Tag: ஆசை

  • ஏ ஐ 171 விமானமும் மஞ்சுநாதரும்

    ஏ ஐ 171 விமான விபத்தில் ஒருவரைத் தவிர அனைத்து பிரயாணிகளும் விமானிகளும் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் செத்துப் போயினர். ஆனால் பகவத் கீதையின் பிரதியொன்று சற்றும் கருகாமல் தப்பித்தது. இது  சமூகஊடகங்களிலும் வாட்ஸப் உரையாடல்களிலும் பகிரப்பட்டது. துளி கூட பச்சாதாபமோ, சக-உணர்வோ இல்லாத மனிதர்கள்! இவர்களின் பக்திவுணர்வு போலியானது! “எனக்கு மட்டும் அருள்! வேறு யாருக்கும் அருளாதே!” என்று இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகமன்று. “உனக்கு தேங்காய் உடைக்கிறேன், எனக்கு செல்வத்தைக் கொடு, அதைக்கொடு, இதைக்கொடு” என்னும் வியாபாரம்.  பிரார்த்தனை ஆன்மீகத்தின் முக்கியமான அங்கம். ஆனால் அது வியாபார உணர்வில் எழுவதல்ல. அதை புரிந்து கொள்ளும் நுண்ணுணர்வு இவர்களுக்கிருந்தால் ஆன்மீகத்தில் நல்ல தேர்ச்சி கண்டிருப்பார்கள்! 

    பிரயாணிகளை இறந்த பிறரைக் காப்பாற்றாமல் தன்னை மட்டும் காப்பாற்றிக்கொண்ட பகவத் கீதை பிரதி – என்று சொன்னதால் என் மீது பாய்ந்தார் அந்த வாட்ஸப் குழுவின் உறுப்பினர். “புனித நூலை ஏளனம் செய்கிறாய்” என்று என் மீது குற்றஞ்சாட்டினார். “புனித நூலை நீ புரிந்துகொண்ட  லட்சணத்தை ஏளனம் செய்கிறேன்” என்று அவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பது?

    தர்மஸ்தலா கோயிலைச் சுற்றிப் பல பத்தாண்டுகளாக நடந்த கொலை, வன்புணர்வு போன்ற குற்றச்செயல்களை மறைப்பதில் பங்கு வகித்ததாகக் கூறப்படும் தர்மகர்த்தாக்களின் கோயில் ஊழியர்களின் செய்கைகளால் அந்தக் கோயில் அசுத்தப்பட்டிருக்காதா என்ற எண்ணம் கடந்த சில தினங்களாக அலை மோத குறிப்பொன்றை பேஸ்புக்கில் எழுதினேன்.

    “சென்ற வார இறுதியில் என் மகளை அவள் கல்லூரியில் விட்டு வர மணிபால் சென்றிருந்தேன். திங்கள் காலை பெங்களூருக்குத் திரும்ப வரும் போது தவறுதலாக வாகன ஓட்டுனர் வேறு வழியில் சென்று விட அந்தப் பாதை எங்களை தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வாசலுக்கு அழைத்துச் சென்றது. தெரியாமல் இங்கு வந்து விட்டோம். மஞ்சுநாதரை தரிசனம் செய்து விடுவோம் என்ற ஆசை துளிர்விட்டது. இறைவனே அழைத்துள்ளார் எனும் வழக்கமான சென்டிமென்ட் சிந்தனை லேசாக எட்டிப்பார்த்தது. இத்தகைய சந்தர்ப்பங்களை என்றும் தவற விடாத நான் வழக்கத்துக்கு மாறாக “நிற்க வேண்டாம்…வீட்டை நோக்கிச் செல்வோம்” என்று சொன்னேன். என்னுடைய மனைவியும் கோயிலுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. தர்மஸ்தலாவின் கோயிலைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்பது காரணமாயிருக்கலாம். இது” அனுமார்” கோயிலா என்று கூட அவர் கேள்வி கேட்டார். செய்தியில் வந்து கொண்டிருக்கும் தகவல்களைப் பார்க்கும் போது தரிசனத்துக்கு நிற்காமல் சரியான முடிவை எடுத்திருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.”  

    என்னுடைய எந்த போஸ்டுக்கும் லைக்கோ கமெண்ட்டோ போடாத நெடுநாளைய நண்பர் உடனே வந்து ஆஜரானார்.

    “மீண்டும் ஒரு முறை அவரை தரிசிக்கும் வாய்ப்பினை அந்த மஞ்சுநாதர் ஏற்படுத்த வேண்டும். அவனருளாலே அவன் தாள் வணங்கி.. நம்மில் பெரும்பாலானோர் நாம் இறைவனை பார்க்க போகிறோம் என்று நினைக்கிறோம். உண்மையில் அந்த இறைவன் நம்மை பார்க்க விரும்பினால் அன்றி அது நடக்காது “

    அவர் இட்ட கமென்டின் தர்க்கப்பிழை குறித்து அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கோயிலுக்குச் செல்வதும் இறைவனைத் தரிசிப்பதும் அனைத்தும் இறைவனின் விருப்பப்படி என்ற கோட்பாட்டை சரியாகப் பொருத்தினால் கோயிலைச் சுற்றி நடந்ததாக கூறப்படும் கொடுமைகள் கூட இறைவனின் விருப்பம் என்பதாகத்தானே இருக்கும்? உரையாடல் உடனே நின்றுவிட்டது. தானாகவே வந்து கமெண்ட் போட்ட நண்பர் உரையாடலைத் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லி நிறுத்திக் கொண்டார். அவர் என்னுடன் மேற்கூடி பேசாமல் நிறுத்திக் கொண்டது அவர் விருப்பமா அல்லது 

    இறைவனின் விருப்பமா?

    தற்செயலாக தர்மஸ்தலா கோயிலைக் கடந்து பயணிக்கும் வாய்ப்பு அமைந்தது இறைவன் சித்தம் என்று நினைப்பது இயல்பான பழக்கம். அச்சமயத்தில் அங்கு நிற்காமல் பயணத்தைத் தொடர்ந்தது என்னைப் பொறுத்தவரை இயற்கைக்கு மாறான ஒரு விஷயம். ஏன் கோயிலுக்குள் நுழையவில்லை? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது உண்மைதான். அடுத்த இரண்டு நாட்கள் “தர்மஸ்தலா கொலைகள்” பற்றிய செய்திகள் பூதாகாரமாக ஆன்லைன் மீடியாக்களில் ஒலித்தபோது, பின்னோக்குப்  பார்வையில்  கோயிலுக்குச் செல்லாமல் இருந்தது சரிதான் என்ற அகவுணர்வு எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

    பகவத் கீதையைப்பற்றி மரியாதை இல்லாமல் பேசி விட்டேன் என்று சண்டைக்கு வந்தவரும் “அவன் அருளால் தான் அவனை வணங்க முடியும்” என்று சொன்ன அன்பரும் எதை மறந்து பேசுகிறார்கள்?  நியாயவுணர்வும் சக-மனிதர் சார்ந்த பரிவுணர்வும் ஆன்மீகச் செயல்முறையின் அஸ்திவாரம் என்பதை. நியாயவுணர்வற்ற, சகமனிதர் குறித்த பரிவுணர்வற்ற பக்தியுணர்வு அதிகாரத்திற்குத் துணை போகும் தன்மையை எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ளது. 

    ஸ்வதர்மம் என்று கீதையில் வரும் தத்துவக் கலைச்சொல் எதனை குறிக்கிறது?  தனக்கேயுரித்தான கடமையைப் புரிவது ஸ்வதர்மம் – இது உடல்-புத்தி சார்த்த “அபர தர்மத்தையும்” ஆன்மிகம் சார்ந்த “பர தர்மத்தையும்” ஒன்றிணைந்தது. பக்தி கலந்த அன்பும் சேவையும் பர தர்மம் எனப்படும். உலகியல் சார்ந்த பணிகள் அபர தர்மம் எனப்படும். 

    ஏ ஐ 171 விமானத்தில் உயிரிழந்த மனிதர்கள் – தப்பிப்பிழைத்த பகவத் கீதை பிரதி – இவ்விரண்டில் கீதையை வாசித்துப் புரிந்து கொண்டவனுக்கு எதன் மீது பரிவுணர்வு இயல்பாக எழ வேண்டும்? 

    “அவனருளால் அவன் தாள் வணங்கி…” என்பவரை எடுத்துக் கொள்வோம். கோயில் என்பது இறைவன் இருக்கும் இடம் என்று எண்ணுபவன் அதன் பரிசுத்தத்தை பேணுவான் – பரிசுத்தம் எதில் உள்ளது – நம் செயல்களில் பொதிந்துள்ள அறத்தினில் உள்ளது – நீதியை நிலை நாட்டுதல் அர்ஜுனன் போன்ற வீரனின் கடமை என்று கண்ணன் போதிக்கிறானே! தர்மஸ்தலா கோயிலைச் சுற்றி நடந்த கொலைகள் கொடுமைகள் குறித்த நியாயவுணர்வு பீறிட்டெழ வேண்டியது அக்கோயிலினுடைய இறைவனைப் போற்றும் பக்தர்களின் இன்றியமையா கடமை என்று சொல்லித்தான் புரிய வேண்டுமா என்ன? 

  • தீயை நோக்குதல்

    திருநெடுங்கோதை – தொகுப்பிலிருந்து – பரமேசுவரி – யாவரும் பதிப்பகம்

    உணர்வு, மாற்றம், அழிவு, புதுப்பித்தல் முதலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த, இலக்கிய நடைமுறைகளில் நெருப்பு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பொருளாக உவமையாக நெருப்பு பன்னெடுங்காலமாக கவிதைகளில் உலவி வந்திருக்கிறது. சமய இலக்கியங்களிலும் நெருப்பு முக்கியமான அந்தஸ்தைக் கொண்டிருந்தது.

    ரிக் வேதத்தில் வரும் ஒரு துதிப்பாடலில் இப்படி வருகிறது : 

    “யாகங்களின் பிரதான ஆசாரியனும், தெய்வீகமானவனும், பூசாரியாக காணிக்கைகளை  (தெய்வங்களுக்கு) சமர்ப்பிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை ஏத்துகிறேன்.”

    வேத உபடநிடதங்களை மொழியாக்கம் செய்ய முயன்ற பாரதியார் அதற்கென வகுத்துக்கொண்ட வடிவத்தை வசனகவிதை என்று அழைத்தார். தீயைப் பற்றிய ஒரு வசன கவிதையில் விரிவான அக்னி சடங்கில் இடப்படுவனவற்றை குறிப்பிட்டு நன்கு எரியுமாறு தீக்குப் பணிக்கிறார்.  

    தீயின் இயல்பே ஒளி. 

    தீ எரிக. 

    அதனிடத்தே நெய் பொழிகின்றோம். 

    தீ எரிக. 

    அதனிடத்தே தசை பொழிகின்றோம். 

    தீ எரிக

    அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம் 

    தீ எரிக. 

    அதற்கு வேள்வி செய்கின்றோம். 

    தீ எரிக. 

    வைதீக சமயத்தின் தீ வேள்விகளை தினமும் புரியும் ஆயிரம் பிராமணர்களை பௌத்த நெறியைத் தழுவ வைத்த பிறகு அவர்களுக்கு என்ன போதிப்பது என்று யோசித்த ததாகதர் அவர்களின் வேள்வித்தீயையே கருப்பொருளாக வைத்து புத்ததம்மத்தை விளக்குகிறார். அவரின் ஞானக்கண்ணில் சம்சார உலகே தீப்பிடித்து எரிகிறது. எரிவதை ஞானப்பார்வையில் நோக்கி சம்சார உலகின் இயல்பை விவரிக்கும் “ஆதித்த பரியாய சுத்தத்தை”க் கூறுகிறார். இது பாலி நெறிமுறையின் மிக முக்கியமான சுத்தம். இந்த சுத்தத்தின் வரிகளைத் தம் புகழ்பெற்ற கவிதையில் குறிப்பாகப் பயன்படுத்தும் கவிஞர் டி எஸ் எலியட் – கிறித்துவத்தின் மலைப் பிரசங்கத்துக்கு ஒப்பானது – என்கிறார்.

    “துறவிகளே, அனைத்தும் எரிகின்றன. என்னவெல்லாம் எரிகின்றன? கண் எரிகிறது. வடிவங்கள் எரிகின்றன. கண்ணின் உணர்வு எரிகிறது. கண்களின் தொடர்பு எரிகிறது. மேலும் கண்ணில் உள்ள தொடர்பைச் சார்ந்து எழுவது எதுவாக இருந்தாலும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ – அதுவும் எரிகிறது, எதில் எரிகிறது கண்? மோக நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால்,  நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.

    “காது எரிகிறது, ஒலிகள் எரிகின்றன …

    “மூக்கு எரிகிறது, நறுமணம் எரிகிறது …

    “நாக்கு எரிகிறது, சுவைகள் எரிகின்றன …

    “உடல் எரிகிறது, தொட்டுணரக்கூடிய உணர்வுகள் எரிகின்றன …

    “புத்தி எரியும். யோசனைகள் எரியும். புத்தியில் உணர்வு எரியும். புத்தியில் தொடர்பு எரியும். மேலும் புத்தியின் தொடர்பைச் சார்ந்து எழும் அனைத்தும் – இன்பமாகவோ, துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ இல்லை. வலி – அதுவும் எரியும், எதில் எரிகிறது? பேரார்வத்தின் நெருப்பால், வெறுப்பின் நெருப்பால், மாயையின் நெருப்பால், நான் உங்களுக்குச் சொல்வது,  பிறப்பின், முதுமையின்,  மரணத்தின், துக்கங்களின், புலம்பல்களின், வலிகளின், துயரங்களின் மற்றும் விரக்திகளின் நெருப்பால்.”

    நோக்குமிடமெல்லாம் தீ! எனவே தான், பட்டினத்தார் பாடுகிறார் :-

    முன்னை இட்ட தீ முப்புரத்திலே 

    பின்னை இட்ட தீ தென் இலங்கையில் 

    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே 

    யானும் இட்ட தீ மூள்க மூள்கவே 

    எப்போதெல்லாம் எரியும் நெருப்பு நோக்கப்படுகிறது?  – சமைக்கையில், கொண்டாட்டகாலங்களில் ஏற்றப்படும் விளக்குகளில், முகாம்களில் பற்றவைக்கப்படும் கேம்ப் பயர்-களில், குளிரின்போது வாழ்விடங்களை  வெம்மைப்படுத்த தீ மூட்டப்படுகையில், உலோகத்தை உருக்குதல் போன்ற தொழில் துறை செய்முறைகளில், மதநிகழ்வுகளில் செய்யப்படும் சடங்குகளில், பண்டிகைக்கால ஒளிக்காட்சிகளில், காட்டுத்தீ முதலான விபத்துகளில், தீப்பந்தங்களில் – இது போன்று பல்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு சூழல்களில் நெருப்பு கவனிக்கப்படுகிறது. 

    பக்தியுடன் அல்லது பயத்துடன் அல்லது பற்றற்று பார்க்கப்படும் தீ போலில்லை – கவிஞர் பரமேசுவரி “தீயின் அழிபசி” கவிதையில் வரும் தீ. கவிதைசொல்லி தீயை ஓர் அழகான பொருளைப் பார்ப்பது போல ரசிக்கிறார். அழகின் நிமித்தம் தீயை நோக்குவது ஒரு புதுக்கூறு. 

    கவிதை சொல்லி வீட்டின் கூரையில் அவராகவே தீ வைத்துவிட்டு அது எரிவதை ரசனையுடன் நோக்கிக் கொண்டிருக்கிறார். “நான் அங்கேதான் அமர்ந்திருக்கிறேன்” என்று சொல்கிறார். முதலில் அதை வாசித்தபோது தற்கொலை நிகழ்வை மரணத்தை விருப்பத்துடன் தழுவிக் கொள்ளும் முயற்சி போலத் தொனிக்கிறது, ஆனால், நல்ல வேளை “ஓரமாய் அமர்ந்து” எனப் பின்வரும் வரிகளில் குறிப்பிட்டுவிட்டதால், தற்கொலை இல்லை என்று நிம்மதியடைகிறோம். 

    ‘ஒன்றைப்பற்றி ஒன்று 

    மெல்ல மெல்ல மேலேறிக் 

    கவ்வும் அழகை வியந்திருந்தேன்”

    ஒரு கை இன்னொரு கையைப் பற்றி மேலேறும் நூறு கைகளின் நடனம்!

    கொழுந்துகளின் நாட்டியம், அழலின் ஆட்டம், தழலின் வெப்பம் – அனைத்தையும் கண்ணெடுக்காது ரசிக்கிறார் கவிதைசொல்லி – தழலின் வெப்பத்தை எப்படி கண்ணால் காண முடியும் என்ற கேள்வி எழுகிறது. உணரத்தானே முடியும்!

    தழல் அடங்கிவிடுகிறது. கவிதைசொல்லி அங்கிருந்து நகர்வதாயில்லை. ஒன்றும் இலாமல் அனைத்தையும் தின்று தீர்த்த தீயின் பசி அத்தனை அழகாயிருந்ததாம்!

    பரமேசுவரியின் இந்தக் கவிதையை வாசித்த பிறகு ராபர்ட் ப்ராஸ்ட் எழுதிய புகழ் பெற்ற ஆங்கிலக் கவிதை – தீயும் பனியும் ஞாபகத்துக்கு வந்தது. உலகம் அழியப்போகும் நாளை அக்கவிதையில் கற்பனை செய்கிறார் கவிஞர். உலகம் தீயால் அழியும் என்று சிலர் எண்ணுகின்றனர். வேறு சிலரோ பனியால் அழியும் இவ்வுலகு என்கின்றனர். ஆசைகளைச் சுவைத்தவன் என்பதால் தீயால் அழியும் என்பவர் கட்சியில் தானிருப்பதாகச் சொல்கிறார் கவிதைசொல்லி. ஆனால் இவ்வுலகம் இருமுறை அழியும் என்றிருக்குமானால் போதுமான அளவுக்கு வெறுப்பு பற்றி அறிந்தவன் என்பதால் பனியினால் இவ்வுலகம் அழிவதும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் கவிதைசொல்லி. ஆசையை நெருப்பாக உவமிக்கும் ராபர்ட் ப்ராஸ்ட் போலவே எண்ணற்ற கவிஞர்கள் தீயை ஆசைக்கு உருவகமாக்கியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்திலும் இதற்கு உதாரணம் உண்டு.

    அற்புதத் திருவந்தாதியில் சிவ பெருமான் இருக்கும் இடமாக காரைக்காலம்மையார் சொல்லும் சுடுகாட்டில் ஒரு பேய் இருந்தது. அதனால் சிவனேயென்று இருக்க முடியவில்லை.  ஒரு கள்ளிப் புதரின் நடுவில் படுத்துக் கொண்டிருந்த பேய் சும்மா இராமல், எரிகின்ற சிதைக்கட்டையை எடுத்து அதில் படிந்திருந்த மையை எடுத்து கண்ணில் மையாகப் பூசி அழகாக உணர்ந்தது. சில வினாடிகள் தாம்! சிதைக்கட்டையின் தீப்பொறி அதன் கண்ணில் பட்டுவிடுகிறது. சூடு பொறுக்க முடியாமல் சினக்கிறது. சத்தம் போட்டு அலறுகிறது. அங்கும் இங்கும் துள்ளிக் குதிக்கிறது. தீயை அணைக்க முயல்கிறது. இத்தகைய காட்டில் இருக்கிறானாம் எம்பெருமான் என்கிறார் காரைக்காலம்மையார். ​​ 

    யார் அந்த பேய் ? ஆசையுள்ளோர் அந்தப் பேய். இந்த உலகம் தான் சுடுகாடு. ஒவ்வோர் ஆசையும் ஒவ்வொரு கொள்ளிக் கட்டை. அனுபவிக்கும் போது முதலில் கொஞ்ச நேரம் இனிமையாக இருக்கும். அப்புறம், சூடு தாங்காமல் எரியும். எதை வேண்டும் என்று எடுத்தோமோ அதையே வேண்டாம் என்று தூக்கி ஏறிய நினைக்கிறோம்.

    கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்

    கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை

    விள்ளவெழுதி வெடுவெடென்ன

    நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்

    துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்சுட்டிட 

    முற்றுஞ் சுளிந்து பூழ்தி

    அள்ளி அவிக்க நின்றாடும்

    எங்கள்அப்பனிடந் திரு ஆலங்காடே

    “தீயின் அழிபசி” கவிதையில் வரும் கவிதைசொல்லி பதற்றமோ சினமோ கொள்ளவில்லை. மாறாக, அமைதியாய் தீ எரிவதை நோக்குகிறார். அவரே சொல்வது போல அது “அத்தனை அழகாக இருந்தது”. எரிந்து போனது அவர் வாழ்ந்த வீடாகக்கூட இருந்திருக்கலாம்! அவருடைய உடமைகள் எல்லாம் அழிந்து போயிருக்கலாம். ஆதித்த பரியாய சுத்தத்தில் புத்தர் விளக்கிய சம்சார உலகின் வெறுமையை உணர்ந்து அமைதிக்குள் புகுந்த தேரியின் மனநிலையை கவிதைசொல்லி “தீயின் அழிபசி” கவிதையில் பிரதிபலிப்பதாக நாம் வாசிக்கலாம். தேரிகதாவில் தேரி ஸுஜாதா கூறுவது போல் –

    தூசியற்ற, மரணமில்லாத,

    உண்மையான தர்மத்தை அறிந்து,

    நான் வெளியே சென்றேன்,

    வீட்டிலிருந்து விலகி வீடற்றவள் ஆனேன்.

  • இரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்

    சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது.

    சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை கொடுத்து கொண்டிருந்தது. சதா அது பற்றிய சிந்தனையோட்டத்தினால் என் மனத்தில் மிகுந்த உளைச்சல். உடனடியாக அந்த அனுபவத்தின் விளைவைச் சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனால் செய்யமுடியாத சூழ்நிலை. உதவியற்ற ஒரு நிலை. 

    நேற்றிரவு தூக்கமே வரவில்லை. கவனத்தை திசை திருப்ப பலவிதங்களில் முயன்றேன். ரூமி ஞாபகம் வந்தார். The Essential Rumi புத்தகத்தைப் புரட்டினேன். எந்த  குறிப்பான நோக்கமுமில்லாமல் ஒரு பக்கத்தில் நின்றேன். 

    எனக்கென்ன ஆசையா
    அவளோடு காலங்கழிக்க
    அவள் பூசிக் கொள்ளும் வாசனையோ
    அல்லது அணிந்து கொள்ளும் பிரகாசமான உடைகளோ –
    இவை காரணமல்ல
    அவளுடைய வெறுப்பு படிந்த பார்வையை
    சகித்துக் கொள்ளுதல்
    என்னுள் வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடுக்கிறது
    அவள் என் பயிற்சி
    இன்னோரு துருவப்பாதி இல்லாவிடில்
    எதுவும் தெளிவுறுவதில்லை
    இரு பதாகைகள்
    ஒன்று கருப்பு இன்னொன்று வெள்ளை
    இரண்டுக்கும் நடுவில் அன்றோ தீர்வு பிறக்கிறது
    பாரோவுக்கும் மோசஸுக்கும்
    நடுவில் செங்கடல் போல

    மெலிதான அதிர்வு என்னுள். என்னுடைய சங்கடத்தை ரூமி அறிந்து கொண்டாரோ? எந்த அனுபவக் கூண்டுக்குள் சிக்கியுள்ளாயோ அதனுள்ளேயே இரு. வலிமையையும் பொறுமையையும் வளர்த்தெடு.

    The Essential Rumi-யை மூடி வைத்தேன். One Robe One Bowl எனும் ரியோகனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கையிலெடுத்தேன். கண்ணை மூடிக் கொண்டு ஒரு பக்கத்தை பிரித்தேன்.

    அழகு இருந்தால்
    அசிங்கம் இருந்தாக வேண்டும்
    சரி என்ற ஒன்று இருந்தால்
    தவறு என்ற ஒன்றும் இருந்தாக வேண்டும்
    அறிவும் பேதைமையும் ஓர் இணை
    மயக்கமும் ஞானமும்
    பிரிக்கப்பட முடியாதவை
    இது பழைய உண்மை
    புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதென
    நினைக்காதே
    “இது வேண்டும் அது வேண்டும்”
    என்பது முட்டாள்தனமின்றி வேறில்லை
    நான் உனக்கொரு ரகசியத்தைச் சொல்வேன்
    “அனைத்து பொருட்களும் நிரந்தரமில்லாதவை”

    ரியோகனுக்கும் என்னுடைய கவலை பற்றித் தெரிந்துவிட்டிருக்கிறது !  “இது வேண்டும் அது வேண்டும்” என விழைவது முட்டாள்தனமின்றி வேறில்லை என்று வைகிறார் ரியோகன். “எதுவும் நிரந்தரமில்லை” என்றொரு “ரகசியத்தையும்” பகிர்ந்திருக்கிறார். 

    நண்பர்கள் கொடுத்த பாடங்களை அளவிலா ஆச்சரிய உணர்வுடன் சிந்தித்தவாறே தூங்கிப்போனேன்.