ஆண்டிறுதி சிந்தனை

ஆண்டிறுதிப் பிரதிபலிப்புகள் வாய்மொழியில் சிக்காமல் தப்பித்துக் கொண்டு இருக்கின்றன. உணர்வுகளின் கூட்டமாக அவை எனக்குள் சுழன்று கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு பெயரிட விழைந்தால், "கசப்பு" என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். "அவமானம்" அல்லது "அவமரியாதை" என்பது போன்ற வர்ணனைகளுக்குப் பொருந்தி வரும் இவ்வருடத்து சம்பவங்களை அனுபவங்களை என் மனதில் தொடர்ந்து அசைபோட்டு ‘ரீப்ளே’ செய்யும் குணம் சோம்பேறித்தனமான மனநிலையை உருவாக்கி, மலரப்போகும் புதிய ஆண்டு பற்றிய உற்சாகத்தை நீக்குகிறது. அசை போடும் அனுபவங்கள் இப்போது கடந்த காலத்தில் உள்ளன. என் இப்போதைய யதார்த்தத்தின் பகுதியாக இல்லை. குளிர்ந்த காற்று, பாதி மடிக்கப்பட்ட பயணக்கட்டுரை புத்தகம், சமையலறையிலிருந்து வரும் சத்தம் – இதுதான் எனது தற்போதைய தருணம். "கசப்பு" என்றோ “அவமதிப்பு" என்றோ இத்தருணத்தை வர்ணிக்கத் தகுமா? இல்லை. அவை வெறுமனே இப்போது என் முன்னே நிகழ்பவை, நான் அவற்றுள் ஒரு பார்வையாளனாக இருக்கிறேன். கடந்த காலத்திற்கு நகர்ந்து விட்ட நிகழ்வுகளை மீண்டும் மனதுக்குள் இயக்கிப் பார்க்காமல் இருப்பதும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதையும் எதிர்நோக்காமல் இருப்பதும் தாம் சதா நம்மை பார்வையாளனாக வைத்துக் கொள்வதற்கான வழி. #YearEndReflections

Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.