Category: Poems

  • நம்பிக்கையின் சிருஷ்டி

    முதலில் நம்பிக்கை என்ற சிந்தனை

    பின்னர். நம்புங்கள் என்ற சொல்

    நம்பினார்கள் பலர்

    ஏன் நம்பவேண்டும் என்று ஆய்ந்தனர் சிலர்

    ஆய்ந்தவர்களில்

    சில பேர் நம்பத்தொடங்கினர்

    சில பேர் நம்பத்தேவையில்லை என்றனர்

    மற்றவர்கள் இன்னும் ஆய்வைத் தொடர்கின்றனர்

    நம்புதலும் நம்பாதிருத்தலும்

    நம்புதல் பற்றிய ஆய்வும் என்று

    செய்கைகளே மிஞ்சின.

    உலகளாவிய பெருமனத்தின்

    ஒன்றிணைந்த சிந்தனை, சொல் மற்றும் செய்கைகள்

    சிருஷ்டியின் மூலக்கூறுகள் எனில்

    நம்பிக்கையின் சிருஷ்டியும் இவ்வாறே நிகழ்ந்திருக்கக்கூடும்.

  • நவயுகக்காதலர்கள்

    மற்றவர்கள் குழுமியிருந்தபோது
    அக்கறையுடன் நலம் விசாரித்தான்.
    தனித்துவிடப்பட்டபோது
    மௌனமாயிருந்து அன்னியமானான்.
    இவனை பேசவைக்க
    சற்றுமுன் கூட்டமாய்
    நின்றிருந்த நண்பர்களை
    மீளச்சொல்ல வேண்டும்

    திரைப்படம் சென்றோம்
    நண்பர் குழாமுடன்.
    அவனுக்கு
    படம் பிடிக்கவில்லையாம்.
    எனக்கும் பிடிக்கவில்லை
    அவன் என் பக்கத்து இருக்கையில்
    அமராதது!

    எல்லோரும்
    விடுதியில்
    அளவின்றி உண்டு மகிழ
    இவன்
    குளிர் பானம் மட்டும்
    போதுமென்றான்.
    நான் தந்த
    சிக்கன் துண்டுகளை கூட
    நண்பனுக்கீந்தான்.

    நண்பர் குழுவுடன்
    என் வீடு வரை
    வந்தெனை இறக்கிவிட்டபோது
    அவன்
    இருந்த திசை நோக்காமல்
    முதுகு காட்டி நடந்தேன்.

    +++++
    அவசரத்தில்
    மறந்து போய்
    வைத்துவிட்ட கைத்தொலைபேசி
    புத்தக அலமாரியில்
    புதைந்து கிடந்தது.
    முப்பது குறுஞ்செய்திகள்
    அவனிடமிருந்து.
    சினம் விலகி
    உடன் பதிலளிக்கலானாள்.
    விரல் வலிக்க
    இரவு முழுக்க
    அவனை காதலித்தாள்
    குறுஞ்செய்தி வாயிலாக.

  • சந்தை

    வீட்டில் செய்த
    பண்டங்களை
    விற்க
    கடைகடையாய் ஏறி இறங்கினேன்.
    ஒரு கடைகாரனும்
    என் பண்டத்தை கடையில் வைத்து விற்க
    சம்மதிக்கவில்லை…
    பண்டங்களை
    நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது.
    அடுத்த நாளும்
    பண்டங்களை செய்தேன்..
    விற்பனை செய்ய
    தெருவெங்கும்
    கூவிச்சென்றேன்.
    யார் வீட்டு
    கதவுகளும் திறக்கவில்லை
    காசு கொடுத்து
    வானொலியில் என் பண்டத்தின் பெயரை
    ஒலிக்கச்செய்தேன்.
    ஒன்று கூட விற்கவில்லை.
    சுவரொட்டிகளும்
    விளம்பரங்களும்
    பத்திரிக்கைகளும்
    எதனாலும்
    கைகூடவில்லை விற்பனை.
    நடுத்தெருவில்
    வீசியெறிந்தேன்
    என் பண்டத்தை.
    வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை
    என்னவென்று பார்த்து
    பின்னர் சுவைத்தனர்.
    அடுத்த நாள்
    பண்டத்தை
    சமைக்கத்துவங்கிய போது
    வாசலெங்கும்
    நுகர்வோர்களின் வரிசை.

  • வாயிற்காவலன்

    கூட்டம் பெருகிவிட்ட

    சிற்றுண்டி நிலையத்தில்

    வருபவர்களை

    வாயிலில் காக்கவைத்து

    உள்ளிருக்கும்

    கூட்டம் தணிந்த பின்

    காத்திருப்போரை

    உள்ளே விடும்

    வாயிற்காவலனொருவனை பார்த்தேன்.

    நிகழ்கால இருப்பை பொறுக்காமல்

    நிற்காமல் நகரும் நினைவுகள்.

    இறந்த கால அவஸ்தைகளை அசை போடும் ;

    எதிர் காலத்தை எண்ணி

    அல்லலுறும்.

    உள் புகும் நினைவுகளை

    வாயிலில் நிறுத்தி

    பரிசோதித்து

    வடிகட்டி உள்ளனுப்பும்

    காவலனொருவன் எனக்கு கிடைப்பானா?

  • சொல்

    குதூகலம்.
    மகிழ்ச்சி.
    சந்தோஷம்.
    உவகை.

    சொற்கள்
    உணர்வின் அடையாளமாக
    பரிமாறப்பட்டன.
    திகட்டிவிட்டதென்று
    எழுந்து கொள்ள முடியாமல்
    முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது.

    அலுப்பு
    சலிப்பு
    வெறுப்பு
    இயலாமை

    சொற்களில்லாமல்
    சொன்னது
    உடல் மொழி.

    சொற்கள்
    முற்றுப்புள்ளியை
    அழைத்து வந்து
    பொருத்திக்கொண்டு
    அமைதியாயின.

    புன்னகை
    புன்முறுவல்
    குறும்புப்பார்வை
    வெடுக்கென எழுதல்

    உடல்மொழி
    கட்டைவிரலை
    உயர்த்திக்காட்டி
    வெளியேறியது…

    சொற்கள்
    அமைதியாய்
    காகிதத்தில் வந்தமர்ந்தன
    கவிதையாக.

    இறுமாப்புடன்
    திரும்பிய
    உடல்மொழி
    கவிதையாக
    உருக்கொண்ட
    சொற்களைக்கண்டு
    மோனமாகி
    நெற்றி அகன்று
    சிந்தனை வயப்பட்டது.

    ”வாய் வார்த்தையாகும் சொற்கள்
    எழுத்துருவாகியும் பேசுகின்றன.”

    சிந்தனையும்
    சொற்களாகவே வெளிப்படுவதை
    உணர்ந்த
    உடல் மொழி
    மரியாதையாய்
    தலை குனிந்தது.

    சொற்கள் நிரம்பிய
    கவிதை புத்தகத்தின்
    பக்கங்கள் காற்றில் புரண்டன.

  • வாசல்

    சிற்றூரில்

    வாழ்ந்திருந்த சிறுவயதில்

    விடியற்காலம்

    வாசற்படியில்

    நான் படிக்கும் சத்தத்தோடு

    விதவிதமான பறவைகளின்

    சத்தங்களும் சேரும்

    சேவலின் கூவல்

    காகங்களின் கரைச்சல்

    குருவி, மைனாக்கள், மற்றும்

    பெயர் தெரியா பறவைகள்

    வரும் பகலுக்காக

    ஆயத்தமாகும் சத்தங்கள்

    இப்போதெல்லாம்

    விடியற்காலத்தை

    சந்திப்பதேயில்லை

    பறவைகளின்

    சத்தமும் கேட்பதேயில்லை

    வாசல் மட்டும் இருக்கிறது….

    பக்கத்து ஃப்ளாட்டின்

    செருப்புகள் சிதறி

  • தோற்றுப்போன கவிதை முயற்சி

    என் கவிதைக்கான
    கருப்பொருளாக
    நீரைத் தேர்ந்தெடுத்தேன்.
    பீய்ச்சியடித்த ஊற்று,
    மணலில் சீறிப்பாய்ந்து
    பாறைகளைத்தள்ளி
    விரையும் காட்டாறு.
    அதி உச்சியின் மேலிருந்து
    கொட்டும் அருவி.
    சமவெளிகளில்
    நகரும் நதி.
    கிளைக்கும் கால்வாய்கள்.
    புனித நகரங்களின்
    இரு மருங்கிலும்
    படரும் ஜீவ நதி.
    அணைகளால்
    தடுக்கப்பட்ட ஒட்டத்தை
    தன் மட்டத்தை உயர்த்தி
    மீட்டெடுத்து
    கடும் வேகத்தில் பயணமாகி,
    பரந்து விரிந்த கடலுடன்
    சங்கமமாகி
    தன் அடையாளமிழக்கும்
    ஆறு.
    குழாயிலிருந்து
    விடுபட்டு
    கழுவியில் நிறைந்து,
    குழிந்து,
    வெளிச்செல்லும்குழாயின்
    உள் புகும்
    நகராட்சி நீர்.
    துணியால் பிழியப்பட்டு
    துணிக்கு ஈரத்தன்மையை ஈந்து
    தன்னை அசுத்தமாக்கி
    வாளியில் நிறைந்து
    வாடிய செடியின் மேல்
    கொட்டப்பட்டு
    மண்ணுக்குள் ஐக்கியமாகி
    மந்திரம் போல் செடியை துளிர வைத்து….
    நீரை
    சொற்களுக்குள் அடக்க
    முடியவில்லை என்னால்.
    காதுக்குள் நீர் நுழைந்த அவஸ்தை
    என் சிந்தனையில்.
    நீரின் எந்த வடிவங்களும்
    என் கவிதைக்குள்
    சிக்கவில்லை.
    முழுமையோ
    வடிவமோ பெறாமல்
    நின்று போனது என் கவிதை முயற்சி.
    களைப்பை போக்க
    கண்ணாடிகோப்பையில்
    நிரம்பியிருந்த தண்ணீரைப்பருகினேன்.
    நான் பருகிய நீர்
    என் உடல் உப்பை எடுத்துக்கொண்டு
    வியர்வையாக
    வெளிப்பட்டு
    மண்ணில் சிந்தி
    மறைந்து போனது.
    சிந்திய இடத்தில்
    முளைத்திருந்த
    உலர்ந்த புற்களுக்கு
    பச்சையம் வழங்கும் திட்டமோ?

  • சமரசம்

    சுவரேறி குதித்து

    தனியார் நிலமொன்றில்

    தெருவோரக்கிரிக்கெட்

    விளையாடினார்கள் சிறுவர்கள்.

    மட்டைக்குரிமையாளனே

    முதலில் மட்டை பிடிப்பான்.

    அவ்வளவு எளிதில்

    ஆட்டமிழப்பதுமில்லை.

    ஒங்கி அடித்தான் பந்தை.

    சுவரைத்தாண்டி

    ரோட்டில் விழுந்தது.

    பந்து சுவரைத்தாண்டிப்போய் விழுந்தால் அவுட்.

    ஆட்டமிழக்கவிருப்பமில்லை மட்டையாளனுக்கு.

    தானே அம்பயராக வேண்டுமென்று

    அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

    அவன் கருத்துப்படி

    அவன் “நாட் அவுட்”

    அவனைப்பெவிலியனுக்கு

    அனுப்ப பேச்சு வார்த்தை துவங்கியது.

    ரோட்டில் விழுந்து

    லாரியொன்றின்

    டயரில் சிக்கி நசுங்கிப்பொயிருந்த பந்தை

    எடுத்துவந்தான் ஒரு பீல்டர்.

    ஆட்டம் தொடர வேறொரு பந்து வேண்டும்.

    வேறொரு பந்து வாங்கிவர

    மட்டைக்குரிமையாளனை

    வேண்டிக்கோண்டார்கள்.

    அவன் இன்னொரு பந்து கொண்டுவந்தால் போதும்.

    மூன்று முறை அவுட் ஆவதுவரை

    மட்டை பிடிக்கலாம்.

    அவன் அவுட் ஆனானாவென்று

    அவன் தான் அம்பயராக இருந்து முடிவெடுப்பான்.

    கொடுக்கப்பட்ட சலுகைகளை

    பெரியமனது பண்ணி ஏற்றுக்கொண்டு

    கடைவீதி வரை சென்றான் மட்டையின் உரிமையாளன்.

    அவன் திரும்பிவரும்வரை

    அவன் விட்டுப்போயிருந்த

    மட்டையில்

    சிறுகற்களை அடித்து பயிற்சி செய்தார்கள் மற்ற சிறுவர்கள்.

  • குன்றின் உச்சியில்…

    முழுதும் மொட்டையடிக்கப்பட்ட

    ஒற்றைக்குன்று

    அதன் உச்சியில்

    ஒரே ஒரு மரம்.

    குன்றின் பின்னிலிருந்து

    உதித்துக்கொண்டிருந்த

    சூரியனின் கதிர்களை

    மறைத்தது

    உச்சியில் இருந்த ஒற்றை மரம்.

    +++++

    மருந்துக்கு

    ஒரு புல் கூடமுளைத்திருக்கவில்லை.

    குன்றின் சொறசொறப்பான உடம்பை

    இறுக்கப்பற்றி ஏறிக்கொண்டிருக்கையில்

    கைகள் சிவந்துபோயின.

    சில இடங்களில்

    கல்குவாரிக்காரர்கள் ஏற்படுத்திய

    வழுவழுப்பில்

    கால்கள் வழுக்கினாலும்

    கரங்கள் சுகம் பெற்றன.

    சற்றுநேரத்தில்

    சூரியன் மரத்திற்கு பின்னிலிருந்து

    உயர எழுந்து

    கண்ணைக்கூசவைத்தது.

    கூசிய கண்களை

    சுருக்கியபடி

    ஏறி உச்சியை அடைந்தேன்.

    +++++

    சூரியனை

    புறக்கணித்தவாறு

    முதுகைக்காட்டி

    நின்றிருந்தேன்.

    எதிரே விரிந்திருந்த

    சமவெளியின் காட்சி

    கண்ணை நிறைத்தது.

    பல மைல்களுக்கு

    நீண்டு,

    வெயில் காயும்

    கரும்பாம்பு போன்றதொரு

    பிரமிப்பை தந்த

    நெடுஞ்சாலை.

    அதன்மேல்

    எறும்புகள் போல்

    ஊறிக்கொண்டிருந்தன

    சின்னதும் பெரியதுமான

    ஆட்டோமொபைல் வாகனங்கள்.

    கொஞ்சம் தள்ளி

    பெரும் ஆற்றின் திசையை

    மாற்றிய பெருமிதத்தோடு

    மல்யுத்தவீரன் மாதிரியான தோற்றத்தில்

    பிரம்மாண்டமானதொரு அணைக்கட்டு.

    இன்னொரு புறத்தில்

    ராட்சத குழாய்கள் வழியே

    புகை கக்கிக்கோண்டிருந்த

    இரண்டு தொழிற்சாலைகள்.

    +++++

    அடிவாரத்தில்

    சாலையோரக்கடையொன்றில்

    அமர்ந்தபடி

    குன்றின் உச்சியை அண்ணாந்து மீண்டும் பார்த்தேன்.

    குன்றின் பரப்பை

    மதிய சூரியன்

    சுட்டெரித்துக்கொண்டிருந்தது.

  • காட்சி –> சிந்தனை –> கருத்து?

    வெண்மணல்.

    உடைந்த சிறுசிறு கண்ணாடித்துண்டுகள்.

    காயாத செந்நிற திரவம்.

    ஒர் இறுக்கமான ஒவியத்தின்

    சாத்தியக்கூறுகள்.

    திருட்டுத்தனமாக

    புகைக்க வந்த சிறுவன்

    மணல்மேட்டில்

    சிதறிக்கிடந்த

    கூறான கண்ணாடித்துண்டுகளை

    கவனிக்காமல்

    தடுக்கிவிழுந்திருக்கலாமோ?

    ஆற்றோரமாயொரு சமயவிழாவில்

    நடந்த குரூரமான

    வன்முறையின்

    குறியீடோ?

    காதலனொருவன்

    காதலியின் மேல்

    சிவப்புநீரடித்து

    ரகசியமாக

    “ஹோலி” கொண்டாடுகையில்

    உடைந்துபோன

    வெண்ணிற வளையல்துண்டுகளோ?

    உரிமம் பெறாத

    மருத்துவர் செய்த

    கருக்கலைப்புக்கான

    ஆதாரங்களின்

    குவியலோ?

    +++++

    மணற்புயலுருவாகி

    மணல் மூடி

    கண்ணாடித்துண்டுகள் மற்றும்

    செந்நிற திரவம்

    மறைந்து போயின.

    +++++

    விழியிலிருந்த காட்சி

    சிந்தனைகளாக உருமாறின.

    சிறுவனின் கள்ளம்,

    வன்முறை தூண்டும் மதங்கள்,

    ரகசியக்காதல்கள்,

    நெறிமுறையற்ற உத்தியோகங்கள்

    எனப்பல சிந்தனைகள்.

    சிந்தனைகளும் விரைவில்

    உருமாறக்கூடும்….

    கருத்துகளாக!