Tag: அழைப்பு

  • திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் ஸஜ்தா

    In 2014, in Iraq’s northern city of Mosul one of its most well-known shrines was destroyed by the ISIS – the Tomb of Jonah. The shrine was built on what is regarded as the burial site of the biblical prophet known in the Quran as Yunus.

    நினிவே நகரம் நீண்ட காலமாக அல்லாஹ்வின் செய்தியை மறந்து சிலை வழிபாடும் பாவமும் நிறைந்த நகரமாக மாறியிருந்தது. நகரவாசிகளைத் தனது ஒளியின் பாதையில் வழிநடத்த நினிவே நகரவாசிகளுள் ஒருவராகப் பிறந்திருந்த யூனுஸ் நபியை ஒரு தூதராக அனுப்ப முடிவு செய்தான் அல்லாஹ்.

    யூனுஸ் நபி உடனடியாக தனது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கினார். தனது மக்களை அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் சிலை வழிபாட்டைத் தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்தார். அவருக்கு முன் பிறந்த தீர்க்கதரிசிகள் நிராகரிக்கப்பட்டதைப் போலவே ஆனால் நினிவே மக்களால் யூனுஸும் நிராகரிக்கப்பட்டார். அல்லாஹ்வின் பயங்கர கோபத்தை அவர்களுக்கு நினைவூட்டி அவர்களை அல்லாஹ்வின் பாதைக்கு வர அழைத்தார். அவர்களோ, “நாங்களும் எங்கள் முன்னோர்களும் பல ஆண்டுகளாக இந்த தெய்வங்களை வணங்குகிறோம், இதனால் எங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை” என்றனர்.

    நபி யூனுஸ் அவர்களுக்கு உதவ விரும்பினார், அதனால் தன் விடாமுயற்சியைக் கைவிடவில்லை. அவர்களின் அறியாமையைப் பரிவுடன் அணுகினார். அவர்களின் கடுமையான வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அல்லாஹ்வின் தண்டனை குறித்து எச்சரித்தவண்ணமிருந்தார்.

    மேலும் யூனுஸின் வார்த்தைகளை வெற்று அச்சுறுத்தல்களாக நினைத்து தாங்கள் சிறிதும் பயப்படவில்லை என்று தெரிவித்தனர். யூனுஸ் நபி மனம் உடைந்தார்; அவர் தனது மக்களை கைவிட்டார். தன்னை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை ஏற்கும் ஒரு சமூகத்தை வெகு தொலைவில் கண்டடையலாம் என்ற நம்பிக்கையில், அல்லாஹ்வின் அனுமதியின்றி, நினிவே நகரத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

    நினிவேயின் அமைதியான வானம், அல்லாஹ்வின் கோபத்தைத் துப்புவதற்குத் தயாராவதுபோல் சிவப்பாக மாறியது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மலை உச்சியில் தங்களுக்கு மேலேயிருந்த வானத்தை பயம் நிறைந்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றிய யூனுஸின் எச்சரிக்கையை அவர்கள் நினைவு கூர்ந்தனர், மேலும் அவர்கள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையைக் கண்டு அஞ்சினர். புதிய நம்பிக்கையுடன், முழங்காலில் விழுந்தனர்; கைகளை நீட்டி அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் வேண்ட ஆரம்பித்தார்கள். இந்த நேர்மையான மனந்திரும்புதலால் தூண்டப்பட்ட அல்லாஹ், தண்டனையை நீக்கி, குடிமக்களை மன்னித்து, அவர்கள் மீது தனது ஆசீர்வாதங்களைப் பொழிந்தான்.

    வானம் தெளிந்தபோது மக்கள் தங்கள் அன்பிற்குரிய நபி யூனுஸ் அல்லாஹ்வின் பாதையில் அவர்களை வழிநடத்தும் பொருட்டு பாதுகாப்பாக நினிவேவுக்குத் திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்,

    நினிவேயை விட்டு வெளியேறிய யூனுஸ் நபி தனது மக்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு சிறிய பயணிகள் கப்பலில் ஏறினார். கப்பல் பகலில் அமைதியான நீரில் நகர்ந்தது; ஆனால் இரவு வந்தவுடன் சூறாவளி கப்பலைத் தொட்டது. கப்பலை அங்குமிங்குமாக உலுக்கியது. கடல் நீர் மெல்ல மெல்ல புகுந்து, கப்பலை மெதுவாக மூழ்க ஆரம்பித்தது. பணியாளர்களும் பயணிகளும் உயிருக்கு அஞ்சத் தொடங்கினர்.

    இரவு முழுவதும் சூறாவளி தொடர்ந்ததால் கப்பலின் சுமையைக் குறைப்பதற்காக சாமான்கள் மற்றும் மற்ற அனைத்து அதிகப்படியான சுமைகளையும் தூக்கி எறியுமாறு கப்பலின் மாலுமி உத்தரவிட்டார். அறிவுறுத்தப்பட்டபடி பணியாளர்கள் கப்பலின் அதிகப்படியான சுமையை வெளியேற்றினர்; ஆனால், கப்பல் இன்னமும் கனமாக இருந்ததால் தொடர்ந்து மூழ்கிக் கொண்டிருந்தது. கேப்டனுக்கு வேறு வழியில்லை – அவர் தனது பணியாளர்கள் மற்றும் பயணிகளின் உயிரைக் காப்பாற்ற யாரோ ஒருவரின் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் இருந்த பொதுவான நடைமுறையை செயல்படுத்தும் விதமாக பலி கொடுக்கப்படும் பயணியைத் தேர்வு செய்ய கேப்டன் சீட்டு குலுக்கிப் போட முடிவு செய்தார்.

    சீட்டு போடப்பட்டு யூனுஸ் நபியின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. யூனுஸ் ஓர் இளைஞர், நேர்மையானவர், ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை சகபயணிகள் அறிந்திருந்தனர், எனவே அவர்கள் அவரை வெளியேற்ற மறுத்து மீண்டும் சீட்டு குலுக்கிப்போடும்படி கேப்டனை வேண்டிக் கொண்டனர்.

    மீண்டும் சீட்டு குலுக்கிப் போடப்பட்டது. யூனுஸின் பெயரே மீண்டும் வந்தது. யூனுஸை தூக்கி எறிய மறுத்து, “நாங்கள் யூனுஸை இழக்கப் போவதில்லை. அவர் படகில் இருப்பது எம்மீது ஆசீர்வாதம். படகில் இருக்கும் சிறந்த மனிதர் அவர்; நாங்கள் அவரை அகற்றப் போவதில்லை” என்றனர் பணியாளர்கள். எனவே அவர்கள் மூன்றாவது முறையாக சீட்டு எடுத்தார்கள், யூனுஸின் பெயரே மீண்டும்! பயணிகள் குழப்பமடைந்தனர். யூனுஸ் நபி இது அல்லாஹ்வின் தீர்ப்பு என்பதை அறிந்திருந்தார். தனது இறைவனின் அனுமதியின்றி தனது மக்களை விட்டுவிட்டு வந்ததுதான் இதற்குக் காரணம் என்பதாக உணர்ந்தார். யூனுஸ் கப்பலில் இருந்து இருண்ட கொடூரமான அலைகளுக்குள் குதித்தார்.

    அல்லாஹ் கட்டளையிட்டபடி கடலில் உள்ள மிகப்பெரிய திமிங்கிலம் யூனுஸை விழுங்கியது. சுயநினைவின்றி இருந்த யூனுஸ் இருளால் சூழப்பட்டிருப்பதைக் கண்டு எழுந்தார்.

    தனது கல்லறையில் தான் வந்தடைந்திருப்பதாக அவர் நம்பினார்; ஆனால் சற்று நேரத்தில் ஒன்று தெளிவானது. அவர் தனது கல்லறைக்குள் இல்லை. ஒரு பெரிய மீனின் வயிற்றுக்குள் இருப்பதை உணர்ந்தார்.

    திமிங்கிலத்தின் ஆழமான வயிற்றில் இருந்த யூனுஸ் நபி அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து, “யா அல்லாஹ், இதுவரை யாரும் உனக்கு ஸஜ்தா செய்யாத இடத்தில், ஒரு மீனின் வயிற்றில் நான் உனக்கு ஸஜ்தா செய்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வை அழைத்தார், “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. நீ பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயம் செய்பவர்களில் ஒருவனாக இருந்தேன்.” (21:87) ஆழ்கடலின் உயிரினங்கள் யூனுஸின் மனமுருகும் பிரார்த்தனையைக் கேட்டு திமிங்கிலத்தைச் சுற்றி ஒன்று கூடி அல்லாஹ்வின் புகழைக் கொண்டாடின.

    இரக்கமுள்ள அல்லாஹ் யூனுஸின் மனந்திரும்புதலால் பெரிதும் ஈர்க்கப்பட்டான். தனது தூதரை அருகிலுள்ள கரையில் துப்புமாறு திமிங்கிலத்திற்கு கட்டளையிட்டான். திமிங்கிலம் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அருகில் உள்ள கரைக்குச் சென்று யூனுஸை வெளியேற்றியது. திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த அமிலங்களின் விளைவாக யூனுஸின் உடல் வீக்கமடைந்தது. சுடும் சூரியன், பலமாக வீசும் காற்று – இவற்றினால் யூனுஸுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே யூனுஸுக்கு பக்கத்தில் மீது நிழல் தரும் மரம் வளருமாறு அல்லாஹ் செய்தான். உணவும் நிழலும் அவருக்குக் கொடுக்குமாறு மரத்தைப் பணித்தான். அவரை மன்னிக்கும்படி நேர்மையான அழைப்பை யூனுஸ் விடுத்திராவிட்டால் மறுமை நாள் வரை திமிங்கிலத்தின் வயிற்றிலேயே இருந்திருக்க நேரிட்டிருக்கும் என்ற தகவலை அவருக்குத் தெரிவித்தான் அல்லாஹ்.

    யூனுஸ் முழுமையாக குணமடைந்ததும், தனது பணியை முடிக்க நினிவேக்கு திரும்பினார். தனது சொந்த ஊருக்கு யூனுஸ் திரும்பி வந்ததில் நினிவே நகர மக்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். நினிவேயின் அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். யூனுஸ் தனது மக்களுடன் சேர்ந்து தனது இறைவனுக்கு ஸஜ்தா செய்து அவருடைய அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

    ரம்ஜான்போஸ்ட் – 18-3-2024

  • ஊர்பேர்

    சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக வந்து விழுந்தன. நஜஃப்கர் தாண்டியதும் குறுகலான சந்தில் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கினோம். சற்று தூரத்தில் காரில் சிஎன்ஜி குறைவு என்பதால் அதை நிரப்புவதற்காக நின்ற போது யாரோ எனக்கு போன் செய்தார்கள். யார் போன் செய்தது? மனைவியோ குழந்தைகளோ நிச்சயமாக இல்லை. அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எண்ணுகிறேன். ஞாயிற்றுக்கிழமை அல்லவா பயணமானோம்? அலுவலகத்திலிருந்தோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அழைப்பு வந்திருக்க முடியாது. சிஎன்ஜி நிரப்பிய பின்தான் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கிக் கொண்டோமோ? ஊர் பேரை நினைவுபடுத்திக் கொள்ளச் சென்ற மனப்பயணம் வேறு சிலவற்றையும் நான் மறந்து போகிறேன் என்பதை புலப்படுத்தியது.

    எந்த ஊரை நோக்கிப் பயணம் என்பது மூலவினா. அதற்கு விடையளிக்கும் வழியில் நிறைய துணைவினாக்கள். யார் போன் செய்தார்கள்? எனக்கு ஓட்டுனர் பெயரும் ஞாபகமில்லை. காய்கறிச் சந்தை நெரிசல் முதலில் வந்ததா? சிஎன்ஜிக்காக நின்றது முதலில் வந்ததா? தெளிவு என்பது கூரான ஞாபக சக்திதான். இல்லை..அப்படியும் சொல்லிவிட முடியாது. தெளிவு என்பது தெளிவான மன நிலை. நினைவுத் துல்லியம் தெளிவின் முக்கிய அங்கம் என்று சொல்லிக் கொள்ளலாம். 

    சிஎன்ஜி ஸ்டேஷனுக்கப்பால் என் மனப்பயணம் நின்றுபோனது. எதையாவது பற்றி நிற்காவிடில் கீழே விழுந்துவிடுவோமில்லையா?  பிடி தளர்ந்து தடுமாறுகையில் ஏதாவது ஒரு நினைவைப் பிடித்துக் கொண்டால் நம் இருப்பு உறுதியாகும்.

    குர்கான் வரைபடத்தை விரித்தேன். பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன?  நஜஃப்கரை நோக்கி விரலை நகர்த்தினேன். அதைச் சுற்றி பல ஊர்கள், கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ரோகிணி, பகதூர்கர், பவானா……வெறும் பெயர்கள்…..எல்லாம் பெயர்கள்…தலையை அசைத்தேன். பெயர்கள் வைக்காவிடில் ஊர்களுக்கென தனித்த அடையாளம் ஏதேனும் இருக்குமா? வீடுகளும், வயல்களும், குளங்களும், மேடுகளும் பள்ளங்களும் – அவற்றின் எண்ணிக்கைகளும், வடிவங்களும், அமைப்புகளும் மாறுந்தன்மையை வைத்து…குழப்பமாய் இருக்கிறது…என் உடல் எங்கே? நான் இருக்கிறேனா…எனக்கு நினைவிருக்கிறது..எனவே நான் இருக்கிறேன்…எதையோ உதறுவது போல் சைகை செய்தேன்…

    “உடம்பை அசைக்காதீங்க” – எனக்கு யாரோ ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள். முக கவசம் அணிந்திருந்தனர். 

    சற்றுத் தள்ளி ஒரு பெண் சதுர கண்ணாடி பதித்த கதவினுடே நோக்குகிறாள். ஒரு வித பயத்துடன் நின்றிருந்தாள். கண்ணில் நீர் படிந்திருந்தது. மனக்காட்சி மாறிவிட்டதா? ஊர் பெயர் மறந்ததை நான் இன்னும் மறக்கவில்லை. புதுக்காட்சியிலும் பழைய காட்சியைத் தொடர விழைந்தேன். 

    என் தலையை யாரோ நேராகப் பிடித்துக் கொண்டனர். கதவு பக்கம் என் முகத்தை திருப்ப முடியவில்லை. வெண்ணிற திரையை….சுவரை வெறித்து மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதும் “என்ன பெயர் என்ன பெயர்” என்று மனதில் அசை போட்டபடியிருந்தேன். என் கால்களை யாரோ தூக்கினார்கள். எதையோ யாரோ தூக்குவது மாதிரி எடையற்று உணர்ந்தேன். 

    “நான் எந்த ஊருக்குப் போனேன். ” – என்று உரக்கக் கேட்டேன். உதடு மட்டும் அசைந்ததா எனத் தெரியவில்லை. நான் சொன்னது யார்க்கும் கேட்கவில்லை. யாரும் கேட்க பிரயாசப்பட்டதாகவும் தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கதவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது. காட்சிகள் இல்லாத புதுக்காட்சியா? இல்லை…நானே என்னை இந்த இருட்டுக்குள் என்னைத் தள்ளிக்கொண்டேனோ?

    பித்ரு கடன் செய்யும் போது ஓதும் மந்திரங்கள் எங்கிருந்தோ ஒலித்தன. என் பெயர், என் தந்தையார் பெயர், தந்தையாரின் தந்தையார் பெயர் – இவற்றைச் சொல்லி வசு, ருத்ர, ஆதித்யர்களாக உருவகிக்கும் மந்திரங்களின் உச்சரிப்பு…பெயர்கள்…பெயர்கள்…பெயர்கள்.

    நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/amp/)

  • புனே டயரி

    நேற்று நடந்தது

    புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க மறந்துவிட்டேன். “ஃபால்ஸ் அலார்ம்” என்கிறார் வாட்ச்மேன். மற்ற பிளாட்டுகளிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. “இது இங்கே அடிக்கடி நடக்கிறது தான்” என்று வாட்ச்மேன் சொன்னதும் “எது? சாவி வீட்டுக்குள்ளேயே இருக்க கதவு வெளியிலிருந்து மூடிக் கொள்வதா?” என்று கடுப்புடன் கேட்கிறேன். “விசிட்டர் லௌன்ஜில் உட்கார்ந்துகிட்டே தூங்குங்க நாளைக்காலை பார்ப்போம்” என்கிறார். விசிட்டர் லௌன்ஜில் காற்றின் சத்தம் கேட்கவில்லை. மழை சத்தம் இல்லை. ரிசப்ஷனில் உறங்கும் வாட்ச்மேனின் பலமான குறட்டை சத்தம் மட்டும். எனக்கு கோபம். போர்வையை எடுத்து வந்திருக்க வேண்டும்! சட்டையையாவது அணிந்து வந்திருக்க வேண்டும். சாவியை மறக்காமல் எடுத்து வந்திருந்தால் செருப்பு அணியாததோ சட்டை அணியாததோ பெரிய தப்பாக தெரிந்திருக்காது. இரு கோடுகள் தத்துவம் என்று ஏதோ சொல்வார்களே!

    புனே ஹார்ரர்

    நகரத்துக்கு நான் வேண்டா விருந்தாளியோ! என் கேள்வியில் நியாயமிருக்கிறது என்றே நம்புகிறேன். திகிலிசை போன்று வீசும் காற்று, தானே மூடித் தாழ் போட்டுக்கொள்ளும் கதவு, ஆளரவமற்ற, காலியான ப்ளாட்டுகள், ம்….வார இறுதியில் இன்னொரு ஹார்ரர்…அறையில் தனித்திருந்து சலித்துப் போய் ஆறு மணியளவில் வாக்கிங் போகலாம் எனக்கிளம்பினேன். நேற்றிரவு இருந்த வாட்ச்மேனைக் காணோம். வரவேற்பு லாபியில் ஈ, காக்காய் இல்லை. நானூறு மீட்டர் தொலைவில் இருந்த கேட் வரை ஒருவரும் காணவில்லை. கேட்டைத் தாண்டி சாலையில் வந்தாலும் நிலைமையில் மாற்றமில்லை. ரோடில் கார்களோ, லாரிகளோ, ஆட்டோ ரிக்ஷாக்களோ- எவற்றையும் காணோம். ஒரு (மஹாராஷ்டிர) வடைக் கடை இருந்தது. ஷட்டர் போட்டிருந்தார்கள். ஷட்டரை லேசாகத் திறந்து வெளியில் நின்றிருந்த ஆளுக்கு ஒரு பொட்டலத்தை கடைக்காரர் மர்மமான முறையில் கொடுத்துக் கொண்டிருந்தார். பொட்டலத்தை வாங்கிக் கொண்டவர் அடுத்த கணம் காணாமல் போனார். அவர் போன ஸ்கூட்டர் சத்தமிட்டதா என்று இப்போது ஞாபகமில்லை. கடைக்குச் சென்று ஷட்டரைத் தட்டி “டீ கிடைக்குமா?” என்று கேட்டேன். என் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என்பது போல் பார்த்தார். “டீ இல்லை, வடை பாவ் மட்டும் இருக்கிறது” என்று சொல்லி யோஜிம்போ திரைப்படத்தில் வரும் விடுதிக்காரர் பாத்திரத்தின் எக்ஸ்பிரஷனைத் தந்தார். நான் டோஷிரோ மிஃபுனே இல்லையே! வேகவேகமாக நடந்து அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டேன். வார இறுதி லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும்?

    வாஷிங் மெஷின் புதிர்

    தங்கச்சங்கிலி இரவல் வாங்கினா- பாமா விஜயம் படப்பாடலை நான் வாழ்வேன் என்று நினைத்ததில்லை. புனேவுக்கு குடி புகுந்த பிறகு வாஷிங் மெஷினை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். வீட்டு புரோக்கர் குல்வீர் அறைகலன்களையும் வாடகைக்கு தருகிறேன் என்றான். ஐந்தாறு நாட்களாயின. வாஷிங் மெஷின் வந்த பாடில்லை. ஆடைக்குவியல் வளர்ந்து கொண்டிருந்தது. தினமும் சாவியை கேட்டில் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். சாயந்திரம் கேட்டிலிருந்து சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது “குல்வீர் வந்தாரா” எனக் கேட்பேன். யாரும் வரவில்லை என்று விடை கிடைக்கும். ஒரு நாள் பால்கனியில் நீல நிற வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. பழைய மெஷின். எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே கண்களையிழந்து பிதுங்கியிருந்தது. ஆடைக்குவியலில் அன்று அணிந்திருந்த ஆடையும் சேர்ந்தது. அடுத்த நாள் விழி பிதுங்கிய மெஷினின் இடத்தில் இன்னொரு மெஷின். அதற்கு பிளாஸ்டிக் ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்தேன். தண்ணீர் பிய்ச்சியடித்து தொப்பலாக நனைந்து போனேன். வாஷிங் மெஷின் உருவில் வந்த வாஷிங் “பேசின்” அது என்று புரிந்தது. அடுத்த நாள் வாஷிங் “பேசின்” அங்கேயே கிடந்தது. ஆனால் கூடவே இன்னொரு வாஷிங் மெஷின் சேர்ந்திருந்தது. புதிது போல் தோற்றம் அதற்கு. ஆடைக்குவியலின் உயரத்தை பார்த்து வெட்கம் தாளாமல் சில துணிகளை எடுத்து புதிதாகச் சேர்ந்திருந்த வாஷிங் மெஷினுள் போட்டேன். வரும் வார இறுதியில் தோய்த்துவிட வேண்டும். குல்வீர் சாவியில்லாமல் எப்படி வீட்டுக்குள் வருகிறான் என்ற கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது.

    தொடரும் ஹார்ரர்

    இது முற்றிலும் புதிது. இரண்டு வார இறுதிகளாக நிகழ்வுகளுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் ஒரு கதை சொல்லல் நிகழ்வு. முரகாமியின் the elephant vanishes கதையை யாரோ வாசிப்பதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கதை பற்றிய கருத்துகள் பகிரப் படுமாம். இந்த வாரம் toast masters federation-இன் ஒரு நிகழ்வு. Cyber security பற்றி சக அலுவலர் ஒருவர் உரையாற்றப் போகிறாராம்! இவையொன்றும் புதிதல்ல. எது புதிது எனில் வாராது வந்த இரண்டு அழைப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருப்பதுதான் புதிது.