Category: Poems

  • தெரு – றியாஸ் குரானா

    http://afremov.com/product.php?productid=18321
    http://afremov.com/product.php?productid=18321

    றியாஸ் குரானா

    தெரு

     

    இங்கிருந்து தொடங்குகிறது தெரு.

    இல்லை, இது தெருவின் நடுவிலோர் இடம்.

    அந்த தெருவின் முடிவடைகிற இடம்.

    ஒன்று போல் தென்பட்டாலும்,

    ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு

    பெயர்களாலும், அடையாளங்களாலும்

    நீண்டு கொண்டே இருக்கிறது.

    எனது தெருவாகத் தொடங்கி

    உனது தெருவாக முடிவடைவதுகூட

    ஒரு வசதிக்காகத்தான்.

    யாருடைய தெருவில் நாம் நிற்கிறோம்?

    அதைக் கண்டு பிடிக்கும் போது

    அடையாளமொன்றை பெற்றுக் கொள்கிறோம்.

    எங்கிருந்து தொடங்குகிறது

    இந்தத் தெரு என ஒரு குழந்தை

    கேட்கும் போது,

    எல்லாமே விளையாட்டாகிவிடுகிறது.

    அப்போது, சலிப்பின்றி விளையாடுவதே

    எங்கிருந்தும் தொடங்கலாம் என்பதாகும்.

     

    இரு துளி வெயில்

     

    துளித்துளியாக விழுந்து கொண்டிருக்கிறது வெயில்.

    சில துளிகளை எடுத்து வந்து கோப்பைக்குள்

    வைத்திருக்கிறேன்.

    ஒன்றில் மற்றது கலந்து விடாமல்

    தனித்தனியே உருண்டபடி இருக்கின்றன.

    இன்னும் சில நாட்களில் ஒலியெழுப்பவும்

    பழக்கிவிடுவேன்.

     

    நினைவில் இறந்தவர்

     

    நினைவை உருட்டிச் செல்கிறது காற்று

    மலை உச்சியிலிருந்து

    கீழே தள்ளி விடப்பார்க்கிறது

    காப்பாற்ற முயற்சிக்கிறேன்

    முடியவில்லை

    ஆகையால் நினைவை

    சோதிக்கிறேன்

    அதனுள் எத்தனை யோசம்பவங்கள்

    எத்தனையோ மனிதர்கள்

    நினைவின் ஒரு மூலையில்

    பல கவிஞர்களும் பல எழுத்தாளர்களும்

    பரிதவித்தபடி

    காப்பாற்ற முடியவில்லை என்பதால்

    நான்திட்டமிட்டுக் கொன்றேன்

    என்றுயாரும் கருதக்கூடாது

    மலையிலிருந்து கீழே

    நினைவு விழுந்துவிட்டது

    விழும் போது கடைசியாக

    எனது காதுகளில் கேட்ட மரண ஓலம்

    ,,,,,,,,,,,,,,,,,னுடையது.

    இனி புதிதாக நினைவுகளை

    நீரூற்றி வளர்க்க வேண்டும்.

     

    அடுத்ததாக நான்

     

    எனக்கு முன் இந்தப்புத்தகத்தை

    புரட்டிப் பார்த்து விட்டுச்

    சென்றது காற்று

    இத்தனை வேகமாக

    புத்தகத்தை விட்டு தப்பிச் சென்றது ஏன்

    என யோசிக்கிறேன்

    இறகொன்றை ஏற்றிச் செல்வதற்கான

    நேரம் நெருங்கி விட்டதால்

    போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது

    எதற்கும் புத்தகத்தை

    புரட்டிப் பார்க்கலாம்

    முதல் அத்தியாயம்

    காற்று தப்பிச் சென்ற காதை.

     

  • நினைவூட்டி

    SONY DSC

    ஞாபகார்த்த இலை
    காணாமல் போனது
    மரத்திலிருந்து விடுபட்ட
    இலையிடமிருந்து நீ பாடம் கற்கவில்லை
    புத்தகப்பக்கங்களுக்கு நடுவில்
    சிறைப்படுத்தி வைத்திருந்தாய்
    புத்தகயாவின்
    புனித மரத்தின் இலையது
    என்பதை மறந்து போனாயா?

  • தொலைந்த சத்தம்

    செருப்படி சத்தம்
    காதைக் கிழித்தது
    பொறுக்கவியலாமல்

    சத்தம் நின்றதும்
    வாசல் வெளியே
    ஒரு ஜோடி செருப்பு

    பாதங்கள் எங்கேயென
    திசையெல்லாம் அலைகையில்
    செருப்படி சத்தத்தின் மாறாத ஞாபகம்

    திரும்பவும் அறையில் அடைந்தேன்
    செருப்படி சத்தம்
    மீண்டுமொருமுறை கேட்குமெனும் நம்பிக்கையில்

  • முண்டங்களின் தலைவன்

    தலைகளில்லா
    முண்டங்கள்
    ஒரு படை அமைத்தன
    தலைவன்
    ஒருவனை நியமிக்க
    தலை தேடும் பணியில் இறங்கின
    கிடைக்காமல் போன
    தலைக்கு பதிலாய்
    தலையின் சித்திரம் வரைந்த
    பலகையொன்றை
    எடுத்து
    ஒரு முண்டத்தின் மேல்
    ஒட்டி வைத்தவுடன்
    அதன் உயரம் பன்மடங்காகி
    எடை பல்கிப் பெருகி
    அதன் காலடி நிழலின்
    சிறு பகுதிக்குள்
    மற்ற முண்டங்களெல்லாம் அடங்கின.

  • வறட்சி நீங்குதல்

    மண்டியிட்டு
    திட்டில் தலை வைத்து
    பார்க்கையில்
    ஆழத்தில் போய்விட்ட நீர் மட்டம்
    ஈரமிலா தொண்டையில்
    சொற்களின் உற்பத்தி முடக்கம்.
    வறண்ட கோடைக்கு நடுவே
    பெய்த சிறு தூறலின்
    ஒற்றைத் துளி
    நாக்கை நனைத்தவுடன்
    பெருகிய
    வெள்ளத்தில்
    கிணறு பொங்கி வழிந்தது.

  • நான்

    flowing_dreams_sold_art_photo
    ஒவ்வொரு கனவுகளுக்குள்ளும்

    நுழைவதும் வெளிவருவதுமாகவும்

    இருந்தேன்.

    ஒவ்வொரு கனவிலும்

    எண்ணற்ற நிகழ்வுகள்

    எல்லா நிகழ்வுகளிலும் நான்!

    கனவுகளுக்குள் நான் நுழையவில்லையென்று

    பின்னர் தான் தெரிந்தது

    என்னைச் சுற்றிலும்

    கனவுகள்

    ஓடியும் பாய்ந்தும்

    சென்று கொண்டிருக்கின்றன

    நான் பாய்ந்து செல்லும்

    கனவுகளை நோக்கும் சாட்சியாக மட்டும்

    நின்று கொண்டிருக்கிறேன்.

  • My Worries

    No Worries @ Fig Jam Studio
    No Worries @ Fig Jam Studio

    ( My daughter Puja Ganesh is thirteen years old. I have heard her mom telling that Puja is trying to write poems, but never once poems were shown to me. Puja is very inventive of finding odd places to hide her little copy in which she scribbles. This evening, I read the above lines in my iPad…perhaps she forgot that I will see it….or may be she wanted me to read it this time!? )

    My worries

    Years have passed, so quickly,
    I don’t even remember, when I was three.
    Imagining about the future years to come,
    Panicky and frustrated, I become.
    The age of maturity has touched me,
    But still the idea of mere future has not occurred to me.
    Will I be musician or a doctor,
    an artist or a dancer?
    But someone has said not to worry about the future
    All I need, is to plan and be happy about the present.

  • நகரத்துப் பசுக்கள்

    cows-animale_400

    தீனீ போட்டு கட்டுப்படியாகாமல்
    விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள்
    தெருக்களில் திரிந்தன
    வெள்ளைப் பசு
    முள்மரங்களை
    சுவாசம் பிடித்த படி நின்றது
    மஞ்சள் பசு
    சாலையோரங்களில் போடப்பட்ட
    கற்குவியற்களை நாவினால் தொடுகிறது.
    வெள்ளைப்பசுவின்
    இளங்கன்று
    பிளாஸ்டிக் குப்பைகளை
    ஆர்வத்துடன் நோக்குகிறது
    மாலை வீடு திரும்பாத
    பசுக்களைத்
    தேடி வந்த உரிமையாளன்
    மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை
    லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான்.

    இப்போதெலாம்
    பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை
    நவநாகரீக கோசாலையில்
    சுகமாய்க் காலங் கழிக்கின்றன
    காசு கொடுத்து
    பசுக்களுக்கு உணவூட்டிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்
    இன்னுமொரு கிளை திறப்பதற்காக
    உரிமையாளன்
    கிராமத்திலிருந்து
    மேலும் பசுக்களை
    நகருக்கு அழைத்து வருகிறான்.

  • சிவமரம்

    withered tree

    பட்டுப்போன மரமொன்று
    பரம சிவன் போல் தெரிந்தது
    உயரமான மரத்தின்
    இரு புறத்திலும்
    இரு கரங்களென
    பெருங்கிளைகள்
    மேல் நோக்கி வளைந்த
    இடப்புற கிளையின்
    இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும்
    திரிசூலக் கிளைகள்
    முன் நோக்கி வளைந்து
    கண்ணில் படா தண்டத்தின் பிரிவில்
    தொங்கும் கையென
    வலப்புறக் கிளை
    தண்டின் உச்சியில்
    உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும்
    கொத்தான கிளைகள்
    பறவைகள் காலி செய்துவிட்டுப் போன
    கூடுகள்
    சிரப்பாகத்திற்குக் கீழ்
    சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன்
    சிவனே என்று
    இருந்த மரத்தின் தலையில்
    ஆகாய கங்கை வந்தமர்ந்து
    கூடுகளில்
    நீர் நிரம்பி வழிந்து
    வேர்களை ஈரப்படுத்தவும்….
    மரமெங்கும்
    இலைகள் துளிர்த்தன
    சிவனுருவை இழந்தது சிவமரம்
    மரத்தடியில்
    யானை வடிவத்தில்
    கல்லொன்று முளைத்தது
    அழகு மயிலொன்று
    அன்றாடம் புழங்கியது
    புதருக்குள்
    குடிபெயர்ந்த கொம்பு வீரியன்
    மறைவில் நின்று
    தினமும் மயிலை பார்த்தது

  • ஆகாசஜன்

    turner-snowstorm
    மகாப்பிரளயத்தில் எல்லாரும் அழிந்துவிட்டனர்
    கொல்லாமல் விடப்பட்ட ஜீவர்களைத்தேடி
    ஒருவர் விடாமல் அழித்து வந்தான் மிருத்யூ.
    அவன் பாசக்கயிறிட்டு
    எல்லாரையும் அழித்துவிட்டான்.
    ஒரே ஒருவனைத் தவிர,
    “பிரம்ம”ப்பிரயத்தனம் செய்தும் முடியவில்லை.
    எஜமானன் எமன் முன்னர் சென்று முறையிட்டான்.
    “எல்லோரையும் நீ
    அழித்துவிட இயலாது.
    ஜீவர்களின் கருமங்களை நீ அறிந்தால் மட்டுமே
    அவர்களின் ஆயுட்காலத்தை நீ அறியமுடியும்”
    என்றான் எமன்.
    சாகாமல் எஞ்சியிருந்தவனின்
    கருமங்களைத் தேடி பிரபஞ்சமெங்கும்
    தேடி அலைந்தான் மிருத்யூ
    எஞ்சிய கருமங்கள்
    ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
    வெறும் கையுடன்
    எமனிடம் திரும்பினான் மிருத்யூ
    “அந்த மனிதனின் அடையாளங்களை சொல்கிறேன்
    அவன் தானாவென்று சொல்”
    எமன் அடுக்கத் தொடங்கினான்
    ”நிர்மல சொரூபம் ;
    பஞ்சபூதங்களுடன் தொடர்பில்லை
    அமைப்பும் உருவமும்
    அவனுக்குக் கிடையாது
    யாருமறியா
    மூல காரணத்தை தழுவியவன்
    பிரத்யேக காரியங்கள் புரியாதிருப்பவன்
    மாற்றமென்றால் என்ன என்று அறியாதவன்
    கர்ம அனுபவம் அறவே இல்லாதவன்
    சித்த அசைவு சுத்தமாக இல்லை அவனுக்கு
    காண்போரின் கண்ணுக்கு
    அவனின் பிராணம் அசைவது போல தோற்றமளிக்கும்
    ஆனால் அதில் ஒரு நோக்கமும் இராது.
    சித் சொரூபமாக இருக்கிறான்
    எனவே அவனுக்கு அழிவில்லை.
    மரண நினைவுள்ளவனுக்கு மட்டுமே
    மரணம் சம்பவிக்கிறது
    இவனோ
    நினைவுகள் இலாத ஞான சொரூபனாகவும் இருக்கிறான்.”
    மிருத்யு ஆம் / இல்லை என்றேதும் சொல்லவில்லை.
    எமன் தொடர்ந்தான்
    ”உதவிக் காரணங்களின்றி
    சுயசொரூபத்தில்
    சூன்யத்தில்
    நிற்கிறான்
    பின்னர் எப்படி அவன் உன் வசப்படுவான்?”
    தன் முயற்சிகள்
    ஏன் வியர்த்தமாயின
    என்று மிருத்யுவிற்குப் புரிந்தது.
    எமன் மேலும் உரைக்கிறான் :
    ”பிரளயத்தில்
    சர்வமும் ஐக்கியமான பிறகு
    எது மிஞ்சும்?
    சூன்யத்தை தவிர வேறென்ன?
    காரண-காரியங்கள் நசித்துப் போகையில்
    மிஞ்சுவதென்ன? அதுவும் சூன்யம் தானே?
    சொப்பனத்தில் அனுபவிப்பதெல்லாம் என்ன?
    காரணம் சூன்யமாக இருந்தும்
    ஸ்தூலம் அசைவது காணப்படுகிறதல்லவா?
    சூன்யத்தை பூரணமாகவும் கொள்ளலாம்.
    உற்பத்தி தோற்றமும்
    நாசமாகும் தோற்றமும்
    சூன்ய-பூரணத்தில் இருந்தே தோன்றுவன.
    உற்பத்தி – நாசம்
    இவ்விரண்டும் நிகழுகையில்
    இவ்விரண்டின் பின்புலத்தில்
    நிலையாயும் சாட்சியாகவும்
    ஒன்று இருந்தாக வேண்டும்
    சாட்சியென்றால்
    அது விகல்பமாகாததாகவும் இருத்தல் வேண்டும்
    அது
    நம் புத்திக்கு புலப்படுவதில்லை.
    இச்சூன்ய-பூரணத்தில் இருந்து
    எழும் பிரம்மாண்டம்
    அழியும் தோற்றத்தையும் கொண்டதாய் இருக்கிறது…
    இப்போது சொல்
    உன்னால் அழிக்க முடியாத
    அது எது அல்லது யார்?”
    மிருத்யு
    மௌனத்தை பதிலாய்த் தந்தான்.

    (யோக வசிஷ்டத்தின் உற்பத்திப் பிரகரணத்தில் வரும் ஆகாசஜன் கதையிலிருந்து)