Category: Translations

  • மாதவன் ஒரு சுதந்திர மனிதன் – பகுதி 2

    மாதவன் முப்பது வருடங்கள் கடினமாக உழைக்கிறான். குழந்தைகளை வளர்க்கிறான் ; சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறான் ; தன் எல்லா நேரத்தையும் தன் வேலைக்காகவே ஒதுக்குகிறான். ஒரு முறை கூட “தான் செய்யும் இவ்வேலைக்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொள்வதில்லை. அவனுடைய ஒரே எண்ணம் “ நான் எந்த அளவுக்கு பிசியாக இருக்கிறேனோ, அந்த அளவுக்கு முக்கியமான ஆளாக பிறரால் கருதப்படுவேன்” என்பது தான்.

    அவனுடைய குழந்தைகள் வளர்கிறார்கள். தம் படிப்பை முடிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஒரு நாள், மாதவனுக்கு முப்பது வருட உழைப்பின் அன்பளிப்பாக ஒரு கைக்கடிகாரமோ, பேனாவோ கிடைக்கிறது. அவனுடைய நண்பர்கள் சிலர் கண்ணீர் உதிர்க்கிறார்கள். இத்தனை நாள் அவன் ஆவலுடன் காத்திருந்த நேரம் வருகிறது. அவன் பணி ஓய்வு பெற்று விட்டான் ; அவன் செய்ய விரும்பியவற்றை எல்லாம் செய்யும் சுதந்திரம் அவனுக்கு கிடைத்து விட்டது.

    முதல் சில மாதங்கள், அவ்வப்போது தன் பழைய அலுவலகத்திற்கு போவதும் பழைய நண்பர்களை சந்திப்பதுமாக செல்கின்றன. அவன் செய்ய ஆசைப்பட்ட கனவுகளில் ஒன்றும் பணி நாட்களில் அவனால் அனுபவிக்க முடியாமலும் போனதுமான – படுக்கையை விட்டு தாமதமாக துயிலெழுவதை பணி ஒய்வு பெற்ற ஆரம்ப நாட்களில் அனுபவித்து மகிழ்ச்சியுற்றான். கடற்கரை ஒரம் வாக்கிங் போவான் அல்லது ஊர் வீதியில் வலம் வருவான். வியர்வை சிந்தி அவன் சம்பாதித்த பணத்தில் அவன் வாங்கிய வீடு ஊரை விட்டு தள்ளி தொலைவில் இருக்கும் கிராமப்புறம் ஒன்றில் இருக்கிறது. தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். செடிகளின் மலர்களின் உலகுக்குள் மெதுவாக ஊடுருவுகிறான். மாதவனுக்கு இப்போதெல்லாம் நிறைய நேரம் கிடைக்கிறது. அவன் சேர்த்து வைத்த பணத்தை பயன் படுத்தி சிற்சில சுற்றுலாக்களுக்கு செல்கிறான். மியூசியங்களுக்கு செல்கிறான்; பல்வேறு காலத்திய ஓவியர்களும் சிற்பிகளும் நூற்றாண்டுகள் எடுத்து வளர்த்தெடுத்த உத்திகள் பற்றியும் பாணிகள் பற்றியும் ஒரிரு மணி நேரங்களில் புரிந்து கொண்டு விடுகிறான். அவனுடைய கலாச்சார அறிவு விரிவடைவது போன்று ஒர் உணர்வு அவனுக்கு தோன்றுகிறது. நூற்றுக் கணக்கில் ஆயிரக் கணக்கில் புகைப்படங்கள் எடுத்து நண்பர்களுக்கு அனுப்புகிறான் – அவன் எத்தனை சந்தோஷமாக இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!

    மாதங்கள் நகர்கின்றன. மனிதர்கள் பின்பற்றும் விதிமுறைகளை தாவரங்கள் பின் பற்றுவதில்லை என்ற உண்மையை மாதவன் அறிந்து கொள்கிறான் – அவன் நட்டது முளை விட்டு வளர நாட்கள் பிடிக்கும் ; ஏதானும் மொட்டுகள் தென்படுகின்றனவா என்று எந்நேரமும் ரோஜாப்புதரை பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஒரு கணத்தில் அவன் சிந்தனை உண்மையானதொரு பிரதிபலிப்பை அவனுக்கு தருகிறது – அவனுடைய பயணங்களில் அவன் கண்டதெல்லாம் சுற்றுலா பேருந்தின் ஜன்னல் வழி தெரிந்த நிலத்தோற்றங்களும் 6X9 அளவுள்ள தபாலட்டையில் புகைப்படமாகியிருக்கும் நினைவுச்சின்னங்களும் மட்டுமே! உண்மையென்னவென்றால், மெய்யான மகிழ்ச்சி உணர்வை அவன் பெறவே இல்லை – அயல் நாட்டு பயணத்தை ஆழ்ந்து அனுபவித்து அடையும் ஆனந்தத்தை விட நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொள்ளும் ஆசையே அதிகம் இருந்தது.

    அவன் தொடர்ந்து தொலைக்காட்சிச் செய்திகளைக் காண்பதும், செய்தித்தாள்களை வாசிப்பதுமாக நேரத்தை கழிக்கிறான். இத்தனை நாட்களாக நேரம் கிடைக்காமல் படிக்காமல் போன விஷயங்களை பற்றி படித்து அறிந்து கொள்வதாக நினைத்து உவகை கொள்கிறான்.

    எண்ணங்களை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளலாமென்று யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறான். ஆனால் எல்லாரும் வாழ்க்கையெனும் ஆற்றில் ஓடும் வெள்ளமாக மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் – பணி செய்வதும், வீட்டுக் காரியங்களில் ஈடுபடுவதும், மாதவனிடம் இருக்கும் மிதமிஞ்சிய நேரத்தைப் பார்த்து பொறாமைப்படுவதுமாக இருக்கிறார்கள் ; அதே சமயத்தில் சமூகத்திற்கு “பயனுள்ளதாக” இருப்பதாக எண்ணி திருப்தியுற்று ஏதாவது “முக்கியமான”தொன்றை “செய்து” கொண்டிருக்கிறார்கள்.

    மாதவன் தன் குழந்தைகளிடம் ஆறுதல் தேடுகிறான். அவர்கள் அவனை அன்புடன் நடத்துகிறார்கள். – அவன் ஒரு சிறந்த அப்பாவாக அவர்களுக்கு இருந்திருக்கிறான் ; நேர்மையின் அர்ப்பணிப்பின் முழுச்சின்னம் – ஆனால் அவர்களுக்கும் கவலைகள் இருக்கின்றன. இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை மதிய உணவை தம் தந்தையுடன் சேர்ந்து உண்பதை தம் கடமையாக கருதுகிறார்கள்.

    மாதவன் ஒரு சுதந்திரமான மனிதன் ; ஒரளவு வசதி மிக்கவன் ; தகவல் அறிவு நிறைந்தவன் ; குறை கூற முடியாத கடந்த கால வாழ்க்கை உடையவன். ஆனால், அவன் இப்போது என்ன செய்வான்? கஷ்டப்பட்டு அவன் பெற்ற சுதந்திரத்தை வைத்துக் கொண்டு அவன் என்ன பண்ண வேண்டும்? எல்லோரும் அவனுக்கு வணக்கம் சொல்லுகிறார்கள். மரியாதையுடன் நடத்துகிறார்கள். ஆனால் யாரும் அவனுக்கு நேரம் தருவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாதவன் துக்கப்பட தொடங்குகிறான் ; சமூகத்திற்காகவும் குடும்பத்திற்காகவும் நீண்ட காலம் அவன் உழைத்திருந்தாலும், தன்னை பயனற்றவனாக கருதத் துவங்குகிறான்.

    ஒரு நாள் தூக்கத்தில் அவன் கனவில் ஒரு தேவதை வருகிறது. “நீ உன் வாழ்க்கையை வைத்துக்கொண்டு என்ன செய்திருக்கிறாய்? நீ கண்ட கனவுகளின் படி உன் வாழ்க்கையை நடத்தினாயா?”

    இன்னொரு நீளமான தினம் துவங்குகிறது. செய்தித்தாள்கள். தொலைக்காட்சி. தோட்டம். மதிய உணவு. சின்ன தூக்கம். அவன் என்ன செய்ய விரும்புகிறானோ அவற்றையெல்லால் அவன் செய்யலாம். ஆனால் தற்போது அவன் எதுவும் செய்ய விரும்பாதவனாக உணர்கிறான். மாதவன் துக்கம் மிகுந்த சுதந்திர மனிதன் ; மனத்தளர்ச்சிக்கு முந்தைய நிலையில் இருக்கிறான். ஏனென்றால் அவன் தன் வாழ் நாள் முழுவதும் வாழ்வின் அர்த்தத்தை சிந்திக்க நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தான் ; வருடங்களையெல்லாம் வீணாக ஓட விட்டுக் கொண்டிருந்தான். ஒரு கவிஞனின் சொற்கள் அவனுக்கு நினைவில் வருகின்றன :

    ”அவர் வாழ்க்கையை கடந்து மட்டுமே சென்றார் ; வாழவில்லை”

    ஆயினும் இதை ஏற்க ரொம்ப கால தாமதமாகி விட்டது. எனவே ”டாபிக்”கை மாற்றிக்கொள்வதே சிறந்தது. கஷ்டப்பட்டு அவனுக்கு கிட்டிய சுதந்திரம் ஒரு மறைமுகமான நாடு கடத்தல் போல ஆகிவிட்டது.

    [TRANSLATED FROM THE BOOK – LIKE THE FLOWING RIVER – BY PAULO COELHO, CHAPTER HEADING : MANUEL IS A FREE MAN]

  • மாதவன் எனும் முக்கியமான மனிதன் – பகுதி 1

    மாதவனுக்கு எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும். அப்படியிராவிடில், தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தமில்லையென்று அவன் நினைக்கத் தொடங்கிவிடுவான் ; சமூகத்திற்கு தாம் தேவையில்லாமல் போய் விடுவோம் என்றும் யாரும் தன்னை விரும்பவில்லையென்றும் கூட எண்ணத் தொடங்கிவிடுவான்.

    எனவே, காலையில் விழித்தெழுந்தவுடனேயே, செய்வதற்கென தொடர்ச்சியான பணிகள் இருக்கும் ; தொலைக்காட்சி காணுதல் (முந்தைய நாள் இரவில் ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்), செய்தித்தாள் வாசித்தல் (முந்தைய நாள் பகல் பொழுதில் நிகழ்ந்தவற்றை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமே!), குழந்தைகளை பள்ளிக்கு கால தாமதமாகாமல் அனுப்பும்படி மனைவிக்கு அறிவுறுத்தல், காரிலோ இரயிலிலோ அல்லது டாக்ஸியிலோ அலுவலகத்துக்கு பயணமாதல், மோட்டுவளையைப் பார்த்தவாறே யோசித்த வண்ணம் இருத்தல், கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொள்ளல், முடிந்தால் அலைபேசியில் சிலரை அழைத்து சத்தம் போட்டு உரையாடுதல் (அவன் எத்துனை முக்கியமான மனிதன் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டுமே!).

    மாதவன் பணியிடத்திற்கு வந்தடைகிறான் ; கொட்டிக் கிடக்கும் வேலைகளில் ஒவ்வொன்றாய் எடுத்து செய்ய ஆரம்பிக்கிறான். அவன் ஊழியனாக இருந்தால், தாம் நேரத்தில் அலுவலகம் வந்ததை தன் அதிகாரிக்கு தெரியப்படுத்த பிரயத்தனப்படுவான். அவனே அதிகாரியாக இருந்தால், வந்தவுடனேயே எலலோரையும் வேலையில் ஆழ்த்தும் வண்ணம் செயல் படுவான். அன்றைய தினம் செய்வதற்கு முக்கியமான வேலை எதுவும் இல்லையென்றால், புதிது புதிதாக வேலைகளை கண்டுபிடிப்பான்.

    மதிய உணவு உண்ண எப்போதும் தனியாக செல்வதில்லை. அவன் அதிகாரியெனில், பிற சக அதிகாரிகளுடன் அமர்வான். வியாபார உத்திகளைப் பற்றியோ, போட்டியாளர்களைப் பற்றி இகழ்ந்தோ பேசிக்கொண்டிருப்பான். ஏதாவதொரு துருப்புச்சீட்டை கையில் வைத்துக் கொண்டே காரியங்களை சாதித்துக் கொண்டிருப்பான். வேலைப்பளு பற்றி (பெருமையுடன்) நொந்து கொள்வான். மாதவன் ஊழியனாக இருந்தால், அவனும் தன் நண்பர்களுடன் சேர்ந்தே மதியவுணவு சாப்பிடுவான். அதிகாரியைப் பற்றி குறைபட்டுக் கொள்வான், அதிகமாக ஓவர்-டைம் பார்ப்பதை பற்றியும் குறைபட்டுக் கொள்வான். நிறுவனத்தின் பல காரியங்கள் அவனைச் சார்ந்தே இருப்பதாக கவலையுடன் (கொஞ்சம் பெருமிதத்தையும் சேர்த்துக்கொண்டு) சொல்லிக் கொள்வான்.

    மாதவன் – அதிகாரி அல்லது ஊழியன் – பிற்பகல் முழுதும் உழைப்பான். அவ்வப்போது, தன் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்துக் கொள்வான். வீடு செல்ல நேரமாகி விட்டது. இன்னமும் தீர்க்கப்படாத விஷயங்களும், கையொப்பமிட வேண்டிய ஆவணங்களும் இருக்கின்றன. அவன் ஒரு நேர்மையான மனிதன். வாங்குகிற சம்பளத்தை, அடுத்தவர்கள் அவன் மேல் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை, அவனுடைய கல்விக்காக போராடி உழைத்த அவன் பெற்றோர்கள் அவனுக்காக கண்ட கனவுகளை நியாயப்படுத்தும் வகையில் உழைக்க விரும்புகிறான்.

    இறுதியில் வீடு திரும்புகிறான். குளித்து விட்டு, வசதியான இரவு உடைகளை அணிந்து கொள்வான். குடும்பத்துடன் இரவு உணவு. குழந்தைகளின் ஹோம்-வொர்க் பற்றி கேட்பான். மனைவி தன்னுடைய அன்றைய தினம் எப்படி கழிந்தது என்று சொல்வதை கேட்டுக் கொள்வான். ஒரு எடுத்துக்காட்டுக்கு என்று மட்டும் சில சமயங்களில் தன் வேலை பற்றிய விஷயங்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வான். ஏனெனில் இயன்ற மட்டும் அலுவலகப் பிரச்னைகளை வீட்டுக்கு எடுத்து வராமல் இருக்கவே மாதவன் பிரியப்படுகிறான். அவர்களின் இரவு உணவு முடிந்ததும் – எடுத்துக்காட்டுகள், ஹோம்-வொர்க், இன்ன பிற விஷயங்கள் – எதிலும் நாட்டமில்லாத குழந்தைகள் உணவு மேஜையை விட்டு உடனே விலகி, தத்தம் கணினி முன்னர் சென்று உட்கார்ந்து விடுகிறார்கள். மாதவனும் தன் பங்குக்கு தொலைக்காட்சி முன்னர் சென்று அமர்ந்து விடுகிறான். ( மதியம் ஏதாவது நிகழ்ந்திருக்கக் கூடும்!)

    தன் வேலை சம்பந்தப்பட்ட புத்தகத்துடன் தான் அவன் படுக்கைக்கு செல்கிறான் – ஊழியனாக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி – போட்டி தீவிரமாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதையும் தொடர்ந்து தன் அறிவை புதுப்பித்துக் கொள்ளாவிடில், வேலையை இழக்கும் அபாயத்தோடு கொடூரமானதொரு சாபத்தை எதிர்கொள்ளும் இன்னொரு அபாயமும் – செய்ய எதுவும் இல்லாமல் இருத்தல் – இருப்பதை அவன் அறிந்தே இருந்தான்.

    அவன் மனைவியுடன் சிக்கனமாகவே பேசுவான். நல்ல உள்ளம் படைத்த, கடுமையாக உழைக்கும், குடும்பத்தை நேசிக்கும், எச்சூழலையும் சந்திக்க தயார் நிலையில் இருக்கும் மனிதனல்லவா அவன்? படுத்த சில நிமிடங்களிலேயே அவனுக்கு உறக்கம் வந்து விடுகிறது. அடுத்த நாள் ரொம்ப பிஸியாக இருக்க வேண்டியிருக்கும் என்று அறிந்திருந்தான் ; தன் சக்தியை நன்றாக மீண்டும் கட்டமைக்கும் அவசியத்தை உணர்ந்தும் இருந்தான்.

    அன்றிரவு தூக்கத்தில் மாதவனுக்கு ஒரு கனவு வருகிறது. கனவில் ஒரு தேவதை அவன் முன் தோன்றி “ஏன் இப்படி செய்கிறாய்?” என்று கேட்கிறாள். “ஏனென்றால், நான் பொறுப்பான மனிதன்” என்று பதிலளிக்கிறான் மாதவன்.

    தேவதை மேலும் கேட்கிறது. “உன்னால் உன் தினத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு வெறுமனே இவ்வுலகத்தையும் – உன்னையும் மட்டும் உற்று நோக்க முடியுமா?”

    மாதவன் : “எனக்கும் அப்படி செய்ய ஆசைதான்? ஆனால் நேரம் தான் இல்லை”

    தேவதை : “நீ பொய் சொல்கிறாய்…எல்லாருக்கும் நான் சொன்னதை செய்ய நேரமிருக்கிறது. செய்யும் தைரியம் தான் யாரிடமும் இருப்பதில்லை. நாம் என்ன செய்கிறோம் என்பதை சிந்திக்க உதவினால் மட்டுமே வேலை என்பது வாழ்த்தப்பட்ட ஒன்றாக இருக்கும். வாழ்வின் அர்த்தத்தை சிந்திக்க அனுமதிக்காமல் இருப்பதே அதன் ஒற்றை இலக்காக இருக்கும் போது, அதுவே சாபமாகி விடும்.”

    நடு இரவில் திடுக்கென அவன் உறக்கத்தில் இருந்து குளிர்ந்த வியர்வையுடன் அவன் விழித்தெழுகிறான். தைரியம்? குடும்பத்திற்காக தியாக மனப்பான்மையுடன் உழைக்கும் ஒரு குடும்பத்தலைவன் ஒரு நாளின் வெறும் பதினைந்து நிமிடம் ஒன்றும் செய்யாமல் இருக்கும் தைரியம் இல்லாமல் எப்படி இருக்கமுடியும்?

    உறககத்திற்கு திரும்புவதே சிறந்தது. இது ஒரு சொப்பனம் தான். இக்கேள்விகளால் அவனுக்கு நன்மை எதுவும் விளையப் போவதில்லை. நாளை அவன் மிக மிக பிஸியாக இருக்கப் போகிறான்.

    [TRANSLATED FROM THE BOOK –
    LIKE THE FLOWING RIVER – BY PAULO COELHO, CHAPTER HEADING : MANUEL IS AN
    IMPORTANT AND NECESSARY MAN]

  • நேரமில்லை

    நேரமில்லை..நேரமேயில்லை…
    நான் செய்யவிரும்பும்
    அனைத்தையும் செய்தற்கு…
    ஏறுவதற்கு சிகரங்களின் உச்சிகள்,,,
    உலாவுவதற்கு உகந்த காடுகள்…
    படகில் பயணிக்க அலை திரள் கடல்கள்..
    செல்வதற்கு எல்லா இடங்களும்…
    அறிவதற்கு பூமிவாழ் எல்லா மனிதரும்…
    இருக்கும் நேரமோ…
    சிலரை அறிதற்கும்
    சிலவற்றை செய்தற்கும்
    செய்ய மீதமிருப்பவை பற்றி
    செய்யுள் புனைதற்கும்

    – எலீனோர் பார்ஜான்

  • ஓடும் ஆறு போல….

    ஓடும் ஆறு போல இரு

    இரவுகளில் அமைதியாக.

    இருண்டிருக்கும் போது அச்சப்படாதே

    வானில் நட்சத்திரங்கள் தெரிந்தால்

    அவற்றை உன்னுள் பிரதிபலி

    வானில் மேகங்கள் சூழ்ந்திருந்தால்

    மேகமும் நீரின் வடிவம் என்பதை நினைவுபடுத்திக் கொள்

    கவலையை விட்டு அவற்றையும் பிரதிபலி

    உன் அமைதி நிறைந்த ஆழங்களில்

     

     

    (பிரேசில் நாட்டுக் கவிஞர் மானுவல் பண்டெய்ரா (Manual Bandeira) எழுதியது)

  • கனவுகளைப் பின் தொடர்ந்தவன்

    பிரேசிலின் ரியோ-டீ-ஜெனீரோ நகரில் உள்ள புனித ஜோசப் மருத்துவமனையில் நான் பிறந்தேன். அது ஒரு சிரமமான பிரசவமாக இருந்தது. எனவே, என் அன்னை நான் உயிர் பிழைக்க அருள் புரியுமாறு புனித ஜோசப்பை வேண்டிக்கொண்டார். நான் பிறந்த நாள் முதலே புனித ஜோசப் என் வாழ்வை தாங்கிப்பிடிக்கும் தூணாக விளங்குகிறார். நான் 1987இல் முதல்முறையாக சாண்டியாகோ (ஸ்பெய்ன்) புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பிய ஒவ்வொரு வருடமும் 19ந் தேதி மார்ச் அன்று – புனித ஜோசப்பின் பெயரில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறேன். இதில் என் நண்பர்களையும், நேர்மையும் கடின உழைப்பும் கொண்டு தம் வாழ்க்கையை ஒட்டும் மற்றவர்களையும் அழைக்கிறேன். செய்யும் பணியின் மூலம் தத்தம் கௌரவத்தை காக்க முயலும் எல்லாருக்காகவும் இவ்விருந்தின் தொடக்கத்தில் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். வேலையில்லாமலும் வருங்கால நம்பிக்கை இல்லாதவருக்காகவும் கூட நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

    பிரார்த்தனைக்கு முன்னர் நானளிக்கும் சிறு அறிமுகவுரையில் புதிய ஏற்பாட்டில் ‘கனவு” என்கிற சொல் ஐந்து முறை மட்டுமே வருகிறது என்பதை நினைவுறுத்துவது வழக்கம். அந்த ஐந்தில் நான்கு முறை அந்தச் சொல் ஜோசப் என்கிற தச்சனைப் பற்றி குறிப்பிடும் பகுதிகளிலேயே வருகிறது. இச்சொல் வரும் எல்லா இடங்களிலும் ஜோசப் ஏற்கெனவே நிச்சயித்திருந்த திட்டத்திற்கு மாறான முடிவுகளை எடுக்க ஒவ்வொரு முறையும் தேவதையொன்று வற்புறுத்துகிறது.

    ஜோசப்பின் மனைவி கர்ப்பம் தறித்திருந்தாலும், அவளை விட்டு நீங்காதிருக்குமாறு தேவதை கேட்டுக் கொள்கிறது. “அண்டை அயலார் இதைப் பற்றி வம்பு பேசுவார்களே?” என்று ஜோசப் தேவதையுடன் வாதிட்டிருக்கலாம். ஆனால், ஜோசப் தன் வீடு திரும்பி, தனக்கு அளிக்கப்பட்ட வாக்கின் மேல் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

    தேவதை அவரை எகிப்து செல்லுமாறு கூறுகிறது. இதற்கு அவருடைய பதில்: ”இங்கு என் தச்சு வேலை இருக்கிறது; என் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இவற்றை விட்டுவிட்டு நான் ஏன் போக வேண்டும்?” என்று இருந்திருக்கலாம். ஆனால் அவர் தன் எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு அறியாப் பிரதேசத்துக்கு செல்கிறார்.

    தேவதை அவரை எகிப்திலிருந்து திரும்பி வருமாறு சொல்கிறது. ஜோஸப் “என்ன? இப்போதா? இப்போது தானே தட்டுத்தடுமாறி ஒரளவு செட்டிலாகியிருக்கிறோம். இங்கிருந்து ஏன் கிளம்ப வேண்டும்?” என்று எண்ணியிருக்கலாம்

    ஒவ்வொரு முறையும் பகுத்தறிவுக்கு மாறாக முடிவெடுத்து தன் கனவுகளைப் பின் தொடர்ந்து செல்கிறார் ஜோசப். இவ்வுலகில் எல்லா மனிதர்களுக்கும் வகுக்கப்பட்ட பாதையில் – குடும்பத்தை காத்தல் மற்றும் ஆதரவு காட்டல் என்ற பாதையில்– தானும் போக வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். புரிதலுக்கு அப்பாற் பட்ட சில செயல்களை செய்தாலும், எத்தனையோ ஆயிரமாயிரம் ஜோசப்கள் போல, அவரும் இக்காரியத்தில் தன்னை முழூமூச்சுடன் ஈடுபடுத்திக்கொள்ள முயல்கிறார்

    பின்னால் அவருடைய மனைவியும், ஒரு மகனும் கிறித்துவத்தின் தூண்களாக ஆகிறார்கள். உழைப்பாளி என்ற மூன்றாவது தூண் இயேசுவின் குடும்ப காட்சிகளை சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் தின விழாக்களிலோ, அல்லது அவரின் மேல் சிறப்பு பக்தி கொண்ட என்னையும் மற்றும் தச்சர்களைப் பற்றி புத்தகம் எழுதிய நண்பர் லியோனார்டோ போஃப் போன்றவர்களாலோ (நான் அந்த புத்தகத்துக்கு ஒரு முகவுரை எழுதியிருக்கிறேன்) மட்டும் அவ்வப்போது நினைவுறுத்தப்படுகிறார்.

    எழுத்தாளர் கார்லோஸ் ஹெய்டோர் கோனி அவர்கள் எழுதிய, நான் இணையத்தில் வாசித்த வரிகளை கீழே தருகிறேன் :-
    ”கடவுளை அறிந்து கொள்ளவே முடியாது என்ற நிலைப்பாடும், தத்துவார்த்த, ஒழுக்க மற்றும் மதரீதியாக கடவுளை ஏற்க மறுக்கும் கொள்கையும் கொண்ட என்னைப் பார்த்து – மரபார்ந்த சில அருட் தொண்டர்களின் மேல் எனக்கிருக்கும் பக்தியைப் பற்றி மக்கள் சில சமயம் வியக்கிறார்கள். என் தேவைகளுக்கோ என் பயன்பாடுகளுக்கோ கடவுள் என்கிற கருத்தியல் மிக தூரமானது. ஆனால் மண் அஸ்திவாரங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளும் அருட்தொண்டர்கள் – என் வியப்புக்கு மேலானவர்கள் ; என் பக்திக்கு தகுதி வாய்ந்தவர்கள்.

    புனித ஜோசப் இவர்களில் ஒருவர். ஆகமங்கள் அவர் சொன்னதாக அவருடைய ஒரு சொல்லையும் பதிவு செய்யவில்லை. வெறும் சைகைகளையும் vir Justus – ஒரு நேர்மையான மனிதன். அவர் நீதிபதியாக வேலை செய்யவில்லை; தச்சராக இருந்தார் என்று ஒரே ஒரு விளக்கமான குறிப்பையும் தவிர. எனவே, அனைத்துக்கும் மேல், அவர் நல்லவராக இருந்திருப்பார் என்பதை நாம் எளிதில் ஊகித்து உணரலாம். ஒரு நல்ல தச்சர் ; ஒரு நல்ல கணவன் ; உலக வரலாற்றை இரண்டாகப் பிரிக்கப்போகும் ஒரு மகனுக்கு நல்ல தந்தை”

    கோனியின் அழகான வார்த்தைகள். இருந்தாலும் “இயேசு இந்தியா சென்று இமய மலையில் வாழ்ந்த குருக்களிடமிருந்து ஞானம் பெற்றார்” என்பது மாதிரியான பிறழ்வான கூற்றுகளை நான் அடிக்கடி படிக்கிறேன். நான் உறுதியாக நம்புவது இதுதான் : எந்த மனிதனாலும் அவனுக்கு வாழ்க்கை தந்திருக்கிற பணியை புனிதமானவொன்றாக மாற்ற முடியும் ; இதை இயேசு கற்றதும் ஜோசப் என்கிற நேர்மையான மனிதன் மேசை, நாற்காலி மற்றும் கட்டில்கள் ஆகியவற்றை செய்யக் கற்றுக்கொடுக்கும் போது தான்.

    என்னுடைய கற்பனையில், எந்த மேசையில் வைத்து இயேசு ரொட்டியையும் திராட்சை ரசத்தையும் புனிதப்படுத்தினாரோ, அந்த மேசை ஜோசப்பினால் செய்யப்பட்டிருக்கும் என்று எண்ண விரும்புகிறேன். இல்லையெனில், பெயர் தெரியா ஒரு தச்சனால் செய்யப்பட்டிருக்கும். நெற்றி வியர்வை சிந்த உழைத்து சம்பாதித்த ஒரு தச்சனால் செய்யப்பட்டிருக்கும். இதனாலேயே, அம்மேசையில் அற்புதங்கள் நிகழ்த்த அனுமதி கிடைத்திருக்கும்.

    (TRANSLATION OF THE ESSAY – “THE MAN WHO FOLLOWED HIS DREAMS” – FROM THE BOOK – “LIKE THE FLOWING RIVER” WRITTEN BY PAULO COELHO)