அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார்.
—-
லட்சியம் என்பது வெறுமை அது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க ஒரு நிழல். அதை அடைய வேண்டுமெனும் பேராசை, இப்போதே உன் சுமையை அதிகப்படுத்த வேண்டாம். உன் நரம்புகளுக்குள் எதிர்பார்ப்பின் ரத்தத்தை பாய்ச்சிவிடாதே. நரம்புத் திசுக்களைச் சுற்றி ரத்தம் ஓடுவது இயற்கை; ஆனால் நரம்பிழைக்குள் ரத்தம் ஓடுவது இயற்கையல்ல.
லட்சியம் என்பது கற்பனை கற்பனை நிகழ்ந்துவிடும் என்ற உறுதி அதன் ஈர்ப்பில் லயித்திருப்பது! – அடுத்த வார விருந்துக்கு இப்போது பட்டினி கிடப்பது
போட்டி ஒரு கற்பனை யார் மீது, எதன் மீது, போட்டி?
தான் நடக்கும் பாதையில் யாரோ வந்துவிடுவார்கள் எனும் அதீத பீதி, இன்னொரு பாதையில் நடப்பவரைத் தள்ளிவிடும் எண்ணம் — நம் கற்பனையில் மட்டுமே உள்ளது போட்டியுணர்வு!
நம் இலக்கை நாம் அடைவதும், அவன் இலக்கை அவன் அடைவதும் போட்டியுணர்வின் அடிப்படையில் தான் என எண்ணுதல் — மணற்பரப்பில் தெரியும் நீர்க்காட்சி மேலான தாகம்!
எதிர்காலத்தின் ஏதோ ஒரு புள்ளியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருத்தல் — கனவு ஆப்பிளின் கற்பனைச் சுவைபார்த்தல்.
போர்வைக்குள் தூக்கம் கனவு வலைக்குள் இயக்கம் கொத்த வரும் பாம்பிலிருந்து தப்புதல் சுலபம் போர்வையை விலக்கி கண்விழித்தல் பாம்பை இல்லாமல் ஆக்கி விடும்.
கஷ்மீரின் இஸ்லாமியமயமாக்கம் 14ம் நூற்றாண்டில் தொடங்கியது. இந்து-பவுத்த மக்கள் பெரும்பான்மையாக இருந்த நிலப்பரப்பு எப்படி இஸ்லாமியமயமானது என்ற கேள்விக்கான விடைகளைத் தேடிப்போனபோது கிடைத்தது – அலீ ஹம்தானி – எனும் பெயர். இரானிலிருந்து எழுநூறு சீடர்களோடு வந்து சாதாரண கஷ்மீரிகளை இஸ்லாம் பக்கம் ஈர்த்தவர் ஹம்தானி.
காஷ்மீரின் ஆளும் ஷா மிர் வம்சத்து மன்னர்களை இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைபடுத்தி முழுக்க முழுக்க கஷ்மீரை இஸ்லாமியமயமாக்க வலியுறுத்தினார். இருப்பினும், இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் வேகம் பற்றி மிர் சயீத் அலி ஹமதானி-க்கும் சுல்தான் குதுப் அல்-தீனுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது. கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்து கொள்ள முடியாமல் சயீத் அலி ஹமதானி காஷ்மீரை விட்டு வெளியேறினார்.
இரானின் உயர் கலாச்சாரத்தை கஷ்மீர் பண்பாட்டு நிலப்பரப்பில் புகுத்த ஹம்தானிக்குப் பின் வந்த சீடர்கள் தொடர்ந்து முயன்ற போது எழுந்த மக்கள் இயக்கம் ரிஷி மரபு. இவ்வியக்கத்தின் நிறுவுனர் – நந்த் ரிஷி என்று அழைக்கப்படும் நூருத்தின் வலி. ஷேக் உல் ஆலம் எனும் சிறப்புப் பெயராலும் இவர் அறியப்படுகிறார்.
நந்த் ரிஷி காஷ்மீரிகளின் ஆன்மீக மற்றும் சமூக விவகாரங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது கவிதைகள் மற்றும் போதனைகள் பாமர மக்களை பரவலாக சேர்ந்தடைந்தன. உள்ளூர் மக்களால் நந்த் ரிஷியின் பல்வேறு பாடல் வரிகள் அன்றாட வாழ்வில் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டது. இது இன்றளவும் தொடர்கிறது. ஆன்மிகம், பக்தி, உண்மைத் தேடல் ஆகிய கருப்பொருள்களைத் தம் கவிதைகள் வாயிலாக ஆராய்ந்தார் நந்த் ரிஷி.
நந்த் ரிஷியின் சம காலத்தவர் லல்லா எனப்படும் லால் டேட். சைவ சமய சித்தரான லல்லா கஷ்மீரி மொழியின் முதல் இலக்கியவாதியும் கூட. நந்த் ரிஷி லல்லாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்றும் ரிஷியின் தாயார் லல்லாவின் நெருங்கிய தோழி என்றும் கூறப்படுகிறது. இந்து லல்லா – இஸ்லாம் நந்த் ரிஷி – இவர்கள் பற்றி ஏராளமான தொன்மைக்கு கதைகள் கஷ்மீர் மண்ணில் புழங்குகின்றன. ஆபப்ரம்ஷ – பிராகிருத மொழியை விட்டு கஷ்மீரி மொழியைப் பேசத் தொடங்கியிருந்தது கஷ்மீர். இந்து-பவுத்த சமூகத்திலிருந்து இஸ்லாம் சமயத்தின் பரவலாக்கத்தையும் கண்டு கொண்டிருந்தது பள்ளத்தாக்கு. நிலம் அதிரும் மாற்றங்களுக்கு நடுவே தூர வெளிச்சமாய் கஷ்மீரின் பண்பாட்டுத் தொடர்ச்சியை உறுதி செய்தனர் இந்த இரு ஆளுமைகள். லல்லாவின் “வாக்”, ரிஷியின் “ஷ்ருக்” – தனித்துவமிக்க வடிவங்களில் இருவரும் புனைந்த கவிதைகள் “கஷ்மீரியத்”தின் வேர்கள்!
மரணம் ஒரு சிங்கம் எப்படி அதனிடமிருந்து தப்பிக்க முடியும்? ஆட்டு மந்தையிலிருந்து ஆட்டுக்குட்டியைப் போல அது உன்னைத் தூக்கிச் செல்லும்
——————————————————————
பயம், பற்று, வன்முறை எண்ணம் நான் தவிர்த்தவை வாழ்நாள் முழுதும் நான் நடந்தது ஒற்றைப்பாதை சிந்தனையின் நீரில் குளித்து ஆனந்தத் தனிமை எனும் தங்குமிடம் நோக்கி நடந்தேன்
——————————————————————
முடிந்தால் பசித்தவர்க்கு உணவளி அம்மணமானவரின் ஜாதியைக் கேட்காதே ஆயிரம் மடங்கு அறத்தை ஆதாயமாய்ப் பெறு அன்புச் சகோதரரே, நந்தா அதை ஒருபோதும் இழக்க மாட்டீர்
——————————————————————
வீட்டு வாசலில் விழிப்பில் அமர்ந்திருப்பவருக்கு அவரது சொந்த சர்பத்தை அவர் வழங்குவார்: அவருடைய பக்தர்கள் வேறு யாரோ, ஆனால் ஒரே ஒரு பிரார்த்தனையில் அவர் ஆசீர்வதிப்பவர், செழிப்படைவார்
——————————————————————
என் பக்கத்தில் அவன் அவன் பக்கத்தில் நான் அவனுடன் ஆனந்தமாக உணர்கிறேன் வீணில், அவனைத் தேடி எங்கோ சென்றேன் என் நண்பனோ எனக்காக என் வீட்டில் எழுந்தருளினான்
——————————————————————
“சிவ சிவ”வெனும் கோஷம் சிவனை எழுப்பாது காங்கிர் கங்குகளில் நீயிடும் நெய்யை உட்கொண்டு வலுவாக இரு அல்லது உனக்குத் தேவையில்லையெனில் மற்றவர்க்குக் கொடு
——————————————————————
One of the oldest Sufi Shrine in Kashmir, dedicated to Nund Rishi – Charar e SharifSrinagar International Airport is named after Nund Rishi – Sheikh ul Alam Airport