Tag: கண்ணீர்

  • (சங்கியின்) தோல்வி நிலையென நினைத்தால்

    (அனுபவப்பகிரல் – அரசியல்)

    நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு பார்வர்டு வந்தது. “வெற்றி பெற்றவர்கள் தோல்வியுற்றவர்கள் போன்று கவலையுறுதலும் தோல்வியுற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் போன்று குதுகலிப்பதும் என விசித்திரமான முடிவைத் தந்துள்ளது இந்த தேர்தல்”

    அப்போது நான் நம்பவில்லை! பாஜக தானே ஆளப்போகிறது பிறகென்ன அதன் ஆதரவாளர்களுக்கு துக்கம்? கூட்டாட்சி என்ன புதிதா? அடல் பிஹாரி வாஜ்பாயி ஒரு கூட்டாட்சியைத் தானே தலைமை தாங்கினார்? ஆனால் இது அத்தனை நேரான விஷயமில்லை ; பல நுணுக்கங்கள் பொதிந்தது என்பது இன்று மதியம் தெளிந்தேன்.

    தலையைப் பிளக்கும் வெயிலில் போகலாமா வேண்டாமா என்று யோசித்து சென்றாக வேண்டிய சூழலில் அந்த வாடிக்கையாளர் நிறுவனத்துக்கு இன்று மதியம் சென்றேன். அவர் பெயர் விக்ரம் (உண்மைப் பெயரல்ல). நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். லக்னோ நகரைச் சொந்தவூராகக் கொண்டவராதலால் இயல்பாகவே அவருக்கு நகைச்சுவை வருகிறது என்பது என் எண்ணம். ஆனால் இன்று மதியம் அவரைச் சந்தித்தபோது ஒரு வித மனப்பாரத்துடன் பேசினார்.

    மீட்டிங் அறைக்குள் அவர் வந்ததும் சில நிமிடங்களுக்கு ஒன்றுமே பேசவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவர் போல எங்கோ நோக்கிக் கொண்டிருந்தார். நான் லேசாக கனைத்தேன். கண் விழித்தவர் போல ஓர் உலர் புன்னகையை வீசினார்.

    “எப்படி இருக்கீங்க” என்று கேட்டேன்.

    “என்ன சொல்றது….” என்று ஆரம்பித்தவர் மீண்டும் அமைதியானார். ஓரிரு நிமிடங்கள் கழித்து “சொல்றதுக்கொண்ணுமில்ல” என்றார்.

    “ஏன் ஏதேனும் பிரசினையா?”

    “இந்த தேசமே பிரச்னை…பாருங்க ஒரு நல்ல கட்சியைத் தோற்க வச்சிருக்காங்க இந்நாட்டு மக்கள்”

    காங்கிரஸ் அனுதாபியாக அவர் இருக்கக்கூடும் என்பதால் வருத்தத்தில் இருக்கிறார் என்று நினைத்தேன்.

    “அழகா ராமர் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு ஓட்டளிக்க வக்கில்ல….நன்றி கெட்ட உபி மக்கள்.”

    பொதுவாக வாடிக்கையாளர்களுடன் அரசியல் குறித்துப் பேசுவதில்லை. வியாபாரத்தை அது பாதிக்கும் என்ற பழைய எண்ணம் கொண்டவன். எனவே அலுவலக நண்பர்களிடமோ வியாபாரத் தொடர்புகளுடனோ என் அரசியல் குறித்த எண்ணங்களைச் சற்றும் பகிர்வதில்லை. விக்ரம் பேசுவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் “சென்ற வாரம் நான் அனுப்பி வைத்த சாம்பிள் வந்து சேர்ந்ததா?” என்று உப்பு பெறாத கேள்வியை முன் வைத்தேன். அவரோ என் கேள்வியைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

    “சாலைகள், ரயில்கள், என எந்த அரசாங்கம் இது மாதிரி செஞ்சிருக்கு…அதுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?..தேர்தல் நாளில் குல்லு, மணாலி என்று விடுமுறையில் சென்று விடுவது…..தாடி வைத்து குல்லா போட்டவர்கள் அனைவரும் காலை ஏழு மணிக்கே வந்து குத்தோ குத்து என்று எதிர்க்கட்சிக்கு குத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்..’நம் ஆட்களோ’ தண்ணியடிச்சுகிட்டு ஓட்டல் ரூமில் படுத்துக் கிடந்திருக்கிறார்கள்”

    “சார், அதான் மோதி வந்துட்டாரே….பின்ன என்ன கவலை?” அவருக்கு ஆறுதல் அளிக்கும் என்று சொன்னால் அவர் மனச்சிக்கல் அதிகமானது போல் இன்னும் சத்தமாகப் பேசலானார்

    “நானூறுக்கு மேல் என்று அந்த மனுஷன் கேட்டாரில்ல…அவருக்கு வாக்களிக்கிறது நம் கடமைன்னு தெரிய வேண்டாம்? தப்பு அந்த மனுஷன் மேல….ஆர் எஸ் எஸ் அடிப்படைகளின் படி ஆட்சி செய்யாமல் ஏழைகளுக்கு வீடு தருகிறேன் என்று முஸ்லீம்களுக்கு (அவர் உபயோகித்த உரிச்சொல்லை இங்கு நான் பயன்படுத்த முடியாது) வீடு கட்டிக் கொடுத்த ஆட்சிக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்! எதிர்க் கட்சிகளுக்கு பயந்துகிட்டே ஆண்டால் எவன் ஓட்டு போடுவான்?”

    இவர் என்ன சொல்கிறார்? தான் ஆதரிக்கும் கட்சியை விமர்சிக்கிறாரோ என்று எண்ணினேன். அவர் ஆழ்ந்த வேதனையில் இருக்கிறார் என்று உடன் புரிந்து போனது.

    “அதாரிடேரியனாக ஆளத்தானே 2019இல் ஓட்டளித்தோம்! அந்தப் பிரக்ஞை இல்லாமல் இலவசங்களை அறிவித்துக் கொண்டே போனால்….ஏழைகள் பாழைகள் என்று கூவிக் கொண்டே போனால்…சரியில்லை…எதுவும் சரியில்லை” என்று சொல்லி நிறுத்தினார். அவர் சம நிலைக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை பூத்தது. ஆனால் அப்பொது நான் ஒரு தவறைச் செய்தேன். “ஆமாம் சார், சமூக நீதிக்காக ஏதாவது பங்களித்திருக்கலாம்” என்றேன். அவர் என்னை மேலுங்கீழும் பார்த்தார்.

    “சமூக நீதியா! அந்த வெண்ணெயல்லாம் எதிர்க்கட்சிங்க தானே பேசும்? ராமர் கோயில் கட்டிக் கொடுத்தவருக்கு எத்தனை செய்யணும்….அவரைத் தோற்கடிச்சிருக்காங்களே!” – விக்ரம் முகத்தைத் திருப்பிக் கொண்டார். சுவர்ப் பக்கமாகத் திரும்பி கண்ணீர் வடிக்கிறாரோ! மேசையில் இருந்த டிஷ்யுவை வேகமாக எடுத்து சுவரைப் பார்த்துக் கொண்டே முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

    எனக்கோ குற்றவுணர்ச்சி! அவரை எப்படி சமாதானப்படுத்துவது! தண்ணீர்ப் பாட்டிலை அவர் பக்கம் தள்ளினேன். தேவையில்லை என்பது போல சைகை செய்துவிட்டு குரலைக் கனைத்துக் கொண்டார்.

    “வீர சாவர்க்கர் சொன்னார் – எனக்கு ஆங்கிலேயர்கள் மீது பயமில்லை, முஸ்லீம்கள் மீது பயமில்லை, இந்துக்கள் மீது தான் பயம். இந்து மதத்தை மதிக்காத இந்துக்களிடமிருந்து தான் இந்து மதத்தைக் காக்க வேண்டும் – நாயுடு, குமார் என்று மொள்ளைமாரிங்களோட சேர்ந்து மோதி ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப்பது யாரால…இந்துக்களால” என்று முழங்கிய போது அவர் சற்று தெளிவடைந்தது போலத் தெரிந்தார்.

    நான் என் மடிக்கணினியைத் திறந்தேன். அவர் கவனத்தை திசைதிருப்பி எப்படியேனும் பேச வேண்டிய வியாபார விஷயத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும்!

    “800 ஆண்டுகள் முகலாயர்களின் கீழ், பின்னர் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் கீழ் அடிமைகளாக இருந்திருந்து அடிமைகளாகவே இருக்கப் பழகி விட்டோம்”

    “ஓ…தலித்துகளைச் சொல்லுகிறீர்களா,,,,ஆமாம் சாதீய சமூகத்தில்” – என்று நான் ஏதோ சொல்லி வைக்க, யாக குண்டத்தில் சுள்ளிகளை அள்ளிப் போட்டு விட்டால் பெரிதாகப் பற்றிக் கொள்ளும் தீ போல தன் வார்த்தைகளை உக்கிரமாக வீசினார் –

    “இந்த கெட்ட வார்த்தைகளை காங்கிரஸ் போன்ற குடும்பக் கட்சிகள் மக்களிடையே பழக்கிவிட்டு…..ராகுல் கையில் அந்தச் சிவப்பு நிற அட்டை கொண்ட புத்தகத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு குத்தோ குத்துன்னு குத்தியிருக்காங்க….அயோத்தியில் கூட பாஜகவை தோக்கடிச்சா அடுக்குமா…அந்தக் கோயில் வந்தது யாரால….அந்த மகானுபாவர் கட்டிக் கொடுத்திருக்காட்டி முட்டி போட்டு தொழுகைதான் பண்ண வேண்டியிருந்திருக்கும்”

    விக்ரமின் சீனியர் முகுல் சரியாக அந்நேரமாக அறைக்குள் நுழைந்தார். பேசுபொருள் மாறிவிடும் வாய்ப்புகள் பிரகாசமாயிற்று.

    “அனுப்பிய சாம்பிள் குறித்து” என்று நான் பேச யத்தனித்த என்னை “ஒரு நிமிஷம் கணேஷ்” என்று கூறி மீண்டும் தடுத்தார் விக்ரம்.

    “நேற்றைய டிபாகிள் பத்தித் தான் கணேஷ்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்”

    “பேசிப் பயன் என்ன….பதினைஞ்சு சீட் ஜெயிச்சுட்டு 240 சீட் ஜெயிச்ச கட்சிகிட்ட உள்நாட்டு விவகாரம், சபாநாயகர், துணை பிரதம மந்திரி என்று பட்டியல் கொடுக்கும் கட்சிகளுடன் காலந்தள்ள வேண்டிய இக்கட்டுக்கு இந்நாட்டு மக்கள் தள்ளிவிட்டு விட்டனர்” – இது முகுல்.

    “குமாரை கூட்டணிக்குள் மோதி தானே இழுத்துகிட்டு வந்தாரு?” என்று அப்பாவித்தனமாகச் சொன்னேன்.

    “இந்தக் கண்றாவிக்காகத் தான் 273 சீட்டுகளை கூட்டணியில்லாமலேயே தலைவர் வென்றிருக்கணும்…அங்கே கோட்டை விட்டுட்டு நாயுடு, குமார் இருவர் கிட்டயும் கையேந்தி நின்னா?”

    காதுகளில் இருந்து ஏதோ வழிவது போல இருந்தது. அதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சொல்லி அறைக்குள்ளிருந்து வெளியே வந்து பர்ஸில் வைத்திருந்த பஞ்சை எடுத்து இரண்டாகப் பிரித்து காதுக்கொன்றாக அவற்றை வைத்து அடைத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன்.

    இப்போது முகுல் கண்களில் கண்ணீர்! விக்ரம் டிஷ்யூ பேப்பரால் முகுலின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். காதுகளில் பஞ்சடைந்திருந்ததால் ஒருவருக்கொருவர் என்ன ஆறுதல் சொல்லிக் கொண்டனர் என்பதைக் கேட்க முடியவில்லை.

  • கொட்டும் பனிப்பொழிவில் – பெருந்தேவியின் கவிதை குறித்து


    கொட்டும் பனிப்பொழிவில்

    புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்
    அவனாகத்தான் இருக்க வேண்டும்
    அவன் எப்படி இங்கே?
    அவன் மாதிரிதான் தெரிகிறது
    அங்கே இரவு
    அவன் கனவில் பனி பொழிகிறது
    புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி
    அவள் எப்படி அங்கே?
    அவள் மாதிரிதான் தெரிகிறது
    விதிர்த்து எழுந்திருக்கிறான்
    ஆடைவிலகிய தொடையிலிருந்து
    தனது காலை மெல்ல எடுக்கிறான்
    சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்
    அவனுடைய கனவு முடிந்துவிட்டது
    அவளது பகல் முடிய
    பல மணி நேரம் இருக்கிறது

    அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்
    அவன் மாதிரி இருந்த அவன்
    அவனாக இருந்திருந்தால்
    தாண்டிச் சென்றிருக்கமாட்டான்
    அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்
    கண்களுக்குள் பொழிகிறது பனி
    எதுவும் நடக்காததைப் போல

    அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்
    அவள் மாதிரி இருந்த அவள்
    அவளாக மட்டும் இருந்திருந்தால்
    ஆடை விலகிய தொடைக்கு மேல்
    மீண்டும் தன் காலைப் போடுகிறான்
    எதுவும் நடக்காததைப் போல

    பெருந்தேவி

    கவிதை என்பது கருத்தையோ உணர்வையோ பகிரும் விஷயம் என்ற பொதுவான வரையறை கவிதையை கவிதையாகக் காட்டுவது எது என்ற கேள்வியை எழுப்புகிறது. நேரடியாக ஓர் உரைநடையாகவே அதனைச் சொல்லிவிடலாமில்லையா? பின் கவிதை எதற்கு வேண்டும்?

    கவிதை புரிவதில்லை என்று பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு வாசிக்கப் பழகவில்லை என்று எளிதில் எதிர்வினை தந்துவிட முடியும் என்றாலும், அந்தக் குற்றச்சாட்டு ஏன் வைக்கப்படுகிறது என்று சிந்திக்கும்போது எனக்குத் தோன்றுவது – கவிதை ஒரு வடிவம். அதன் வடிவத்தை உணரப் பழகினாலொழிய கவிதையை ரசிக்க முடியாது!

    வடிவம் எதைச் சார்ந்தது? மொழியையா, சொல்லையா, வரிகளின் அடுக்கையா,…….மொழி சார்ந்த சொல் சார்ந்த உத்திகள் கவிதைகளின் இன்றியமையா அங்கமாக இருந்த காலங்கள் உண்டு. இவ்வுத்திகளை உதறிக் கிளர்ந்தெழுந்த நவீனக்கவிதைகள் தகவலை, படிமத்தை, உணர்வைப் பகிரும் விதத்தில் காட்டும் புதுமைப்படுத்தல்களை வடிவம் என்பதாகக் கொள்ளலாம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு முகவாகில் இருப்பது போல எழுதப்படும் ஒவ்வொரு நவீனக் கவிதையும் ஒவ்வொரு வடிவத்தை பூணுகிறது. அகவற்பா, வெண்பா முதலான இலக்கணம் சார்ந்த வடிவங்கள் காலாவதியான பிறகும் ‘சொன்னதைத் திரும்பச் சொல்லல்” கவிதையின் அம்சமாக இல்லாமல் போகவில்லை. ஆனால் “சொல்லும் விதத்தை மாற்றாமல் சொல்லுதல்” நிச்சயம் தேய்வழக்காகிவிட்டது.

    எழுதப்படும் வடிவங்கள் உணரப்படாமல், ஈர்க்காமல் போகும்போது வாசகர்கள் அதனை “புரியவில்லை” என்கின்றனர். மொழிரீதியான புரிதலை நாம் இங்கு பேசவில்லை. கவிதையை உள்வாங்கி ரசிக்க அதன் வடிவ அமைப்பை உணர்தலின் அவசியத்தைப் பேசுகிறோம்.

    இந்த நீண்ட பீடிகையை என்னால் சில மணி நேரங்கள் முன்னர் எழுதியிருக்க முடியாது. ஏனெனில், அப்போது பெருந்தேவி எழுதி ஃபேஸ்புக்கில் இட்டிருந்த “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதையை படித்திருக்க மாட்டேன். 

    கவிதையை முதல் முறை படித்த போது எது என்னை ஈர்த்தது?

    கொட்டும் பனியில் ஒரு புள்ளியாகத் துவங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் அவன்! – நீண்ட காலர்களுடன் நீளமான குளிர் கால அங்கியணிந்து, கௌபாய் தொப்பியைத் தறித்துச் சாலையில் நம்மை (வாசகனை நோக்கி!) வந்து கொண்டிருக்கும் ஆணுருவம் ஒரு noir படத்தின் ஆரம்பக்காட்சி போல நம் மனக்கண்ணில் ஓடத் துவங்குகிறது. – என்னை முதலில் ஈர்த்தது இந்த மனச்சித்திரந்தான்.

    அடுத்தடுத்த வரிகளை முதல் முறை வாசித்தபோது – கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது ஆற்றல் மிகு உத்தியாக என் ஆர்வத்தை நீட்டித்தது.

    “ஆடை விலகிய தொடை” – புலன்சார் சித்திரத்தை என்னுள் வரைவதோடு நிற்காமல், ஒரு புதிராகவும் வளர்கிறது. கவிதையின் இறுதியில் திரும்பவரும் “ஆடை விலகிய தொடை” “யாருடைய தொடை?” எனும் வினாவை எழுப்பி அதன் விடை என்னவாக இருக்கும் என்ற ஊகத்தின் இன்பத்தில் கவிதையனுபவம் அரும்பத் தொடங்கியது. புதிருக்கான விடை கிடைத்துவிட்டால் கவித்துவ உணர்வு விடைபெற்றுக் கொள்ளும் அபாயம் உண்டு எனும் பிரக்ஞையை அடைவது தான் கவிதை வாசித்தலின் படி நிலைகளில் உயர்வதற்கான அறிகுறி.

    மேற்சொன்ன மூன்று அம்சங்கள் “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதைக்கான உடனடி ஈர்ப்பை என்னுள் ஏற்படுத்தியவுடன், கவிதையினுள் ஆழச்செல்லும் ஆர்வம் இன்னமும் பெருகிற்று.

    அவளின் கனவில் அவன் வருவதும், அவன் கனவில் அவள் வருவதும் என இரு கனவுகள் பின்னிப்பிணைவது போல முதலில் தோன்றிற்று. Inception திரைப்படம் தோற்றுவித்த அதே உற்சாகத்தை என்னுள் கிளர்த்தியது. முதலில் அவள் கனவு காண்கிறாளா? பின்னர் அவன் கனவு காண்கிறானா? அவளின் கனவு அவனின் கனவுக்குள் நுழைந்து விடுகிறதா? என்றவாறு கனவுப்பாதையில்  திளைத்தது வடிவப்புதுமை சிந்தனையுள் நிகழ்த்திய வேதியியல் மாற்றம் – கவிதையின்பம் என்பது இத்தகைய திளைத்தல் தானோ! கவிதை ரசிக மனம் இந்தத் திளைத்தலுடன் திருப்தியுற்றுவிடவில்லை. காதலியின் உருவ அழகை ரசித்துவிட்டு அதோடு நிற்காமல் அவளின் வடிவ அழகை ரசிக்க யத்தனிப்பது போன்று – கவிதை வாயிலாக கவிஞர் சொல்ல வருவது என்ன? – தகவலா, உணர்வா, அல்லது வெறும் படிமம் மட்டுமா? முழுப்புதிரையும் அவிழ்க்க கவிதையின் வடிவத்தைக் கலைத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றிற்று 

    சில குறிப்புகளைக் கவிதையை தன்னுள் அடக்கிவைத்துக் கொண்டிருக்கிறது. “அங்கே இரவு” என்பது முதல் குறி . “அவளது பகல் முடிய பல மணி நேரம் இருக்கிறது” என்பது இரண்டாம் குறி. 

    அவளுக்கு பகல் அவனுக்கு இரவு – அவனும் அவளும் உலகத்தின் வெவ்வேறு நேர மண்டலங்களில் வசிக்கிறார்கள். Distance Love எனும் கருப்பொருளைக் கவிதை பேசுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

    கவிதை ஒற்றைக் கருப்பொருளை மட்டும் கொண்டிருக்கவில்லை. காதல் முக்கோணம் எனும் கருப்பொருளும் கவிதையில் காணக்கிடைக்கிறது. “ஆடை விலகிய தொடை” – யாருடைய தொடை எனும் கேள்விக்கான விடையை கவிதாசிரியர் தராமல் போனது வடிவமைப்பின் சிகரம் என்று நினைக்கிறேன். பல ஊகங்களை நம் மனதுள் கிளப்பிவிடுகிறது. அவன் யாருடன் படுத்திருக்கிறான்? அவன் மனைவியுடனா? காதலியுடனா? அருகில் இல்லாமல் வெகுதொலைவில் வசிப்பதால் காதலியுடனான நெருக்கத்தை அனுபவிக்க முடியாமல் இருப்பதன் காரணமாக ஏதொவொரு விலைமாதுடன் படுத்திருக்கிறானா? வாசகன் மனதில் எழும் இத்தகைய கேள்விகள் வாசிக்கும் கவிதை மீதான ஈடுபாட்டை உயர்த்துகிறது. 

    அவனுக்கு வேறு துணை இருக்கிறதெனில் வேறொரு நேர மண்டலத்தில் வசிக்கும் அவளுக்கு இதைப் பற்றி தெரியுமா என்னும் கரிசனம் வாசகனான என்னில் எழுந்தது. அவளுக்குத் தெரிந்தால் அவளது சோகம் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகும்! பனிபொழியும் தெருவில் நடப்பவன் அவனைப் போல் இருக்கிறான் என்று அவனை சற்று நேரம் நோக்கும் அவள் “இது அவனில்லை” என்று உணர்ந்த பிறகு அவள் தன் கண்களை மூடிக் கொள்கிறாள். இது அவனில்லை, அவனைத் தவிர வேறு எவனையும் இந்தக் கண்கள் காணக்கூடாது என்று தன் கண்களை மூடிக் கொள்கிறாளோ? “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரியில் கவிச்சுவை பொங்குவதை உணர வேண்டுமானால் அவள் மீதான கரிசனவுணர்வு வாசகனுள் பொங்குதல் அவசியமாகும். “கண்ணீர் விட்டு உறைந்து போய்விட்டன அவள் கண்கள்” என்பதைத்தான் “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரி சொல்கிறது என்பதாகப் புரிந்து கொண்டேன். பனி என்பது உறைந்த நீர்!   

    கவிதையில் காணப்படும் இன்னொரு குறிச்சொல் – “எதுவும் நடக்காததைப் போல”. அவன் எங்கோ, அவள் எங்கோ “எதுவும் நடக்காததைப் போல” தத்தம் இயல்பான வாழ்க்கையைத் தொடர்கின்றனர். இருவருக்குமிடையிலான நேசத்தை இருவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அவள் கண்ணீர் விடுகிறாள். அவனுடைய கனவில் “அவள் போல தோன்றுபவள் அவளில்லை” என்று உணர்ந்தவுடனேயே அவன் விழித்துக் கொண்டுவிடுகிறான். உடனடியாக அவனுடைய படுக்கைத்துணையின் மீது போட்டிருந்த காலை விலக்கித் திரும்பப்படுத்துக் கொள்கிறான். 

    “கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது” என்ற அம்சம் முதல் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று ஏற்கனவே சொன்னேனில்லையா? அது தோற்ற மயக்கம் என்பது கவிதையின் மூன்றாம் மட்ட அர்த்தப்படுத்தலில் (அதாவது முழுக்கக் கலைத்துப் போடுதலில்) விளங்கிவிடுகிறது. இந்தத் தோற்ற மயக்கம் சில வரிகளை ஒழுங்கு மாற்றிப் படித்துப் பார்க்கும் போது விலகி விடுகிறது.

    கவிதையை பத்தி பிரித்து வாசித்துப் பார்ப்போமா?  (கவிஞர் என்னை மன்னிப்பாராக!)

    புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்

    அவனாகத்தான் இருக்க வேண்டும்

    அவன் எப்படி இங்கே? 

    அவன் மாதிரிதான் தெரிகிறது     (1)

    — 

    அங்கே இரவு

    அவன் கனவில் பனி பொழிகிறது

    புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி

    அவள் எப்படி அங்கே?

    அவள் மாதிரிதான் தெரிகிறது

    விதிர்த்து எழுந்திருக்கிறான்

    ஆடைவிலகிய தொடையிலிருந்து

    தனது காலை மெல்ல எடுக்கிறான்

    சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்

    அவனுடைய கனவு முடிந்துவிட்டது  (2)

    அவளது பகல் முடிய

    பல மணி நேரம் இருக்கிறது         (3)

    அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்

    அவன் மாதிரி இருந்த அவன்

    அவனாக இருந்திருந்தால்

    தாண்டிச் சென்றிருக்கமாட்டான்

    அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்

    கண்களுக்குள் பொழிகிறது பனி

    எதுவும் நடக்காததைப் போல         (4)

    அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்

    அவள் மாதிரி இருந்த அவள்

    அவளாக மட்டும் இருந்திருந்தால்

    ஆடை விலகிய தொடைக்கு மேல்

    மீண்டும் தன் காலைப் போடுகிறான்

    எதுவும் நடக்காததைப் போல          (5)

    பத்தி எண்கள் 1 மற்றும் 4 – அவளின் கண்ணோட்டம்

    பத்தி எண்கள் 2 மற்றும் 5 – அவனின் கண்ணோட்டம்

    பத்தி எண் 3 – கவிதை சொல்லியின் குரல் – தொலைதூரத்தை, நேர மண்டலத்தை பூடகமாக சுட்டுகிறது

    பத்தி எண் 3 நீங்கலாக, கவிதை இரண்டு கண்ணோட்டத்தில் செல்கிறது. இரண்டு கண்ணோட்டங்களும் வரிகளை அடுக்கும் விதத்தில் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. அவன் கனவு காண்பது கவிதையில் வருகிறது. கவிதை முழுக்கவும் அவன் கனவு காணவில்லை. ஒரு கட்டத்தில் அவன் விழித்துக் கொள்கிறான். அவள் கனவு காணவில்லை. யதார்த்தத்துக்குள் தான் இருக்கிறாள். வரிகளை பிசைந்து எழுதப்பட்டுள்ள விதத்தில் கனவு, கனவுக்குள் கனவு, யதார்த்தத்திலிருந்து கனவு, கனவிலிருந்து யதார்த்தம் என்பன போன்றவை மயக்கத்தைத் தோற்றுவித்து கவிதையைச் சுவையுள்ளதாக்குகின்றன. இந்த மயக்க விளைவு இல்லாமல் போயிருந்தாலும் இந்தக் கவிதை தன்னளவில் முழுமையான கவிதையாகவே திகழ்ந்திருக்கும், எனினும் குழந்தைக்கு என்ன உடை அணிவிப்பது என்ற முடிவை எடுக்கும் தாயைப் போல கவிஞரே தீர்மானிக்கிறார் கவிதை பூணும் வடிவத்தை!

    சொல்ல வரும் எளிதான கருத்து, இரண்டு படிமங்கள், வடிவப்புதுமை – மூன்றையும் சரியான விகிதத்தில் கலந்து ஓர் அரிய கவிதையனுபவத்தைத் தருகிறார்  பெருந்தேவி. 

    ஒரு கவிதை நம்மை ஈர்ப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது. உணவு, உடை, நிறம் போல கவிதையின் பொருள் கொள்ளும் முறை அவரவர் பார்வை. எனவே, இந்தக் குறிப்பு தரும் பொருள் மட்டுமே இக்கவிதைக்கான ஒரே பொருள் என்று கொள்ள முடியாது. இக்கவிதையை வாசிக்கும் இன்னொருவர் வேறுவிதமாகப் பொருள் கொள்ளக்கூடும். கவிதை எழுதி முடிக்கப்பட்ட பிறகு அது கவிஞனைச் சாராத தனித்த இருப்பைக் கொள்கிறது என்று சொல்வது இதனால்தான். இதன் காரணமாகவே ஒவ்வொரு வெற்றிகரமான கவிதையையும் அதன் வாசகர்களே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

  • சரணடைதலின் கண்ணீர் – நிஷா மன்சூர்

    நண்பர் நிஷா மன்சூர் அவர்களின் கவிதை. அவர் அனுமதியுடன் இங்கு பகிரப்படுகிறது.

    ————————————————————

    ஆதித்தந்தை உகுத்த கண்ணீர்
    இன்னும் மழையாய்ப் பொழிந்து
    மண்ணை நெகிழ வைத்து
    இறைஞ்சுதலால் விண்ணை நிரப்புகிறது,
    “எமது கரங்களாலேயே
    எமக்குத் தீங்கிழைத்துக் கொண்டோம் ரட்சகனே”

    யூப்ரடீஸ் நதியில் ஓடிக் கொண்டிருந்த
    யாகூபின் கண்ணீர் நதி
    கிணற்றில் வீசப்பட்ட முழுநிலவின்
    வியர்வையை நுகர்ந்தபின் அருள்நதியானது.

    யூசுஃபின் பின்சட்டைக் கிழிசலில் சம்மணமிட்டிருக்கும்
    ஒழுக்கத்தின் முத்திரை
    ஆழியூழி காலம்வரை
    வல்லிருளை வெல்லுமொளியாக
    நின்றிலங்கிக் கொண்டிருக்கும்.

    ஹூத் ஹூதின் சொற்கள் மலர வைத்தன
    சுலைமானின் புன்னகையை.

    முகமறியா பெருமகனின் ஆன்ம வலிமை
    கொணர்ந்தது,
    கண்ணிமைக்கும் நேரத்தில் பல்கீசின் சிம்மாசனத்தை.

    சிற்றெரும்புகள் புற்றேகித் தஞ்சமடையும் தருணம்
    பூமியதிர்ந்து பதிந்தன,
    சுலைமானின் குதிரைப்படைக் குளம்புகளின் தடங்கள்.

    கரையான்கள் அரித்து அஸா உதிர்ந்து சுலைமான் சரியும்வரை
    ஜின்கள் உணரவில்லை,
    சுவாசமின்மையின் தடயத்தை

    எறும்புகளை உதாரணம் காட்டத் தயங்காத பரம்பொருள் கேட்டது,
    “மனு ஜின் கூட்டத்தாரே உங்கள் இறைவனின் அருட்கொடைகளில்
    நீங்கள் எதனைப் பொய்யாக்குவீர்கள் ?”

    எம் இதயமும் உயிரும் சமர்ப்பணமாகும்
    முகில் கமழும் நயினார் முஹம்மது ரசூல் பகர்ந்தார்,
    “உங்களது வெற்றியின் மீது
    நான் பேராவல் கொண்டுள்ளேன்”*

    ஜகமெங்கும் ஒலிக்கிறது,
    வெற்றியின் ஓங்கார முழக்கம்.

    “மற்றவர்கள் எத்தகையினராயினும் என்கொடிய
    வல்வினை அகற்ற வசமோ
    மலை இலக்கென நம்பினேன் நம்பினேனென்று
    வந்தெனுட் குடிகொள்குவையோ.”*

    #

    *திட்டமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்’. (9:128).

    *குணங்குடி மஸ்தான் பாடல் வரிகள்.