ராஞ்சா ராஞ்சா

மணி ரத்னம் இயக்கிய “ராவண்” இந்தித் திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் குல்சார் ; அதில் வரும் ஓர் அருமையான பாடலை கேளுங்கள்

பாடலின் முதல் வரி குல்சார் அவர்களுடையதில்லை. சூஃபிக் கவிஞர் புல்ஹே ஷா-வின் பிரசித்தமான கவிதையின் முதல் வரியை குல்சார் இந்தப் பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சுரிந்தர் சிங் கோஹ்லி அவர்கள் புல்ஹே ஷா பற்றி எழுதிய கட்டுரைப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். புல்ஹே ஷா ஒரு பஞ்சாபி சூஃபி. (காண்க : ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்! ). புல்ஹே ஷாவின் வாழ்க்கை, காலம், அவருடைய படைப்புகள், சமய சிந்தனைகள் மற்றும் கவிதைப்பாணி – இவை பற்றி விரிவாகப் பேசுகிறார் கோஹ்லி.

பஞ்சாபி சூஃபி கவிதைகளில் வரும் படிமங்களும் குறியீடுகளும் செறிவானவை. பாரசீக சூஃபி கவிதைகளில் யூப்ரடீஸ் – டைக்ரீஸ் இணை நதிகள் ஒரு குறியீடாக வரும் ; அது போல, பஞ்சாபிக் கவிதைகளில் வரும் பிரபலமான படிமங்கள் : கைராட்டினங்கள் சுழற்றும் சகோதரிகள் (trinjhan) மற்றும் செனாப் நதி. பஞ்சாபிகளின் நாட்டார்-காவியக் காதல் கதைகளில் – ஹீர்-ராஞ்சா மற்றும் சோஹ்னி-மாஹிவால் –செனாப் நதி ஒரு முக்கியமான பங்கேற்கிறது. ஹீர்-ராஞ்சா கதை இரு குறியீடுகளை சூஃபிக் கவிதைகளுக்கு ஈந்திருக்கிறது. ஹீர் (ஆஷிக் – காதல் புரிபவன்) மற்றும் ராஞ்சா (மாஷுக் – காதலிக்கப்படுவது). பக்தன் ஹீராக உருவகப்படுத்தப்படுகிறான்/ள் ; அவன்/ள் ராஞ்சாவைத் தேடி அலைகிறான்/ள்.

மேற்சொன்ன இந்தித் திரைப்படப்பாடலின் முதல் வரி இது தான் :

“ராஞ்சா ராஞ்சா கர்தி நி மேய்ன் ஆபே ராஞ்சா ஹோய்”

“தலைவன் ராஞ்சாவின் பெயரை உச்சரித்து உச்சரித்து நானே ராஞ்சாவாகிவிட்டேன்”

இவ்வுலகம் பிறந்த வீடு ; கடவுளிருக்கும் இடம் புகுந்த வீடு என்று படிமமாக்கப்படுகிறது. பிறந்த வீட்டில் இருக்கும் பெண் மற்ற நண்பிகளின் துணை கொண்டு கைராட்டினங்களை (trinjhan) வைத்து இறைவன் எனும் காதலனுக்காக உரிய பரிசுப்பொருட்களை தயார் செய்ய வேண்டும். தன் உடலெனும் கைராட்டினத்தில் வேலை செய்து, நற்பண்புகள் எனும் நூலிழைகளை திரிக்க வேண்டும்.

சூஃபிக்கவிதைகளில் உலகத்தில் வாழ்பவன் பயணி (முசாஃபிர்) என்றும் வணிகன் (சௌதாகர்) என்றும் கூட உருவகப்படுத்தப்படுகிறான். உலகம் பயண வழியில் தென்படும் சத்திரம் (சராய்) ; வணிகர்களும் பயணிகளும் சத்திரத்தில் தங்கும் நேரம் மிகக் குறைவே. புல்ஹே ஷா தம் கவிதையில் ராமர், கிருஷ்ணர் என்கிற குறியீடுகளையும் கடவுளுக்கு பயன் படுத்தியிருக்கிறார்.

ஒரு கவிதையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் :-

“பிருந்தாவனத்தில் பசு மேய்த்தாய்

லங்காவில் சங்கொலி செய்தாய்

மெக்காவில் ஹாஜியாக ஆனாய்

உன் நிறத்தையும் (வடிவத்தையும்) அற்புதமாக

அடிக்கடி மாற்றிக் கொள்கிறாய்

இப்போது உன்னை யாரிடமிருந்து மறைத்துக்கொண்டிருக்கிறாய்?”

துணைக்கண்டத்தின் சூஃபிக் குயில் அபிதா பர்வீனின் காந்தக் குரலில் புல்ஹே ஷாவின் பாடல் “ஜே ரப் மில்தா” என்கிற பாடலைக் கேட்டு இன்புறுங்கள்.

 

 

Source : Bulhe Shah – Surindar Singh Kohli – Sahitya Akademi – 1987 Edition

 

Comments

One response to “ராஞ்சா ராஞ்சா”

  1. தனிமரம் Avatar

    பாடல் பகிர்வுக்கு நன்றிகள்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.