகள்! அவற்றில் அலகிலும் கால்களிலும் சிறுசிறு கற்கள்! வானிலிருந்து அப்ரஹாவின் படைகள் மீது கல் மழை! கற்களின் அளவு பச்சைப் பட்டாணியின் அளவாக இருந்தாலும் யார் மீதெல்லாம் அக்கற்கள் பட்டனவோ அவர்கள் வலியில் துடித்தனர். ஒரு சிலரின் கண்களில் கற்கள் பட்டு பார்வையிழந்தனர். அப்ரஹா திகைத்தான். “குரைஷிகள் ஓடி விட்டனர்! பறவைகளின் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை! யார் ஏவுகின்றனர் இவர்களை?” – படைகள் பயந்து போய் பின் செல்லத் தொடங்கின. அப்ரஹா அவர்களை ஓட வேண்டாமெனச் சொன்னான். அவனது வீர ர்கள் பயந்திருந்தனர். ஏமனை நோக்கித் திரும்பி ஓடினர். அவர்கள் கடந்து வந்த ஒவ்வொரு நிலத்திலும் அவர்களின் உடல் பாகங்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. அப்ரஹாவின் விரல் நுனிகள் விழத் தொடங்கின. ஒவ்வொரு விரல் நுனியும் விழுந்த பிறகு, அதைத் தொடர்ந்து சீழும் இரத்தமும் வெளியேறியது. அவர்கள் யேமனை அடைந்தபோது வெகு சிலரே எஞ்சியிருந்தனர். சில நாட்களில் அப்ரஹா இறந்து போனான்.

    பின் வந்த சில பத்தாண்டுகளில் காபாவின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கப் போகும் நபியின் பிறந்த ஆண்டில் நடந்தது இது. காபாவின் அருகில் வாழ்ந்தவர்கள் பலதெய்வவாதிகள் – சிலைகளை வணங்கியவர்கள். அப்ரஹாவினுடைய படைகளின் அழிவு என்னும் அற்புத அடையாளம் – காபாவினருகில் வாழ்ந்தவர்களுக்காக அல்ல – அதே ஆண்டில் பிறந்த நபிக்காக நடந்தது.

    “நபியே! யானை(ப் படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கிவிட்டான்.” (105:1-5)

    ரம்ஜான்போஸ்ட் – 6.3.25

  • தொழுகை விரிப்பு

    ஆகா ஷாஹித் அலி – ஆங்கிலத்தில் எழுதிய கஷ்மீரக் கவி. அரசியல் கவியாக இருந்தாலும், சமயம் மற்றும் கலாசாரக் கருப்பொருட்களில் இணக்கமாயிருந்தவர். அவரின் “தொழுகை விரிப்பு” என்னும் கவிதை மிகப்புகழ் பெற்றது. இஸ்லாமிய வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் தொழுகையைப் பற்றிய இக்கவிதையை வாசிக்கும்போது விசுவாசமும் ஆனந்தமும் நிரம்பிய மனவுணர்வுடன் தொழுகை விரிப்பில் முழங்கால்படியிட்டு இந்தக் கவிதையில் ஏறக்குறைய நாம் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ​​​​​​மதக் குறிப்புகள் மற்றும் படிமங்களைப் பயன்படுத்தி தொழுகைச் சடங்கின் வீரியம் மற்றும் முக்கியத்துவத்தின் உணர்வை கவிதையினுள் உருவாக்குகிறார் ஷாஹித். தனது பாட்டிக்கு கவிதையை அர்ப்பணிக்கும் ஷாஹித், ஹஜ்ஜின் வருடாந்திர விழாவை, மக்காவுக்கான முஸ்லீம் புனிதப் பயணத்தை, சோகம் மற்றும் சோர்வு ஆகியவற்றின் தொனிகளுடன் இணைக்கிறார்.

    சென்ற வருடம் இக்கவிதையை மொழிபெயர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சியை கைவிட வேண்டியதாயிற்று. இன்று மாலை கவிதையை மீண்டும் மொழியாக்கம் செய்ய முயன்றேன். முயற்சி எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

    தொழுகை விரிப்பு

    தினத் தொழுகைகளுக்கு நடுவே
    அந்த ஐந்து இடைவெளிகள்

    வீட்டின் பெண்கள்
    காய்கறிகளினூடே
    இழுக்கும் தடித்த இழைகள்

    குளிர்காலத்துக்கென இலையுதிர் காலத்தில் உலரும்
    இஞ்சியின் ஜெபமாலை
    சலசலக்கும் மிளகாய்கள்

    அந்த இடைவெளிகளில்
    மடிக்கப்படும் விரிப்பு –
    பாட்டி கொண்டுவந்த
    வரதட்சணையின் ஒரு பகுதி –
    ஆக, சாத்தானின் நிழல்
    புனிதம் குலைக்காமலிருக்க –
    கருஞ்சிவப்பில் நெய்த
    தங்க மினாராக்களுடன் மக்கா

    பின்னர் சூரியாஸ்தமன
    பிரார்த்தனைக்கு அழைப்பு

    வேலைக்காரர்களின் தொழுகை –
    அவிழ்க்கப்பட்ட வைக்கோல் விரிப்புகளில்
    அல்லது தோட்டத்தில்

    கோடையில் புற்களின் மீது
    பிரார்த்தனைகள் முடிய விரும்பும்
    குழந்தைகள்

    ஆபிரகாமுடைய
    தியாகத்தின் பட்டுக்கல்லை
    ஸ்பரிசித்த
    பெண்களின் நெற்றிகள்

    சுவர்க்கத்திலிருந்து இறங்கிய
    கருப்புக் கல்லைச் சுற்றி வரும்
    வெள்ளையணிந்த பக்தர்கள்

    இந்த ஆண்டு என் பாட்டி
    ஒரு யாத்ரீகர்
    மக்காவில் அவள் அழுகிறாள்

    கல்லின் திரை விலக்கப்படுகையில்
    தூண்களைப் பிடித்துக்கொண்டு
    அவள் அழுகிறாள்

    மூலத்தை வாசிக்க : https://www.poetryfoundation.org/poems/43277/prayer-rug

    Agha Shahid Ali, “Prayer Rug” from The Half-Inch Himalayas. Copyright © 1987 by Agha Shahid Ali.

    Agha Shahid Ali (1949-2001)
  • நெல் குத்தும் ஞானப்பதம்

    நண்பர் நிஷா மன்சூர் வாட்ஸப்பில் ஒரு மின்னூலைப் பகிர்ந்ந்திருந்தார். அவருடைய தந்தை வழி பூட்டனார் எழுதிய ஒரு கவிதை நூல். “நெல் குத்தும் ஞானப்பதம்” என்பது அதன் தலைப்பு. தமிழ் சிற்றிலக்கிய மரபு, தமிழர்களின் வாழ்வியல், இஸ்லாமிய மெய்ஞானம் – மூன்று அம்சங்களும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாக்களை இசைக்கத்தக்க வகையில் இயற்றியுள்ளார் இதன் ஆசிரியர். கவிதைகளின் ஆரம்பத்தில் “இராகம் செஞ்சுருட்டி தாளம் ஆதி” என்று குறிப்பிடப்படுகிறது. யாரேனும் இதை சங்கீதமாகப் பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை என்கிறார் ஆசிரியரின் கொள்ளுப் பேரன் நிஷா மன்சூர்.

    நெல்லுக்குகுத்துகிற பதத்தே நான்
    சொல்லிவாரெனந்த விதத்தை யினி
    அல்லும்பகலும் துற்குணத்தே நீக்கி
    வெல்லு அஜாசீல்மும்மலத்தே வாசி
    ஹாஹா சரம் மாத்திக்குத்தடி ஹுஹு திக்கிர்
    முழக்கிக்குத்தடி ஹீஹீ

    அல்லாஹுவென்ற ஜோதி றப்பில்
    ஆலம்மீனாம் பிரக்யாதி கல்பு
    தில்லாலும் நாவால் ஓதி ஹக்கை
    தினந்துதிப்பதே நீதி வாசி
    ஹாஹா சரம் மாத்திக்குத்தடி ஹுஹு திக்கிர்
    முழக்கிக்குத்தடி ஹீஹீ

    நூலின் முகவுரையில் இக்கவிதைகள் எழுதப்பட்டதன் பின்னணி விளக்கப்ப்டுகிறது.

    “வேலைக்காரப் பெண்கள் உஸ் உஸ் என்ற பெருமூச்சுடன் உலக்கை மாரி மாரி நெல் குத்துவதைக் கண்ணுற்ற உ.அஸன் முகமது றாவுத்தர் இவ்வளவு மூச்சு வீணில் போகிறபடியால் என்ன விதமான வேலைகள் செய்யும் போது மூச்சிலும் ஆண்டவனை திக்கீர் செய்வதெப்படி என்று கேட்டதற்காக அந்த நிமிஷமே பாடலாகக் கோர்வை செய்ப்பட்டது.”

    நான் அடிக்கடி செல்லும் ஷிர்டியில் த்வாரகா மாய்-யில் காணப்படும் அரைகல்லை நினைவு கூர்ந்தேன். ஷிர்டி நாதரின் வாழ்வில் நிகழ்ந்த அந்த அரை கல் சம்பந்தப்பட்ட அற்புதங்களின் பின்னணியில் இருக்கும் மறைஞானமும் நெல் குத்தும் ஞானப்பதம் கூறும் ஞானமும் ஒரே அடிப்படையிலிருந்து எழுவது என்று யோசிக்கலானேன்!

    1930களில் ராமநாதபுரத்தில் பதிப்பிக்கப்பட்ட இச்சிறு நூல் ஏறத்தாழ நாற்பது அடிகளைக் கொண்டுள்ளது. இதுபோல பத்து மடங்கு படைப்புகளை நண்பரின் பூட்டனார் – ஹக்கீம் பீ அய்யூபு சாஹிப் அவர்கள் – எழுதியுள்ளாரெனத் தெரிகிறது. அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு முழு நூலாகக் கொண்டுவரும் திட்டம் உள்ளதாகச் சொல்லுகிறார் நிஷா. நூலாகக் கொண்டுவருமுன் கர்நாடக இசையில் ஒரு இசைத்தட்டு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுங்கள் என்று நான் சொன்னேன்.

  • ஆபுத்திரன் – 1

    வாரணாசி வாழ் அந்தணன் ஒருவனின் ஒழுக்கங் கெட்ட மனைவி சூல் கொண்டு பிழைக்கு பயந்து தென் திசை குமரி நோக்கிப் பயணமானாள். வழியில் மகவொன்றை ஈன்று இரக்கமின்றி பெற்ற இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றாள். அழுத குழந்தைக்கு பசுவொன்று ஏழு நாட்கள் வரை பால் சொறிந்து காத்தது. பூதி என்னும் பார்ப்பனன் ஒருவன் குழந்தையை கண்டெடுத்து வீட்டுக் எடுத்துச் சென்றான். குழந்தைப் பேறிலாத பூதி தம்பதியர் அளவிலா உவகை கொண்டனர். குழந்தைக்கு ஆபூத்திரன் என்று பெயரிடப்பட்டது. பூதியின் வீட்டில் வளர்ந்த ஆபுத்திரன் மறைகள் கற்று அந்தணர்க்கு பொருந்துவன அனைத்தும் கற்று தேர்ந்தான்.

    ஒரு நாள் ஒரு மறையவன் வீட்டினுள் சென்றவன் ஊனுண்ணுதலைக் கருதுகின்ற வேள்விச்சாலையில் பசுவின் கொம்பின் கண் சுற்றப்பட்டு மூச்செறிந்துகொண்டிருந்ததைப் பார்க்க நேரிடுகிறது. பசு படும் துயரைப் பார்க்க அவனால் முடியவில்லை. இரவு வரும் வரை காத்திருந்து பிறகு திருட்டுத் தனமாக வேள்விச்சாலைக்குள் நுழைந்து பசுவை விடுவிக்கையில் அவன் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுகிறான். பசுவை அவன் திருட விழைந்தானென்றெண்ணி ஜனங்கள் அவனை நையப்புடைத்துவிடுகின்றனர். அவன் எவ்வளவு அரற்றியும் அவன் சொன்னதை கேட்டார்களில்லை.

    இதற்கு நடுவில் ஆபுத்திரன் விடுவித்த பசுவானது அங்கு நின்றிருந்த பார்ப்பனத்தி ஒருத்தியை முட்டி மோதி தாக்கி, பின்னர் காடு நோக்கி விரைந்தோடியது.

    ஆபுத்திரன் அங்கு நின்றிருப்போரிடம் கூறலானான் :

    “நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்

    விடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்

    பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்

    அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்

    இதனோடு வந்த செற்றம் என்னை”        (13 : 50-55)

    ஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் “நீ வேத விதியை அறியாமல் வேள்வியை இகழ்கின்றாய் ; எனவே பசுவின் மகனாக இருப்பதற்கு நீ பொருத்தமானவனே” என்று இகழ்ந்துரைக்கிறார்கள். மனம் தளராமல் ஆபுத்திரன் மேலும் உரைக்கிறான் :

    “ஆன்மகன் அசலன்; மான்மகன் சிருங்கி

    புலிமகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்

    நரிமகன் அல்லனோ கேச கம்பளன்?

    ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று

    ஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால்

    ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?”   (13 : 63-68)

    நின்றிருந்த சனங்கள் ஆபுத்திரன் சொல்வதை பொருட்படுத்தாமல் இகழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள். அம்மறையவர்களுள் ஒருவன் “இவனின் குடிப்பிறப்பை நானறிவேன்” என்று ஆபுத்திரனின் கதையை எடுத்துரைக்கிறான். அவன் குமரிக்கரைக்கு சென்ற போது அங்கு சந்தித்த சாலி என்ற பெண்ணைப் பற்றி சொல்லலானான்.

    சாலி வாரணாசியில் தன் கணவனுடன் வாழ்ந்து வந்தாள். அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தாள். அச்சமுடைமையால் கெடுதலுற்ற மக்களுடன் தென் திசைக் குமரியில் நீராடும் பொருட்டு பயணமானாள். பொன் தேரினை உடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஆயர்களுடைய இருப்பிடத்தில் ஈன்ற சிறு குழவிக்கு இரங்காமல் கண் காணாத தோட்டத்தில் போட்டு விட்டு வந்ததாக தன் கதையை சாலி சொன்னதாக அவ்வந்தணன் சொன்னான். “இவ்வித தீவினை புரிந்த எனக்கு மோட்சமுண்டா?” என்று துன்பமுற்று அழுத சாலியின் மகன் தான் ஆபுத்திரன் என்றும் அவன் தீண்டத் தகாதவன் என்றும் அறிவித்தான்.

    ஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் பெரிதாகச் சிரித்தான். “பெரிய மறையுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைச் சொல்கிறேன். கேளுங்கள். பழமறை முதல்வனான பிரமனுக்கு தெய்வக் கணிகையாகிய திலோத்தமையினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ அரிய மறை முனிவர்களாகிய அந்தணர் இருவரும் (வசிட்டன் மற்றும் அகத்தியன்). இது இங்ஙனமிருக்க சாலி செய்தது எங்ஙனம் தவறாகும்?” என்று நான்மறை அந்தணரைப் பார்த்து மேலும் சிரிக்கலானான்.

    தந்தையாகிய பூதியும் ஆபுத்திரனை தன் வீட்டிலிருந்து நீக்கினான். பசுவைக் கவர்ந்த திருடன் எனும் பட்டம் அவனுக்கு முன்னால் அவன் செல்லும் கிராமத்தில் எல்லாம் பரவியிருந்தது. அவன் நீட்டிய பிச்சைப் பாத்திரத்தில் கற்களே விழுந்தன. பெருஞ் செல்வர் வாழும், தெற்கின் கண் இருக்கும் மதுரையைச் சென்றடைந்தான். சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள அம்பலப் பீடிகையில் தங்கியிருந்தான்.

    மதுரை மாநகரில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, வீதிகளெல்லாம் அலைந்து, பணக்காரர்களின் மாடங்களெல்லாம் திரிந்து, கண் பார்வையற்றோர், காது கேளாதோர், முடவர், பாதுகாப்பற்றோர், நோயால் துன்புறுவோர் ஆகிய அனைவரையும் அழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, பின் மிஞ்சியதை தான் உண்டும், பிச்சைப் பாத்திரத்தையே தலையணையாக வைத்து உறங்கியும் வாழ்ந்து வந்தான் ஆபுத்திரன்.

     

    (ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை)

     

    உரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை

     

  • ஒரு கை

    zen2-03
    “நான் எண்ணற்ற பௌத்தர்களுக்கும் ஏழை-எளியவர்களுக்கும் தான தர்மங்கள் செய்கிறேன் ; பல புத்த கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கிறேன். இத்தகைய செயல்கள் எனக்கு என்ன மாதிரியான நல்-விளைவுகளைத் தரும்?” என்று அரசன் கேட்டபோது தயக்கமோ, முதன்முதலாக தென் – சீனாவின் பேரரசனைச் சந்திக்கிறோம் என்ற வியப்புணர்வோ இல்லாமல் அந்த அயல் நாட்டு பௌத்தர் மறுப்பது போல் தலையசைத்து, “ஒரு விளைவும் தராது”என்றார்.

    அரசன் நெற்றி சுருக்கினான்; பிறகு சுதாரித்துக் கொண்டு, வினவினான். “புத்தர் இருக்கிறாரா? அவரைக் காணுதல் சாத்தியமா?”

    இம்முறை போதி தர்மர் பதிலளிக்கச் சில வினாடிகள் எடுத்துக் கொண்டார்,. “இல்லை”

    போதி தர்மரின் பதில்கள் அரசனுக்குச் சினமளித்தன. “. என் முன் நில்லாதீர். இங்கிருந்து எங்காவது சென்று விடுங்கள்”என்று அவன் ஆணையிட்டதும். போதி தர்மர் புன்னகைத்தார். அவர் உதடுகள் திறந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றமுமில்லாமல் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் விழிகள் சபையோருக்கு உணர்த்தின.

    சில வினாடிகளில் அவர் அவையை விட்டு நீங்கினார். அவையில் மௌனம் வெகு நேரம் நீடித்தது. அரசனின் கேள்விகளுக்குப் பின்னர் தொக்கி நின்ற குணங்களைப் புரிந்து சுருக்கமான பதில் தந்து போதி தர்மர் காத்த மௌனத்திற்கும், சபையோரின் மௌனத்திற்கும் புரியாததொரு பொதுத்தொடர்பு இருந்தது போன்று தோன்றியது. சபை வேறொரு அலுவல் எதுவுமின்றி அன்று கலைந்தது.

    பேரரசன் வூ-வுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. அந்தப்புர நங்கையரிடமும் அவன் செல்லவில்லை. அவையை விட்டு நீங்கும்முன் போதி தர்மர் பார்த்த பார்வை அரசனுக்குள் ஒரு வித அவஸ்தையை ஏற்படுத்தியிருந்தது. அவர் நீங்கிய பிறகு சபையோரின் கண்கள் வெட்கமுற்று அரசனின் பார்வையைத் தவிர்த்தது மாதிரி தோன்றியது பிரமையா அல்லது உண்மையா?

    மந்திரிகளிடமோ அதிகாரிகளிடமோ யாரிடமும் அன்று சபையில் நடந்தவற்றைப் பற்றி அவனால் பேச முடியவில்லை. அப்படி பேசினால், அவர்கள் இவனை ஏளனமாகப் பார்த்து சிரிப்பார்களோ? சிரிக்கமாட்டார்கள். பேரரசன் முன் தைரியத்துடன் எதிர் வார்த்தை பேச அவர்கள் எல்லாம் என்ன போதி தர்மர்களா!

    கோபமாக போதி தர்மரை விரட்டியடித்து விட்டாலும்வூ-வுக்கு போதி தர்மர் மேல் உள்ளுர கோபம் வரவில்லை என்பதுதான் உண்மை. சாதாரண குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளித்து பல மணி நேரங்கள் ஆனபின்னர், குற்றவாளிகள் மேல் எழுந்த அடக்கவொண்ணா சினம் காரணமாக தான் முன்னர் அளித்த தண்டனையை மரண தண்டனையாக மாற்றச் சொல்லியிருக்கிறான். இம்முறையோ அந்த பௌத்தரை துரத்தி அனுப்பியிருக்காமல் இருந்திருக்கலாமோ என்ற சிந்தனை ஏற்பட்டு வூ-வுக்கு குற்றவுணர்ச்சி அதிகரித்தது.

    அடுத்த நாள், நான் – ஜின்-னுக்குக் கிளம்ப வேண்டும். அவனுடைய முன்னாள் தளபதியும் இந்நாள் பௌத்த துறவியுமான ஷென் – குவாங்-கை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

    நான் – ஜின் நகர மத்தியில் இருந்த பூங்காவொன்றில் மக்கள் திரளாகக். கூடியிருந்தனர். பல போர்களில் தலைமையேற்று வெற்றி கண்டு பேரரசின் எல்லைகளை விஸ்தரித்த ஷென் – குவாங் சில வருடங்களுக்கு முன் பௌத்த சமயத்தை தழுவி துறவு ஏற்றிருந்தார். நாடெங்கும் சுற்றி மக்களுக்கு பௌத்த சமயம் பற்றியும் சீன சாம்ராச்சியத்தின் பழம்பெருமைகள் பற்றியும் உரைகள் நிகழ்த்தி வந்தார் அவர். அன்றும் நல்ல கூட்டம் ; குறிப்பாக, இளைஞர் கூட்டம் அலை மோதியது.

    பேரரசர் வூ-வின் சபையிலிருந்து துரத்தி விரட்டப்பட்ட போதி தர்மர் கூட்டத்தின் முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அங்கு இருந்த மக்கள் திரளில் போதி தர்மரை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. கருத்த தோல், சுருங்கிய கன்னங்கள், நல்ல உயரம், தீர்க்கமான பெரிய கண்கள்

    வழக்கம் போல தேச பக்தி பாடலை பாடி தன் உரையைத் தொடங்கினார் ஷென் – குவாங். கூட்டத்தில் சலசலப்பு. துறவிகளுக்கான அங்கி அணிந்திருந்த ஷென் – குவாங் இரு கைகளால் சைகைகள் புரிந்தவாறு பேசினார். சாக்கிய முனியின் அரச குடிப்பிறப்பு பற்றியும் சிறு வயதில் அவருக்குப் பயில்விக்கப்பட்ட வீரக்கலைகள் பற்றியும் அவர் பேசியபோது, சீன மக்களும் அத்தகைய கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று சொன்னார். அவர் பேச்சு ஒரு மணி நேரம் தொடர்ந்தது.

    ஷென் – குவாங்-கின் உரையை கவனத்துடன் கேட்ட போதிதர்மர் உரை முடிந்தவுடன் அங்கிருந்து நகர்கையில் ஷென் – குவாங்-கின் உதவியாளர் ஒருவர் அவரை அணுகினார் ; ஷென் – குவாங் அழைத்து வரச் சொன்னதாக சொன்னார், தலையை ஆட்டி “ஹ்ம்ம்- செல்லலாம்”என்று பதிலளித்த போதிதர்மர் ஷென் – குவாங்-கிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.

    “எங்கிருந்து வருகிறீர்கள்?” – கம்பீரமான குரலில் முன்னாள் தளபதி வினவினார்.

    தலையை சற்றுச் குனிந்தவாறே மெலிந்த குரலில் பதில் சொன்னார் போதி தர்மர்.

    “ஹ்ம்ம் வெகு தொலைவிலிருந்து வருகிறீர்கள்”

    போதி தர்மர் ஷென் – குவாங்கின் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தார்.

    “நான் பேசும்போது உங்களைப் பார்த்தேன். நான் சொல்லிய சில வார்த்தைகளை ஆமோதிப்பது போல தலையசைத்தீர்கள் ; பல சமயம் மறுப்பது போன்று உங்கள் தலையை பலமாக ஆட்டினீர்…அதற்கு என்ன அர்த்தம்?”

    “எப்போதெல்லாம் உங்கள் கருத்து சரியென்று எனக்குப் பட்டதோ அப்போதெல்லாம் ஆமோதித்தேன்; சரியென்று படாதபோது மறுத்தேன்”

    ஷென் – குவாங் போதி தர்மரை எரித்து விடுவது போன்று பார்த்தார்.

    “நான் யாரென்று உமக்கு தெரியாது…சீனப் போர்படை தளபதியாக இருந்தவன். என் பேச்சைக் கேட்பவர்கள் படையில் இன்னும் இருக்கிறார்கள்”என்று சொல்லி நிறுத்தினார்.

    போதிதர்மர் ஒரு சலனமும் இல்லாமல் புன்னகைத்தார். வெண் பற்கள் ஒளிர்ந்தன. அவர் சிரிக்கும்போது அவருடைய கண்களும் சேர்ந்து சிரித்தன.

    ஷென் – குவாங் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரைவிட்டுத் திரும்பி, அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். உதவியாட்கள் ஷென் – குவாங்கின் கட்டளைக்காக காத்திருந்தனர். ஷென் – குவாங்கின் கண்கள் கோபத்துடன் காணப்பட்டாலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை ; மௌனமாயிருந்தார். போதி தர்மர் அவர் பார்வையிலிருந்து விலகும்வரை வாயிலையே நோக்கிக் கொண்டிருந்தார்.

    பேரரசர் வூ இரண்டு நாட்கள் கழித்து நான் – ஜிங் வந்து பால்ய சினேகிதரைச் சந்தித்தார். இருவருமே போதிதர்மர் பற்றிய தத்தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இருவராலும் நீலக் கண் கொண்ட புத்தபிக்‌ஷுவை தம் நினைவுகளிலிருந்து அகற்ற இயலவில்லை.

    போதி தர்மர் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு சிஷ்யர்களோ புரவலர்களோ யாரும் இல்லை. வூ-வின் ஒற்றர்கள் போதி தர்மரை தேடிய வண்ணம் இருந்தார்கள். ஷென் – குவாங்கின் சீடர்கள் சீனாவின் பல்வேறு புத்த விகாரங்களிலும் அயல்-நாட்டு பௌத்தரைத் தேடினர். ஒரு கட்டத்தில் அந்த சன்னியாசி சீனாவை விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

    ஆண்டுகள் பல சென்றன. வெய் பேரரசனின் ஆளுகைக்குட்பட்ட வட-சீனத்தின் வட எல்லையில் இருந்த மலைக்குகையொன்றில் ஒரு துறவி கண்களைத் திறந்தவாறே குகையின் சுவற்றைப் பார்த்துக் கொண்டு பல வருடங்களாக அமர்ந்திருக்கிறார் என்ற செய்தி ஷென் – குவாங்-கை எட்டியது. அது பல வருடங்களுக்கு முன் அவர் சந்தித்த “நீலக் கண் காட்டுமிராண்டியாக இருக்கலாம் என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. கிடைத்த செய்திகளின்படி சுவர் நோக்கி அமர்ந்திருந்த துறவியின் அங்க அடையாளங்கள் நான் – ஜிங்கில் சந்தித்த இந்தியத் துறவியின் அங்க அடையாளங்களுடன் ஒத்துப் போயின.

    பகை ராச்சியத்துக்குள் வூ-வால் நுழைய முடியாது. மாறுவேடம் அணிந்து வட-சீனாவுக்குள் நுழையும் திட்டத்தை வூ பிரஸ்தாபித்தபோது ஒற்றர் படை அதனை நிராகரித்துவிட்டது. ஷென் – குவாங் இப்போது நாடறிந்த பௌத்த துறவி. எனவே அவர் வட-சீனாவில் நுழைவதில் பிரச்னை இருக்காது. ஷென் –குவாங் தானே சென்று காட்டுமிராண்டி பௌத்தனை தென் – சீனாவுக்கு அழைத்து வருவதாக உறுதியளித்தார்.

    வட-சீனாவின் வட எல்லை மலைக் குகையை அடைய பல மாதங்கள் பிடித்தன. ஷென் – குவாங்-குடன் வந்த உதவியாளர்கள் எல்லாம் வழியிலேயே இறந்து போயினர். மலையடிவாரத்தை அடைந்தபோது அவர் குழுவில் ஷென் – குவாங் மட்டுமே மிஞ்சியிருந்தார்.

    ஆயிரம் ஆடிகள் மலையில் ஏறி குகையை கண்டு பிடித்தார் ஷென் – குவாங் . சுவற்றைப் பார்த்தபடி கண்களை திறந்திருக்க போதி தர்மர் உட்கார்ந்திருந்தார். ஜடாமுடியாக அவரின் கேசம் நீண்டு, முடிச்சிட்டு வளர்ந்திருந்தது. புதராக முகமெல்லாம் தாடி. கண்கள் இமைக்காமல் சுவரை வெறித்து நோக்கியபடி இருந்தன. புருவங்கள் இல்லாமல் பிறந்தவரோ என்ற கேள்வி ஷென் – குவாங்கின் உள்ளத்தில் பூத்தது. நான் – ஜிங்கில் பாரத்தபோது போதிதர்மருக்கு புருவம் இருந்ததே!

    ஷென் – குவாங் “காட்டு-மிராண்டி”என்று உரக்க அழைத்தார். அதட்டினார். தோளைத் தட்டி கூப்பிட்டார். போதி தர்மரிடமிருந்து ஒரு மறுமொழியும் இல்லை. அவரின் சுவாசம் ஓருவித தாளலயத்துடன் குகையெங்கும் எதிரொலித்தது.

    அன்றிரவே ஷென் – குவாங்-குக்கு கடும் குளிர்க் காய்ச்சல் பீடித்தது. கிராமத்துக்காரர்கள் ஷென் – குவாங்கிற்கு உணவும் மருந்தும் எடுத்து வந்தார்கள். சில நாட்களில் அவர் குணமானார். கிராம மக்கள் வருவதோ, தீபமேற்றிச் செல்வதோ, ஷென் – குவாங் அதே குகையில் தன்னுடன் இருந்து உணவு உண்பதோ, குகையை வளைய வருவதோ போதி தர்மருக்கு ஓர் இடையூறும் தரவில்லை. சுவரோடு சுவராக உயிரற்ற சிலை போல் அமர்ந்திருந்தார். விளக்கேற்றப்படாத நாட்களில்கூட அக்குகை ஒளியுடன் திகழ்வதாக ஷென் – குவாங்குக்குத் தோன்றியது.

    மாதங்கள் பல சென்றன. ஷென் – குவாங்-கின் விண்ணப்பங்கள், அழைப்புகள், கூவல்கள் எதுவும் போதி தர்மர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

    குளிர் காலத்தில் ஒரு நாள் குகை வாசலை பனி மூடியது. அச்சிறு குகையில் போதி தர்மரும், ஷென் – குவாங்கும் மட்டும் இருந்தனர். ஷென் – குவாங்கிற்கு உணவு கொடுக்க கிராமத்தார் யாரும் பல வாரங்களாக வரவில்லை. பசி மீறி மயக்க நிலையில் ஷென் – குவாங் தரையில் விழுந்தார். சுவர் முன் ஒரு கல் போல உட்கார்ந்திருந்த போதி தர்மரை காண முடியாமல் போனது ; அவரது கண்கள் மூடியே கிடந்தன. மிகப் பிரயத்தனப்பட்டு சுவர்ப் பக்கம் ஒரு முறை நோக்கினார். போதி தர்மரைச் சுற்றி ஒளி வட்டம் பிரகாசமாய்ச் சூழ்ந்திருப்பது போல அரை மயக்கத்திலிருந்த ஷென் – குவாங்குக்கு தோன்றியது. மனதுள் அழுகை பீறிட்டு எழுந்தது. கண்ணீர்த் துளியும் தோன்றாத அளவுக்கு அவர் உடல் வலுவிழந்திருந்தது.

    வலது கைக்கு தரையில் ஏதோ தட்டுப்பட்டது. ஒரு முனை கூர்மையாக இருந்த கனமாக கல். உணர்ச்சி அலை மோத, கொஞ்சநஞ்ச சக்தியை ஒன்று திரட்டி. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, அக்கல்லால் தன் இடது கையை பலமுறை குத்திக் கொண்டார் ;. ரத்தம் பெருகி வழிந்தது. முட்டிக்குக் கீழ் தன் இடது கையை பெயர்த்தெடுத்தார். வலது கையால் அதை போதி தர்மர் முன் வீசியெறிந்தார். சுவற்றுக்கும் போதிதர்மருக்கும் இடையில் இருந்த இடைவெளியில் ஷென் – குவாங்கின் இடக்கை விழுந்தது.

    போதி தர்மரின் தலை ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அன்று அசைந்தது. ஷென் – குவாங் தரையில் குற்றுயிராகக் கிடந்தார்.

    ஷென் – குவாங்கை தன் மடியில் கிடத்தி வெட்டப்பட்ட இடக்கையின் நீள் வெட்டு தோற்றத்தை போதிதர்மர் சோதித்துக் கொண்டிருந்தபோது குகைவாயிலின் பனிக் கதவை உடைத்துக் கொண்டு கிராமத்தினர் குகைக்குள் நுழைந்தனர்.

    Bodhidharma_and_Huike-Sesshu_Toyo

    984072310_Hpu6F-S-1

    நன்றி : பதாகை (http://padhaakai.com/2014/03/23/bodhi-dharma/)

  • குளத்தில் கல்

    குளத்திலே கல்லை விட்டெறியும்போது கல் திரும்ப பறந்து வந்து நம் தலையில் விழுமெனில், கல்லெறியும் விளையாட்டு நின்று போகும். பலன் என்னவாக இருக்கும் என்ற யூகம் இல்லாமல் நாம் வினையொன்றும் புரிவதில்லை. பலன் காலம் என்ற காரணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் கால இடைவெளியை நிர்ணயிக்கின்றன. சூழ்நிலை நிர்ப்பந்தத்தாலொ, தெளிவு பெறாத மனோநிலையிலோ,வினையை தெரிவு செய்வதில் ஏற்படும் குழப்பத்தாலோ எதிர்பாராத பலனை அடைகிறோம். பின்னர் அதிர்ஷ்டம்  மற்றும் துரதிர்ஷ்டம் என்ற வாதங்களுக்கும் கருததுக்களுக்கும் இடம் கொடுக்கிறோம். வினைக்கும் பலனுக்கும் இடையே இருக்கும் கால இடைவெளி எளிதில் அறியாமையை உண்டு பண்ணும் வல்லமை வாய்ந்தது. சரியான அளவில் பொறுமை குணம் இல்லாதவர்கள் எண்ணவோட்ட நரகத்தில் சிக்கிச் சூழலும் அபாயம் இருக்கிறது.