Tag: கனி

  • வேகத்தின் சாட்சி – உள்ளே வெளியே

    கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின் அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை – புத்தகம் என்னை ஈர்த்தது. ஆன்மீகத் தத்துவ தொனி தூவிய அவரது “சுற்றுவழிப்பாதை” நாவலை இதற்கு முன்னர் வாசித்துள்ளேன். அனேகமாக அவரது கவிதைத் தொகுப்பில் நிறைய ஆன்மீக கருப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகள் இருக்கும் என்பது ஊகம் (எதிர்பார்ப்பும் கூட, இப்போது வரும் கவிதைத் தொகுதிகளில் ஆன்மீக கருப்பொருள் அதிகம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்பது ஒரு குறை!).

    350 பக்கங்கள் கொண்ட நூலில் ஏராளமான கவிதைகள். புத்தகம் வந்தடைந்ததும் இயைபின்றி ஒரு கவிதையை எடுத்து வாசித்தேன்.

    வேகம்

    பூமியைப் பிளந்து

    வெடித்துச் சிதறி

    வான் நோக்கிப் பாய்கிறது

    தென்னை மரம்

    உச்சியில் நாற்புறமும்

    மட்டையும் ஓலையுமாய்

    பீய்ச்சி அடிக்கிறது

    சொட்டுச்சொட்டாய்

    துளிர்த்து உடன்

    வளர்கின்றன 

    தேங்காய்க் குலைகள்

    மலைகளும் மடுக்களும்

    கண்ணெதிரெ உருவாகும்

    கதி மாறிய உலகில்

    உள்ளே சுற்றுமுற்றும்

    பார்த்து வியந்து நிற்கிறேன்

    என்னை மட்டும்

    காணவில்லை

    (“ வானம் கீழிறங்கும்போது”, காலச்சுவடு பதிப்பகம், ஆசிரியர்: ஆனந்த்)

    ஆறு நாட்களில் இறைவன் பிரபஞ்சத்தை உண்டு பண்ணின விவிலியத் தொன்மத்தில் எல்லாம் வேகவேகமாக உருவாக்கப்பட்டிருக்கும். பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் மரங்கள் நிமிஷக்கணக்கில் வளர்ந்து மலர் பூத்து கனி விளைக்கும் மரஙளின் காட்சியை மானிடன் ஒருவன் பார்த்திருப்பானே ஆயின் அவன் வியந்திருப்பானா? மனிதனும் பிரபஞ்சத்தின் பங்கேற்பாளர்களில் ஒருவனாக மட்டும் படைக்கப்பட்டிருப்பானெனில், வியப்புணர்வுக்கு இடம் இருந்திருக்காது. வியப்புணர்வுக்கு இடம் இருந்ததெனில் பிரபஞ்சத்தின் பார்வையாளனாக, உற்று நோக்குபவனாக அவனுக்கொரு பாத்திரம் தரப்பட்டிருப்பதாகக் கருதலாம். பிரபஞ்சமும் மனிதனும் ஒரே நேரத்தில் உருவாயினரா என்பது வேறு கேள்வி. பரிணாமவியலும் சமயத் தொன்மங்களும் இக்கேள்விக்கு வெவ்வேறு விதங்களில் விடையளிக்கும்.

    விடுவிடென்று நிமிடங்களில் வளர்ந்து கனி குலைக்கும் மரம் – ஸ்ராவஸ்தியில் புத்தர் செய்த அற்புதங்களில் ஒன்று – இது போன்ற ஒரு தென்னை மரம் “வேகம்” கவிதையில் வருகிறது. கவிதைசொல்லி வேகவேகமாக வளரும் தென்னை மரத்தைப் பார்ப்பதாகச் சொல்கிறான். கவிதைக்காட்சிக்குள் பங்கேற்பவனாக கவிதைசொல்லியைப் பார்த்தால் அவன் ஒரு சாட்சி. கவிதைக்காட்சிக்கு வெளியே நின்று அந்தக் காட்சியை வெறும் விவரிப்பவனாக கவிதைசொல்லி இருந்தால் கவிதைக்காட்சிக்குள் அவன் இருக்க மாட்டான். கவிதைக்காட்சியைத் தன் மனதுக்குள் சிருஷ்டித்து அதை அவன் தெரியப்படுத்தும் போது அந்தக் கவிதைக்காட்சி அவனுக்குள்ளேயே இருக்கிறது.

    பங்கேற்பவன் எப்படி சாட்சியாக முடியும்? சாட்சி என்பது உணர்வு நிலை. “நான் இக்காட்சியில், நிகழ்வில் பங்கு பெறுகிறேன்” என்று சொல்லிக் கொள்வது உணர்வு நிலையிலிருந்து எழுவது. பங்கேற்கும் காட்சியில் இருந்துகொண்டே சாட்சியாக இருக்கும் வசதியை நம் உணர்வு நிலை நமக்குத் தருகிறது.

    கவிதையின் தலைப்பு “வேகம்”. வேகம் என்பது காலத்தோடு தொடர்புள்ளது. குறைந்த காலத்தில் அதிக இயக்கம் நிகழ்ந்தால் அதிக வேகம். காலம் என்ற ஒன்று பிரபஞ்ச வடிவம் நம் மேல் நிகழ்த்தும் நையாண்டியாக இருக்கலாம் என்று நியூட்டனிய இயற்பியலுக்குப் பின் வந்த இயற்பியல் முன்னேற்றங்களிலிருந்து நாம் அனுமானித்துவிடலாம். நேரம் முழுமையானது அல்ல, அது ஒரு சார்பியல் கோட்பாடு. வெவ்வேறு பார்வையாளர்களுக்கு அவர்களின் ஒப்பீட்டு இயக்கத்தைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது.

    கவிதையின் இறுதியில் வியப்பின் உச்சியில் அங்கு தான் இல்லை என்று கவிதை சொல்லி அறிவிக்கும் போது அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

    ஒன்று – ஒரு மரம் வளர்ந்து காய்கனிகள் விளைக்கும் காலத்தை விட மலைகளும் மடுவும் தோன்ற அதிக காலம் பிடித்திருக்கும் என்று தர்க்க ரீதியாக அனுமானிக்க முடியும். மனிதன் வளரும் வேகம் அவன் ஆயுட்காலம். ஒரு மரமோ, மடுவோ, மலையோ வாழும் காலத்துடன் ஒப்பு நோக்கினால் மனிதனின் ஆயுட்காலம் குறைவு. “மலைகளும் மடுக்களும் கண்ணெதிரே உருவாகும் கதிமாறிய உலகில்” அவை உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் “கவிதைசொல்லியாகிய” மனிதனும் நொடியின் சிறு பகுதியில் உருவாகி மறைந்திருப்பான். எனவே, அவன் இக்கவிதையில் அவன் காணப்பட மாட்டான்.

    இரண்டு – கவிதைசொல்லி கவிதைக்கு வெளியே இருப்பானாயின் கவிதைக்காட்சியை அவன் தன் கற்பனையில் சிந்தித்திருக்கிறான் என்று கொள்ளலாமல்லவா?. வெளியே இருந்து கவிதைக்காட்சியை அவன் பார்த்து ஒரு சாட்சியாக “வேகத்தை” ரிப்போர்ட் செய்கிறான் எனில், அவன் பங்கேற்பாளனாக இருக்க முடியாது. 

    கவிதை ஒரு துணைக்கருத்தையும் நிகழ்த்திக் காட்டுகிறது. வேகமாகத் தோன்றும் மரம், மலை, மடு – கவிதையின் ஒற்றைப் படிமம் – பௌத்தத்தின் மூலக்கருத்தான – பாய்வுத்தன்மையில் மாற்றங்களின் குவியலாக இருக்கும் இப்பிரபஞ்சத்தின் தன்மையை பிரதிபலிக்கிறது.

    பங்கேற்கும் சாட்சிக்கும், காட்சிக்கு வெளியே இருக்கும் சாட்சிக்கும் இடையிலான ஒப்புநோக்கல் கவிதைக்கு புதிர்த்தன்மையை ஈந்து, தத்துவ ஆழத்தை நல்கி இக்கவிதை மீதான வாசகனின் தொடர்-ஈடுபாட்டுக்கான வாயிலாகவும் இருக்கிறது.   

  • ஷிண்டோ

    சோகம் நம்மை
    ஆட்கொள்ளுகையில்
    நினைவுகளின், கவனத்தின்
    சின்ன சாகசங்களால்
    நாம் சில கணங்கட்கு
    காக்கப்படுகிறோம்:
    கனியின் சுவை, நீரின் சுவை
    கனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,
    நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,
    திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,
    தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,
    லத்தின மொழிப் பாவகையின் சீர்,
    வீட்டைத் திறக்கும் சிறு சாவி,
    சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,
    ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,
    வரைபடத்தின் நிறங்கள்,
    சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,
    மெருகேற்றிய நகம்,
    நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,
    பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,
    நாம் எதிர்பார்க்காத உடல்வலி.
    எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்
    நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றன
    பணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றன
    தொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.

    - போர்ஹேஸ்

    (Translated from the English translation by Paul Weinfield)

  • தீவிர வேட்கை

    follow-me-buddha-paintings
    அக்கரையின்றி திரிபவனின் வேட்கை
    படரும் கொடி போல வளரும் ;
    வனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல்
    அவன் அங்கும் இங்குமாக
    அலைந்து திரிவான்.

    பிசுபிசுப்பு மிக்க
    அருவெறுப்பான தீவிர நாட்டம்
    உன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது
    கடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய்
    உன் துயரங்கள் வளரத் தொடங்கும்

    மாறாக, இவ்வுலகத்திலேயே,
    அருவெறுப்பான தீவிர வேட்கையிலிருந்து
    நீ விடுபடுவாயானால்
    தாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல
    உன் துயரங்கள் நீங்கும்

    Digout - Dhammapada_337
    இங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும் சொல்கிறேன் ;
    நற்பேறு உண்டாகட்டும் !
    மருந்து வேர்களை தேடுகையில்
    கோரைப் புற்களைக் களைவது போல்
    வேட்கையை தோண்டிக் களையுங்கள்

    காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாணல்கள் போல்
    மீண்டும் மீண்டும்
    மாரன் உங்களை வெட்டிச் சாய்க்காமல் இருக்கட்டும்

    வேர்கள் பாழடையாமல்
    பலத்துடன் இருந்தால்
    வெட்டப்பட்டாலும்
    மரம் திரும்ப வளர்கிறது
    அது போலவே
    உள்ளுறை வேட்கைகள்
    களைந்தெறியப்படாவிடில்
    துக்கங்கள் திரும்ப திரும்ப
    வந்து கொண்டிருக்கும் (334 – 337)

    சொந்த கருத்துகளால் உந்தப்பட்டும்
    கட்டுக்கடங்கா உணர்ச்சிகளால் ஆளப்பட்டும்
    அழகின் ஈர்ப்பில் கட்டுண்டும் கிடப்பவனின்
    வேட்கை சதா வளர்ந்து கொண்டே இருக்கிறது
    தன்னுடைய பந்தங்களை
    அவனே இறுக்கிக் கொள்கிறான்.

    ஆனால், சிந்தனையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்பவனாக,
    எந்நேரமும் அக்கரையாக இருப்பவனாக
    அழுகிய உறுப்புகளின் மேல் பிறழாத கவனத்துடன் திகழ்பவனே
    முடிவை எட்டுபவனாக இருப்பான்
    மாரனுடனான பிணைப்பை வெட்டி எறிபவனும் அவனே! (349-350)

    Dhammapada_352
    பயமின்றி
    கறை படாமல்
    வேட்கையிலிருந்து விடுபட்டு
    முடிவை தொட்டவன்
    ஆகுதலின் அம்புகளை
    பிடித்தெறிய வல்லவன்.
    இந்த உடற் குவியலே
    அவனுடைய கடைசியானதுமாக இருக்கும்.

    பேரார்வத்திலிருந்து விடுதலையாகி
    தத்தளிக்காமல்
    நுட்பமான வெளிப்பாடுகளுடன்
    சத்தங்களின் இணைகளை அறிந்து
    -முதலில் வருவது எது, பின்னர் வருவது எது–
    என்று தெளிவாக தெரிந்தவனாய் இருப்பான்.
    அவன் கடைசி உடல் தறித்த
    அளவிலா நுண்ணறிவு மிக்க பெருமகன். (351-352)

    அனைத்தையும் வெற்றிகொண்டு
    ‘நான்’ என்பதை முழுக்க உணர்ந்து
    எந்த முறையையும்
    பின் பற்றாது
    எல்லாவற்றையும் துறந்து
    வேட்கையின் முடிவில் விடுதலையாகி
    சுயமுயற்சியில்
    எல்லாவற்றின் இயல்பையும் அறிந்த நான்
    யாரை குருவென்று காட்டுவேன்? (353)

    தம்மத்தின் கொடை எல்லா கொடைகளையும் கைப்பற்றும்
    தம்மத்தின் சுவை எல்லா சுவைகளையும்
    தம்மத்தின் இன்பம் எல்லா இன்பங்களையும்
    வேட்கையின் முடிவு எல்லா துயரங்களையும் அழுத்தங்களையும்
    (354)
    Dhammapada_355
    பகுத்துணரும் சக்தி குறைந்த
    மனிதனை செல்வம் அழித்துவிடுகிறது ;
    ஆனால் மறுமையை வேண்டுபவர்களை அழிப்பதில்லை.
    பகுத்துணரும் ஆற்றல் குறைந்து
    செல்வத்தின் மேல் வேட்கையுறுபவன்
    எங்ஙனம் அடுத்தவரை அழிக்கிறானோ
    அது போலவே தன்னையும் அழித்துக்கொள்கிறான். (355)

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், மோகத்தால்.
    மோகமற்று இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், வெறுப்பால்.
    வெறுப்பின்றி இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், தவறான நம்பிக்கையால்.
    தவறான நம்பிக்கையின்றி இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், பேராசைகளின் ஏக்கத்தில்
    பேராசைகளினால் ஏங்காமல் இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது (356 – 359)

    (“தம்மபதம்” – இருபத்தி நான்காவது அங்கம் – “தீவிர வேட்கை”)

    (தனிஸ்ஸாரோ பிக்கு என்பவரின் மூல தம்மபதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)

    நன்றி : http://www.buddhanet.net

    படங்களுக்கு நன்றி : http://www.what-buddha-said.net