திருவண்ணாமலை

நாம் கவனமாக இருக்கிறோம். மரியாதையாகப் பேசுதல், கடுஞ்சொற்களை பயன்படுத்தாதிருத்தல், எல்லா குறைகளையும் பொறுமையாக செவிமடுத்தல், எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் உரிய  விளக்கங்களை இயன்ற வரை தருதல், உயர்மட்டம் எடுக்கும் முடிவுகளை பூச்சுகள் எதுவும் இல்லாமல் உடனுக்குடன் அறியத்தருதல், விடுப்பு வேண்டுகோள்களை நிராகரிக்காமல் இருத்தல், கான்பரன்ஸ் அறையின் கதவை மூடாமல் சர்வஜாக்கிரதையாக சந்திப்புகளை நிகழ்த்துதல், தப்பித்தவறி கூட சொந்த வாழ்க்கை குறித்து எதுவும் கேட்டுவிடாதிருத்தல்..….இதற்கு மேல் என்ன செய்ய….…பிஓஎஸ்எச் கையேட்டின் ஒரு ஷரத்தைக் கூட இதுவரை மீறியதில்லை.   ஆனால் இவர்கள் வேலையை விட்டுச் செல்லும்போது சேற்றை வீசிவிட்டு செல்வார்கள்…நிலமென்னும் நல்லாள் காட்டும் அதே பொறுமையை கடைபிடிப்பதோடு அல்லாமல் கூடவே மாறாப் புன்னகையைச் சூடிக் கொண்டு வழியனுப்ப வேண்டும்.  

நிரந்தரமாகவே நம்மைப் பற்றி கீழே, பக்கவாட்டில், வெளியே என அனைவரிடமும்  விசாரித்தவாறே இருக்கும்  மேலதிகாரிகள் இத்தகைய சமயங்களில் சும்மாவா இருப்பார்கள்?

இப்போதே இங்கிருந்து நீங்கிச் சென்றுவிட வேண்டும்! உடனடியாக…எவன் கண்ணிலும் படாமல்…ஆனால் முடியவேயில்லையே! கண்ணுக்குப் புலப்படா சங்கிலிகள் உடலெங்கும் கட்டப்பட்டுள்ளன. அந்தச் சங்கிலிகளுக்கு  பயம் என்று  பெயர் வைத்துக் கொள்ளலாமா? பயம் எங்கு உள்ளது? மனத்திலா? அல்லது உடலிலா? 

சென்ற வாரம் ஒரு நண்பருடன் போனில் நடத்திய உரையாடல் நினைவில் வந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த நண்பருக்கு போன் செய்திருந்தேன். திருவண்ணாமலையில் இருப்பதாகச் சொன்னார். கொச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர் அவர். நிறுவனத்துக்கு என்னாயிற்று என்று கேட்டேன். வேலையாட்களிடம் ஒப்படைத்துவிட்டதாகச்  சொன்னார். அடேங்கப்பா….கிட்டத்தட்ட 25 கோடி வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் முதலாளி வேலையாட்களிடம் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறாரே என்று அவருடைய தைரியத்தை வியந்தேன். திருவண்ணாமலையில் வேறு ஏதாவது தொழில் தொடங்கியிருக்கிறாரோ! இல்லையாம்! ஓர் ஆசிரமத்திற்கருகே வீடெடுத்துத்  தங்கி ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்துவருகிறாராம்! மனைவியும் மகனும் கூட  விரைவில் அவருக்கு ஒத்தாசையாக அவர் பணி செய்யும் ஆசிரமத்துக்கே  வந்துவிடப் போகிறார்களாம்! 

“எதிர்காலம் குறித்து பயம் இல்லையா” என்ற என் கேள்விக்கு –

“திருவண்ணாமலை வந்து சில நாட்கள் தங்கிப்பார்…உடல் குறித்த பயம் நீங்கிவிடும்” என்றார் 

“பயம் மனத்தில் அல்லவா இருக்கிறது?” 

“பயம் உடலில் இருக்கிறது. உடலிலிருந்து பயம் நீங்கும் போது மனதிலிருந்து நீங்கிவிடும்”

கீழ்ப்படியாமை சொட்ட கடும் சொற்களை தாங்கியவாறே “நான் வேலையை விட்டுச் செல்ல நீதான் காரணம்” என்னும்படி நீண்ட குற்றச்சாட்டு பட்டியலுடன் வந்த ராஜினாமா மின்னஞ்சலை வாசித்த போதும், இதை மேலதிகாரிக்கு அனுப்பியபின் அவரிடமிருந்து வரவிருக்கும் “சிசிடிவி ஏன் சரியாக வேலை செய்யவில்லை? அதை நீ அணைத்து வைத்திருக்கிறாயா?” என்பது போன்ற ஐயம் பொங்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிச்சொல்லி இன்னொரு அக்கினிப்பிரவேசம் செய்ய வேண்டிய சாத்தியக்கூறை யோசித்தபோதும், அடிவயிற்றில் “விர்விர்” என்று ஏதோ உள்ளூர இழுக்கும் மெல்லிய ஆனால் மிகத் தெளிவான வலியற்ற வலி உணர்வை உற்று கவனித்த போது, நண்பர் சொன்னது சரியென்றுபட்டது. உடலில் உள்ளது பயம். உடலில்தான் உள்ளது பயம். திருவண்ணாமலை செல்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டரைக்கு நான்கு கண்ணாடி அறையை உடனடியாக திருவண்ணாமலையாக மாற்ற ஏதேனும் உபாயம் உண்டா என நண்பனிடம் அடுத்த தொலைபேசி உரையாடலில் கேட்கவேண்டும்.

நன்றி : சொல்வனம் (https://solvanam.com/2023/03/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-2/amp/)

Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.