நேற்று எழுதிய ரம்ஜான் போஸ்டைப் படித்த பிறகு நண்பர் நிஷா மன்சூர் தொலைபேசியில் அழைத்தார். நேற்று எழுதிய “காபா காக்கப்பட்டது” இடுகையில் ஒரு முக்கியமான விடுபடல் இருக்கிறது என்றார். இந்த விடுபடலின் காரணத்தால் போஸ்ட் சற்று எதிர்மறையாக தொனிப்பதாகச் சொன்னார். ஒரு முக்கியமான தகவலும் விட்டுப் போயிருந்தது. அப்ரஹா அழைத்துப் பேசும் மக்காவின் தலைவர் “முத்தலிப்” என்று இடுகையில் சொல்லியிருந்தேன். அப்துல்-முத்தலிப் இப்னு ஹாஷிம் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும், நமது அன்புக்குரிய நபிகள் நாயகத்தின் தாத்தாவாகவும் இருந்தார். மக்காவில் உள்ள பெரும்பாலான மக்களைப் போலவே, அவர் குரைஷ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.
மக்காவை நெருங்கி வந்த அப்ரஹா தனது படையினருக்கு அளித்த முதல் உத்தரவு – கால்நடைகளைத் தாக்குவது. அவர்கள் முத்தலிப்பின் ஒட்டகங்களில் பலவற்றை எடுத்துச் செல்கின்றனர். மன்னர் தனது வீரர்களில் ஒருவரை மக்காவிற்கு அனுப்பி அப்துல்-முத்தலிப்பைச் சந்திக்கப் பணித்தான். அந்த வீரன், “நீங்கள் முதலில் அவருடன் சண்டையிடாவிட்டால் அவர் உங்களுடன் சண்டையிட இங்கு வரவில்லை என்று சொல்ல ராஜா என்னை அனுப்பியுள்ளார். மாறாக, அவர் இந்த இல்லத்தை (அதாவது கஃபாவை) அழிக்க வந்திருக்கிறார். பின்னர் அவர் இந்த நகரத்தை விட்டு வெளியேறிவிடுவார்” என்றான். அப்துல்-முத்தலிப், “எங்களுக்கு அவருடன் சண்டையிடும் திறன் இல்லை. நாங்கள் அவரை எதிர்கொள்ள முயற்சிக்க மாட்டோம்” என்றார்.
அப்ரஹாவின் தூதன் அப்துல்-முத்தலிப் உடன் அப்ரஹாவிடம் திரும்பி வந்தான். அப்துல்-முத்தலிப் ராஜாவின் அறைக்குள் நுழைந்தபோது, அப்ரஹா அவரைப் பாராட்டி கௌரவித்தான். பின்னர் அவன் மொழிபெயர்ப்பாளரிடம், “அவருடைய தேவையைப் பற்றிக் கேளுங்கள்” என்று கூறினான். மொழிபெயர்ப்பாளர் கேட்டதற்கு பதிலளித்த அப்துல்-முத்தலிப், “தாக்குதலின் போது என்னிடமிருந்து பறிக்கப்பட்ட இருநூறு (200) ஒட்டகங்களை எனக்குத் திருப்பித் தர வேண்டும் என்பதுதான் எனது தேவை.” என்று சொல்கிறார்.
அப்ரஹா தனது மொழிபெயர்ப்பாளரிடம், “அவரிடம் சொல்லுங்கள்: நான் உங்களை முதன்முதலில் பார்த்தபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், ஆனால் இப்போது நான் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்கவில்லை. உங்கள் மதத்தில் நீங்கள் புனிதமாகக் கருதும் ஒன்றை அழிக்க வந்தேன், அதைப் பற்றி நீங்கள் என்னுடன் விவாதிக்கவில்லை, மாறாக கடத்தப்பட்ட ஒட்டகங்களைப் பற்றி பேசுகிறீர்கள்!”
அப்துல்-முத்தலிப் பதிலளித்தார் – “நான் ஒட்டகங்களின் எஜமானன் (உரிமையாளர்); இந்த வீட்டைப் பொறுத்தவரை, அதாவது, கஃபாவைப் பொறுத்தவரை, அதைப் பாதுகாக்கும் ஓர் இறைவன் இருக்கிறார்.”
அப்ரஹா தனது ஒட்டகங்களை அவரிடம் திருப்பி அனுப்பிவிடுகிறான். மக்காவுக்குச் செல்லும் வழியில் படை மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அஞ்சி அப்துல்-முத்தலிப் குரைஷிகளை மலைகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர் சொன்ன படி மக்காவாசிகள் செய்கின்றனர்.
இது நடந்த பின்னர் தான், அப்ரஹா யானையை காபாவை நோக்கி செலுத்தச் செய்கிறான். தவற்றைச் சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி.
