ஞானியும் குடிகாரனும் – ரூமி

ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்
மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மா
ஒரு பிச்சைக்காரனைப்போல்
நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்
அநாதியாய்
சுதந்திரமாய்

ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்
சதுரங்கப்பலகையில்
எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டு
வட்டமிடுகின்றன அவை

காதல் உனது மையமெனில்
உன் விரல்களில் மோதிரமிடப்படும்

அந்திப் பூச்சியினுள்
ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது

ஞானியொருவன்
தூய இன்மையின்
அழிக்கும் முனையைத் தொடுகிறான்

குடிகாரனொருவன்
சிறுநீர் கழிப்பதை
பாவமன்னிப்பாகக் கருதுகிறான்
பிரபுவே, என்னிடமிருந்து
அசுத்தங்களை எடுத்துவிடுங்கள்

பிரபு பதிலளித்தார்
முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்
புரிந்துகொள்
உனது சாவி வளைந்திருந்தால்
பூட்டு திறக்காது

நான் அமைதியானேன்
அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்
எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்

Comments

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.