Category: Poems

  • ஒர் ஆப்பிளும் ஆறு விதைகளும்

    பழத்தில் உள்ள விதைகளை

    எண்ணுதல் எளிது.

    விதைக்குள் இருக்கும் பழங்களை

    எண்ணுவது எப்படி?

    +++++

    அறுத்துவைத்த ஆப்பிளுக்குள்

    இருந்த விதை ஆறு !

    பத்திரப்படுத்தி வைத்திருந்த

    விதைகளைக் கவர்ந்ததாரு?

    என்னிடமிருப்பது ஒரே ஒர் ஆப்பிள்.

    விதைகளை கொண்டு தாரும் !

    கடைசி ஆப்பிளை தரவும் சம்மதம்.

    விதையிருந்தால் போதும்.

    +++++

    காணாமல்போன விதைகளைத்தேடி

    கானகம் வரை வந்துவிட்டேன்.

    நிறைய மரங்கள் !

    என் வீட்டிலிருந்து

    களவு போன விதையிலிருந்து

    எந்த மரம்

    முளைத்தது?

    யாராவது சொல்லுங்கள் !

    +++++

  • உண்மை ஓர் பிரச்னை

    உண்மை

    ஒர் பிரசினை.

    இரக்கமற்றது.

    நிம்மதியை குலைப்பது.

    எல்லா பக்கங்களிலும்

    நம்மை வளைத்து

    என்ன இருக்கிறது

    என்று வலுக்கட்டாயமாக

    காட்டுகிறது ; பார்க்கவைக்கிறது.

    மொத்தமாக,

    உண்மை எரிச்சலூட்டுவது.

    (translation of a paragraph from "Conversation with the God" written by Neale Donald Walsch)

  • ராஜினாமா

    Resignationவெளியேறும்

    எண்ணம் வந்தது.

    இருக்கையிலிருந்து

    எழ முயலும்போது

    கை கட்டப்பட்டது

    பொன் விலங்கோ?

    மஞ்சள் நூலோ?

    பொருட்படுத்தாமல்

    கையை உதறி

    எழுகையில்

    அழுகை சத்தம்.

    போகாதே !

    என்னை விட்டு போகாதே !

    மேலதிகாரியின்

    குரலென அறிவதற்கு

    கொஞ்ச நேரம் பிடித்தது.

    எங்களை விட்டு போகாதே

    இது அதிகாரியின் அதிகாரி.

    சபாஷ்!

    எல்லாருக்கும்

    நான் எழும் சத்தம் கூட

    தெளிவாக கேட்கிறது.

    என் குரல் பழையபடி

    கேட்க முடியாதவாறு

    இவர்கள் செவிகள்

    மீண்டும் பழுதுபடுமுன்

    இங்கிருந்து விலகுதல் சிறந்தது.

  • ஓர் உண்மையின் கதை


    ஒளித்துவைக்கப்பட்டிருந்த
    உண்மையொன்று
    வெளிவர முயன்றது.
    வாசலை
    சார்த்தி வைத்திருந்தார்கள்
    உண்மையை சித்திரவதை செய்து
    அறையில் அடைத்துவைத்தவர்கள்.
    உடைத்து திறக்க
    ஆயுதமேதும் அகப்படவில்லை.
    தலையை முட்டி மோதி
    திண்டாடி தடுமாறி
    வந்தது வெளியே.
    யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
    எங்களில் ஒருவன் போல் இல்லையே! என்று சொல்லி
    நிராகரித்தன பொய்கள்.
    உண்மைக்கு பசித்தது.
    உயிர் போகும்படி பசி.
    நீதி மன்றத்தில்
    நீதிபதிகள் சோறிட்டு
    உண்மையின் உயிரை
    காப்பாற்றுகிறார்கள் என்று கேள்விப்பட்டு
    விரைந்தது.
    உணவருந்திக்கொண்டிருந்த நீதிபதி
    வக்கீலும் துணைக்கு
    வந்து சோறு கேட்டால் மட்டுமே
    சோறளிக்கும்
    சட்டவிதியை விளக்க
    உணவு இடைவேளைக்கு பிறகு
    சந்திக்க சொன்னார்.
    காவலாளி
    பலவந்தமாய்
    உண்மையை வெளியே அழைத்துப்போனான்.
    நாவுலர்ந்தது உண்மைக்கு.
    ஒளிபரப்பு கருவிகளோடு நின்றிருந்த
    தொலைகாட்சி நிருபரொருவர்
    யார் எனக்கேட்டார்.
    அறிமுகம் தந்ததும்
    சுவாரஸ்யம் இழந்தார்.
    அவர் அனுதாபிக்க
    வேறு வகை உண்மையை
    அழைத்து வருமாறு
    இந்த அப்பாவி உண்மையை
    வேண்டினார்.
    உண்மை போல தோற்றமளிக்கும்
    பொய் கூட பரவாயில்லை அவருக்கு.
    உண்மை மயக்கமுற்றது
    அரசு மருத்துவமனையில்
    விழித்தெழுந்தது
    யாரோ தண்ணீர் தெளித்தபோது.
    வெள்ளைக்குல்லா வெள்ளை சட்டை அணிந்த ஒருவர்
    எலுமிச்சை சாறு தந்து கைகூப்பினார்.
    குடித்தவுடன்
    உண்மை மீண்டும் மயக்கமடைந்தது
    எலுமிச்சை சாற்றில் கலப்படம்
    உண்மையும் கொஞ்சம் கலப்படமானது.
    சத்தம்போட துடங்கிய உண்மையின்
    வாயை அடைக்க
    வெள்ளைகுல்லா மனிதர்
    தன் உறவினரென்று
    உண்மைக்காக பொய்சொல்லி
    ஐசியு-வில் படுத்துக்கொள்ள வைத்தார்.
    அங்கே கிடைத்த
    சிசுருஷையில்
    பசி விலகி
    ஆரோக்கியம் பெற்றது
    இப்போது யாரும்
    நீ யாரென்று கேட்பதில்லை
    உண்மைக்கு அடையாளம் வந்துவிட்டது
    பொய்கள் போல் அழகுடன் காட்சியளிக்க
    பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்துகொண்டது.

  • குறை போக்கி அருள்


    முடிதிருத்தும் நிலையத்தில்
    நன்கு தூக்கம் வருகிறது.
    திரையரங்குகளிலும்.
    தேர்வு எழுதும் அறைகளில்
    திறம்பட.
    கோவில்களில் மணியோசை
    தாயின் தாலாட்டு போலவே ஒலிக்கிறது.
    ரயிலின் புறப்பாட்டுக்கு காத்திருக்கும்போது துடங்கி
    சேருமிடம் வரும்வரை
    சயனம்தான்.
    வேலை செய்யுமிடத்தில்
    மதியவுணவுக்குப்பின் வரும் கொட்டாவி
    பிறருக்கு தெரியாமலிருத்தல்
    பிரம்மப்ரயத்தனந்தான்.
    மகளின் பள்ளியில்
    ஆசிரியர்களை சந்திக்க
    காத்திருக்கும் பொழுதுகளில்
    குழந்தைகள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து
    திருப்பள்ளிஎழுச்சியாகும்.
    இரவு எத்தனிக்கும்போது மட்டும்
    தூக்கம் காணாமல் போய்விடுகிறது.
    புத்தகம் படித்தாலும்
    காதுக்குள் வைத்து
    கைத்தொலைபேசியில் வானொலி கேட்டாலும்
    போர்வையால் கால் முதல் தலைவரை போர்த்தி
    இருட்டில் கண்ணை அகல விரித்து
    தூக்கத்திற்காக காத்திருந்தாலும்.
    வருவதில்லை…!
    தூக்கம் வர ஏதாவது மந்திரம் இருக்கிறதா?
    மனைவியின் காற்றுநிறை குறட்டை சத்தத்தை
    கவனமுடன் கேட்கிறேன்.
    த்யானம் செய்வது போல.
    தேவியருள் புரிந்தாள்.

  • மொட்டின் வாசம்

    ஒரு கோட்டை வீழ்ந்த
    வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது
    கைப்பற்றாத கோட்டைகளை
    எண்ணத்தொடங்கினான்
    எண்ணிக்கை முடியும் முன்னரே
    வீழ்ந்த கோட்டையை வேறு யாரோ
    எடுத்துக்கொண்டனர்
    மன்னன் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறான்
    கம்பிகளையும் நாட்களையும்
    +++++
    வரப்போகும் மனைவியின்
    புகைப்பட உருவிற்கு
    முடிவிலா முத்தங்கள்
    நிச்சயதார்த்தம் முறிந்தது
    மனைவியாகப்போகிறவள்
    வேறுயாருக்கோ நிஜத்தில்
    முத்தம் கொடுத்தாளாம்.
    இவனுக்கு வேறு புகைப்படம் கிடைத்தது
    இவனின் முத்தங்கள் தொடர்கின்றன
    +++++
    இலக்கை முதலில் அடைந்துவிடும்
    வெறியில்
    பாதை தாண்டி ஓடிவிட்டான்
    பந்தயத்திலிருந்து விலக்கிவிட்டார்கள்
    அடுத்த பந்தயம் நடக்க
    நாட்கள் பிடிக்கும்
    நகத்தைக்கடித்து நகத்தைக்கடித்து
    காத்திருந்ததில்
    ஓடுவது மறந்துவிட்டது

  • பணமும் பிணமும்

    கழுத்துசுருக்கை தளர்த்திக்கொண்டே
    விண்ணப்பத்தை நிராகரித்தார்.
    விதிமுறையை தளர்த்த முடியாதாம்.
    கைப்பையின் உள்ளில்
    கட்டப்பட்டிருந்த பணக்கட்டை தளர்த்தியதில்
    விதிமுறைகள் தளர்ந்து நீர்த்துப்போயின.
    +++++
    எண்கள் சதி செய்து
    போதுமான அளவில் வராமல் போகவே
    சேரப்போன கல்லூரியில்
    எண்களை எடுத்துவாருங்கள் என்றார்கள்.
    உருவிலா எண்ணை
    சலவை நோட்டாய் உரு தந்து
    எடுத்துவந்தபோது
    கல்லூரிப்பூட்டுகள் களிப்படைந்து
    தானாகவே திறந்துகொண்டன.
    +++++
    கதவு என்பது அவளின்
    காரணப்பெயர்
    எந்த சட்டையிலும்
    முதலிரு பட்டன்களை தைத்துக்கொண்டதேயில்லை.
    முழுக்கதவு திறப்பது மட்டும்
    உண்டியலில் இவன் இடும்
    வெள்ளி தங்கக்காசுகளுக்காகத்தான்
    +++++
    “எல்லாம் கிடைச்சிடுச்சு
    காசு இருந்தாப்லே”
    என்று போதையில் பாடிக்கொண்டு
    படியில் சறுக்கியவன்
    கடைசிப்படியில் அமர்ந்திருந்த
    ராப்பிச்சைக்காரனின் மடியில் விழுந்து
    ரத்தம் கசிந்து இறந்தான்.
    +++++
    படியெங்கும் விழுந்திருந்த
    நோட்டுகள் ராப்பிச்சையின்
    கைக்குப்போன பின்னும்
    உயிர் வந்தபாடில்லை.
    இரு பாதசாரிகள்
    அவன் கையின், கழுத்தின்
    நகைகளை கழற்றி பணக்காரரானார்கள்.
    எனினும் மூச்சு திரும்பவில்லை.
    அவனின் ஆவி
    மேலூலகத்தில் பரிதவித்தது
    பூவுலகில் அனாதையாய் கிடக்கும்
    தன்னுடைய பூதவுடலை பார்த்து.
    +++++
    உயிரிழந்த பின்னால்
    அற்புதவிளக்குகூட
    அல்லாவுதீனை அடக்கம் செய்யாமலேயே
    வேறு எஜமானுக்கு
    சேவைசெய்ய சென்று விடுகின்றது.

  • ஓவியப்பெண்

    நன்னம்பிக்கை
    நெடுநாள் காத்திருப்பு முடிவடையும்.
    ஓவியப்பெண் முகம் திரும்பாமலேயே
    வேறு அருங்காட்சியகத்துக்கு போய்விடுவாள்.
    வீட்டுக்கு இன்று திரும்பிப்போய்
    "தண்ணி"யடிக்கவேண்டும்

    கஞ்சத்தனம்
    ஓவியப்பெண் உடையணியாமாலேயே
    நிதர்சனமாய் பிரசன்னமானாள்.
    சட்டகத்துக்கு நேர்கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்தவனை
    காபி பருக அழைத்தாள்.
    "காபி சரி. அப்புறம் உடை வாங்கித்தா என்று கேட்காதே"

    சுயநலம்
    சட்டகத்துள் நிர்வாணமான முதுகைக்காட்டி
    சொரிந்து விடுமாறு கேட்டுக்கொண்ட
    ஓவியப்பெண்ணை யாரும் செவிமடுக்கவில்லை !
    "பாவிகள்…என்னை வரைந்த ஓவியனின் பிரஷை
    ஏலத்தில் போட்டுவிட்டார்கள்"

    ஜீவகாருண்யம்
    ஓவியன் என்னை சேர்த்து
    ஓர் எறும்பையும் வரைந்துவிட்டான்.
    சாய்வாக குப்புற படுக்கவைத்து
    கொஞ்சம் எனக்கு வசதி பண்ணித்தந்த ஓவியன்
    பாவம், எறும்பை சுவரில் ஏற வைத்துவிட்டான்

  • காத்திருத்தல் எனும் நாடகம்

    எதிர்பார்க்கின்ற நிகழ்வுக்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள இடைவெளி,
    காலவோட்டத்துடன் எதிர்பார்ப்பு சேரும்போது உருவாகும் உள்ளுணர்ச்சி
    காத்திருத்தல் !
    காத்திருத்தல் அவஸ்தை
    காத்திருத்தல் சுகம்

    +++++

    எதிர்பார்ப்பு மறைந்தால் காத்திருப்பும் இறந்துபோகும்.
    காத்திருத்தல் இல்லாவிடில்
    காலவோட்டத்தின் வெறுமை பூதாகரமாய் காட்சியளிக்கும்.
    காலவோட்டத்தின் உணர்வு கலந்த அர்த்தப்படுத்தலே எதிர்பார்ப்பு

    +++++

    எதிர்பார்ப்பு சுயநல வண்ணம் கொண்டு
    நாடகம் போல முன்னரே எழுதப்பட்ட
    ஒவ்வொரு காட்சியும் நிகழ்வாகவேண்டுமென்று அடம்பிடிக்கும்.
    எதிர்பார்ப்பு லட்சிய வண்ணம் பூண்டு
    காட்சிகள் எப்படி நகர்ந்தாலும் கவலையுறாமல்
    உச்சக்காட்சியின் சுபத்தையே கனவு காணும்.

    +++++

    எதிர்பார்ப்பே இல்லையென்றாலும் நிகழ்வுகள் இருக்கும்.
    நிகழ்வுகள் நாடகக்காட்சிகளின் ஒழுங்குடன் நகரா.
    உச்சக்காட்சி என்ற ஒன்றுமிராது.
    முடிவிலா நாடகமாய் நிகழ்வுகள்.
    காட்சியின் கதையின் அர்த்தங்களை
    நடிகர்களே கற்பித்துக்கொள்வார்கள்.

    அர்த்தம் கற்பித்தலில் எதிர்பார்ப்புகள் உருவாகின்றன.
    எதிர்பார்ப்புகள் உச்சக்காட்சியை அடையாளம் காட்டும்.

    +++++

    களைத்துப்போன நடிகர்கள்
    கிளைக்கதையின் முடிவையே
    காவிய முடிவென்று அறிவித்துவிட்டு
    இளைப்பாற போய்விடுவார்கள்.