தவளைக்கு சிக்கிய மீன் – ந பெரியசாமி

ஹோசூரில் வசிக்கும் கவிஞர் ந பெரியசாமி – என் நண்பரும் கூட – பரவலாக பல இணைய இதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார், நவீன விருட்சம், பண்புடன், வல்லினம், திண்ணை – முக்கியமான எல்லா இதழ்களிலும் இவரது படைப்புகள் வந்திருக்கின்றன. அவர் எழுதியவற்றில் என்னை மிகவும் கவர்ந்த இரு கவிதைகளை கீழே பதிவிடுகின்றேன். பெரியசாமியின் வலைதள சுட்டி : http :// naperiyasamy.blogspot.com

தவளைக்கு சிக்கிய மீன்

குளக்கரையிலிருந்து தவளை
நீர் அதிர
சிரித்தது சிக்கிய மீன்
எனை பிடித்தென் செய்வாய்?
ஏளனம் தரையில் வழிந்தது
மனித வசிப்பிட சிறையிலடைப்பேன்
அங்கு உன் பெயர் தொட்டிமீன்
சிறார்கள் உணவிடுவார்கள்
தாளில்
பிறப்பித்த மீனை
துணைக்கு மிதக்கச் செய்வர்
கழிவில் கசடான நீரை
மறவாது மாற்றம் செய்வர்
உனது வளர்ச்சிக்கு உண்டங்கு ஊசி
பெருமையின் அடையாளமாவாய்
வந்துபோவோரெல்லாம் வேடிக்கையில் மகிழ்வர்
ஒளிரூட்டி கதகதப்பாக்குவார்கள்
ஒத்துப்போக ஓடித்திரியலாம்
முரண்கொள்ள செத்து மிதப்பாய்
வீசி எறிய வேரொன்று இடம் நிரப்பும்
என்றாவது விடுவிக்கவும்படலாம்
வதை என்பதறியும் சிசு அவதரிக்க…

கசப்பு

சோம்பிக் கிடந்த குழாயிலிருந்து
மழையை வரவழைத்துக்
கழுவிய இரு பாகற்காயை
துண்டாடினேன்
அலுப்பூட்ட விரும்பவில்லை
பொன்நிறமாகிட
வதக்கினேன்
சுவையறிய சிறுதுண்டை
நாக்கிலிட்டேன்
ஊறி ஊறி வழிந்த எச்சில்கள்
உடலுள் வளர்த்தது
ஒரு வேப்பமரத்தை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.