Tag: ஒட்டகம்

  • உரிமையாளன் மீட்டுக் கொள்வான்

    நேற்று எழுதிய ரம்ஜான் போஸ்டைப் படித்த பிறகு நண்பர் நிஷா மன்சூர் தொலைபேசியில் அழைத்தார். நேற்று எழுதிய “காபா காக்கப்பட்டது” இடுகையில் ஒரு முக்கியமான விடுபடல் இருக்கிறது என்றார். இந்த விடுபடலின் காரணத்தால் போஸ்ட் சற்று எதிர்மறையாக தொனிப்பதாகச் சொன்னார். ஒரு முக்கியமான தகவலும் விட்டுப் போயிருந்தது. அப்ரஹா அழைத்துப் பேசும் மக்காவின் தலைவர் “முத்தலிப்” என்று இடுகையில் சொல்லியிருந்தேன். அப்துல்-முத்தலிப் இப்னு ஹாஷிம் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும், நமது அன்புக்குரிய நபிகள் நாயகத்தின் தாத்தாவாகவும் இருந்தார். மக்காவில் உள்ள பெரும்பாலான மக்களைப் போலவே, அவர் குரைஷ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

    மக்காவை நெருங்கி வந்த ​​அப்ரஹா தனது படையினருக்கு அளித்த முதல் உத்தரவு – கால்நடைகளைத் தாக்குவது. அவர்கள் முத்தலிப்பின் ஒட்டகங்களில் பலவற்றை எடுத்துச் செல்கின்றனர். மன்னர் தனது வீரர்களில் ஒருவரை மக்காவிற்கு அனுப்பி அப்துல்-முத்தலிப்பைச் சந்திக்கப் பணித்தான். அந்த வீரன், “நீங்கள் முதலில் அவருடன் சண்டையிடாவிட்டால் அவர் உங்களுடன் சண்டையிட இங்கு வரவில்லை என்று சொல்ல ராஜா என்னை அனுப்பியுள்ளார். மாறாக, அவர் இந்த இல்லத்தை (அதாவது கஃபாவை) அழிக்க வந்திருக்கிறார். பின்னர் அவர் இந்த நகரத்தை விட்டு வெளியேறிவிடுவார்” என்றான். அப்துல்-முத்தலிப், “எங்களுக்கு அவருடன் சண்டையிடும் திறன் இல்லை. நாங்கள் அவரை எதிர்கொள்ள முயற்சிக்க மாட்டோம்” என்றார்.

    அப்ரஹாவின் தூதன் அப்துல்-முத்தலிப் உடன் அப்ரஹாவிடம் திரும்பி வந்தான். அப்துல்-முத்தலிப் ராஜாவின் அறைக்குள் நுழைந்தபோது, அப்ரஹா அவரைப் பாராட்டி கௌரவித்தான். பின்னர் அவன் மொழிபெயர்ப்பாளரிடம், “அவருடைய தேவையைப் பற்றிக் கேளுங்கள்” என்று கூறினான். மொழிபெயர்ப்பாளர் கேட்டதற்கு பதிலளித்த அப்துல்-முத்தலிப், “தாக்குதலின் போது என்னிடமிருந்து பறிக்கப்பட்ட இருநூறு (200) ஒட்டகங்களை எனக்குத் திருப்பித் தர வேண்டும் என்பதுதான் எனது தேவை.” என்று சொல்கிறார்.

    அப்ரஹா தனது மொழிபெயர்ப்பாளரிடம், “அவரிடம் சொல்லுங்கள்: நான் உங்களை முதன்முதலில் பார்த்தபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், ஆனால் இப்போது நான் உங்களைப் பற்றி உயர்வாக நினைக்கவில்லை. உங்கள் மதத்தில் நீங்கள் புனிதமாகக் கருதும் ஒன்றை அழிக்க வந்தேன், அதைப் பற்றி நீங்கள் என்னுடன் விவாதிக்கவில்லை, மாறாக கடத்தப்பட்ட ஒட்டகங்களைப் பற்றி பேசுகிறீர்கள்!”

    அப்துல்-முத்தலிப் பதிலளித்தார் – “நான் ஒட்டகங்களின் எஜமானன் (உரிமையாளர்); இந்த வீட்டைப் பொறுத்தவரை, அதாவது, கஃபாவைப் பொறுத்தவரை, அதைப் பாதுகாக்கும் ஓர் இறைவன் இருக்கிறார்.”

    அப்ரஹா தனது ஒட்டகங்களை அவரிடம் திருப்பி அனுப்பிவிடுகிறான். மக்காவுக்குச் செல்லும் வழியில் படை மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அஞ்சி அப்துல்-முத்தலிப் குரைஷிகளை மலைகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவர் சொன்ன படி மக்காவாசிகள் செய்கின்றனர்.

    இது நடந்த பின்னர் தான், அப்ரஹா யானையை காபாவை நோக்கி செலுத்தச் செய்கிறான். தவற்றைச் சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி.

    காபா காக்கப்பட்டது

  • குகை வாயிலில் ஒரு சிலந்தி வலை

    spider and web

    மக்காவின் எல்லா முஸ்லீம்களும் மதினாவிற்கு இடம் பெயர்ந்து விட்டிருந்தனர். நபிகள் நாயகமும் அபு-பக்கரும் மட்டும் எஞ்சியிருந்தனர், மக்காவை விட்டு வெளியேறுவதற்கு அல்லாஹ்-வின் அனுமதிக்காக நபிகள் நாயகம் காத்திருந்தார். இறுதியில் ஒரு நாள் ஜிப்ரீல் அவரிடம் வந்து சொன்னது : ”இன்றிரவு உன்னுடைய படுக்கையில் படுக்காதே” இரவு நெருங்கிய போது, அலியும் நபிகள் நாயகமும் மட்டும் வீட்டில் தனியே இருந்தனர். திடீரென்று, அவர்கள் வீட்டுக்கு வெளியே சில சத்தங்களைக் கேட்டனர்.

    வெளியில் பார்த்தபோது, நபிகளின் எதிரிகள் வீட்டைச் சுற்றி நின்றிருந்ததைக் கண்டனர். நபிகள் அச்சப்படவில்லை. அல்லாஹ் அவருடன் இருப்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அலியிடம் சொன்னார் : ”நீ என்னுடைய உடையால் உன்னை மறைத்துக் கொண்டு என் படுக்கையில் படுத்துக் கொள். நான் அபு-பக்கருடன் வெளியேறப் போகிறேன். பிறகு நீ எங்களைப் பின் தொடர்ந்து வா”

    நபிகள் வீட்டை விட்டு அந்த இரவே நீங்கினார். இருட்டின் போர்வையில், அவர் அபு-பக்கரின் வீட்டை அடைந்தார் ; அங்கு இரண்டு ஒட்டகங்கள் தயார் நிலையில் இருந்தன. ஓட்டகங்களில் ஏறி, இருவரும் நகரை விட்டு வெளியேறினர். தாவ்ர்-மலையை அடைந்து அங்கு ஒரு குகையில் ஒளிந்திருந்தனர். அக்குகையில் அவர்கள் மூன்று நாட்கள் இருந்தனர். ஒவ்வொரு இரவிலும் அபு-பக்கரின் மகன் அப்துல்லா அவர்களை குகையில் சந்திப்பான். நகரில் நிகழ்வனவற்றை அவன் அவர்களுக்கு தெரிவித்தான். அப்துல்லா சொன்னான் : “மக்காவின் குரைய்ஷ் மிகவும் கோபமாகிவிட்டான். அவர்கள் உங்களை எல்லா திசைகளிலும் தேடி வருகிறார்கள். உங்களைச் சிறைப்பிடிக்க உதவுபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்”

    ஒரு நாள், குகைக்கு வெளியே அவர்கள் சில குரல்களை கேட்டனர். அவர்களைத் தேடிக் கொண்டு குகை வரை எட்டியிருந்த குரைய்ஷின் ஆட்கள். அபு-பக்கர் பயந்தான். “நாம் எந்த சமயத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோம்” என்று எண்ணினான். ஆனால் நபிகள் நாயகம் “நம்பிக்கை இழக்காதே, அல்லாஹ் நம்முடன் இருக்கிறார்” என்றார். நபிகளைத் தேட வந்தவர்கள் அங்கும் இங்கும் தேடினார்கள் ; பிறகு சென்று விட்டார்கள். ஆச்சர்யமுற்ற அபு-பக்கர் குகைக்கு வெளியே நோக்கிய போது  நுழைவாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னியிருப்பதைக் கண்டு அதிசயித்தான். கூடவே அதன் பக்கத்தில் ஒரு புறா ஒரு கூட்டை அமைத்திருந்தது. குகைக்குள் ஒருவரும் நுழைந்து தேடாமல் விட்ட காரணம் புரிந்தது.  இருவரும் பத்திரமாக குகையை விட்டு அகன்றனர். ஒரு வழிகட்டியை துணைக்கழைத்துக் கொண்டு பாலைவனத்தைக் கடந்து மதினாவை அடைந்தனர். மதினாவை சென்றடைய அவர்களுக்கு ஏழு நாட்கள் பிடித்தன.