Subscribe to continue reading
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
பிரேசிலின் ரியோ-டீ-ஜெனீரோ நகரில் உள்ள புனித ஜோசப் மருத்துவமனையில் நான் பிறந்தேன். அது ஒரு சிரமமான பிரசவமாக இருந்தது. எனவே, என் அன்னை நான் உயிர் பிழைக்க அருள் புரியுமாறு புனித ஜோசப்பை வேண்டிக்கொண்டார். நான் பிறந்த நாள் முதலே புனித ஜோசப் என் வாழ்வை தாங்கிப்பிடிக்கும் தூணாக விளங்குகிறார். நான் 1987இல் முதல்முறையாக சாண்டியாகோ (ஸ்பெய்ன்) புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பிய ஒவ்வொரு வருடமும் 19ந் தேதி மார்ச் அன்று – புனித ஜோசப்பின் பெயரில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறேன். இதில் என் நண்பர்களையும், நேர்மையும் கடின உழைப்பும் கொண்டு தம் வாழ்க்கையை ஒட்டும் மற்றவர்களையும் அழைக்கிறேன். செய்யும் பணியின் மூலம் தத்தம் கௌரவத்தை காக்க முயலும் எல்லாருக்காகவும் இவ்விருந்தின் தொடக்கத்தில் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். வேலையில்லாமலும் வருங்கால நம்பிக்கை இல்லாதவருக்காகவும் கூட நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
பிரார்த்தனைக்கு முன்னர் நானளிக்கும் சிறு அறிமுகவுரையில் புதிய ஏற்பாட்டில் ‘கனவு” என்கிற சொல் ஐந்து முறை மட்டுமே வருகிறது என்பதை நினைவுறுத்துவது வழக்கம். அந்த ஐந்தில் நான்கு முறை அந்தச் சொல் ஜோசப் என்கிற தச்சனைப் பற்றி குறிப்பிடும் பகுதிகளிலேயே வருகிறது. இச்சொல் வரும் எல்லா இடங்களிலும் ஜோசப் ஏற்கெனவே நிச்சயித்திருந்த திட்டத்திற்கு மாறான முடிவுகளை எடுக்க ஒவ்வொரு முறையும் தேவதையொன்று வற்புறுத்துகிறது.
ஜோசப்பின் மனைவி கர்ப்பம் தறித்திருந்தாலும், அவளை விட்டு நீங்காதிருக்குமாறு தேவதை கேட்டுக் கொள்கிறது. “அண்டை அயலார் இதைப் பற்றி வம்பு பேசுவார்களே?” என்று ஜோசப் தேவதையுடன் வாதிட்டிருக்கலாம். ஆனால், ஜோசப் தன் வீடு திரும்பி, தனக்கு அளிக்கப்பட்ட வாக்கின் மேல் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
தேவதை அவரை எகிப்து செல்லுமாறு கூறுகிறது. இதற்கு அவருடைய பதில்: ”இங்கு என் தச்சு வேலை இருக்கிறது; என் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இவற்றை விட்டுவிட்டு நான் ஏன் போக வேண்டும்?” என்று இருந்திருக்கலாம். ஆனால் அவர் தன் எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு அறியாப் பிரதேசத்துக்கு செல்கிறார்.
தேவதை அவரை எகிப்திலிருந்து திரும்பி வருமாறு சொல்கிறது. ஜோஸப் “என்ன? இப்போதா? இப்போது தானே தட்டுத்தடுமாறி ஒரளவு செட்டிலாகியிருக்கிறோம். இங்கிருந்து ஏன் கிளம்ப வேண்டும்?” என்று எண்ணியிருக்கலாம்
ஒவ்வொரு முறையும் பகுத்தறிவுக்கு மாறாக முடிவெடுத்து தன் கனவுகளைப் பின் தொடர்ந்து செல்கிறார் ஜோசப். இவ்வுலகில் எல்லா மனிதர்களுக்கும் வகுக்கப்பட்ட பாதையில் – குடும்பத்தை காத்தல் மற்றும் ஆதரவு காட்டல் என்ற பாதையில்– தானும் போக வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். புரிதலுக்கு அப்பாற் பட்ட சில செயல்களை செய்தாலும், எத்தனையோ ஆயிரமாயிரம் ஜோசப்கள் போல, அவரும் இக்காரியத்தில் தன்னை முழூமூச்சுடன் ஈடுபடுத்திக்கொள்ள முயல்கிறார்
பின்னால் அவருடைய மனைவியும், ஒரு மகனும் கிறித்துவத்தின் தூண்களாக ஆகிறார்கள். உழைப்பாளி என்ற மூன்றாவது தூண் இயேசுவின் குடும்ப காட்சிகளை சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் தின விழாக்களிலோ, அல்லது அவரின் மேல் சிறப்பு பக்தி கொண்ட என்னையும் மற்றும் தச்சர்களைப் பற்றி புத்தகம் எழுதிய நண்பர் லியோனார்டோ போஃப் போன்றவர்களாலோ (நான் அந்த புத்தகத்துக்கு ஒரு முகவுரை எழுதியிருக்கிறேன்) மட்டும் அவ்வப்போது நினைவுறுத்தப்படுகிறார்.
எழுத்தாளர் கார்லோஸ் ஹெய்டோர் கோனி அவர்கள் எழுதிய, நான் இணையத்தில் வாசித்த வரிகளை கீழே தருகிறேன் :-
”கடவுளை அறிந்து கொள்ளவே முடியாது என்ற நிலைப்பாடும், தத்துவார்த்த, ஒழுக்க மற்றும் மதரீதியாக கடவுளை ஏற்க மறுக்கும் கொள்கையும் கொண்ட என்னைப் பார்த்து – மரபார்ந்த சில அருட் தொண்டர்களின் மேல் எனக்கிருக்கும் பக்தியைப் பற்றி மக்கள் சில சமயம் வியக்கிறார்கள். என் தேவைகளுக்கோ என் பயன்பாடுகளுக்கோ கடவுள் என்கிற கருத்தியல் மிக தூரமானது. ஆனால் மண் அஸ்திவாரங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும் அருட்தொண்டர்கள் – என் வியப்புக்கு மேலானவர்கள் ; என் பக்திக்கு தகுதி வாய்ந்தவர்கள்.
புனித ஜோசப் இவர்களில் ஒருவர். ஆகமங்கள் அவர் சொன்னதாக அவருடைய ஒரு சொல்லையும் பதிவு செய்யவில்லை. வெறும் சைகைகளையும் vir Justus – ஒரு நேர்மையான மனிதன். அவர் நீதிபதியாக வேலை செய்யவில்லை; தச்சராக இருந்தார் என்று ஒரே ஒரு விளக்கமான குறிப்பையும் தவிர. எனவே, அனைத்துக்கும் மேல், அவர் நல்லவராக இருந்திருப்பார் என்பதை நாம் எளிதில் ஊகித்து உணரலாம். ஒரு நல்ல தச்சர் ; ஒரு நல்ல கணவன் ; உலக வரலாற்றை இரண்டாகப் பிரிக்கப்போகும் ஒரு மகனுக்கு நல்ல தந்தை”
கோனியின் அழகான வார்த்தைகள். இருந்தாலும் “இயேசு இந்தியா சென்று இமய மலையில் வாழ்ந்த குருக்களிடமிருந்து ஞானம் பெற்றார்” என்பது மாதிரியான பிறழ்வான கூற்றுகளை நான் அடிக்கடி படிக்கிறேன். நான் உறுதியாக நம்புவது இதுதான் : எந்த மனிதனாலும் அவனுக்கு வாழ்க்கை தந்திருக்கிற பணியை புனிதமானவொன்றாக மாற்ற முடியும் ; இதை இயேசு கற்றதும் ஜோசப் என்கிற நேர்மையான மனிதன் மேசை, நாற்காலி மற்றும் கட்டில்கள் ஆகியவற்றை செய்யக் கற்றுக்கொடுக்கும் போது தான்.
என்னுடைய கற்பனையில், எந்த மேசையில் வைத்து இயேசு ரொட்டியையும் திராட்சை ரசத்தையும் புனிதப்படுத்தினாரோ, அந்த மேசை ஜோசப்பினால் செய்யப்பட்டிருக்கும் என்று எண்ண விரும்புகிறேன். இல்லையெனில், பெயர் தெரியா ஒரு தச்சனால் செய்யப்பட்டிருக்கும். நெற்றி வியர்வை சிந்த உழைத்து சம்பாதித்த ஒரு தச்சனால் செய்யப்பட்டிருக்கும். இதனாலேயே, அம்மேசையில் அற்புதங்கள் நிகழ்த்த அனுமதி கிடைத்திருக்கும்.
(TRANSLATION OF THE ESSAY – “THE MAN WHO FOLLOWED HIS DREAMS” – FROM THE BOOK – “LIKE THE FLOWING RIVER” WRITTEN BY PAULO COELHO)