Tag: அதிகாரம்

  • இப்னு கல்துனின் சுழற்சிக் கோட்பாடும் இஸ்லாமிய இறையியலுடன் அதன் தொடர்பும்

    இப்னு கல்துன் (1332–1406) – னுடைய magnum opus என்று கருதப்படும் “முகாதிமா” நூலில் நாகரிகங்களின் (அதாவது வம்சங்களின், அரசுகளின், ஆட்சி அமைப்புகளின்) எழுச்சி மற்றும் வீழ்ச்சியை விளக்கும் ஒரு சுழற்சி வரலாற்றுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கருத்துக்கள் இஸ்லாமிய இறையியலில், குறிப்பாக தெய்வீக விருப்பம், நீதி (‘adl’) மற்றும் உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை (dunya) ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றியிருந்தன.

    இப்னு கல்துனின் சுழற்சி வரலாற்றுக் கோட்பாடு

    நாகரீகங்கள் அவற்றின் தவிர்க்க முடியாத வீழ்ச்சிக்கு முன் மூன்று முக்கிய நிலைகளைக் கடந்து செல்கின்றன என்று இப்னு கல்துன் முன்மொழிந்தார்:

    1. எழுச்சி (நாடோடி வலிமை & Asabbiya ) – நாகரிகங்கள் வலுவான Asabbiya (சமூக ஒற்றுமை) கொண்ட ஒரு குழுவுடன் தொடங்குகின்றன. பாலைவன பழங்குடியினர் அல்லது போர்வீரர் குழுக்களிடையே பெரும்பாலும் காணப்படும் இந்த ஒற்றுமை, அவர்களை வெற்றி பெற்று ஆட்சியை நிறுவ துணை செய்கிறது. புதிய ஆளும் வர்க்கம் எளிமை, ஒழுக்கம், நீதி உணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டு எழுச்சியடைகிறது.

    2. சிகரம் (அதிகாரத்துவ ஸ்திரத்தன்மை / செழிப்பு) – ஆட்சிக்கு வந்ததும், ஆளும் உயரடுக்கு அதிகாரத்தை மையப்படுத்தி நிர்வாக நிறுவனங்களை உருவாக்குகிறது. பொருளாதாரம், கலைகள், கலாச்சாரம் செழித்து வளர்கிறது. இருப்பினும், ஆட்சியாளர்கள் ஆடம்பரத்திலும் வசதியிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக மாறும்போது Asabbiya பலவீனமடையத் தொடங்குகிறது.

    3. சரிவு (ஊழல் மற்றும் ஒற்றுமை இழப்பு) : ஆட்சியாளர்கள் தங்கள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, பழங்குடி வீரர்களுக்குப் பதிலாக கூலிப்படையினரை நம்பியிருக்க்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின்றனர். ஊழல், அநீதி, அதிக வரிவிதிப்பு ஆகியவை அரசை பலவீனப்படுத்துகின்றன. இறுதியில், வலுவான Asabbiya-வுடன் ஒரு புதிய குழு உருவாகிறது. பழைய வம்சத்தை தூக்கியெறிந்து, சுழற்சியை புதிதாகத் தொடங்குகிறது.

    இஸ்லாமிய இறையியல் தொடர்புகள்

    1. உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை – உலக அதிகாரம் தற்காலிகமானது என்ற குர்ஆனியக் கருத்தை இப்னு கல்தூனின் சுழற்சி பிரதிபலிக்கிறது:

    “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகிறாய்”

    குர்ஆன் 3:26)

    நாகரிகங்கள் உயர்ந்து வீழ்ச்சியடைவது போல, செல்வமும் அதிகாரமும் அல்லாஹ்வின் சோதனைகள் (ஃபித்னா, குர்ஆன் 8:28).

    2. ஒழுக்கம், நெறிமுறை தலைமைத்துவம் – இஸ்லாமிய இறையியல் நீதி (‘adl’)யை வலியுறுத்துகிறது. ஆட்சியாளர்கள் நீதியைக் கைவிட்டு ஊழல் செய்யும்போது நாகரிகங்கள் வீழ்ச்சியடைகின்றன என்னும் இப்னு கல்தூன் கோட்பாடு குர்ஆனின் எச்சரிக்கையுடன் ஒத்துப்போகிறது:

    “அல்லாஹ் நம்பிக்கைப் பத்திரங்களை அவை யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்கும்படியும், மக்களிடையே நீங்கள் தீர்ப்பளிக்கும்போது நீதியுடன் தீர்ப்பளிக்கும்படியும் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.” (குர்ஆன் 4:58)

    3. தெய்வீக விருப்பத்தின் பங்கு (Qadar) – இப்னு கல்துனின் கோட்பாடு சமூக, பொருளாதார சக்திகளை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், வரலாறு தெய்வீக விருப்பத்தின்படி (Qadar) விரிவடைகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், ஊழ்வலி வாத விளக்கங்களைப் போலல்லாமல், மனித agency-யை வலியுறுத்தினார் – சமூகங்கள் அவற்றின் சொந்த தார்மீகச் சிதைவின் காரணமாக வீழ்ச்சியடைகின்றன, முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகளினால் அல்ல.

    4. மனநிறைவுக்கு எதிரான எச்சரிக்கைகள் – வெற்றியில் விளையும் ஆணவம், மனநிறைவுக்கு எதிராக குர்ஆனும் ஹதீஸும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றன. ஆட்சியாளர்கள் மிகவும் வசதியடைந்து, நீதியுணர்வை இழந்துவிடும்போது நாகரிகங்கள் வீழ்ச்சியடைகின்றன என்று இப்னு கல்துன் குறிப்பிட்டார். – “எத்தனையோ ஊர்களை – அநியாயம் செய்த நிலையில் அவற்றை நாம் அழித்திருக்கிறோம்; அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் பாழ்பட்டுக் கிடக்கின்றன.” (குர்ஆன் 22:45)

    #ரம்ஜான்போஸ்ட் : 8.3.2025

  • குறுங்கதைகள்

    பழக்கம் எனும் மகாசக்தி

    பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன்.

    +++++

    நட்பு

    நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து அதை சீர் செய்யும் நடவடிக்கையை எடுக்க நெடுநேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நண்பனும் என் நினைவில் வரவில்லை. அவர்கள் நினைவிலும் நான் வராமல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் அளித்த ஆறுதலில் குற்றவுணர்வு கரைந்து போனது.

    +++++

    பூனைக்கு வந்த காலம்

    சில உயர்அதிகாரிகளின் நிலை பாவமாய் இருக்கும். நன்கு அதிகாரம் பண்ணி நம்மை கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கும் மேலான ஓர் அதிகாரி நம்மை அழைத்து நம் வேலையைப் பற்றிப் பாராட்டிப் பேசும் போது அருகில் இருக்கும் நம் அதிகாரியின் முகம் ரசிக்கத் தக்க ஹாஸ்யக்காரனின் பாவத்தில் காணப்படும். போன வாரம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. பாவ்லா காட்டியவாறே இத்தனை மாதங்களாக அவர் செய்து வந்த ஒரு பணி எதிர்பாராதவிதமாக கைமாறி எனக்களிக்கப்பட்டது. “இனிமேல் நீயும் சீனியர் மேனேஜ்மென்டின் ஒர் அங்கம்” என்று சொல்லி அவர் கைகுலுக்குகையில் “தயவுசெய்து என்னை மேலே போட்டுக் கொடுத்துவிடாதே” என்று சொன்னது அவர் உடல்மொழி.

    +++++

    திருப்தி

    என் நண்பர் ஒருவரிடம் ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு அதைப் பற்றிச் சொன்னால் உடனே தானும் அதைப் பார்த்துவிட்டதாகச் சொல்லுவார். அதில் நடித்த நடிகர் பெயரைச்சொல்லி அவரின் நடிப்பை குறை சொன்னால் உடனே மறுப்பு சொல்வார் நண்பர். தேர்ந்த விமர்சகர் போல “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது ;  கொடுக்கப்பட்ட ‘ரோலை’ திருப்தியா செஞ்சுருக்காரு” என்பார். நடிகர் பண்ணிய ‘ரோல்’ என்ன என்று நானும் அவரைக் கேட்பதில்லை ; அவரும் சொல்வதில்லை.

    ——-

    பாத்திரத்தில் நிலைத்திருத்தல்

    பெரிய பொய்களை அழகிய வார்த்தைகளுக்குள் அடக்கி கண்களை உருட்டியபடி பேசிக் கொண்டிருந்த அதிகாரியை விரலை லேசாக உயர்த்தி தடுத்து நிறுத்திய வாடிக்கையாளரின் பிரதிநிதி – நல்லா பேசுறிங்க ஆனா என்னால் நம்ப முடியல – என்றார். பொய்களுக்கு எந்த வடிவம் கொடுப்பது என்று புரியாமல் விழித்த அதிகாரி என்னை நோக்கினார். உண்மையை மறைமுகமாக பாதி மறைத்துச் சொல்லும் முயற்சியில் நான் பேசத் தொடங்குவதற்குள் பிரதிநிதி இடைமறித்து – மேல சொல்லுங்க உங்க பொய்ய வச்சு உங்க நிறுவனத்தை எடை போடமாட்டேன் – என்றார். அதிகாரி தப்பித்தோம் பிழைத்தோம் என விடுவிடென்று மின்னல் வேகத்தில் பிரசன்டேஷனை ஓட்டிமுடித்து மடிக்கணினியை மூடினார். வாடிக்கையாளரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன்  – இது மாதிரி மூஞ்சி முன்னால பேசுறவங்களே பெட்டர் – என்று அதிகாரி என்னிடம் சொன்னபோது – மீட்டிங் முடிஞ்சிருச்சி, இன்னும் எதுக்கு ஸேல்ஸ் பிட்ச் மோட்லயே இருக்கீங்க – என்று கேட்கத் தோன்றிற்று. ஆனால் அப்படிச் சொல்லாமல் – சரியாச் சொன்னீங்க – என்று சொல்லி நானும் பாத்திரத்திலேயே தொடர்ந்து இருந்தேன்.


    —–

    சிலேடை

    போராடும் ஒரு நடிகர் எந்த வேடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார் ; பழுத்த அனுபவஸ்தர்களான மூத்த கார்ப்பரேட் அதிகாரிகளும் எந்த பணியையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இயக்குனர்களின் வழிநடத்தலின்படி பூணும் கோமாளி வேடமும் இதில் அடக்கம்.

    —–

    எழுதிப்பார்த்த போது…

    அனுபவப் பகிர்வு எளிது. படித்துப் புரிந்து கொண்டதையும் அறிந்துகொண்டதையும் பகிர்தலும் எளிது. புரியாததையும் அறியாததையும் பகிர்தல் அவசியமில்லாதது. தொடர்புறுத்தல் வாயிலாக பெறப்படும் இணைவுகள், வாசிப்பின் நினைவு கூறல்கள், உரிய வடிவம் குறித்த பிரக்ஞை, நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட பார்வைகள், கூரிய கவனிப்பு ஆகிய கூறுகள் மனப்பயிற்சியினால் அடையக்கூடியவை. சரியான புரிந்துணர்வை எய்துங்காலை சொற்கள் தம்மைத்தாமே உருப்பெருக்கிக் கொள்ளும். தமக்கான உண்மைகளை எழுதுதலோ பிறருக்கான உண்மைகளை எழுதுதலோ இரண்டுமே அடிப்படையில் ஒன்று என்ற தெளிதல் கைவந்துவிட்டால்  எல்லைகளற்ற எங்கும் பரந்த மைதானத்தில்  எழுத்தோட்டம் நிரந்தரமாய் நிகழ்ந்தவாறிருக்கும். (ஒரு ஃப்லோல வந்தது ; சீரியஸா எடுத்துக்கப்படாது)