Tag: ஆடை

  • That’s the question

    சக-அலுவலர் தந்த அறிமுகத்தில் என்னுடைய கார் ஓட்டுனராக ஒரு மாதம் முன் வேலையில் சேர்ந்தார் வீரையா (உண்மையான பெயர் இல்லை). தும்கூரைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்து கிட்டத்தட்ட அனாதையைப் போல வளர்ந்தவர். பதினாறு வயதிலேயே வேலைக்கு வந்துவிட்டதாகச் சொன்னார். நன்றாக பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்துகிறார். வேலைக்கு வருவதில் தாமதிப்பதில்லை. பெங்களுரின் சந்து-பொந்து அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார். கசப்பான அனுபவம் எதுவும் அவருடன் நிகழவில்லை. இன்று ஒரு சம்பவம் நடந்தது. இது ஏற்கனவே நடந்த ஓர் உரையாடலின் தொடர்ச்சி எனலாம். பத்து நாட்களுக்கு முன் இந்திரா நகர் போகும் வழியில் எம் எஸ் பால்யா என்னும் இடத்தைக் கடந்து போக வேண்டியிருந்தது. பெங்களூரில் இருப்பவர்கள் அனைவரும் அந்தப் பகுதி ஒரு குறிப்பிட்ட மதச்சாரார் வசிக்கும் இடம் என்று அறிவார்கள். அந்தப் பகுதியைக் கடக்கும்போது வீரையா அண்டைய நாட்டின் பெயரைக் குறிப்பிட்டு அந்த நாட்டைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்றார். எனக்கு சுர்-ரென்று கோபம் தலைக்கேறியது. “அவன் வசிக்க உன் வீட்டை வாடகைக்குத் தர நீ தயாராக இல்லாதபோது அவன் எங்கு போய் வசிப்பான்? உன்னை நேபாளத்துக்காரன் என்று சொன்னால் நீ ஒத்துக் கொள்வாயா?” என்று ஒரு பிடி பிடித்தேன். “சாரி சார், தெரியாம பேசிட்டேன். நானுண்டு என் வேலையுண்டு என்று இருப்பவன் நான்” என்று தாழ்ந்த குரலில் பேசினார். நானும் அவ்விஷயத்தை அதோடு விட்டுவிட்டேன். இன்று காலை அலுவலகம் செல்லும் போது ரஹ்மானின் இசையில் “ஜிக்ர்” எனும் பாடலைக் காரில் ஒலிக்க விட்டேன். “அல்லாஹு” என்ற கோஷத்துடன் பாடல் தொடங்கிற்று. மனதை இளக வைத்து பக்தியுணர்வை கிளர்த்தும் அபாரமாக கீதம் அது. இப்பாடலை பல வருடங்களாக அடிக்கடி கேட்டு வருகிறேன். “ஹப்பிரப்பி ஜல்லல்லா” என்று குழுவினரின் குரல் ஒலிக்கத் தொடங்கியதும், காரைச் செலுத்திக் கொண்டிருந்த வீரையா சின்ன “இயர் போனை” எடுத்து இரண்டு காதுகளிலும் அணிந்து கொண்டார். அவர் தனியாக ப்ளூ டூத்தில் மொபைல் வாயிலாக வேறு ஏதேனும் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று முதலில் நினைத்தேன். நான் கேட்கும் பாடலின் “வால்யூமை” அதிகமாக வைத்திருந்தேன். இந்த சத்தத்தில் ப்ளூ டூத்தில் ஒலிக்கும் பாடல் அவர் காதில் விழுமா என்ற கேள்வி எழுந்தது. “ஜிக்ர்” பாடல் முடிவடைந்ததும் “ஓம் சிவோஹம்” என்ற “நான் கடவுள்” படப்பாடல் ஒலித்தது. “ஹரஹர ருத்ராயா” என்று சுலோகப் பகுதி தொடங்கியதும் தனது காதில் இருந்த இயர் போன்களைக் கழட்டினார் வீரையா. அதனை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்ததும் ஓர் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார். “நான் போட்ட பாடல் புடிக்கலைன்னு காதுல இயர் போனைச் செருகிக்கிட்டியா?” என்று கேட்டேன். “நீங்க முன்னாடி வச்ச பாட்டு எனக்குப் புரியலை..அதனாலத்தான்…” என்றார். “ஓ அப்ப சமஸ்கிருதமும் தமிழும் நல்லா புரியுமா உங்களுக்கு?” என்று கேலியாகக் கேட்டேன். என்னுள் எழுந்த உணர்வை அருவெறுப்பு என்றுதான் வர்ணிக்க முடியும். இசைக்கும் மத வெறுப்பின் ஆடையா? எங்கு வந்து சேர்ந்திருக்கிறேன்? லதாவின் “பாயோஜி மைனே ராம் ரதன் தன் பாயோ” என்ற பஜனையை வைக்கும் போதெல்லாம் மெய் சிலிர்த்துப் போகும் எனது பழைய ஓட்டுனர் அலி ஞாபகத்துக்கு வந்தான். கான்பூர் நகரத்தில் பிறந்தவன். அவன் பெரிய தாத்தா ஐம்பதுகளில் பாகிஸ்தானுக்குச் சென்று செட்டில் ஆனதால் அவனுடைய அப்பா கடைசி வரை பெரியப்பாவுடன் பேசாமலேயே இருந்தார் என்று பெருமையுடன் அடிக்கடி சொல்லிக் கொள்பவன். அவன் எங்கே? வீரையா எங்கே? மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு வரை ஓட்டிக் கொண்டு வந்த வீரையாவிடம் எதுவும் பேசவில்லை. நாளை வேலைக்கு வரவில்லை என்றும் ஒரு நாள் லீவு வேண்டும் என்று சாவியைத் தரும் போது சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன். எந்தப் பிரச்னையும் தராத ஓட்டுனர் என்று பேசாமல் இருப்பதா? அல்லது என் காரில் நான் ஒலிக்கவிடும் பாடல்கள் அவருக்குப் பிடிக்கவில்லை என்பதால் வேறு வேலை தேடிக் கொள் என்று கரிசனத்துடன் நடந்து கொள்வதா? Thats the question!

  • கொட்டும் பனிப்பொழிவில் – பெருந்தேவியின் கவிதை குறித்து


    கொட்டும் பனிப்பொழிவில்

    புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்
    அவனாகத்தான் இருக்க வேண்டும்
    அவன் எப்படி இங்கே?
    அவன் மாதிரிதான் தெரிகிறது
    அங்கே இரவு
    அவன் கனவில் பனி பொழிகிறது
    புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி
    அவள் எப்படி அங்கே?
    அவள் மாதிரிதான் தெரிகிறது
    விதிர்த்து எழுந்திருக்கிறான்
    ஆடைவிலகிய தொடையிலிருந்து
    தனது காலை மெல்ல எடுக்கிறான்
    சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்
    அவனுடைய கனவு முடிந்துவிட்டது
    அவளது பகல் முடிய
    பல மணி நேரம் இருக்கிறது

    அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்
    அவன் மாதிரி இருந்த அவன்
    அவனாக இருந்திருந்தால்
    தாண்டிச் சென்றிருக்கமாட்டான்
    அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்
    கண்களுக்குள் பொழிகிறது பனி
    எதுவும் நடக்காததைப் போல

    அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்
    அவள் மாதிரி இருந்த அவள்
    அவளாக மட்டும் இருந்திருந்தால்
    ஆடை விலகிய தொடைக்கு மேல்
    மீண்டும் தன் காலைப் போடுகிறான்
    எதுவும் நடக்காததைப் போல

    பெருந்தேவி

    கவிதை என்பது கருத்தையோ உணர்வையோ பகிரும் விஷயம் என்ற பொதுவான வரையறை கவிதையை கவிதையாகக் காட்டுவது எது என்ற கேள்வியை எழுப்புகிறது. நேரடியாக ஓர் உரைநடையாகவே அதனைச் சொல்லிவிடலாமில்லையா? பின் கவிதை எதற்கு வேண்டும்?

    கவிதை புரிவதில்லை என்று பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு வாசிக்கப் பழகவில்லை என்று எளிதில் எதிர்வினை தந்துவிட முடியும் என்றாலும், அந்தக் குற்றச்சாட்டு ஏன் வைக்கப்படுகிறது என்று சிந்திக்கும்போது எனக்குத் தோன்றுவது – கவிதை ஒரு வடிவம். அதன் வடிவத்தை உணரப் பழகினாலொழிய கவிதையை ரசிக்க முடியாது!

    வடிவம் எதைச் சார்ந்தது? மொழியையா, சொல்லையா, வரிகளின் அடுக்கையா,…….மொழி சார்ந்த சொல் சார்ந்த உத்திகள் கவிதைகளின் இன்றியமையா அங்கமாக இருந்த காலங்கள் உண்டு. இவ்வுத்திகளை உதறிக் கிளர்ந்தெழுந்த நவீனக்கவிதைகள் தகவலை, படிமத்தை, உணர்வைப் பகிரும் விதத்தில் காட்டும் புதுமைப்படுத்தல்களை வடிவம் என்பதாகக் கொள்ளலாம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு முகவாகில் இருப்பது போல எழுதப்படும் ஒவ்வொரு நவீனக் கவிதையும் ஒவ்வொரு வடிவத்தை பூணுகிறது. அகவற்பா, வெண்பா முதலான இலக்கணம் சார்ந்த வடிவங்கள் காலாவதியான பிறகும் ‘சொன்னதைத் திரும்பச் சொல்லல்” கவிதையின் அம்சமாக இல்லாமல் போகவில்லை. ஆனால் “சொல்லும் விதத்தை மாற்றாமல் சொல்லுதல்” நிச்சயம் தேய்வழக்காகிவிட்டது.

    எழுதப்படும் வடிவங்கள் உணரப்படாமல், ஈர்க்காமல் போகும்போது வாசகர்கள் அதனை “புரியவில்லை” என்கின்றனர். மொழிரீதியான புரிதலை நாம் இங்கு பேசவில்லை. கவிதையை உள்வாங்கி ரசிக்க அதன் வடிவ அமைப்பை உணர்தலின் அவசியத்தைப் பேசுகிறோம்.

    இந்த நீண்ட பீடிகையை என்னால் சில மணி நேரங்கள் முன்னர் எழுதியிருக்க முடியாது. ஏனெனில், அப்போது பெருந்தேவி எழுதி ஃபேஸ்புக்கில் இட்டிருந்த “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதையை படித்திருக்க மாட்டேன். 

    கவிதையை முதல் முறை படித்த போது எது என்னை ஈர்த்தது?

    கொட்டும் பனியில் ஒரு புள்ளியாகத் துவங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் அவன்! – நீண்ட காலர்களுடன் நீளமான குளிர் கால அங்கியணிந்து, கௌபாய் தொப்பியைத் தறித்துச் சாலையில் நம்மை (வாசகனை நோக்கி!) வந்து கொண்டிருக்கும் ஆணுருவம் ஒரு noir படத்தின் ஆரம்பக்காட்சி போல நம் மனக்கண்ணில் ஓடத் துவங்குகிறது. – என்னை முதலில் ஈர்த்தது இந்த மனச்சித்திரந்தான்.

    அடுத்தடுத்த வரிகளை முதல் முறை வாசித்தபோது – கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது ஆற்றல் மிகு உத்தியாக என் ஆர்வத்தை நீட்டித்தது.

    “ஆடை விலகிய தொடை” – புலன்சார் சித்திரத்தை என்னுள் வரைவதோடு நிற்காமல், ஒரு புதிராகவும் வளர்கிறது. கவிதையின் இறுதியில் திரும்பவரும் “ஆடை விலகிய தொடை” “யாருடைய தொடை?” எனும் வினாவை எழுப்பி அதன் விடை என்னவாக இருக்கும் என்ற ஊகத்தின் இன்பத்தில் கவிதையனுபவம் அரும்பத் தொடங்கியது. புதிருக்கான விடை கிடைத்துவிட்டால் கவித்துவ உணர்வு விடைபெற்றுக் கொள்ளும் அபாயம் உண்டு எனும் பிரக்ஞையை அடைவது தான் கவிதை வாசித்தலின் படி நிலைகளில் உயர்வதற்கான அறிகுறி.

    மேற்சொன்ன மூன்று அம்சங்கள் “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதைக்கான உடனடி ஈர்ப்பை என்னுள் ஏற்படுத்தியவுடன், கவிதையினுள் ஆழச்செல்லும் ஆர்வம் இன்னமும் பெருகிற்று.

    அவளின் கனவில் அவன் வருவதும், அவன் கனவில் அவள் வருவதும் என இரு கனவுகள் பின்னிப்பிணைவது போல முதலில் தோன்றிற்று. Inception திரைப்படம் தோற்றுவித்த அதே உற்சாகத்தை என்னுள் கிளர்த்தியது. முதலில் அவள் கனவு காண்கிறாளா? பின்னர் அவன் கனவு காண்கிறானா? அவளின் கனவு அவனின் கனவுக்குள் நுழைந்து விடுகிறதா? என்றவாறு கனவுப்பாதையில்  திளைத்தது வடிவப்புதுமை சிந்தனையுள் நிகழ்த்திய வேதியியல் மாற்றம் – கவிதையின்பம் என்பது இத்தகைய திளைத்தல் தானோ! கவிதை ரசிக மனம் இந்தத் திளைத்தலுடன் திருப்தியுற்றுவிடவில்லை. காதலியின் உருவ அழகை ரசித்துவிட்டு அதோடு நிற்காமல் அவளின் வடிவ அழகை ரசிக்க யத்தனிப்பது போன்று – கவிதை வாயிலாக கவிஞர் சொல்ல வருவது என்ன? – தகவலா, உணர்வா, அல்லது வெறும் படிமம் மட்டுமா? முழுப்புதிரையும் அவிழ்க்க கவிதையின் வடிவத்தைக் கலைத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றிற்று 

    சில குறிப்புகளைக் கவிதையை தன்னுள் அடக்கிவைத்துக் கொண்டிருக்கிறது. “அங்கே இரவு” என்பது முதல் குறி . “அவளது பகல் முடிய பல மணி நேரம் இருக்கிறது” என்பது இரண்டாம் குறி. 

    அவளுக்கு பகல் அவனுக்கு இரவு – அவனும் அவளும் உலகத்தின் வெவ்வேறு நேர மண்டலங்களில் வசிக்கிறார்கள். Distance Love எனும் கருப்பொருளைக் கவிதை பேசுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

    கவிதை ஒற்றைக் கருப்பொருளை மட்டும் கொண்டிருக்கவில்லை. காதல் முக்கோணம் எனும் கருப்பொருளும் கவிதையில் காணக்கிடைக்கிறது. “ஆடை விலகிய தொடை” – யாருடைய தொடை எனும் கேள்விக்கான விடையை கவிதாசிரியர் தராமல் போனது வடிவமைப்பின் சிகரம் என்று நினைக்கிறேன். பல ஊகங்களை நம் மனதுள் கிளப்பிவிடுகிறது. அவன் யாருடன் படுத்திருக்கிறான்? அவன் மனைவியுடனா? காதலியுடனா? அருகில் இல்லாமல் வெகுதொலைவில் வசிப்பதால் காதலியுடனான நெருக்கத்தை அனுபவிக்க முடியாமல் இருப்பதன் காரணமாக ஏதொவொரு விலைமாதுடன் படுத்திருக்கிறானா? வாசகன் மனதில் எழும் இத்தகைய கேள்விகள் வாசிக்கும் கவிதை மீதான ஈடுபாட்டை உயர்த்துகிறது. 

    அவனுக்கு வேறு துணை இருக்கிறதெனில் வேறொரு நேர மண்டலத்தில் வசிக்கும் அவளுக்கு இதைப் பற்றி தெரியுமா என்னும் கரிசனம் வாசகனான என்னில் எழுந்தது. அவளுக்குத் தெரிந்தால் அவளது சோகம் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகும்! பனிபொழியும் தெருவில் நடப்பவன் அவனைப் போல் இருக்கிறான் என்று அவனை சற்று நேரம் நோக்கும் அவள் “இது அவனில்லை” என்று உணர்ந்த பிறகு அவள் தன் கண்களை மூடிக் கொள்கிறாள். இது அவனில்லை, அவனைத் தவிர வேறு எவனையும் இந்தக் கண்கள் காணக்கூடாது என்று தன் கண்களை மூடிக் கொள்கிறாளோ? “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரியில் கவிச்சுவை பொங்குவதை உணர வேண்டுமானால் அவள் மீதான கரிசனவுணர்வு வாசகனுள் பொங்குதல் அவசியமாகும். “கண்ணீர் விட்டு உறைந்து போய்விட்டன அவள் கண்கள்” என்பதைத்தான் “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரி சொல்கிறது என்பதாகப் புரிந்து கொண்டேன். பனி என்பது உறைந்த நீர்!   

    கவிதையில் காணப்படும் இன்னொரு குறிச்சொல் – “எதுவும் நடக்காததைப் போல”. அவன் எங்கோ, அவள் எங்கோ “எதுவும் நடக்காததைப் போல” தத்தம் இயல்பான வாழ்க்கையைத் தொடர்கின்றனர். இருவருக்குமிடையிலான நேசத்தை இருவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அவள் கண்ணீர் விடுகிறாள். அவனுடைய கனவில் “அவள் போல தோன்றுபவள் அவளில்லை” என்று உணர்ந்தவுடனேயே அவன் விழித்துக் கொண்டுவிடுகிறான். உடனடியாக அவனுடைய படுக்கைத்துணையின் மீது போட்டிருந்த காலை விலக்கித் திரும்பப்படுத்துக் கொள்கிறான். 

    “கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது” என்ற அம்சம் முதல் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று ஏற்கனவே சொன்னேனில்லையா? அது தோற்ற மயக்கம் என்பது கவிதையின் மூன்றாம் மட்ட அர்த்தப்படுத்தலில் (அதாவது முழுக்கக் கலைத்துப் போடுதலில்) விளங்கிவிடுகிறது. இந்தத் தோற்ற மயக்கம் சில வரிகளை ஒழுங்கு மாற்றிப் படித்துப் பார்க்கும் போது விலகி விடுகிறது.

    கவிதையை பத்தி பிரித்து வாசித்துப் பார்ப்போமா?  (கவிஞர் என்னை மன்னிப்பாராக!)

    புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்

    அவனாகத்தான் இருக்க வேண்டும்

    அவன் எப்படி இங்கே? 

    அவன் மாதிரிதான் தெரிகிறது     (1)

    — 

    அங்கே இரவு

    அவன் கனவில் பனி பொழிகிறது

    புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி

    அவள் எப்படி அங்கே?

    அவள் மாதிரிதான் தெரிகிறது

    விதிர்த்து எழுந்திருக்கிறான்

    ஆடைவிலகிய தொடையிலிருந்து

    தனது காலை மெல்ல எடுக்கிறான்

    சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்

    அவனுடைய கனவு முடிந்துவிட்டது  (2)

    அவளது பகல் முடிய

    பல மணி நேரம் இருக்கிறது         (3)

    அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்

    அவன் மாதிரி இருந்த அவன்

    அவனாக இருந்திருந்தால்

    தாண்டிச் சென்றிருக்கமாட்டான்

    அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்

    கண்களுக்குள் பொழிகிறது பனி

    எதுவும் நடக்காததைப் போல         (4)

    அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்

    அவள் மாதிரி இருந்த அவள்

    அவளாக மட்டும் இருந்திருந்தால்

    ஆடை விலகிய தொடைக்கு மேல்

    மீண்டும் தன் காலைப் போடுகிறான்

    எதுவும் நடக்காததைப் போல          (5)

    பத்தி எண்கள் 1 மற்றும் 4 – அவளின் கண்ணோட்டம்

    பத்தி எண்கள் 2 மற்றும் 5 – அவனின் கண்ணோட்டம்

    பத்தி எண் 3 – கவிதை சொல்லியின் குரல் – தொலைதூரத்தை, நேர மண்டலத்தை பூடகமாக சுட்டுகிறது

    பத்தி எண் 3 நீங்கலாக, கவிதை இரண்டு கண்ணோட்டத்தில் செல்கிறது. இரண்டு கண்ணோட்டங்களும் வரிகளை அடுக்கும் விதத்தில் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. அவன் கனவு காண்பது கவிதையில் வருகிறது. கவிதை முழுக்கவும் அவன் கனவு காணவில்லை. ஒரு கட்டத்தில் அவன் விழித்துக் கொள்கிறான். அவள் கனவு காணவில்லை. யதார்த்தத்துக்குள் தான் இருக்கிறாள். வரிகளை பிசைந்து எழுதப்பட்டுள்ள விதத்தில் கனவு, கனவுக்குள் கனவு, யதார்த்தத்திலிருந்து கனவு, கனவிலிருந்து யதார்த்தம் என்பன போன்றவை மயக்கத்தைத் தோற்றுவித்து கவிதையைச் சுவையுள்ளதாக்குகின்றன. இந்த மயக்க விளைவு இல்லாமல் போயிருந்தாலும் இந்தக் கவிதை தன்னளவில் முழுமையான கவிதையாகவே திகழ்ந்திருக்கும், எனினும் குழந்தைக்கு என்ன உடை அணிவிப்பது என்ற முடிவை எடுக்கும் தாயைப் போல கவிஞரே தீர்மானிக்கிறார் கவிதை பூணும் வடிவத்தை!

    சொல்ல வரும் எளிதான கருத்து, இரண்டு படிமங்கள், வடிவப்புதுமை – மூன்றையும் சரியான விகிதத்தில் கலந்து ஓர் அரிய கவிதையனுபவத்தைத் தருகிறார்  பெருந்தேவி. 

    ஒரு கவிதை நம்மை ஈர்ப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது. உணவு, உடை, நிறம் போல கவிதையின் பொருள் கொள்ளும் முறை அவரவர் பார்வை. எனவே, இந்தக் குறிப்பு தரும் பொருள் மட்டுமே இக்கவிதைக்கான ஒரே பொருள் என்று கொள்ள முடியாது. இக்கவிதையை வாசிக்கும் இன்னொருவர் வேறுவிதமாகப் பொருள் கொள்ளக்கூடும். கவிதை எழுதி முடிக்கப்பட்ட பிறகு அது கவிஞனைச் சாராத தனித்த இருப்பைக் கொள்கிறது என்று சொல்வது இதனால்தான். இதன் காரணமாகவே ஒவ்வொரு வெற்றிகரமான கவிதையையும் அதன் வாசகர்களே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

  • புனே டயரி

    நேற்று நடந்தது

    புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க மறந்துவிட்டேன். “ஃபால்ஸ் அலார்ம்” என்கிறார் வாட்ச்மேன். மற்ற பிளாட்டுகளிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. “இது இங்கே அடிக்கடி நடக்கிறது தான்” என்று வாட்ச்மேன் சொன்னதும் “எது? சாவி வீட்டுக்குள்ளேயே இருக்க கதவு வெளியிலிருந்து மூடிக் கொள்வதா?” என்று கடுப்புடன் கேட்கிறேன். “விசிட்டர் லௌன்ஜில் உட்கார்ந்துகிட்டே தூங்குங்க நாளைக்காலை பார்ப்போம்” என்கிறார். விசிட்டர் லௌன்ஜில் காற்றின் சத்தம் கேட்கவில்லை. மழை சத்தம் இல்லை. ரிசப்ஷனில் உறங்கும் வாட்ச்மேனின் பலமான குறட்டை சத்தம் மட்டும். எனக்கு கோபம். போர்வையை எடுத்து வந்திருக்க வேண்டும்! சட்டையையாவது அணிந்து வந்திருக்க வேண்டும். சாவியை மறக்காமல் எடுத்து வந்திருந்தால் செருப்பு அணியாததோ சட்டை அணியாததோ பெரிய தப்பாக தெரிந்திருக்காது. இரு கோடுகள் தத்துவம் என்று ஏதோ சொல்வார்களே!

    புனே ஹார்ரர்

    நகரத்துக்கு நான் வேண்டா விருந்தாளியோ! என் கேள்வியில் நியாயமிருக்கிறது என்றே நம்புகிறேன். திகிலிசை போன்று வீசும் காற்று, தானே மூடித் தாழ் போட்டுக்கொள்ளும் கதவு, ஆளரவமற்ற, காலியான ப்ளாட்டுகள், ம்….வார இறுதியில் இன்னொரு ஹார்ரர்…அறையில் தனித்திருந்து சலித்துப் போய் ஆறு மணியளவில் வாக்கிங் போகலாம் எனக்கிளம்பினேன். நேற்றிரவு இருந்த வாட்ச்மேனைக் காணோம். வரவேற்பு லாபியில் ஈ, காக்காய் இல்லை. நானூறு மீட்டர் தொலைவில் இருந்த கேட் வரை ஒருவரும் காணவில்லை. கேட்டைத் தாண்டி சாலையில் வந்தாலும் நிலைமையில் மாற்றமில்லை. ரோடில் கார்களோ, லாரிகளோ, ஆட்டோ ரிக்ஷாக்களோ- எவற்றையும் காணோம். ஒரு (மஹாராஷ்டிர) வடைக் கடை இருந்தது. ஷட்டர் போட்டிருந்தார்கள். ஷட்டரை லேசாகத் திறந்து வெளியில் நின்றிருந்த ஆளுக்கு ஒரு பொட்டலத்தை கடைக்காரர் மர்மமான முறையில் கொடுத்துக் கொண்டிருந்தார். பொட்டலத்தை வாங்கிக் கொண்டவர் அடுத்த கணம் காணாமல் போனார். அவர் போன ஸ்கூட்டர் சத்தமிட்டதா என்று இப்போது ஞாபகமில்லை. கடைக்குச் சென்று ஷட்டரைத் தட்டி “டீ கிடைக்குமா?” என்று கேட்டேன். என் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என்பது போல் பார்த்தார். “டீ இல்லை, வடை பாவ் மட்டும் இருக்கிறது” என்று சொல்லி யோஜிம்போ திரைப்படத்தில் வரும் விடுதிக்காரர் பாத்திரத்தின் எக்ஸ்பிரஷனைத் தந்தார். நான் டோஷிரோ மிஃபுனே இல்லையே! வேகவேகமாக நடந்து அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டேன். வார இறுதி லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும்?

    வாஷிங் மெஷின் புதிர்

    தங்கச்சங்கிலி இரவல் வாங்கினா- பாமா விஜயம் படப்பாடலை நான் வாழ்வேன் என்று நினைத்ததில்லை. புனேவுக்கு குடி புகுந்த பிறகு வாஷிங் மெஷினை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். வீட்டு புரோக்கர் குல்வீர் அறைகலன்களையும் வாடகைக்கு தருகிறேன் என்றான். ஐந்தாறு நாட்களாயின. வாஷிங் மெஷின் வந்த பாடில்லை. ஆடைக்குவியல் வளர்ந்து கொண்டிருந்தது. தினமும் சாவியை கேட்டில் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். சாயந்திரம் கேட்டிலிருந்து சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது “குல்வீர் வந்தாரா” எனக் கேட்பேன். யாரும் வரவில்லை என்று விடை கிடைக்கும். ஒரு நாள் பால்கனியில் நீல நிற வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. பழைய மெஷின். எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே கண்களையிழந்து பிதுங்கியிருந்தது. ஆடைக்குவியலில் அன்று அணிந்திருந்த ஆடையும் சேர்ந்தது. அடுத்த நாள் விழி பிதுங்கிய மெஷினின் இடத்தில் இன்னொரு மெஷின். அதற்கு பிளாஸ்டிக் ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்தேன். தண்ணீர் பிய்ச்சியடித்து தொப்பலாக நனைந்து போனேன். வாஷிங் மெஷின் உருவில் வந்த வாஷிங் “பேசின்” அது என்று புரிந்தது. அடுத்த நாள் வாஷிங் “பேசின்” அங்கேயே கிடந்தது. ஆனால் கூடவே இன்னொரு வாஷிங் மெஷின் சேர்ந்திருந்தது. புதிது போல் தோற்றம் அதற்கு. ஆடைக்குவியலின் உயரத்தை பார்த்து வெட்கம் தாளாமல் சில துணிகளை எடுத்து புதிதாகச் சேர்ந்திருந்த வாஷிங் மெஷினுள் போட்டேன். வரும் வார இறுதியில் தோய்த்துவிட வேண்டும். குல்வீர் சாவியில்லாமல் எப்படி வீட்டுக்குள் வருகிறான் என்ற கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது.

    தொடரும் ஹார்ரர்

    இது முற்றிலும் புதிது. இரண்டு வார இறுதிகளாக நிகழ்வுகளுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் ஒரு கதை சொல்லல் நிகழ்வு. முரகாமியின் the elephant vanishes கதையை யாரோ வாசிப்பதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கதை பற்றிய கருத்துகள் பகிரப் படுமாம். இந்த வாரம் toast masters federation-இன் ஒரு நிகழ்வு. Cyber security பற்றி சக அலுவலர் ஒருவர் உரையாற்றப் போகிறாராம்! இவையொன்றும் புதிதல்ல. எது புதிது எனில் வாராது வந்த இரண்டு அழைப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருப்பதுதான் புதிது.