Category: Translations

  • புத்தரும் ராவணனும் – பகுதி 1

    lankavatara1

    ராமாயணத்தில் வரும் ராவணன் சிவ பெருமானை வணங்கினான். லங்காவதார சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் வரும் ராவணன் பிரபஞ்ச புத்தரை வணங்குகிறான்; நீண்டதோர் உரையாடலும் நிகழ்த்துகிறான். ராமாயணத்தின் ராவணன் லங்காவதார சூத்திரத்தில் நுழைந்தது எப்படி?

    அதற்கு முன்னால் லங்காவதார சூத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்! சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக விளக்கும் நூல். “மொழியைக் கடந்து செல் ; சிந்தனையை தாண்டிச் செல்” என்று சொன்ன போதிசத்துவர் போதி தர்மர் தன் வாழ்நாளில் தன்னுடன் வைத்திருந்த ஒரே நூல் – லங்காவதார சூத்திரம் மட்டுமே ; தன்னுடைய வஸ்திரம், பிச்சைப் பாத்திரம் – இவற்றுடன் லங்காவதார சூத்திரம் நூலையும் போதி தர்மர் தன் சீடர் ஹுய்க்க (Huike) –வுக்கு கொடுத்தார் என்பது தொன்மச் செய்தி. எண்ணற்ற மகாயான பௌத்த நூல்களைப் போலவே இதை இயற்றிய மூலநூலாசிரியர் யார்? எப்போது எழுதப்பட்டது? என்ற விவரங்கள் தெரியாது.

    ”லங்காவதார” என்பதன் சொற்பூர்வ அர்த்தம் “இலங்கைக்கு நுழைதல்” என்பதாகும். புத்தர் இலங்கை சென்ற போது இந்த சூத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. இலங்கை சென்றவர் வரலாற்று புத்தர் என்று சொல்ல முடியாது. ஆனால் பிரபஞ்ச புத்தர் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாமே? பிரபஞ்ச புத்தருக்கும் இலங்கையில் குழுமியிருந்த போதிசத்துவர்களின் தலைவராக இருக்கும் மகாமதி என்கிற போதிசத்துவருக்குமிடையில் நிகழும் உரையாடலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. மற்றொரு மகாயான நூலான அவதாம்ஸக சூத்திரத்தில் பிரபஞ்ச புத்தர் தன் உரையை ஒரு தொன்ம லோகத்தில் நிகழ்த்துவார். ராட்சஸர்களின் தலைவனாக உருவகப்படுத்தப்படும் ராவணனுடனான சம்பாஷணை என்றாலும் அது இலங்கையில் நடக்கிறது என்று சொன்ன படியால் லங்காவதார சூத்திரத்துக்கு ஒரு பூலோக பரிமாணம் கிடைத்து விடுகிறது.

    வடமொழியில் இயற்றப்பட்ட இந்த சூத்திரத்தை இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பௌத்த அறிஞர்கள் வெவ்வேறு கால கட்டத்தில் சீன மொழியில் தந்திருக்கின்றனர். தற்போது கிடைக்கும் பதிப்புகளில் குணபத்ரரின் மொழிபெயர்ப்பு தான் காலத்தால் முந்தியது.

    லங்காவதார சூத்திரத்தின் முதல் மொழிபெயர்ப்பு கி..பி 420க்கும் கி பி 430க்கும் இடைப்பட்ட காலத்தில் தர்மரக்‌ஷர் என்பவரால் செய்யப்பட்டது. ; இரண்டாம் மொழிபெயர்ப்பு ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்திருக்கிறது. இதைச் செய்தவர் குணபத்ரர். மூன்றாவது மொழிபெயர்ப்பு வெளிவர மேலும் நூறு ஆண்டுகள் பிடித்தன. மொழிபெயர்ப்பாளர் போதிருசி. கடைசி மற்றும் நான்காவது மொழிபெயர்ப்பு சிக்ஷானந்தா என்பவரால் எட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. முதல் மொழிபெயர்ப்புக்கும் கடைசிக்கும் கிட்டத்தட்ட முன்னூறாண்டுகள் இடைவெளி.

    தர்மரக்‌ஷரின் மொழிபெயர்ப்பு காலப்போக்கில் அழிந்துவிட்டது ; நமக்கு கிடைக்கவில்லை.

    திபெத்திய மொழியிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஆய்ந்து, 1923-இல் ஜப்பானிய சமஸ்கிருத மொழி வல்லுனரும் பௌத்த பிரசாரகருமான புன்யூ நான்ஜோ அவர்களால் அச்சிடப்பட்ட வடமொழி பிரதியுடன் ஒப்பு நோக்கிய பின் பேராசிரியர் சுஸுகி பின் வரும் முடிவுகளுக்கு வருகிறார் (1) குணபத்ரரின் பதிப்பு மற்ற பதிப்புகளை விட சுருக்கமானதும் எளிமையானதுமாகும் (2) சமஸ்கிருத வடிவத்தின் அத்தியாயப் பிரிவுகளோடு சிக்‌ஷானந்தரின் மொழிபெயர்ப்பு மற்றும் திபெத்திய மொழிபெயர்ப்புகள் ஒத்துப் போக்கின்றன. (3) போதிருசியின் புத்தகத்தில் அத்தியாயங்களின் எண்ணிக்கை அதிகம் ; மூலத்தின் பெரிய அத்தியாயங்களை சிறு சிறு பிரிவுகளாக பிரித்து எழுதியிருக்கிறார். (4) குணபத்ரரின் பதிப்பில் அத்தியாயப் பிரிவுகளே இல்லை.

    குணபத்ரரின் மொழிபெயர்ப்பு மிகவும் பழமையானது. குணபத்ரருக்கும் போதிருசிக்கும் இடையிலான நூறாண்டு இடைவெளியில் மூன்று உதிரி அத்தியாயங்கள் பிற்காலத்திய மொழிபெயர்ப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இலங்கை மன்னன் ராவணன் பிரபஞ்ச புத்தரை சந்திப்பதும், அகவெளியின் சத்தியத்தை விரித்துரைக்கச் சொல்லி கேட்பதும். “லங்காவதார சூத்திரத்தின் விரிவாக்கத்துக்கான மேலோட்டமான முகவுரையாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த அத்தியாயம் இணைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது பின்னர் இணைக்கப்பட்டது தான் எனபதில் சந்தேகமில்லை” என்று பேராசிரியர் சுஸூகி கருதுகிறார்.

    ராம-ராவண கதை கி.பி மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டுகளில் திட்டவட்டமான காவிய வடிவத்தை எய்தியிருக்கக் கூடும் என்று வரலாற்றறிஞர்கள் சொல்கின்றனர். பிற்கால மகாயான பௌத்தர்கள் லங்காவதார சூத்திரத்துக்கு ஓரு ராமாயண இணைப்பு கொடுத்து விட வேண்டும் என்ற விழைவில் ராவண – பிரபஞ்ச புத்தர் சந்திப்பை முன்னுரையாக சேர்த்திருக்கக் கூடும். “குணபத்ரரின் மொழிபெயர்ப்பை வாசிக்கையில் ராவண நிகழ்வின் இடைச்செருகல் சூத்திரத்தை புரிந்து கொள்வதில் எந்த சிறப்பு உதவியையும் ஆற்றவில்லை என்பது தெளிவாகும்” என்கிறார் சுஸுகி.

    +++++

    Nanjio

    நான் கேள்விப்பட்டது. பெருங்கடலின் மத்தியில் அமைந்த மலாய மலைச் சிகரத்தின் உச்சியில் இருந்த இலங்கைக் கோட்டையில் ஆசிர்வதிக்கப்பட்டவர் தங்கியிருந்தார். ஆபரணங்களால் செய்யப்பட்ட மலர்களால் அம்மாளிகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிக்‌ஷுக்களும், திரளான போதிசத்துவர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவர்களெல்லோரும் வெவ்வேறு புத்த நிலங்களிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருந்தனர். மகாமதி போதுசத்துவரின் தலைமையில் அங்கு கூடியிருந்த போதிசத்துவர்கள்-மகாசத்துவர்கள் பல்வேறு சமாதி நிலைகளின் வித்தகர்கள்; பத்து வித சுய-தேர்ச்சிகள், பத்து ஆற்றல்கள், ஆறு வித மனோ சித்திகள் – இவைகள் கை வரப் பெற்றவர்கள். மனதின் நீட்சியாகவே புறவுலகம் இருக்கிறது என்ற உண்மையின் மகத்துவத்தை அறிந்தவர்கள். வெவ்வேறு உயிர்களின் மனபோக்கை, நடத்தையைப் பொறுத்து வடிவம், போதனை மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று புரிந்தவர்கள். ஐந்து தர்மங்கள், மூன்று சுபாவங்கள், எட்டு விஞ்ஞானங்கள் மற்றும் இருவகை அனாத்மங்கள் – இவை பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள்.

    கடல்-நாகங்களின் அரசனுடைய அரண்மனையில் போதனை செய்து விட்டு ஏழு நாட்களின் முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டவர். திரும்பியிருந்தார். சக்கரர்களும், பிரம்மனும், நாக கன்னிகைகளும் அவரை வரவேற்றனர். மலாய மலையின் மேலிருந்த லங்கா மாளிகையை நோக்கிய படி சிரித்தவாறே அவர் சொன்னார் “இறந்த காலத்தில் அருகர்களாகவும், முழு நிர்வாண நிலை அடைந்தவர்களாகவும் இருந்த புத்தர்களால், மலாய மலைச்சிகர உச்சியில் இருக்கும் இலங்கைக் கோட்டையில் தர்மம் எனும் உண்மை அவர்களுடைய உரையாடலின் கருப்பொருளானது – உயரிய ஞானத்தை அடைதல் வாயிலாக உள்ளார்ந்த சுயத்தில் மட்டுமே புரிந்து கொள்ளத்தக்க உண்மை அது ; தத்துவம் பேசும் தத்துவாசிரியர்களாலோ, ஸ்ராவகர்கள் மற்றும் பிரத்யேகபுத்தர்களின் பிரக்ஞை வாயிலாக கற்பனை செய்து பார்க்கவோ இயலாத உண்மை. யக்‌ஷர்களின் எஜமானனான ராவணனுக்காக நானும் அங்கு இருப்பேன்”

    ததாகதரின் ஆன்மீக ஆற்றலால் அருளப்பெற்று, ராவணன், ராட்சசர்களின் தலைவன், அவரின் குரலையும் சிந்தனையையும் செவி மடுத்தான். “ஆசீர்வதிக்கப்பட்டவர் கடல் நாகங்களுடைய அரசனின் அரண்மனையை விட்டு, சக்கரர்கள், பிரம்மன் மற்றும் நாககன்னிகைகள் புடைசூழ, கடலின் மேலோடும் அலைகளை நோக்கியவாறு, கூடியிருப்போரின் மன அதிர்வுகளை புரிந்தவாறு, பொதுநிலையால் தூண்டப்பட்ட விஞ்ஞானங்கள் உட்கலக்கும் ஆலய விஞ்ஞானம் பற்றி சிந்தித்தவாறு வெளியே வருகிறார்.” அங்கு நின்ற ராவணன் சொன்னான் “நான் சென்று ஆசீர்வதிக்கப்பட்டவரை இலங்கைக்குள் வருமாறு கேட்டுக் கொள்வேன் ; அது (அவரின் வருகை) இந்த நீண்ட இரவில் லாபம் ஈந்து, நனமையை அருளி, கடவுளரின் மற்றும் மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்தும்”

    தன் பணியாளர்களை அழைத்துக்கொண்டு ராவணன் புஷ்பக விமானமேறி ஆசிர்வதிக்கப்பட்டவர் வந்திருந்த இடத்துக்கு வந்தடைந்தான். அவனின் பிரஜைகள் ஆசீர்வதிக்கப்பட்டவரை இடமிருந்த வலமாக சுற்றி வந்தனர். நீலக்கல் பதிக்கப்பட்ட பிரம்பை வைத்து ஓர் இசைக்கருவியை மீட்டத் தொடங்கினர். சஹர்ஷயம், ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம், மத்யமம் மற்றும் கைசிகம் முதலிய இசைக்குறிப்புகளை வாசித்தனர். சரியான கணக்கில் பாடும் குரல் சேர்ந்திசைக்கும் குழலோடு இழைந்து ஒலித்தது.

    ”சுய இயல்பு கற்பிக்கப்பட்ட மனம் எனும் கொள்கையுள்ள உண்மைப் புதையல் சுயத்தன்மையற்றது ; தர்க்கத்தினின்று தள்ளி நிற்பது ; அசுத்தங்களில்லாதது ; அது ஒருவனின் உள்ளார்ந்த உணர்வில் அடைந்த ஞானத்தை குறிக்கிறது. ஓ பிரபுவே, நீர் இங்கு எனக்கு இங்கே உண்மையை அடையும் வழியைக் காட்டுவீராக”

    “பல வடிவங்களுக்கு சொந்தக்காரர்களான புத்திரர்களோடு இறந்த கால புத்தர்கள் பலர் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றனர். ஓ பிரபு! உயரிய ஞானத்தை எனக்கு போதிப்பீராக ; பல்வேறு உருவம் படைத்த யக்‌ஷர்களும் அதைக் கேட்கட்டும்”

    பாடலின் யாப்பு சிதறாது ராவணன் ராகத்தோடு பாடினான்.

    ததாகதருக்கு உரிய காணிக்கைகளை சமர்ப்பித்து விட்டு, மரியாதையுடன் பேசலானான் ராவணன்

    “இங்கு வந்திருக்கும் என் பெயர் ராவணன், ராட்சசர்களின், பத்து தலை கொண்ட தலைவன்.

    மதிப்பு வாய்ந்த கற்கள் பதிக்கப்பட்ட இச்சிகரத்தின் உச்சியில் இறந்த காலத்தில் முழுமையான ஞானம் அடைந்தவர்களால் உள்ளார்ந்த பிரக்ஞை மிக்க முழுமையாக ஞானமானது உணர்த்தப்பட்டது.

    சீடர்களால் சூழப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்டவர் இப்போது அதே ஞானத்தை இலங்கையில் இருக்கும் எங்களுக்கு போதித்தருள வேண்டும்.

    இறந்த கால புத்தர்களால் புகழப்பட்ட லங்காவதார சூத்திரம் எந்தவொரு குறிப்பிட்ட தத்துவக் கோட்பாட்டு முறையைச் சாராமல் இருப்பதால், உள்ளார்ந்த பிரக்ஞை நிலையை தெளிவுற அறிவிக்கிறது.

    இறந்த கால புத்தர்கள் வெற்றி பெற்றவரின் மக்கள் புடை சூழ இச்சூத்திரத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவரும் இப்போது அதைப் பேசுவார்.

    வருங்காலத்தில் புத்தர்களும், புத்த-மக்களும் யக்‌ஷர்களிடம் கருணை கொள்வார்கள் ; ஈடிணையற்ற இக்கோட்பாட்டைப் பற்றி இரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இம்மலையின் உச்சியில் நின்று தலைவர்கள் போதிப்பார்கள்.

    ஆசிர்வதிக்கப்பட்டவரே ! பேராசை எனும் குறையிலிருந்து விடுபட்டுவிட்ட இங்கிருக்கும் யக்‌ஷர்கள் உள்நிறை பிரக்ஞையைத் தெளிந்து விட்டார்கள் ; இறந்த புத்தர்களுக்கு காணிக்கையிடுகிறார்கள். ; அவர்கள் மகாயான போதனையில் நம்பிக்கையுடையவர்கள் ; ஒருவருக்கொருவரை ஒழுக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள்.

    மகாயானம் பற்றி அறியும் ஆர்வமிக்க இளம் யக்‌ஷர்களும், ஆடவரும், பெண்களும் இங்கிருக்கிறார்கள். ஆசீர்வதிக்கப்பட்டவரே! வாரும்! நீங்கள் எம் ஆசான்! மலாய மலையின் மேலிருக்கும் இலங்கைக்கு வாருங்கள்.

    கும்பகர்ணனின் தலைமையில் இந்நகரில் வசிக்கும் ராட்சசர்கள் மகாயானத்தின் மேலுள்ள அர்ப்பணிப்பால், உங்களிடமிருந்து உட்கருத்து உணர்தலைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளனர்.

    ஓ முனிவரே! என் மாளிகையை ஏற்றுக் கொள்ளுங்கள், அப்சரஸ் நங்கைகளின் துணையையும், பல்வித அணிநகைகளையும் மற்றும் உல்லாச மிகு அசோக வனத்தயையும் கூட ஏற்றுக் கொள்ளுங்கள்.

    “புத்தர்களுக்கு சேவை செய்ய நான் என்னையே அர்ப்பணித்துக் கொள்வேன்.. அவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயங்கும் எதுவும் என்னிடம் இல்லை. ஓ மாமுனியே! என்னிடம் இரங்குவீராக

    அவன் இவ்வாறு பேசுவதைக் கேட்ட மூவுலகின் பிரபு சொன்னார் “யக்‌ஷர்களின் அரசே! இரத்தினக்கற்கள் பதித்த இம்மலைக்கு இறந்த காலத் தலைவர்கள் பலர் விஜயம் புரிந்திருக்கின்றனர்.

    உன் மேல் கருணை மிகுத்து அவர்களின் உள்நிறை ஞானத்தைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். வருங்கால புத்தர்களும் அதே ஞானத்தை மீண்டும் பிரகடனப்படுத்துவார்கள்.

    உண்மைக்கருகில் நிற்கும் பயிற்சியாளர்களுக்குள்ளே உறையும் உள்ளார்ந்த ஞானம். யக்‌ஷர்களின் ராஜனே! என்னிலும் சுகதாவிலும் இருக்கும் இரக்ககுணம் உன்னுள்ளிலும் இருக்கிறது”

    ராவணனின் அழைப்பை ஏற்று, ஆசீர்வதிக்கப்பட்டவர் அமைதியாகவும் குழப்பமில்லாமலும் இருந்தார். ராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டார்.

    இன்ப நகரத்தை அடைந்ததும் புத்தருக்கு மீண்டும் மரியாதைகள் செய்யப்பட்டன ; ராவணன் அடங்கிய யக்‌ஷர்களின் குழுவொன்றும், யக்‌ஷிகளின் குழுவொன்றும் அவருக்கு மரியாதை செய்தன.

    —- (to be continued)

    Source : (1) Studies in the Lankavatara Sutra – D T Suzuki (2) The Lankavatara Sutra – Volume one – Edited by Bunyiu Nanjio

    DTSuzuki

     

  • ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!

    Bullehshah_2009
    சூஃபி மரபில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படும் புல்லே ஷா பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பஞ்சாபி சூஃபிக்களில் அவரைப் போன்று பரந்த பிரபலம் பெற்றவர்களும் அதிகமாகக் கொண்டாடப்படுவர்களும் யாருமில்லை ; காஃபி என்னும் பஞ்சாபி கவிதை வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளும் பாடல்களும் மிகப் பிரசித்தமானவை. உலகின் மிகச்சிறந்த சூஃபிக்களூள் ஒருவரான புல்லே ஷாவின் சிந்தனைகள் ஜலாலூத்தின் ரூமி மற்றும் டப்ரேஸ் போன்ற சூஃபிக்களின் சிந்தனைகளுக்கு ஒப்பானவை. ஒரு கவிஞராக, புல்லே ஷா பிற பஞ்சாபி சூஃபிக்களிடமிருந்து வேறு பட்டவர் ; தன் கவிதைகளில் உணர்ச்சி பூர்வமான பொது பஞ்சாபி குணங்களை சித்தரிக்காதவர் ; ஜீவனுள்ள, பக்தி நிரம்பிய பஞ்சாபி குணங்களை வலியுறுத்தி எழுதியவர். மரபார்ந்த ஆன்ம சிந்தனை வழி வந்த புல்லே ஷாவின் கவிதைகளில் மறைஞான சொற்றொடர்களும் மனக்கிளர்ச்சிகளும் நிறைந்திருந்தாலும், அவரின் கவிதைகளில் முக்கிய அங்கம் வகிப்பது – அறிவு சார் வேதாந்த சிந்தனையே.

    சில வருடங்களுக்கு முன்னர் ராபி ஷெர் கில் என்ற பாடகர் புல்ஹே ஷாவின் “புல்லா… கீ ஜாணா மை கோன்…” என்ற பிரசித்தமான பாடலை ஜன ரஞ்சக பாப்-இசையாகத் தந்தார். உலக முழுதும் ரசிகர்களின் மனதை ஈர்த்த இப்பாடலை சில நாள் முன்னர் யூ-ட்யூபில் கேட்டு மெய்ம்மறந்து போகையில் இவ்வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. பாகிஸ்தானிய இணைய தளமொன்றில் எனக்கு கிடைத்த ஆங்கில மொழி பெயர்ப்பை கீழ்க்கண்டவாறு தமிழ்ப்படுத்தினேன் :-

    ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!

    நான் யாரென்று நான் அறியேன்
    நம்பிக்கையுடன் மசூதிக்கு செல்பவனுமல்லன் ;
    நம்பிக்கையின்மைக்கு சரணடைபவனுமல்லன் ;
    சுத்தமானவனுமில்லை ; அசுத்தமானவனுமில்லை ;
    மோசஸுமில்லை ; பாரோ-வும் இல்லை ;
    நான் யாரென்று நான் அறியேன்
    வேதப் புத்தகங்களில் இல்லை நான் ;
    போதைப் பொருள்களிலும் இல்லை;
    கெட்டவர்களின் கூட்டாளியாக மதுக்கடையிலும் நான் இல்லை ;
    தூங்கவுமில்லை ; விழித்திருக்கவுமில்லை ;
    நான் யாரென்று நான் அறியேன்
    பாவிகளுக்கு நடுவிலுமில்லை ; புனிதர்களுக்கு நடுவிலுமில்லை ;
    மகிழ்ச்சி மிக்கவனில்லை ; கவலை நிறைந்தவனுமில்லை ;
    நீரைச் சார்ந்தவனில்லை ; பூமியைச் சார்ந்தவனுமில்லை ;
    நான் வாயு இல்லை ; தீயுமில்லை ;
    நான் யாரென்று நான் அறியேன்
    அரேபியாவைச் சேர்ந்தவனில்லை ; லாகூரில் வசிப்பவனுமில்லை ;
    இந்தியனில்லை ; நாக்பூரில் வசிப்பவனுமில்லை ;
    இந்துவோ அல்லது பெஷாவர் வாழ் துருக்கி-இஸ்லாமியனோ இல்லை
    நதௌன் நகரில் இருப்பவனும் இல்லை.
    நான் யாரென்று நான் அறியேன்
    சமயங்களின் ரகசியங்களை அறிந்தவனில்லை நான் ;
    ஆதாம்-ஏவாளுக்குப் பிறந்தவனில்லை நான்;
    எனக்கென்று ஒரு பெயரையும் இட்டுக் கொண்டதில்லை ;
    மண்டியிட்டு தொழுகை புரியும் கூட்டத்தைச் சேர்ந்தவனில்லை ;
    வழிதவறிச் சென்றவர்களின் கூட்டத்தையும் சேர்ந்தவனில்லை ;
    நான் யாரென்று நான் அறியேன்
    தொடக்கத்தில் நான் இருந்தேன் ; இறுதியிலுமிருப்பேன் ;
    ஒன்றைத் தவிர வேறெதையும் அறியாத ஒருவன் நான்
    என்னை விட ஞானி இருப்பானா?
    புல்லா, அறிய முனையத் தக்க வேறொருவன் இருக்கிறானா?

  • கதவுடன் ஒரு மனிதன் – சச்சிதானந்தன்

    சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

    1996 முதல் தில்லியில் வசிக்கிறாராம். தில்லியில் வசிப்பது பற்றி அவரிடம் கேட்ட போது “எனக்கும் தில்லிக்குமான உறவு அன்பு – வெறுப்பு இரண்டுங் கலந்தது” என்று பதிலளித்தார்.

    இச்சந்திப்புக்கு முன்னர் அவருடைய கவிதைகளைப் படித்ததில்லை. எம்டிஎம் சச்சிதானந்தனின் எழுத்தை சிலாகித்துப் பேசினார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கவிதைகளை இணையத்தில் வாசித்தேன். அவருடைய கவிதை நூல்களை வாங்கி ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. அவருடைய மூன்று கவிதைத் தொகுதிகளின் தமிழாக்கங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன என்று அவருடைய இணைய தளம் (http://www.satchidanandan.com/index.html) சொல்கிறது. வாங்க வேண்டும்.

    கவிஞர் சச்சிதானந்தனின் அனுமதியுடன் “A man with a door” என்ற அவருடைய கவிதையின் தமிழாக்கம் கீழே.

    கதவுடன் ஒரு மனிதன்
    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    அவன் அதனுடைய வீட்டை தேடுகிறான்.

    அவனின் மனைவியும்
    குழந்தைகளும் நண்பர்களும்
    அக்கதவின் வழி உள்ளே வருவதை
    அவன் கனவு கண்டிருக்கிறான்.
    இப்போதோ முழுவுலகமும்
    அவனால் கட்டப்படாத வீட்டின்
    கதவினூடே நுழைந்து செல்வதை
    அவன் பார்க்கிறான்.

    கதவின் கனவு
    உலகை விட்டு மேலெழுந்து
    சுவர்க்கத்தின் பொன் கதவாவது.
    மேகங்கள்;வானவிற்கள்
    பூதங்கள், தேவதைகள் மற்றும் முனிவர்கள்
    அதன் வழி நுழைவதை
    கற்பனை செய்கிறது,

    ஆனால் கதவுக்காக காத்திருப்பதோ
    நரகத்தின் உரிமையாளர்.
    இப்போது கதவு வேண்டுவது
    மரமாக மாறி
    இலைச்செறிவுடன்
    தென்றலில் அசைந்தவாறே
    தன்னைச் சுமந்திருக்கும்
    வீடற்றவனுக்கு
    சிறு நிழலைத் தருவதே.

    ஒரு மனிதன் கதவைச் சுமந்த படி
    நகரத்தெருவினூடே நடக்கிறான் ;
    ஒரு நட்சத்திரம் அவனுடன் நடக்கிறது.

    MDM&KSatchidananthan

    (எம்டிஎம், நான், கவிஞர் சச்சிதானந்தன்)

  • மிலிந்தனின் கேள்விகள் 2

    milin
    சொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம்.

    இவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

    (1)

    ”நாகசேனரே, மறு பிறப்பெடுத்த ஒருவன் அதே மனிதனா? அல்லது வேறொருவனா?”

    ”அவனுமில்லை. வேறொருவனுமில்லை”

    ”உதாரணம்?”

    ”பானையில் இருக்கும் பால், தயிராகவும், பின்னர் வெண்ணையாகவும், பிறகு நெய்யாகவும் மாறுகிறது. நெய், தயிர், வெண்ணை இவை எல்லாம் பாலைப் போன்றதே என்று சொல்வது சரியானது அல்ல; ஆனால் அவைகளெல்லாம் பாலில் இருந்து வந்தவையே, எனவே அவைகளெல்லாம் வேறுவேறானவை என்றும் சொல்ல முடியாது”

    (2)

    ”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் அதைப் பற்றி அறிவானா?”

    “ஆம் வேந்தனே”

    ”எப்படி அறிவான்?”

    “மறுபிறப்புக்கான காரணங்களும் சூழ்நிலையும், முடிவுக்கு வருவதன் வாயிலாக. உழாமல், நடாமல், அறுவடை செய்யாமல் இருக்கும் விவசாயி, களஞ்சியம் நிரம்பவில்லை என்பதை அறிவான்.”

    (3)

    ”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் துன்பத்தை உணர்வானா?”

    ”அவன் உடல் வலியை உணரலாம் ; மன வலியை உணர மாட்டான்”

    “அப்படி அவன் வலியை உணர்வானேயானால், அவன் ஏன் உடன் மரணத்தை தழுவி, தத்தளிப்பில்லாமல், துக்கத்தை முடிவுக்கு கொண்டு வரக் கூடாது?”

    ”அருகன் வாழ்வின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளாதவன். கனியாத பழத்தை அவன் அசைத்து உதிர்ப்பதில்லை; பழத்தின் முதிர்ச்சிக்காக காத்திருக்கிறான். புத்தரின் முக்கிய சீடரும் வணங்குதற்குரியவருமான சரிபுத்தர் இவ்வாறு கூறுகிறார் :-

    ”மரணமுமில்லை ; நான் நெஞ்சார விரும்புவது வாழ்வுமில்லை.
    சம்பள வேலைக்காரன் போல
    காலம் கடத்துகிறேன்.
    மரணமோ வாழ்க்கையோ அல்ல நான் வேண்டுவது
    கவனத்துடனும் தெளிவான புரிதலுடனும்
    காலம் கடத்துகிறேன்”
    – (தேரகதா 1002-1003)

    (4)

    ”இன்ப உணர்ச்சி ஆரோக்கியமானதா, ஆரோக்கியமற்றதா, அல்லது நடு நிலையானதா?”

    ”இம்மூன்றில் எதுவாகவும் இருக்கலாம்”

    “வணக்கத்துக்குரியவரே, ஆரோக்கியமான நிலைகள் துன்பம் தராதவையாக இருக்குமென்றால், துன்ப உணர்வைத் தருபவை ஒவ்வாதவையாக இருக்குமென்றால், வலியைத் தரும் ஆரோக்கியமான நிலை இல்லாமல்தானே இருக்கும்?” [விளக்கம் : ஆரோக்கியமான கருமங்கள் வலியைத் தருவனவல்ல ஆனால் அக்கருமங்களை செய்தல் கடினம் என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம்முடைய பற்றும் வெறுப்புமே. ஒவ்வாத காரியங்களின் விளைவுகள் வலியுணர்ச்சி தருவன ஆனால் அக்காரியங்களைச் செய்து மகிழ்வடையக் காரணம் நம்முடைய மயக்கமே)

    ”அரசனே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதன் ஒரு கையில் சூடான இரும்பு பந்தையும், இன்னொரு கையில் பனிக்கட்டியாலான பந்தையும் எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டால், இரண்டும் அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா?”

    ”கண்டிப்பாக”

    “அப்படியானால், உங்களுடைய அனுமானம் தவறாகிப் போகும். அவை இரண்டும் சூடானவையாக இல்லாதிருக்குமானால், சூடு அசௌகரியத்தை ஏற்படுத்துமானால் மற்றும் அவை இரண்டும் குளிர்ச்சியாக இல்லாதிருக்குமானால், குளிர்ச்சி அசௌகரியத்தை தருமானால், அசௌகரியம் சூட்டிலிருந்தோ குளிர்ச்சியிலிருந்தோ எழுவதில்லை என்றுதானே பொருள்?”

    ”உங்களுடன் என்னால் விவாதிக்க இயலாது. தாங்களே விளக்குங்கள்”

    பெரியவர் மன்னனுக்கு அபிதம்மத்தை போதிக்கலானார். “இவ்வுலகோடு இணைந்த இன்பங்கள் ஆறு. துறவோடு இணைந்தவை ஆறு. உலகியல் துக்கங்கள் ஆறு ; துறவு சார்ந்த துக்கங்கள் ஆறு. இரண்டு வகையிலும் நடுநிலை சார்ந்த உணர்ச்சிகள் ஆறு. மொத்தம் முப்பத்தியாறு. இறந்த, நிகழ் மற்றும் வருங்காலம் எனும் மூன்று காலங்களிலும் எழும் முப்பத்தியாறு உணர்ச்சிகள் ; ஆக மொத்தம் நூற்றியெட்டு உணர்ச்சிகள்.”

    (5)

    “நாகசேனரே, மறுபிறப்பெடுப்பது எது?”

    “மனமும் பருப்பொருளும்”

    “இதே மனமும் பருப்பொருளும்தான் மறு பிறவி எடுக்கிறதா?”

    “இல்லை. ஆனால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

    ”ஏதாவது ஓர் உதாரணம் தாருங்கள்”

    “ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா?”

    ”நிச்சயமாக. அவன் என்ன சொன்னாலும் பிந்தைய நெருப்பு முன்னர் பற்றி வைக்கப்பட்டதிலிருந்து வந்தது என்பதே உண்மை”

    ”ஆகையால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

    (6)

    ”மனம்-பருப்பொருள் பற்றி விளக்கினீர்கள். எது மனம்? எது பருப்பொருள்?”

    ”எதெல்லாம் தூலமோ அது பருப்பொருள், எதெல்லாம் நுட்பமானவைகளோ அகம் சார்ந்த மனநிலைகளோ அது மனம்.”

    “இவையிரண்டும் தனித்தனியே ஏன் பிறப்பதில்லை?”

    ”முட்டையின் கருவும் ஓடும் போன்றது இது. இவையிரண்டும் சேர்ந்தே எழுகின்றன ; நினைவுக்கெட்டாத காலந்தொட்டு இவைகள் இணைந்தே இருக்கின்றன.”

    (7)

    “நினைவுக்கெட்டாத காலம்” என்று நீங்கள் சொல்லும்போது, காலம் என்றால் என்ன? அப்படியொன்று இருக்கிறதா?”

    ”காலம் என்றால் கடந்தது, நிகழ்வது மற்றும் வரப்போவது. சிலருக்கு காலம் என்ற ஒன்று இருக்கிறது ; சில பேருக்கு இல்லை. எங்கு மறுபிறப்பெடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எங்கு மறுபிறப்பு எடுக்காமல் இருக்கப் போகிறவர்கள் இருக்கிறார்களொ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இல்லை”

    “சரியாகச் சொன்னீர்கள் நாகசேனரே. நீங்கள் பதிலளிப்பதில் வல்லவர்”

    ~~~0~~~

    Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894)

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23844)

    Milinda Panha

  • மிலிந்தனின் கேள்விகள்

    jcmilinda1
    ”மிலிந்தா பன்ஹா” பௌத்த இலக்கியத்தின் ஒரு புகழ் பெற்ற நூல் : ஏறக்குறைய கி.மு முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். பௌத்த தத்துவங்களை எளிதாகவும் கவனத்தில் கொள்ளத்தக்க வகையிலும் இந்நூல் பேசுகிறது. பாக்ட்ரியா என்ற பிரதேசத்தை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தனுக்கும், பௌத்தத் துறவி நாகசேனர் என்பவருக்கும் இடையிலான உரையாடல் வடிவில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் மிகவும் சுவையான கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு “ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?” என்பன போன்ற கேள்விகள்.

    அலெக்ஸாண்டரின் இந்தியப்படையெடுப்புக்குப் பிறகு, பாரசீகத்தைத் தாண்டி அவர் வென்ற தேசங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நாடு தான் பாக்ட்ரியா. இந்நூலில் வரும் அரசன் மெனாண்டர் ஸோடெர் என்ற பெயர் கொண்ட கிரேக்கன். கிரேக்கப் பேரரசு உடைந்த போது அதன் கிழக்குப் பகுதிகள் பாக்ட்ரியா என்ற தனி நாடானதும், அப்பகுதியை ஆண்டவன். இந்தியப் பாலி மொழி நூல்களில் அவன் ‘மிலிந்த’ என்று குறிப்பிடப்படுகிறான். அவன் பாக்ட்ரியாவை கி.மு 150 இலிருந்து 110 வரை ஆண்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. எனவே இந்நூல் புத்தரின் பரிநிர்வாணத்திற்கு கிட்டத்தட்ட 400 வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருக்கக்கூடும்.

    மிலிந்தனின் தந்தை காலத்தில் பாக்ட்ரியப் பேரரசு உட்பூசல்களால் பிளவுற்றது. மிலிந்தன் காபூல் மற்றும் ஸ்வாட் சமவேளிப் பிரதேசங்களை ஆண்டு வந்தான். பின்னர் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளைத் தன் நாட்டுடன் இணைத்துத் தன் அரசை விரிவுபடுத்தினான். சிந்து சமவெளியை கைப்பற்றியவுடன் புதுத் தலைநகரை நிர்மாணம் செய்தான். “மிலிந்த பன்னா”வின் உரையாடல் நடக்கும் இடமாக கூறப்படும் “சகலா” மிலிந்தனின் தலைநகராக சித்திரிக்கப்படுகிறது. இந்தோ-கிரேக்கர்களின் புராதன நகரமான “சகலா” இப்போது “சியால் கோட்” என்று அழைக்கப்படும் நகரமாகும். “சியால் கோட்” பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் செனாப் மற்றும் ராவி நதிகளுக்கிடையில் உள்ளது. மிலிந்தன் பாக்ட்ரியாவின் எல்லையை இந்தியா வரை நீட்டியவன் என்ற பெருமைக்குரியவன். அவனுடைய ஆட்சிக்காலத்தில் சிந்து நதி டெல்டா, சௌராஷ்டிரா (கத்தியவார்), யமுனா நதிக்கரையருகில் இருக்கும் மதுரா நகர் வரை வடகிழக்கு இந்தியாவை தன் பேரரசுக்குள் உட்படுத்தினான். அவன் தலைநகர் பாடலிபுத்திரத்தையும் கைப்பற்றப்போவதாக அறைகூவல் விட்டான். ஆனால் பாடலிபுத்திரப்படைகளிடம் அவன் தோல்வியுறும் சமயத்தில் பின்வாங்க வேண்டியதாயிற்று. அவன் பௌத்த சமயத்தை தழுவிய பின்னர் பாக்ட்ரியா பௌத்த நாடாக மாறியது. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பாக்ட்ரியாவின் பிரதேசங்கள் எல்லாம் இஸ்லாமிய நாடுகளாக மாறின என்று வரலாறு நமக்கு சொல்கிறது.

    “மிலிந்த பன்ஹா”வின் அறிமுகத்தில் வரும் நாகசேனரின் வளர்ப்பு பற்றிய கதை, மகாவம்சத்தில் (இலங்கையின் நாளாகமம்) வரும் இளம் “மொகாலிப்புத்த திஸ்ஸரின்” கதையைத் தழுவியதாய் இருக்கிறது. மொகாலிப்புத்த திஸ்ஸ தேரர் மிலிந்தரின் காலத்திற்கு நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர். மேலும் “மிலிந்த பன்ஹா”வில் தேரரின் குறிப்பு இரண்டு இடங்களில் வருவதால், இளம் நாகசேனரின் கதை தேரரின் கதைதான் எனக் கருத முடியும். ஆனால் மகாவம்சத்தை மகாநாமா என்பவர் ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதினார். எனவே இளம் நாகசேனரின் கதையை “மிலிந்த பன்ஹா”வில் இருந்து மகாநாமா இரவல் வாங்கியிருக்கக் கூடும். ஐந்தாம் நூற்றாண்டில் புத்தகோசர் “மிலிந்த பன்ஹா”விற்கு உரையெழுதியதால், பௌத்த சமயத்தின் வணங்கத்தக்க நூல் என்ற தகுதியை அது பெற்றிருந்தது.

    coin_menander_i_india

    “மிலிந்த டிகா” என்ற மிலிந்த பன்ஹா-வுக்கான உரை நூலில் “மிலிந்த பன்ஹாவின் நூலறிமுகத்தின் பல செய்யுள்கள் மற்றும் இறுதியுரை புத்தகோசரால் எழுதப்பட்டவை” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    பர்மியப் பாலி புனித நூல்களில் ஒன்றாக “மிலிந்த பன்ஹா” சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமான தேரவாத பௌத்தர்களுக்கு இது முக்கியமான நூலாகும். இதன் மூல நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கலாம். இலங்கையில் பாதுகாக்கப்பட்ட பாலி வடிவம் மற்றும் அதையொட்டிய வழித்தோன்றல் வடிவங்களைத் தவிர வேறேதும் கிடைக்கவில்லை.

    சீன மொழியில் கிடைக்கும் “மிலிந்த பன்ஹா” மூல சமஸ்கிருத பிரதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்று வல்லுனர்கள் எண்ணுகின்றனர். ஏனெனில் பாலி நூலுக்கும் சீன மொழிபெயர்ப்பு நூலுக்குமிடையே காணப்படும் வேற்றுமைகள்.

    பாலி வடிவத்தின் முதல் மூன்று அத்தியாயங்கள் மட்டுமே சீன வடிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே பாலி வடிவத்தில் கிடைக்கும் பிற நான்கு அத்தியாயங்கள்: பின்னால் சேர்க்கப்பட்டவையாக இருக்கலாம்.

    சீனப் படைப்பு “நாகசேன பிக்குசூத்ரம்” என்று துறவியின் பெயரைக் கொண்டிருக்கிறது. பாலி வடிவம் “மிலிந்த பன்னா” என்று அரசன் பெயரைக் கொண்டிருக்கிறது.

    பாலி வடிவத்தில் பனிரெண்டு மேலதிக வினாக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

    மிலிந்தனின் நாகசேனரின் முன்-பிறவிக் கதைகள் இரு வடிவங்களிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

    சீன பதிப்பில் “அபிதம்மம்” என்ற சொல் வருவதேயில்லை. ஆனால் பாலி வடிவத்தில் “அபிதம்மம்” பல முறை வருகிறது.
    மிலிந்தனின் கேள்விகள்

    Buddha1

    முன்னுரை

    மிலிந்தன் சாகள நாட்டின் மன்னன். அவன் கலைகளையும் விஞ்ஞானத்தையும் கற்றுத் தேர்ந்தவன். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும் மனத்தினன். விவாதக் கலையில் வித்தகன். அவனுக்கிருந்த சமய ரீதியான சந்தேகங்களை யாருமே தீர்த்து வைக்க இயலவில்லை. புகழ் பெற்ற ஆசான்களையெல்லாம் வினவியும் கூட கிடைத்த வினாக்கள் அவனை திருப்திப்படுத்தவில்லை.

    இமயமலையில் வாழ்ந்து வந்த எண்ணற்ற அருகர்களில் ஒருவரான அஸகுத்தன் தன்னுடைய அமானுட சக்திகளால் அரசனின் சந்தேகங்கள் பற்றி அறிந்திருந்தான். அரசனுக்கு யாரேனும் உகந்த பதிலளிக்க முடியுமா என்று கேட்க ஒர் அவை கூட்டினான். ஆனால் யாராலும் பதிலளிக்க முடியவில்லை. ஆகையினால், அவையுறுப்பினர்கள் எல்லோரும் மேலோகம் சென்று மகாசேனன் என்கிற கடவுளிடம் சமயத்தைக் காக்க மனித உருக்கொண்டு மண்ணில் வருமாறு வேண்டிக் கொண்டனர். துறவிகளில் ஒருவரான ரோஹணன் என்பவர் மகாசேனன் மனிதனாகப் பிறந்து வளர்ந்து வந்த இடமான கஜாங்கலா என்ற ஊருக்கு செல்ல சம்மதித்தார். அங்கே அவர் மகாசேனன் வளர்ந்து பெரியவனாகும் வரை காத்திருந்தார். பையனின் அப்பா – பிரம்மன் சோனுத்தரன் – என்ற அந்தணர் தன் பையனுக்கு மூன்று வேதங்களை பயில்வித்தார். ஆனால், பாலன் நாகசேனன் :

    “மூன்று வேதங்களும் வெறுமையானவை ; பயனற்றவை
    அவற்றில் நிஜம் இல்லை ; மதிப்பு இல்லை
    அடிப்படை உணமை கூட இல்லை”

    என்று அறிவித்தான்.

    பையன் தயாராகிவிட்டான் என்பதை உணர்ந்த ரோஹணர் அப்போது பிரசன்னமானார். பெற்றோர்கள் சம்மதத்துடன் நாகசேனன் ரோஹணரின் சீடரானான். நாகசேனன் அபிதர்மத்தைக் கற்றான். துறவியாகவும் ஆனான். ரோஹணர் நாகசேனனை வட்டனியா ஆசிரமத்தில் இருந்த அஸகுத்தனிடம் அனுப்பி வைத்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில் ஒரு மழைப் பருவத்தில் சமயப்பற்றுள்ள ஒரு பெண்ணுக்கு உபதேசம் செய்விக்க நாகசேனன் பணிக்கப்பட்டான். இவ்வுபதேசத்தின் போது அப்பெண்ணும் நாகசேனனும் தம்மத்தின் கண் – எவற்றுக்கெல்லாம் துவக்கம் இருக்கிறதோ அவற்றுக்கெல்லாம் முடிந்து போகும் உள்ளார்ந்த குணம் இருக்கிறது – என்ற அறிவை பெற்றனர். அஸகுத்தன் நாகசேனனை பாடலிபுத்திர நகரத்தில் இருந்த அசோகா பூங்காவில் வசித்து வந்த தம்மராக்கிதர் என்பவரிடம் அனுப்பினார். அங்கே மூன்றே மாதங்களில் திரிபீடகங்களை கற்றுத் தேர்ந்தான். தம்மராக்கிதர் “வெறும் புத்தக அறிவோடு நின்று விடுதல் பயன் தராது” என்று தன் மாணவனுக்கு சொல்லவும், அன்றிரவே நாகசேனர் அருகரானார். பின்னர் இமயமலை சென்று அங்கிருந்த மற்ற அருகர்களுடன் தங்கியிருந்தார். சமயப்படிப்பை முடித்து விட்ட படியால், எவருடனும் சமயத்தைப் பற்றி வாதாடத் தயாராக இருந்தார்.

    அரசன் மிலிந்தன் ஆன்ம வேட்கை கொண்டு சம்கேய்ய மடத்தில் இருந்த ஆயுபாலர் எனும் பிக்குவை சந்தித்தான் ; அவரிடம் கேட்டான் “துறவிகள் உலகவாழ்க்கையை ஏன் துறக்கிறார்கள்?” இதற்கு மூத்தவர் பதிலளித்தார் “ “நல்வழியில் வாழ்வதற்கும் ஆன்மீக அமைதியை அடைதற்கும்” அரசன் தொடர்ந்து கேட்டான் “மரியாதைக்குரியவரே, அப்படியானால் சமயதம்மத்தில் இல்லாத சாதாரண மனிதன் யாராவது இப்படி வாழ்கிறார்களா?” அத்தகையவர்கள் இருக்கிறார்கள் என்று ஆயுபாலர் ஒப்புக்கொண்டார்.

    அரசன் விடவில்லை. “வணக்கத்துக்குரிய ஆயுபாலரே, நீங்கள் இப்படி சுற்றியலைவது ஒரு பயனுக்குமாகாது. உலக வாழ்வைத் துறப்பதும், எளிய காவி உடைகள் அணிதல், தினம் ஒரு முறை மட்டுமே உண்ணுதல், தரையில் படுத்துறங்குதல் போன்று தம்மையே வருத்திக் கொள்ளுதலுமாகிய துறவு வாழ்க்கை முன் ஜென்மத்தில் புரிந்த பாவ வினைகளாலன்றி வேறில்லை. இதில் ஒரு நல்லொழுக்கமும் இல்லை; மெச்சத்தக்க தவிர்ப்பும் இல்லை ; நல்வாழ்க்கையும் இல்லை.”

    அரசன் சொன்னதைக் கேட்டு ஆயுபாலர் அமைதியானார் ; ஒரு பதிலும் பேசவில்லை. அரசனுடன் கூட வந்திருந்த ஐநூறு பாக்ட்ரிய கிரேக்கர்கள் அரசனிடம் சொன்னார்கள் “பெரியவர் மெத்தப் படித்தவர், ஆனால் தன்னம்பிக்கை குன்றியவர். எனவே வாய்மூடி மௌனியாக இருக்கிறார்,” என்றார்கள். அதற்கு அரசன் வார்த்தைகளால் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான் “இந்தியா ஒரு வெறுமையான இடம். இங்குள்ளவர்கள் எல்லாம் அக்கப்போர். என்னுடன் விவாதித்து என் சந்தேகங்களை தீர்க்கப்போகிறவர்கள் இங்கு யாருமிலர்”

    அரசனின் வார்த்தைகளை அங்கிருந்த ஐநூறு பாக்ட்ரிய கிரேக்கர்களும் ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை. அரசன் மேலும் வினவினான் “ என் துணைவர்களே, அப்படியானால் சொல்லுங்கள், என்னுடன் உரையாடி என் குழப்பங்களை தீர்க்க வல்லவர் யாரேனும் இருக்கின்றார்களா?”

    அமைச்சர் தேவமாந்தியர் தொண்டையைக் கனைத்தவாறு பேசலானார் “பேரரசே, நாகசேனர் என்ற பெரியவர் இருக்கிறார், உயர்ந்த சான்றோர். அடக்கமான நடத்தையுடையவராக இருந்தாலும் மிக்க தைரியமிக்கவர். உங்களுடன் விவாதிப்பதற்கு அவரே ஏற்றவர். தற்காலம் அவர் சம்கேய்ய மடத்தில் தான் தங்கியிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று தங்கள் கேள்விகளைத் தொடுக்க வேண்டும்” “நாகசேனர்” என்ற பெயரைக் கேட்டவுடன் மிலிந்தனுக்கு மெய் சிலிர்த்தது; உடலெங்கும் மயிர் கூச்செறிந்தது. ஒரு காவலாளியை அனுப்பித் தான் வருவதாகத் தகவலனுப்பினான். ஐந்நூறு பாக்ட்ரிய கிரேக்கர்கள் புடை சூழ, தன் ராஜ ரதத்தில் ஏறி, நாகசேனர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான்.

    ஆத்மா – முதல் அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்

    அரசன் மிலிந்தன் நாகசேனரை அணுகி அன்பான, நட்பு மிகுந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டான். மரியாதையுடன் நாகசேனருக்கு அருகே அமர்ந்தான். பிறகு நாகசேனரை கேள்வி கேட்கத் தொடங்கினான் :

    “”உங்களது கீர்த்தி எப்படிப் பரவிக் கிடக்கிறது? ஆசார்யரே, உங்கள் நாமம் என்ன?”

    “அரசே, நான் நாகசேனன் என்ற பெயரோடு அறியப்படுபவன். அது சாதாரண பொதுப்பயனுக்காக இருக்கும் அடையாளம் மட்டுமே. நிரந்தரமான, தனித்துவமான பொருளல்ல”

    பிறகு மன்னன் பாக்ட்ரிய கிரேக்கர்களையும் சாதுக்களையும் சாட்சிக்கு அழைத்தான். “நிரந்தரமான தனித்துவத்தை அவருடைய பெயர் குறிக்கவில்லையென இந்த நாகசேனர் சொல்லுகிறார். இதை ஒப்புக்கொள்ளுதல் சாத்தியமா?” பின்னர் நாகசேனரை நோக்கித் திரும்பி, “மரியாதைக்குரிய நாகசேனரே, அது உண்மையென்றால் யாரது உங்களுக்கு உடையை, உணவை, குடிலைக் கொடுத்தது? யார் நன்னெறி மிகுந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்? அல்லது யார் உயிர்களைக் கொல்கிறார்கள், திருடுகிறார்கள், பிறன்மனை விரும்புகிறார்கள், பொய்யுரைக்கிறார்கள் அல்லது கள் அருந்துகிறார்கள்? நீர் சொல்வது உண்மையென்றால், பலனென்பதும் இல்லை துர்பலன் என்பதும் இல்லை. நல்லவனும் இல்லை. தீயவனும் இல்லை. கர்ம விளைவும் இல்லை. உங்களை யாரவது கொன்று விட்டால், கொலையாளி என அவர்கள் கருதப்பட மாட்டார்கள். ஆசானோ, ஆண்டானோ இருக்க மாட்டார்கள். நீர் நாகசேனர் என்று அழைக்கப்படுகிறீர்கள் என்று சொன்னீர்கள்? யார் அது நாகசேனர்? உங்கள் முடியா? “

    “பேரரசே, அப்படிச் சொல்ல முடியாது.”

    “பின்னர் அது நகமா, பல்லா, தோலா அல்லது உடலின் வேறெதாவதொரு உறுப்பா?”

    “நிச்சயமாக இல்லை.”

    “”பின்னர் அது என்ன உடம்பா, உணர்ச்சிகளா, எண்ணங்களா, அல்லது பிரக்ஞையா? அல்லது இவை எல்லாம் ஒன்றாகக் கலந்ததா? அல்லது இவைகளெல்லாம் அல்லாது புறத்தில் இருக்கும் ஏதோவொன்றா?”

    நாகசேனர் புன்னகை மாறாது பதிலுறுத்தார் “நீங்கள் சொன்னவை எதுவும் இல்லை.”

    “அப்படியானால் ஒரு நாகசேனரையும் இங்கு நான் காணமுடியாது. நாகசேனர் என்பது வெற்றுச்சொல்லே. எங்கள் முன்னால் நாம் யாரைக் காண்கிறோம். உங்களின் பொய்யான மரியாதையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோமா நாம்?”

    “ஐயா, உயர்குடியில் பிறந்து வசதியிலும் சொகுசிலும் வளர்ந்திருப்பீர்கள் அல்லவா? நீங்க இங்கு எப்படி வந்தீர்கள் – நடைப்பயணமாகவா அல்லது ரதத்திலா?”

    “ரதத்தில் தான் வந்தேன்.”

    “ரதம் என்றால் என்ன? கொஞ்சம் விளக்குங்கள். ரதம் என்பது அச்சா? அல்லது சக்கரங்களா? அடிப்பீடமா? நுகத்தடியா? அல்லது கடிவாளங்களா? இவையெல்லாம் சேர்ந்ததா ரதம் என்பது? இல்லையெனில் இவையில்லாமல் வேறெதாவதா?”

    “நீங்கள் சொன்னவை எதுவும் இல்லை”

    “அப்படியானால் ரதம் என்பது ஒரு வெற்றுச்சொல் தானே? ரதத்தில் தான் வந்து சேர்ந்தேன் என்று நீங்கள் சொன்னது பொய்யன்றி வேறென்ன? நீங்கள் இந்தியாவின் மன்னர். நீங்கள் யாருக்கு பயந்து பொய் சொல்லும் அவசியம் ஏற்பட்டது?’

    நாகசேனர் பாக்ட்ரிய கிரேக்கர்களையும் சாதுக்களையும் அருகழைத்து சாட்சிகளாக்கினார். “அரசர் மிலிந்தன் இங்கே என்னைச் சந்திக்கும் பொருட்டு ரதத்தில் பயணப்பட்டு வந்ததாக சொன்னார். ஆனால் ரதம் என்றால் என்ன கேட்கையில் அவரால் ஒரு விளக்கமும் தர முடியவில்லை. இதனை ஒப்புக்கொள்ளுதல் சாத்தியமா?”

    ஐந்நூறு பாக்ட்ரிய கிரேக்கர்களும் சாதுக்களும் அவர்களின் ஒப்புதலை ஆரவாரமிட்டு தெரிவித்தனர். மன்னரை நோக்கி “உங்களால் முடியுமானால் இவ்வாதத்திலிருந்து வெளி வாருங்கள்.”

    “வந்தனைக்குரிய ஐயா! நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன எல்லா பாகங்களும் இருக்கும் காரணத்தால் “ரதம்” என்ற சொல் நான் வந்த வாகனத்தை குறிக்கிறது.”

    “மிக அழகாகச் சொன்னார், அரசர் பிரான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அவர் சொன்னது போலவே முப்பத்திரண்டு வகை உயிர்மங்கள் சேர்ந்து உருவான மனித உடம்பு மற்றும் ஐவகைக் கந்தங்கள் (“உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம்” – மணிமேகலை) – இவைகள் சேர்ந்தே “நாகசேனன்” என்று நான் அழைக்கப்படுகிறேன். ததாகதரின் முன்னிலையில், சகோதரி வாஜீரா சொன்னது போல, பல்வேறு பாகங்கள் இருப்பதாலேயே ரதம் என்று ஒன்றை நாம் அழைக்கிறோம். ஐவகை கந்தங்கள் இருப்பதானாலேயே இருத்தல் என்பதைப் பற்றி பேசுகிறோம்.”

    Yathà hi aïgasambhàra, hoti saddo ratho iti. Evaü
    khandhesu santesu, hoti ’satto’ ti sammutã’ti.

    “மிகவும் அற்புதம் நாகசேனரே…கடினமானதொரு விஷயத்தை மிக எளிதாக, அழகாக விளங்கச் செய்தீர்கள். புத்தர் இங்கிருந்திருந்தால், அவரே உம்முடைய பதிலுக்கு ஒப்புதல் அளித்திருப்பார்.”

    +++++

    அரசன் மிலிந்தன் நாகசேனரை அணுகி அன்பான, நட்பு மிகுந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டான். மரியாதையுடன் நாகசேனருக்கு அருகே அமர்ந்தான். பிறகு நாகசேனரைக் கேள்வி கேட்கத் தொடங்கினான் :

    “(அருகரான பிறகு) எத்தனை மழைப் பருவங்களை கடந்தவர் நீங்கள்?”

    “ஏழு”

    “நீங்கள் உங்கள் ஏழு என்று எப்படி சொல்ல முடியும்? நீங்கள் ஏழா? அல்லது நீங்கள் குற்ப்பிடுவது எண் ஏழையா?”

    நாக சேனர் பதில் கேள்வி கேட்டார் : ”உங்கள் நிழல் தரையில் விழுகிறது. நீங்கள் அரசரா? அல்லது உங்களின் நிழல் அரசரா?”

    ”நானே அரசன், நானிருப்பதால் நிழல் இருக்கிறது.”

    ”எனவே, அரசே, வருடங்களின் எண்ணிக்கை ஏழு. நானல்ல ஏழு; நான் இருப்பதால் என் ஏழு வருகிறது. உங்கள் நிழலுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்புதான் ஏழுடன் எனக்கு இருக்கும் தொடர்பு.”

    ”மிக அற்புதம். மிகவும் நன்றாக இந்த புதிருக்கு விடை கண்டீர்கள்.”

    +++++

    தேவமாந்தியர், அனந்தகாயர் மற்றும் மங்குரா ஆகியோர் பிக்குகளை அரண்மனைக்கு கூட்டிச் செல்வதற்காக நாகசேனரின் குடிலுக்கு வருகின்றனர். அவர்கள் அரண்மனைக்குச் செல்லும் வழியில் அனந்தகாயர் நாகசேனரைப் பார்த்துக் கேட்கிறார் ”ஐயா, நான் உங்களை நாகசேனர் என்றழைக்கும் போது, யார் ”நாகசேனர்”?”

    ”யார் அந்த நாகசேனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

    “ஆத்மா, வந்து போகிற சுவாசம்.”

    “வெளியே போகிற சுவாசம், அம்மனிதன் உயிருடன் இருக்கும் பட்சத்தில் திரும்பி வரவேண்டும் அல்லவா?”

    “வரவேண்டியதில்லை.”

    “ஊதுகுழலில் ஊதும் இசைக்கலைஞர்கள் அவர்களின் மூச்சை ஊதுகிறார்கள் இல்லையா? அப்போது தானே இசை பிறக்கிறது! அவர்கள் ஊதிய மூச்சு அவர்களிடமே திரும்பி வருகிறதா?”

    ”இல்லை. வருவதில்லை.”

    “பிறகு ஏன் அவர்கள் இறப்பதில்லை?”

    ”உங்களுடன் விவாதிக்கும் திறன் எனக்கில்லை. அது எப்படி என்று சொல்லுங்கள்”

    “சுவாசத்தில் ஆத்மா என்ற ஒன்றில்லை. இந்த உள்வாங்குதலும், வெளிவிடுதலும் உடற்சட்டகத்தின் சக்தியினால் நடப்பவை.”

    நெடுநேரம் நாகசேனர் அபிதம்மத்தின் சாரத்தை பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். அவரின் வாதங்கள் அனந்தகாயருக்கு திருப்தியைத் தந்தன.

    +++++

    பிக்குக்கள் அரண்மனை வந்தடைந்து போஜனம் முடித்ததும், அரசன் கீழிறங்கிய இருக்கையில் அமர்ந்து கொண்டு ”எதைப் பற்றி உரையாடலாம்?” என்று கேட்டான்.

    “நம் உரையாடல் தம்மத்தைப் பற்றி இருக்கட்டும்.”

    ”உங்களின் பயணத்தின் குறிக்கோள் என்ன? இறுதி இலக்கு என்ன?”

    “எங்கள் பயணத்தின் நோக்கம் துக்கங்கள் தணிவதும், மேலதிக துக்கங்களைச் சேகரிக்காமல் இருப்பதும் தான். தத்தளிப்பில்லாமல், எஞ்சிய துக்கங்களின் பூரண அழிவுதான் எமது இறுதி இலக்கு.”

    “சொல்லுங்கள் ஐயா, இது போன்ற உன்னதமான குறிக்கோள்களுக்கா எல்லாரும் சங்கத்தில் சேர்கிறார்கள்?”

    “இல்லை. சிலர் அரசர்களின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்கவும், சிலர் திருடர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும், மேலும் சிலர் வறுமையிலிருந்து தப்பிக்கவும், இன்னும் சிலர் கடனீந்தோர்களிடமிருந்து தப்பிக்கவும் சங்கத்தில் சேரக்கூடும். ஆனால் உண்மையான குறிக்கோளுடன் சேருபவர்கள் மிச்சமிருக்கும் ஆசைகளில் இருந்து விடுபடும் நோக்கமுடையவர்கள் தான்.”

    +++++

    அரசன் : “மரணத்திற்குப் பின் மறுபிறப்பெடுக்காதவர் யாராவது இருக்கிறார்களா?

    “ஆம். இருக்கிறார்கள். களங்கங்களில்லாதவன் மறு பிறப்பெடுப்பதில்லை ; களங்கங்களுள்ளவன் மறுபடியும் பிறக்கிறான்.”

    “நீங்கள் மீண்டும் பிறப்பீர்களா?”

    ”மனதில் பற்றொடு நான் இறப்பேனானால், ஆம் ; இல்லையேல், இல்லை.”

    +++++

    “தர்க்க அறிவின் துணையுடன் ஒருவன் மறுபிறப்பிலிருந்து தப்பிக்க இயலுமா?”

    ”தர்க்க அறிவினால் மட்டுமல்ல,ஞானத்தால், நம்பிக்கையால், ஒழுக்கத்தால், அக்கறைத்-தன்மையால், ஆற்றலால் மற்றும் தியானத்தால் கூட ஒருவன் தப்பிக்க இயலும்.”

    ”தர்க்க அறிவும் ஞானமும் ஒன்றா?”

    :இல்லை. விலங்குகளுக்கு அறிவு உண்டு ஆனால் ஞானம் கிடையாது.”

    +++++

    பாலி மொழியில் புதைந்திருந்த பல பொக்கிஷங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நவீன உலகிற்கு ஈந்த டி.ரீஸ் டேவிட்ஸ் “மிலிந்த பன்ஹா” பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் : “இந்திய உரைநடையின் தலைசிறந்த படைப்பு “மிலிந்த பன்ஹா” என்று நான் நினைக்கிறேன். இலக்கிய கண்ணோட்டத்தில், உலகின் எந்த நாட்டிலும் படைக்கப்பட்ட இவ்வகைக்கான புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம் இது.”

    Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894).

    ரீஸ் டேவிட்-இன் மூல ஆக்கமும் பெசாலாவின் சுருக்கப்பட்ட ஆக்கமும் மின் நூல்களாகக்கிடைக்கின்றன.

    நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23490)

  • தைரியம், அமைதி, நம்பிக்கை

    How to Have Courage Calmness And Confidence - Paramahansa Yogananda

    வெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும்.

    உன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை ஆவதற்கு, முதலில் அவன் தன்னுடைய வரம்பெல்லைகள் என்று கருதிக்கொள்ளும் கற்பனையை விலக்கிக் கொள்ள வேண்டும்……

    உண்மையான போர்வீரன்
    நன்மை பயக்கும் மாறுதல்களை தைரியமாக தழுவிக்கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களுக்கான நம்பிக்கைகள் தோல்விப்பயத்தால் எதிர்க்கப்படும் வரை, மனம் ஒரு போதும் அமைதியில் அமையாது. எனவே, மாறுதல்களை ஏற்பது மட்டுமே வாழ்வின் ஒரே மாறிலி. நமது வாழ்க்கை வெற்றி- தோல்விகளின், நம்பிக்கை-ஏமாற்றங்களின் முடிவிலா ஊர்வலம். ஒரு கணம், சோதனகள் எனும் புயற்காற்றால் நாம் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறோம் ; சில கணங்களுக்குப் பிறகு, சாம்பல் நிற மேகங்களை வெள்ளிக் கோடுகள் வெளிச்சப்படுத்துகின்றன ; திடீரென்று வானம் மீண்டும் நீல நிறம் கொள்ளுகிறது.

    அறிவார்ந்த கோட்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டே வாழ் நாட்களை வீணடித்து சாய்வு-நாற்காலியில் அமர்ந்து “தேடுபவனுடன்’ ஒப்பு நோக்கப்படும்போது, உண்மையாக தேடுபவன் தன் முன்னால் இருக்கும் கடின உழைப்பில் மனம் தேற்றிக் கொள்கிறான். உண்மையான போர்வீரன், அச்சமாக இருந்தாலும், தன் கை தேவைப்படும்போது தைரியமாக போர்க்களத்தில் குதிக்கிறான். ஆல்ப்ஸ் மலையின் உயரங்கள் நெஞ்சில் கலக்கமேற்படுத்தினாலும், மலையேறுபவன் உறுதியுடன் உயரங்களை அடையும் முயற்சியில் ஈடுபடுகிறான். உண்மை-தேடுபவன் தனக்கு சொல்லிக்கொள்கிறான் : “பூரணத்துவம் அடையும் பணி எவ்வளவு கடினமானது என்பதை நான் அறிவேன். ஆனால். அதற்காக என் எல்லாவற்றையும் நான் அளிப்பேன். கடவுளின் உதவியால், இக்காரியத்தில் நான் வெற்றி அடைவேன்” ஆழ்ந்த தினசரி தியான முயற்சிகளால் சதை-நணவுணர்ச்சியை கையகப்படுத்தி, மறந்திருந்த உள்ளுறை தெய்வீக ஆனந்தமெனும் விழிப்புணர்வை மீட்டெடுக்கிறான்.

    பக்தனே, மனம் தேற்றிக்கொள். அதீதப்புலனின்பம், தோல்வி, ஏமாற்றங்களினால் உண்டான வறட்சிக் காலத்தில் எத்துணை பிளவுகளையும் வறட்சியையும் உன் இதயத்தின் மண் கொண்டிருந்தாலும், உள்ளார்ந்த நற்கருணையின் அமைதி பெருக்கினால் நீர் பட்டு மென்மையாகும். வதங்கிப் போன உன் ஆன்ம உற்சாகம் புதுப்பிக்கப்படும். ஒரு முறையாவது கடவுள் நற்கருணையின் திராட்சை ரசம் அருந்து. ஆர்வமிகுந்து ஆன்மீக தளத்தில் நீ தினமும் புதுப்பிக்கப்பட்ட ஆன்ம உணர்வெனும் மண்ணில் உழைத்து, ஆன்ம வெற்றி எனும் விதைகளை விதைத்து, அவை தெய்வீக ஆனந்தமெனும் பயிராய் நெடுக வளரக் காண்பாய். தொந்தரவு என்று நீ கருதும் எதையாவது எதிர்கொள்ளுகையில் ஊக்கமிழந்து, தோற்கடிக்கப்படுவதற்குப் பதிலாக நீ கற்றுக்கொள்ள வேண்டியதை என்னவென்று காணவும், சவாலை சந்திக்க தேவையான பலத்தையும் விவேகத்தையும் அதிகப்படுத்தவும் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்த பரம பிதாவிற்கு நன்றி செலுத்து.

    வாழ்வின் சோதனைகளை மகிழ்ச்சியுடனும் தைரியத்துடன் சந்திக்கும் போது தான் கருமச்சுமைகள் குறைகின்றன. எதற்காவது உன் பயம் இன்னும் தொடருமானால், நீ கருமவினைகளிலிருந்து விடுபடவில்லையென்றே அர்த்தம். கருமத்தை சிதறடிக்க, நீ சந்திக்க வேண்டிய சோதனைகளை தவிர்க்க முயலாதே. கடவுளின் ஆனந்தம் நிறை அகத்தினுள் வசிப்பதன் வாயிலாக சோதனைகளிலிருந்து தைரியமாக மேலேழு.

    தைரியம் பெற சில உறுதிமொழி
    கஷ்டங்கள் போல் தோன்றுகிறவற்றை சமாளிக்க தேவையான தைரியமும், பலமும் அறிவுத்திறனும் எல்லா கணங்களிலும் உன்னிடம் இருக்கிறது. மனதளவில், உடலளவில் அசைவற்று இரு ; சமநிலை நிலவும் உன் உள்ளுறை மையத்தில் ஓய்வெடு ; அங்கு உன் பரம பிதவுடன் தொடர்புறவில் இரு. அவர் உனக்கு வழி காட்டுவார்.

    கடவுள்-அமைதியெனும் மாறாத உள் நினைவில், நான் முதலில், கடைசியில், எல்லா நேரங்களிலும் பாதுகாப்பை தேடுவேன்.

    நல் மனசாட்சியெனும் கொத்தளத்தில் நான் பாதுகாக்கப்படுகிறேன். என் பழைய இருட்டை நான் எரித்து விட்டேன். என் கவனமெல்லாம் என் இன்றைய ஒரு நாளில் மட்டும் தான்.

    எல்லாப் பிர்சினைகளுக்கும் ஒரு சரியான தீர்வு உண்டு. இத்தீர்வினைக் காணும் விவேகமும் அறிவுத்திறனும், அதை முன்னெடுத்துச் செல்லும் பலமும் தைரியமும் என்னுள் உண்டு.

    கடவுள் என்னுள்ளிலும் என்னைச் சுற்றியும் இருக்கிறார் ; என்னைக் காக்கிறார். எனவே, அவருடைய வழிகாட்டும் ஒளியை அடைத்து என்னை தவறெனும் குழியில் விழ வைக்கிற பயமெனும் பேரிருட்டை வெளியேற்றுவேன்.

    இரகசிய பயம் பதற்றத்தையும் கவலையையும் உருவாக்குகிறது ; இறுதியான வீழ்ச்சியையும் தருகிறது. நம்முடைய திறமையில் நமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும் ; சரியான காரணத்தின் வெற்றியிலும் நம்பிக்கை இருக்க வேண்டும். இந்த குணங்களைப் பெற்றிருக்காவிடில், எண்ணக்குவிப்பின் மூலமாக நம் மனதில் அவற்றை நாமே உருவாக்க வேண்டும், உறுதியான, நீண்ட, தொடர்ந்த பயிற்சியினால் இதை சாதிக்க முடியும்.

    முதற்கண், நம்முடைய குறைகளை நாம் கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு, நமக்குள் மனத்திண்மைக் குறைபாடு இருக்குமானால், அக்குணத்தின் மேல நம் எண்ணத்தைக்குவிப்போம் ; பிரக்ஞை மிகுந்த முயற்சிகளினால், நம்முள் மனத்திண்மையை நம்மால் பெருக்க முடியும்.

    பயத்திலிருந்து நம்மை நாம் விடுவிக்க விரும்பினால், தைரியம் என்ற குணத்தின் மேல் நாம் தியானம் செய்ய வேண்டும் ; குறுகிய காலத்தில், பயமெனும் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலை பெற்று விடுவோம். எண்ணக்குவிப்பு மற்றும் தியானம் மூலம், நம்மை நாம் ஆற்றல் மிக்கவராகவும், கவனத்தை குவிக்க இயல்பவராகவும் நம்மை ஆக்கிக் கொள்ள முடியும். தொடர்ந்த பயிற்சி ஒரு முயற்சியும் இன்றி ஒற்றைப் பிரசினையின் மேல் நம் எல்லா ஆற்றலையும் குவித்தலை சாத்தியமாக்கும். இது நம்முடைய இரண்டாவது இயல்பாகவும் மாறி விடும். இப்புது குணத்தை பெற்றிருப்பதன் வாயிலாக, பொருள் மற்றும் ஆன்மீக இலக்குகளை நம்மால் எளிதில் அடைய முடியும்.

    துக்கம் புறநிலை இருப்பு இல்லாதது. வாய்மொழி வழி தொடர்ந்து பிரஸ்தாபிப்பதன் மூலம், அது இருக்கிறது. உன் மனதில் அதை மறுதளித்தால், அது இல்லாமல் போகிறது. இதை நான் ’ஹீரோயிஸம்’ என்பேன் ; அவனுடைய தெய்வீக அல்லது மூல இயற்கை என்பேன். துக்கத்திலிருந்து விடுதலை பெறுதற்கு, மனிதன் தன்னுடைய ”ஹீரோயிஸம்” மிகுந்த சுயத்தை வெளிப்படுத்துதல் அவசியம்.

    ஒரு சாதாரண மனிதனுள்ளில் “ஹீரோயிஸம்” மற்றும் தைரியத்தின் பற்றாக்குறையே துக்கத்தின் ஆணிவேர். ”ஹீரோயிஸத்தின்” கூறு ஒருவனின் மனத்தில் குறையும் போது, கடந்து செல்லும் துக்கங்களுக்கு அவன் மனம் எளிதில் இணக்கமானதாக ஆகிறது. மனதின் வெற்றி வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை தருகிறது ; மனதின் தோல்வி துக்கத்தை தருகிறது. ஒவ்வொரு மனிதனுள்ளும் வெற்றிவீரன் விழித்திருக்கும் வரை, ஒரு துக்கமும் அவனுடைய இதயத்தை தொட இயலாது.

    தொடர்ச்சியான பிரசினைகளை தோற்கடிப்பதைத் தவிர இவ்வாழ்க்கை ஒன்றுமில்லாதது. உன் கையில் தீர்வுக்குக் காத்திருக்கும் ஒவ்வொரு பிரசினையும் வாழ்க்கை உனக்கு விதித்திருக்கும் கட்டாயக் கடமையாகும். ஒரு தனி மனிதன் சூழ்நிலையின் மட்டத்துக்கு கீழ் மூழ்கும் போது, கெட்ட நேரத்தின் பாதிப்புக்கு சரணடைகிறான். அவனுள் பொதிந்திருக்கும் வீர தைரியத்தின் உதவியால், சூழ்நிலையைத் தாண்டி அவன் எழும்பொழுது, வாழ்வின் அனைத்து நிலைகளும், அவை எத்தனை அச்சுறுத்தும் படியாக இருந்தாலும் பனிப்போர்வை விலகி வானிலிருந்து எட்டிப்பார்க்கும் இதமான சூரிய ஒளி போன்றதாக இருக்கும். சாதாரண மனிதனின் துக்கங்கள் வாழ்வு நிலைகளின் உள்ளார்ந்தவை அல்ல. அவைகள் மனித மனத்தின் பலவீனங்களிலிருந்து பிறப்பவை.உன்னுள்ளிருக்கும் வெற்றிவீரனை விழித்தெழ வை; உன்னுள் உறங்கும் வீரனை தட்டி எழுப்பு;ஒரு துக்கமும் உன் சாளரத்தை இருட்டாக்காது.

    [Translation of Excerpts from the Book “How to have Courage, Calmness and Confidence” By Paramahansa Yogananda, Publisher : Ananda Sangha Publications]

  • தீவிர வேட்கை

    follow-me-buddha-paintings
    அக்கரையின்றி திரிபவனின் வேட்கை
    படரும் கொடி போல வளரும் ;
    வனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல்
    அவன் அங்கும் இங்குமாக
    அலைந்து திரிவான்.

    பிசுபிசுப்பு மிக்க
    அருவெறுப்பான தீவிர நாட்டம்
    உன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது
    கடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய்
    உன் துயரங்கள் வளரத் தொடங்கும்

    மாறாக, இவ்வுலகத்திலேயே,
    அருவெறுப்பான தீவிர வேட்கையிலிருந்து
    நீ விடுபடுவாயானால்
    தாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல
    உன் துயரங்கள் நீங்கும்

    Digout - Dhammapada_337
    இங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும் சொல்கிறேன் ;
    நற்பேறு உண்டாகட்டும் !
    மருந்து வேர்களை தேடுகையில்
    கோரைப் புற்களைக் களைவது போல்
    வேட்கையை தோண்டிக் களையுங்கள்

    காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாணல்கள் போல்
    மீண்டும் மீண்டும்
    மாரன் உங்களை வெட்டிச் சாய்க்காமல் இருக்கட்டும்

    வேர்கள் பாழடையாமல்
    பலத்துடன் இருந்தால்
    வெட்டப்பட்டாலும்
    மரம் திரும்ப வளர்கிறது
    அது போலவே
    உள்ளுறை வேட்கைகள்
    களைந்தெறியப்படாவிடில்
    துக்கங்கள் திரும்ப திரும்ப
    வந்து கொண்டிருக்கும் (334 – 337)

    சொந்த கருத்துகளால் உந்தப்பட்டும்
    கட்டுக்கடங்கா உணர்ச்சிகளால் ஆளப்பட்டும்
    அழகின் ஈர்ப்பில் கட்டுண்டும் கிடப்பவனின்
    வேட்கை சதா வளர்ந்து கொண்டே இருக்கிறது
    தன்னுடைய பந்தங்களை
    அவனே இறுக்கிக் கொள்கிறான்.

    ஆனால், சிந்தனையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்பவனாக,
    எந்நேரமும் அக்கரையாக இருப்பவனாக
    அழுகிய உறுப்புகளின் மேல் பிறழாத கவனத்துடன் திகழ்பவனே
    முடிவை எட்டுபவனாக இருப்பான்
    மாரனுடனான பிணைப்பை வெட்டி எறிபவனும் அவனே! (349-350)

    Dhammapada_352
    பயமின்றி
    கறை படாமல்
    வேட்கையிலிருந்து விடுபட்டு
    முடிவை தொட்டவன்
    ஆகுதலின் அம்புகளை
    பிடித்தெறிய வல்லவன்.
    இந்த உடற் குவியலே
    அவனுடைய கடைசியானதுமாக இருக்கும்.

    பேரார்வத்திலிருந்து விடுதலையாகி
    தத்தளிக்காமல்
    நுட்பமான வெளிப்பாடுகளுடன்
    சத்தங்களின் இணைகளை அறிந்து
    -முதலில் வருவது எது, பின்னர் வருவது எது–
    என்று தெளிவாக தெரிந்தவனாய் இருப்பான்.
    அவன் கடைசி உடல் தறித்த
    அளவிலா நுண்ணறிவு மிக்க பெருமகன். (351-352)

    அனைத்தையும் வெற்றிகொண்டு
    ‘நான்’ என்பதை முழுக்க உணர்ந்து
    எந்த முறையையும்
    பின் பற்றாது
    எல்லாவற்றையும் துறந்து
    வேட்கையின் முடிவில் விடுதலையாகி
    சுயமுயற்சியில்
    எல்லாவற்றின் இயல்பையும் அறிந்த நான்
    யாரை குருவென்று காட்டுவேன்? (353)

    தம்மத்தின் கொடை எல்லா கொடைகளையும் கைப்பற்றும்
    தம்மத்தின் சுவை எல்லா சுவைகளையும்
    தம்மத்தின் இன்பம் எல்லா இன்பங்களையும்
    வேட்கையின் முடிவு எல்லா துயரங்களையும் அழுத்தங்களையும்
    (354)
    Dhammapada_355
    பகுத்துணரும் சக்தி குறைந்த
    மனிதனை செல்வம் அழித்துவிடுகிறது ;
    ஆனால் மறுமையை வேண்டுபவர்களை அழிப்பதில்லை.
    பகுத்துணரும் ஆற்றல் குறைந்து
    செல்வத்தின் மேல் வேட்கையுறுபவன்
    எங்ஙனம் அடுத்தவரை அழிக்கிறானோ
    அது போலவே தன்னையும் அழித்துக்கொள்கிறான். (355)

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், மோகத்தால்.
    மோகமற்று இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், வெறுப்பால்.
    வெறுப்பின்றி இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், தவறான நம்பிக்கையால்.
    தவறான நம்பிக்கையின்றி இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், பேராசைகளின் ஏக்கத்தில்
    பேராசைகளினால் ஏங்காமல் இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது (356 – 359)

    (“தம்மபதம்” – இருபத்தி நான்காவது அங்கம் – “தீவிர வேட்கை”)

    (தனிஸ்ஸாரோ பிக்கு என்பவரின் மூல தம்மபதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)

    நன்றி : http://www.buddhanet.net

    படங்களுக்கு நன்றி : http://www.what-buddha-said.net

  • மரம்


    மரம் போலவொரு
    அழகான கவிதை
    என் வாழ்நாளில்
    என்னால் எழுத முடியாது.
    பசி மிகுந்த
    மரத்தின் வாய்
    பூமித் தாயின்
    வழியும் முலைகளில்
    பொருத்தப்பட்டிருக்கும்.
    கடவுளை தினமும்
    பார்த்துக் கொண்டிருக்கும் மரம்
    தன் இலைக் கரங்களை எழுப்பி
    தொழுகை புரியும்.
    கோடை காலங்களில்
    வண்ணாத்திக் குருவியின் கூடுகளை
    தொப்பிகளாக அணிந்து கொள்ளும்.
    மார்பில் பனி பூசிக் கொண்ட
    மரங்கள்
    மழையுடன் கூடும்
    என் போன்ற முட்டாள்களால்
    கவிதை மட்டுமே
    கிறுக்க இயலும்
    கடவுளால் மட்டுமே
    மரத்தினை படைத்தல் சாத்தியம்.

    [ ஜாய்ஸ் கில்மர் எழுதிய “Trees” என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்]

  • என்னால் உள்ளே நுழைய முடியவில்லை

    ஒரு பாழடைந்த கோட்டை முன் நின்று கொண்டிருந்தேன். ஸ்பெயின் நாட்டில் ஓலைட் என்கிற ஊருக்கருகில் இருக்கும் கோட்டையது. கோட்டையின் நுழைவாயிலின் முன் ஒருவன் நின்றிருந்தான். என்னை அவன் உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்கிறான்.

    உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்வதன் காரணம் என் நுழைவை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒரு விதமான முக்கியத்துவம் பெறுவதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று என் உள்ளுணர்வு சொன்னது. நான் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பதை சொன்னேன். அவனுக்கு வெகுமதி தர முயற்சி செய்தேன். அவனுடன் பணிவாகப் பேசினேன். இது பாழடைந்த கோட்டை தானே என்றும் குறிப்பிட்டேன். திடீரென்று அந்த பாழடைந்த கோட்டையில் நுழைவது எனக்கு அதி முக்கியமாகப் போய்விட்டது.

    அவன் திரும்பவும் சொன்னான் “மீண்டும் சொல்கிறேன். நீங்கள் உள்ளே நுழையலாகாது” ஒரே ஒரு வழி தான். அவன் தடுப்பதை பொருட்படுத்தாது உள்ளே போக வேண்டும். பார்க்கலாம், உள்ளே நுழையு முன் அவன் என்னை பிடித்து தள்ளுகிறானா என்று! நான் கதவருகில் செல்கிறேன். அவன் என்னை தடுத்து நிறுத்தவில்லை. வெறுமனே என்னைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்.

    அந்தக் கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும் போது, இரண்டு சுற்றுலாப் பயணிகள் கோட்டையைக் காண நடந்து வருவதைப் பார்த்தேன். வாயிலில் நின்றவன் அவர்களை தடுக்க முயலவில்லை. என்னுடைய எதிர்ப்பு புதிதான, முட்டாள் தனமான விதிமுறைகளை கண்டுபிடிக்கும் வேலையிலிருந்து அக்கிழவனுக்கு ஒய்வு வாங்கித் தந்துவிட்டது போலும். சிலமுறை இச்சமூகம் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத சில்லறை விஷயங்களுக்காக போரிடச் சொல்கிறது. இதில் விசித்திரம் என்னவென்றால், அவ்விஷயங்களின் முக்கியத்துவத்தை நாம் என்றுமே கண்டுபிடிக்க முடியாது.

    (TRANSLATION OF THE ESSAY – “I CAN’T GET IN” – FROM THE BOOK – “LIKE THE FLOWING RIVER” WRITTEN BY PAULO COELHO)

  • மாதவன் சொர்க்கம் செல்கிறான் – பகுதி 3

    ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளும் கட்டாயமில்லாமல், தன் நேரத்தை தன் விருப்பப்படி பயனபடுத்திக்கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆரம்ப நாட்களை அனுபவித்தான் மாதவன். ஆனால் மிக விரைவில் மனத்தளர்ச்சிக்கு ஆளானான். தன்னை எதற்கும் பயனற்றவனாக எண்ணத் துவங்கினான் ; சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவன் போல் வளைய வந்தான் ; வளர்ந்து விட்ட தம் குழந்தைகளால் கைவிடப்பட்டவனானான் ; “நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்?” என்னும் மிகப் பழைய வினாவுக்கு பதில் தேடும் சிரமத்தை அவன் என்றுமே எடுத்துக்கொண்டிராத காரணத்தால் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் திறனற்றுப் போனான்.

    நேர்மையுடனும், சமர்ப்பண உணர்வுடனும் வாழ்ந்த மாதவன் ஒரு நாள் இறந்து போகிறான் – இவ்வுலகில் வாழும் சண்முகங்களுக்கும், பொன்னுசாமிகளுக்கும், கமலாக்களுக்கும் சாரதாக்களுக்கும் எல்லாருக்கும் நிகழ்வது தான். இவ்விடத்தில் மாதவனுக்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதை ஹென்ரி ட்ரம்மாண்ட் என்பவர் – ”தி க்ரேட்டஸ்ட் திங் இன் தி வேர்ல்ட்” என்ற அருமையான புத்தகத்தில் எழுதிய – வரிகளிலேயே விவரிக்கிறேன்.

    முந்தைய காலங்களில் இருந்தே மக்கள் ஒரு கேள்வியை மாறாமல் கேட்டு வந்திருக்கிறார்கள் : உயர்ந்த நன்மை எது? உன் முன்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை நீ ஒரு முறைதான் வாழ இயலும். மேன்மையான விருப்பப் பொருள், நாடத்தக்க உயர்ந்த பரிசு எது?

    உலகின் மிகச் சிறந்த விஷயம் நம்பிக்கை தானென நமக்கு பல ஆண்டுகளாக சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நூற்றாண்டுகளாக பிரசித்தமான மதத்தின் பிரதான கருத்தை சொல்லும் முயற்சியில் நம்பிக்கை எனும் சொல் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாமும் அதை முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ள எளிதில் பழக்கப்பட்டு விட்டோம். ஆனால் நம் நோக்கு தவறு. அதுவே சொல்லப் பட்டிருக்கிறது என்று நாம் நம்புவோமானால், நம் வழி தவறும் வாய்ப்பு அதிகமாகும். 1 கோரிந்தியரின் 13வது அதிகாரம் நம்மை கிறித்துவத்தின் மையத்துக்கு எடுத்துச் செல்கிறது ; அங்கு நாம் வாசிப்பது “இவற்றுள் அன்பே தலைசிறந்தது”

    இது பிழையன்று. நம்பிக்கை பற்றி சில வரிகளுக்கு முன்னால் பால் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்கிறார் : “மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை” மறக்காமல், அடுத்து சில வரிகளில் வேண்டுமென்றே அவர் முரண் படுகிறார் ; “ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன” உடன், கணத்தயக்கமில்லாமல் முடிவை அறிவிக்கிறார் “இவற்றுள் அன்பே தலைசிறந்தது”

    இந்த கதையில், மாதவன் மரண நேரத்தில் காப்பாற்றப் படுகிறான் ; வாழும் வாழ்விற்கோர் அர்த்தத்தை தரும் முயற்சியில் மாதவன் ஈடுபடவில்லையெனினும், அவன் அன்பு செலுத்தினான் ; குடும்பத்தை அன்புடன் பராமரித்தான் ; கண்ணியமான முறையில் உழைத்தான். அவனுடைய வாழ்க்கை சுப முடிவை பெற்றிருந்தாலும், அவனுடைய கடைசி நாட்கள் சிக்கலானவையாக இருந்தன.

    சிமொன் பெரஸ் ஒரு முறை வேர்ல்ட் எகனாமிக் ஃபோரமில் ஆற்றிய உரையில் காட்டிய மேற்கொள் ஒன்றை இங்கு பங்கிட விரும்புகிறேன் “நன்னம்பிக்கை உள்ளவர் நன்னம்பிக்கை அற்றவர் இருவருமே முடிவில் இறந்து போகிறார்கள் ; ஆனால் இருவரும் தனித்தனி வழிகளில் தத்தம் வாழ்க்கையை வாழ்கிறார்கள்”

    [TRANSLATED FROM THE BOOK – LIKE THE FLOWING RIVER – BY PAULO COELHO, CHAPTER HEADING : MANUEL GOES TO PARADISE]