Tag: இலக்கியம்

  • சர்ச்சைகளுக்கும் மேலான ஒரு சுமாரான சவாரி


    நாவல் மீதான சட்டத் தடையை நீதி மன்றம் விலக்கிய பிறகு, The Satanic Verses என்ற சல்மான் ருஷ்டியின் மிகப் பெரும் சர்ச்சைக்குரிய நாவலை வாசிக்க நான் முடிவு செய்தேன். வாசிப்பு என்பது இங்கு இலக்கியரசனைக்காக மட்டுமல்ல. மாறாக, எழுத்துரிமைக்காக தனது வாழ்க்கையை பணயம் வைத்த ஒரு பெரிய எழுத்தாளருக்கு செலுத்தும் மரியாதையாகவும் இந்த வாசிப்பைச் செய்ய விரும்பினேன்.

    ஆனால் வாசித்தபின் ஏற்பட்ட உணர்வு — மிகமிகச் சுமாரான ஒரு நாவல். பல இடங்களில், “இதை ஏன் எழுதிச் செல்கிறார்?” என்ற கேள்வி எழாமல் இல்லை. வழக்கம்போல், ருஷ்டியின் உரைநடை சில இடங்களில் பிரகாசிக்கிறது. ஆனால் அந்த ஆற்றல் நாவல் முழுமையும் நிலைத்திருக்கவில்லை. மையமற்ற கதை சொல்லல், குழப்பமூட்டும் பாத்திரங்கள், உணர்வளவாக மனதில் ஒட்டாத பாகங்கள் போன்றவை நல்ல வாசிப்பனுபவத்துக்குத் தடையாக இருந்தன.

    நாவலின் முக்கியமான பாத்திரமான ‘இமாம்’ ஒரு முன்னாள் இரானிய மத-அரசியல் தலைவரின் பிரதிபலிப்பாக படைக்கப்பட்டிருக்கலாம். தன்மீதான நேரடி பதிவாக உருவாக்கப்பட்டிருப்பதால் எழுந்திருக்கக் கூடிய சொந்தக் கோபந்தான் ஃபத்வாவுக்கான காரணமோ என்றெண்ணத் தோன்றுகிறது. உண்மையில் அந்தத் தலைவர் அறுநூறுக்கும் மேலான பக்கங்களைக் கொண்ட நாவலை வாசித்துவிட்டாரா என்பது கேள்விக்குறியே!

    நாவல் கடுமையான எதிர்ப்பைச் சந்திப்பதற்கு காரணமான பகுதிகளை மிக உன்னிப்பாக வாசித்தேன். இஸ்லாமின் வரலாறு, சமயவியல் பற்றித் தொடர்ந்து வாசித்தும் சிந்தித்தும் வருவதால் ஆசிரியரின் அணுகுமுறையை கூர்மையாக அவதானிக்க முடிந்தது. முதல் பாதியில் வரும் பகுதி அப்படி ஒன்றும் பிரச்னைக்குரிய பகுதியாக தோன்றவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் பகுதி பிரச்னைக்குரியது. பாத்திரங்களுக்கு வைத்துள்ள உர்துப் பெயர்கள் முதல் Alternative History -உத்தியில் சில வரலாற்றுப் பாத்திரங்களை கற்பனையாக எழுதிச் சென்றிருக்கும் விதம் வரை – எக்காலத்திலும் சர்ச்சையை எளிதில் கவர்ந்திழுக்கக் கூடியவை. அவற்றை எழுதும் போதே சர்ச்சையைக் கிளப்பும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றால் அதனை naivety என்று அழைப்பதா? இல்லையேல் அதிக சர்ச்சை அதிக விற்பனை என்னும் மேற்கத்திய எழுத்துலகின் பாணியைக் கைக்கொண்டார் என்று சொல்வதா? மூன்றாவதாக, வரலாற்றையும் புனைவையும் பின்னுதலில் குறியீடுகள், மாய எதார்த்தம் ஆகிய இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி பின்னர் வந்த நாவல்களில் வெளிப்பட்ட (Shalimar the Clown, The Enchantress of Florence) எழுத்துவன்மை இந்த நாவலில் கைகூடாததால் விளைந்த விபத்தா? இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் எழுத்தாளரின் இளமைக்கால அசட்டு தைரியம் என்றுதான் கூறத் தோன்றுகிறது. சர்ச்சைகள் மட்டுமே ஓர் இலக்கியத்தை உயர்த்த முடியாது. ஒரு வாசகராக எனக்கு இந்த நாவல் ஒரு இலக்கிய அனுபவத்தை நல்கவில்லை.

  • Pierre Menard, Author of the Quixote

    ஜே ஜே சில குறிப்புகள் – நாவலை வாசித்துப் பிரமித்துப் போனதுண்டு. இப்படியும் புனைவுகள் எழுத முடியுமா என்றெண்ணி வியந்து போனேன். இலக்கிய அங்கதம் எனும் வகைமை என்பதாக நாவல் படித்த நாட்களில் என் புரிதல்! ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு கற்பனையான இலக்கிய ஆளுமை உயிர் பெறுகிறார். ஜே ஜே சில குறிப்புகள் நாவல் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்னர் Sur பத்திரிக்கையில் வெளியானது – Pierre Menard, Author of the Quixote. இதிலும் ஒரு கற்பனை இலக்கிய ஆளுமை வருகிறார். இந்தக் கதையிலும் கற்பனை இலக்கியவாதி ஏற்கனவே இறந்துவிட்டார். அவருடைய அபிமானி ஒருவர் பட்டியலிட்ட நூல் வரிசை குறித்தான எதிர்வினையாகத் தொடங்குகிறது “சிறுகதை”. எதிர்வினை செய்பவர் இறந்து எழுத்தாளர் மெனார்டின் நெருங்கிய நண்பர் மற்றும் இரசிகர். நூல் பட்டியலில் பிரபலமான நூல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்ததாகவும் பரவலாக அறியப்படாத பல அரிய நூல்களின் பெயர்கள் விடப்பட்டிருந்தன என்றும் “கட்டுரை”யாசிரியர் குறை பட்டுக் கொள்கிறார். பரவலாக அறியப்படாத, இன்னொருவர் பட்டியலிட்ட வரிசையில் இல்லாத நூல்களின் பட்டியல் கதையில் வருகிறது. இத்தகைய பட்டியல் ஒன்றைப் புனைவில் சேர்ப்பதற்கே நிறைய மேதமை வேண்டும். நம்பத்தகுந்த விதத்தில் வரிசை ஒலிக்க வேண்டும். அப்படியில்லாவிடில், கதை வடிவம் கேலிக்குள்ளாக்கப்பட்டுவிடும். கதையின் நம்பத்தகுந்த தொனி கடைசி வரை தொடர்கிறது. முதல் முறை வாசிப்பவர்களுக்கு இது “இறந்த இலக்கியவாதியின் பங்களிப்பு” குறித்த “கட்டுரையாகவே” தொனிக்கும். மரபார்ந்த சிறுகதையின் தரவடிவமான சிக்கல் – தீர்வு என்ற படிவத்தில் பயணிக்காத இதை எவ்விதத்தில் புனைவு என்று கொள்ள முடியும்?

    சிறுகதையில் புனைவின் அடையாளங்கள் புதைந்துள்ளன. நுணுக்கமான வாசிப்பில் அவை வெளிப்படுகின்றன. ஓரிரு புனைவம்சங்களை மட்டும் இங்கு சொல்கிறேன்.

    (1) கதையின் உள்ளிருக்கும் அங்கதம் – கதையை அற்புதமான இலக்கியப் பகடியாக வாசிக்கலாம். போர்ஹேஸ் இரு இயல்முரண்களைக் கதையில் விவரிக்கிறார். இறந்த எழுத்தாளரின் மீது அளவற்ற மரியாதை வைத்திருக்கும் அவரின் பரம ரசிகன். அந்தப் பரமரசிகனின் மதிப்புரையினுடே நாம் அறியவரும் மறைந்த இலக்கியவாதியின் எழுத்துத்திருட்டுத்தனம். கேள்விக்குரிய சாதனைகளுக்காக மெனார்டை வானளாவப் புகழ்வதைத் தவிர, கதையின் பெரும்பகுதியில், கதைசொல்லி Mme.Henri Bachelier-ஐ (அதாவது மெனார்டின் பிரபலமான நூல்களின் பெயரை மட்டும் நூல் பட்டியலில் சேர்த்தவர்) கடுமையாக விமர்சிக்கிறார். இதில் உள்ள முரண் Mme Bachelier-ம் கதைசொல்லியைப் போலவே மெனார்டின் இரசிகர். தன் பக்கத்தில் இருப்பவரைப் பின்தொடர்வதும், தெளிவில்லாத காரணங்களுக்காக அவரைக் கடுமையாக விமர்சிப்பதும் முரண்நகை.

    (2) மெனார்டின் கலாசாரப் பின்னணியும் பொருந்தா விருப்பமும் – மெனார்ட் பிரெஞ்சு இலக்கியத்தின், கலாசாரத்தின் பின்னணி கொண்டவர் – முழுக்க முழுக்க பிரெஞ்சு கலாசாரத்தில் ஊறியவர். கதையில் “a Symbolist from Nimes, a devotee essentially of Poe, who begat Baudelaire, who begat Mallarme, who begat Valery” என்று அடையாளப்படுத்தப்படுகிறார். மேலும், கதைசொல்லி வரிசைப்படுத்தும் நூல் வரிசையில் “a study of the essential metrical rules of French prose, illustrated with examples taken from Saint-Simon” என்பதுவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சுப் பின்னணியில் வேரூன்றிய ஒருவருக்கு ஸ்பானிய இலக்கியத்தைப் புரிந்து அதை மீளுருவாக்கம் செய்ய விரும்புவது விந்தையிலும் விந்தை. கதையில் மெனார்ட் ஒரிடத்தில் விளக்குவது மாதிரி அவரால் “குயிக்ஸாட்” இல்லாத உலகை அவரால் எளிதில் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. அவர் மேலும் சொல்கிறார் – “குயிக்ஸாட் ஒரு தற்செயல். அது தேவையில்லை. கூறியது கூறல் இல்லாமல், அந்த நாவலை என்னால் எழுத முடியுமென என்னால் முன்கூட்டியே திட்டமிட முடியும்”

    (3) பகடியையும் எள்ளலையும் தாண்டி எதை விளையாட்டுத்தனமாக இந்தக் கதை ஆராய முனைகிறது? – ஓர் இலக்கியப் படைப்பை அணுகும் போது நாம் அதன் சூழல் சார்ந்த தகவல்களையும் நம்முடைய பிரக்ஞைக்குள் இழுத்து வருகிறோம் – ஆசிரியரின் அடையாளம், அவர்கள் வாழ்ந்த காலம், அந்தப் பிரதியை அவர் எப்போது எழுதினார், முதலியவற்றை.

    (4) தலைப்பே ஒரு நகைச்சுவை – டான் குயிக்ஸாட் நாவல் ஸ்பானியர்களின் கலாசார அடையாளம்! கதையின் தலைப்பை வாசிக்கும்போதே – Pierre Menard, Author of the Quixote – ஒவ்வொரு ஸ்பானியனும் புன்முறுவல் பூத்து ஏதோ பகடி என்பதை புரிந்து கொள்வான் அல்லது “இது என்ன கிறுக்குத்தனம்” என்பான். உதாரணமாக “கம்ப ராமாயணம் – ஜெயகாந்தன் எழுதியது” என்பது போலத்தான்! (படைப்புக்கு கம்பர் இட்ட பெயர் – இராமாவதாரம் – என்பது தெரியும்!)