கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின் அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை – புத்தகம் என்னை ஈர்த்தது. ஆன்மீகத் தத்துவ தொனி தூவிய அவரது “சுற்றுவழிப்பாதை” நாவலை இதற்கு முன்னர் வாசித்துள்ளேன். அனேகமாக அவரது கவிதைத் தொகுப்பில் நிறைய ஆன்மீக கருப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகள் இருக்கும் என்பது ஊகம் (எதிர்பார்ப்பும் கூட, இப்போது வரும் கவிதைத் தொகுதிகளில் ஆன்மீக கருப்பொருள் அதிகம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்பது ஒரு குறை!).
350 பக்கங்கள் கொண்ட நூலில் ஏராளமான கவிதைகள். புத்தகம் வந்தடைந்ததும் இயைபின்றி ஒரு கவிதையை எடுத்து வாசித்தேன்.
ஆறு நாட்களில் இறைவன் பிரபஞ்சத்தை உண்டு பண்ணின விவிலியத் தொன்மத்தில் எல்லாம் வேகவேகமாக உருவாக்கப்பட்டிருக்கும். பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் மரங்கள் நிமிஷக்கணக்கில் வளர்ந்து மலர் பூத்து கனி விளைக்கும் மரஙளின் காட்சியை மானிடன் ஒருவன் பார்த்திருப்பானே ஆயின் அவன் வியந்திருப்பானா? மனிதனும் பிரபஞ்சத்தின் பங்கேற்பாளர்களில் ஒருவனாக மட்டும் படைக்கப்பட்டிருப்பானெனில், வியப்புணர்வுக்கு இடம் இருந்திருக்காது. வியப்புணர்வுக்கு இடம் இருந்ததெனில் பிரபஞ்சத்தின் பார்வையாளனாக, உற்று நோக்குபவனாக அவனுக்கொரு பாத்திரம் தரப்பட்டிருப்பதாகக் கருதலாம். பிரபஞ்சமும் மனிதனும் ஒரே நேரத்தில் உருவாயினரா என்பது வேறு கேள்வி. பரிணாமவியலும் சமயத் தொன்மங்களும் இக்கேள்விக்கு வெவ்வேறு விதங்களில் விடையளிக்கும்.
விடுவிடென்று நிமிடங்களில் வளர்ந்து கனி குலைக்கும் மரம் – ஸ்ராவஸ்தியில் புத்தர் செய்த அற்புதங்களில் ஒன்று – இது போன்ற ஒரு தென்னை மரம் “வேகம்” கவிதையில் வருகிறது. கவிதைசொல்லி வேகவேகமாக வளரும் தென்னை மரத்தைப் பார்ப்பதாகச் சொல்கிறான். கவிதைக்காட்சிக்குள் பங்கேற்பவனாக கவிதைசொல்லியைப் பார்த்தால் அவன் ஒரு சாட்சி. கவிதைக்காட்சிக்கு வெளியே நின்று அந்தக் காட்சியை வெறும் விவரிப்பவனாக கவிதைசொல்லி இருந்தால் கவிதைக்காட்சிக்குள் அவன் இருக்க மாட்டான். கவிதைக்காட்சியைத் தன் மனதுக்குள் சிருஷ்டித்து அதை அவன் தெரியப்படுத்தும் போது அந்தக் கவிதைக்காட்சி அவனுக்குள்ளேயே இருக்கிறது.
பங்கேற்பவன் எப்படி சாட்சியாக முடியும்? சாட்சி என்பது உணர்வு நிலை. “நான் இக்காட்சியில், நிகழ்வில் பங்கு பெறுகிறேன்” என்று சொல்லிக் கொள்வது உணர்வு நிலையிலிருந்து எழுவது. பங்கேற்கும் காட்சியில் இருந்துகொண்டே சாட்சியாக இருக்கும் வசதியை நம் உணர்வு நிலை நமக்குத் தருகிறது.
கவிதையின் தலைப்பு “வேகம்”. வேகம் என்பது காலத்தோடு தொடர்புள்ளது. குறைந்த காலத்தில் அதிக இயக்கம் நிகழ்ந்தால் அதிக வேகம். காலம் என்ற ஒன்று பிரபஞ்ச வடிவம் நம் மேல் நிகழ்த்தும் நையாண்டியாக இருக்கலாம் என்று நியூட்டனிய இயற்பியலுக்குப் பின் வந்த இயற்பியல் முன்னேற்றங்களிலிருந்து நாம் அனுமானித்துவிடலாம். நேரம் முழுமையானது அல்ல, அது ஒரு சார்பியல் கோட்பாடு. வெவ்வேறு பார்வையாளர்களுக்கு அவர்களின் ஒப்பீட்டு இயக்கத்தைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது.
கவிதையின் இறுதியில் வியப்பின் உச்சியில் அங்கு தான் இல்லை என்று கவிதை சொல்லி அறிவிக்கும் போது அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.
ஒன்று – ஒரு மரம் வளர்ந்து காய்கனிகள் விளைக்கும் காலத்தை விட மலைகளும் மடுவும் தோன்ற அதிக காலம் பிடித்திருக்கும் என்று தர்க்க ரீதியாக அனுமானிக்க முடியும். மனிதன் வளரும் வேகம் அவன் ஆயுட்காலம். ஒரு மரமோ, மடுவோ, மலையோ வாழும் காலத்துடன் ஒப்பு நோக்கினால் மனிதனின் ஆயுட்காலம் குறைவு. “மலைகளும் மடுக்களும் கண்ணெதிரே உருவாகும் கதிமாறிய உலகில்” அவை உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் “கவிதைசொல்லியாகிய” மனிதனும் நொடியின் சிறு பகுதியில் உருவாகி மறைந்திருப்பான். எனவே, அவன் இக்கவிதையில் அவன் காணப்பட மாட்டான்.
இரண்டு – கவிதைசொல்லி கவிதைக்கு வெளியே இருப்பானாயின் கவிதைக்காட்சியை அவன் தன் கற்பனையில் சிந்தித்திருக்கிறான் என்று கொள்ளலாமல்லவா?. வெளியே இருந்து கவிதைக்காட்சியை அவன் பார்த்து ஒரு சாட்சியாக “வேகத்தை” ரிப்போர்ட் செய்கிறான் எனில், அவன் பங்கேற்பாளனாக இருக்க முடியாது.
கவிதை ஒரு துணைக்கருத்தையும் நிகழ்த்திக் காட்டுகிறது. வேகமாகத் தோன்றும் மரம், மலை, மடு – கவிதையின் ஒற்றைப் படிமம் – பௌத்தத்தின் மூலக்கருத்தான – பாய்வுத்தன்மையில் மாற்றங்களின் குவியலாக இருக்கும் இப்பிரபஞ்சத்தின் தன்மையை பிரதிபலிக்கிறது.
பங்கேற்கும் சாட்சிக்கும், காட்சிக்கு வெளியே இருக்கும் சாட்சிக்கும் இடையிலான ஒப்புநோக்கல் கவிதைக்கு புதிர்த்தன்மையை ஈந்து, தத்துவ ஆழத்தை நல்கி இக்கவிதை மீதான வாசகனின் தொடர்-ஈடுபாட்டுக்கான வாயிலாகவும் இருக்கிறது.
புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன் அவனாகத்தான் இருக்க வேண்டும் அவன் எப்படி இங்கே? அவன் மாதிரிதான் தெரிகிறது அங்கே இரவு அவன் கனவில் பனி பொழிகிறது புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி அவள் எப்படி அங்கே? அவள் மாதிரிதான் தெரிகிறது விதிர்த்து எழுந்திருக்கிறான் ஆடைவிலகிய தொடையிலிருந்து தனது காலை மெல்ல எடுக்கிறான் சத்தமின்றி திரும்பப் படுக்கிறான் அவனுடைய கனவு முடிந்துவிட்டது அவளது பகல் முடிய பல மணி நேரம் இருக்கிறது
அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான் அவன் மாதிரி இருந்த அவன் அவனாக இருந்திருந்தால் தாண்டிச் சென்றிருக்கமாட்டான் அவள் கண்களை மூடிக்கொள்கிறாள் கண்களுக்குள் பொழிகிறது பனி எதுவும் நடக்காததைப் போல
அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான் அவள் மாதிரி இருந்த அவள் அவளாக மட்டும் இருந்திருந்தால் ஆடை விலகிய தொடைக்கு மேல் மீண்டும் தன் காலைப் போடுகிறான் எதுவும் நடக்காததைப் போல
—
பெருந்தேவி
கவிதை என்பது கருத்தையோ உணர்வையோ பகிரும் விஷயம் என்ற பொதுவான வரையறை கவிதையை கவிதையாகக் காட்டுவது எது என்ற கேள்வியை எழுப்புகிறது. நேரடியாக ஓர் உரைநடையாகவே அதனைச் சொல்லிவிடலாமில்லையா? பின் கவிதை எதற்கு வேண்டும்?
கவிதை புரிவதில்லை என்று பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு வாசிக்கப் பழகவில்லை என்று எளிதில் எதிர்வினை தந்துவிட முடியும் என்றாலும், அந்தக் குற்றச்சாட்டு ஏன் வைக்கப்படுகிறது என்று சிந்திக்கும்போது எனக்குத் தோன்றுவது – கவிதை ஒரு வடிவம். அதன் வடிவத்தை உணரப் பழகினாலொழிய கவிதையை ரசிக்க முடியாது!
வடிவம் எதைச் சார்ந்தது? மொழியையா, சொல்லையா, வரிகளின் அடுக்கையா,…….மொழி சார்ந்த சொல் சார்ந்த உத்திகள் கவிதைகளின் இன்றியமையா அங்கமாக இருந்த காலங்கள் உண்டு. இவ்வுத்திகளை உதறிக் கிளர்ந்தெழுந்த நவீனக்கவிதைகள் தகவலை, படிமத்தை, உணர்வைப் பகிரும் விதத்தில் காட்டும் புதுமைப்படுத்தல்களை வடிவம் என்பதாகக் கொள்ளலாம். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு முகவாகில் இருப்பது போல எழுதப்படும் ஒவ்வொரு நவீனக் கவிதையும் ஒவ்வொரு வடிவத்தை பூணுகிறது. அகவற்பா, வெண்பா முதலான இலக்கணம் சார்ந்த வடிவங்கள் காலாவதியான பிறகும் ‘சொன்னதைத் திரும்பச் சொல்லல்” கவிதையின் அம்சமாக இல்லாமல் போகவில்லை. ஆனால் “சொல்லும் விதத்தை மாற்றாமல் சொல்லுதல்” நிச்சயம் தேய்வழக்காகிவிட்டது.
எழுதப்படும் வடிவங்கள் உணரப்படாமல், ஈர்க்காமல் போகும்போது வாசகர்கள் அதனை “புரியவில்லை” என்கின்றனர். மொழிரீதியான புரிதலை நாம் இங்கு பேசவில்லை. கவிதையை உள்வாங்கி ரசிக்க அதன் வடிவ அமைப்பை உணர்தலின் அவசியத்தைப் பேசுகிறோம்.
இந்த நீண்ட பீடிகையை என்னால் சில மணி நேரங்கள் முன்னர் எழுதியிருக்க முடியாது. ஏனெனில், அப்போது பெருந்தேவி எழுதி ஃபேஸ்புக்கில் இட்டிருந்த “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதையை படித்திருக்க மாட்டேன்.
கவிதையை முதல் முறை படித்த போது எது என்னை ஈர்த்தது?
கொட்டும் பனியில் ஒரு புள்ளியாகத் துவங்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் அவன்! – நீண்ட காலர்களுடன் நீளமான குளிர் கால அங்கியணிந்து, கௌபாய் தொப்பியைத் தறித்துச் சாலையில் நம்மை (வாசகனை நோக்கி!) வந்து கொண்டிருக்கும் ஆணுருவம் ஒரு noir படத்தின் ஆரம்பக்காட்சி போல நம் மனக்கண்ணில் ஓடத் துவங்குகிறது. – என்னை முதலில் ஈர்த்தது இந்த மனச்சித்திரந்தான்.
அடுத்தடுத்த வரிகளை முதல் முறை வாசித்தபோது – கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது ஆற்றல் மிகு உத்தியாக என் ஆர்வத்தை நீட்டித்தது.
“ஆடை விலகிய தொடை” – புலன்சார் சித்திரத்தை என்னுள் வரைவதோடு நிற்காமல், ஒரு புதிராகவும் வளர்கிறது. கவிதையின் இறுதியில் திரும்பவரும் “ஆடை விலகிய தொடை” “யாருடைய தொடை?” எனும் வினாவை எழுப்பி அதன் விடை என்னவாக இருக்கும் என்ற ஊகத்தின் இன்பத்தில் கவிதையனுபவம் அரும்பத் தொடங்கியது. புதிருக்கான விடை கிடைத்துவிட்டால் கவித்துவ உணர்வு விடைபெற்றுக் கொள்ளும் அபாயம் உண்டு எனும் பிரக்ஞையை அடைவது தான் கவிதை வாசித்தலின் படி நிலைகளில் உயர்வதற்கான அறிகுறி.
மேற்சொன்ன மூன்று அம்சங்கள் “கொட்டும் பனிப்பொழிவில்” கவிதைக்கான உடனடி ஈர்ப்பை என்னுள் ஏற்படுத்தியவுடன், கவிதையினுள் ஆழச்செல்லும் ஆர்வம் இன்னமும் பெருகிற்று.
அவளின் கனவில் அவன் வருவதும், அவன் கனவில் அவள் வருவதும் என இரு கனவுகள் பின்னிப்பிணைவது போல முதலில் தோன்றிற்று. Inception திரைப்படம் தோற்றுவித்த அதே உற்சாகத்தை என்னுள் கிளர்த்தியது. முதலில் அவள் கனவு காண்கிறாளா? பின்னர் அவன் கனவு காண்கிறானா? அவளின் கனவு அவனின் கனவுக்குள் நுழைந்து விடுகிறதா? என்றவாறு கனவுப்பாதையில் திளைத்தது வடிவப்புதுமை சிந்தனையுள் நிகழ்த்திய வேதியியல் மாற்றம் – கவிதையின்பம் என்பது இத்தகைய திளைத்தல் தானோ! கவிதை ரசிக மனம் இந்தத் திளைத்தலுடன் திருப்தியுற்றுவிடவில்லை. காதலியின் உருவ அழகை ரசித்துவிட்டு அதோடு நிற்காமல் அவளின் வடிவ அழகை ரசிக்க யத்தனிப்பது போன்று – கவிதை வாயிலாக கவிஞர் சொல்ல வருவது என்ன? – தகவலா, உணர்வா, அல்லது வெறும் படிமம் மட்டுமா? முழுப்புதிரையும் அவிழ்க்க கவிதையின் வடிவத்தைக் கலைத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றிற்று
சில குறிப்புகளைக் கவிதையை தன்னுள் அடக்கிவைத்துக் கொண்டிருக்கிறது. “அங்கே இரவு” என்பது முதல் குறி . “அவளது பகல் முடிய பல மணி நேரம் இருக்கிறது” என்பது இரண்டாம் குறி.
அவளுக்கு பகல் அவனுக்கு இரவு – அவனும் அவளும் உலகத்தின் வெவ்வேறு நேர மண்டலங்களில் வசிக்கிறார்கள். Distance Love எனும் கருப்பொருளைக் கவிதை பேசுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.
கவிதை ஒற்றைக் கருப்பொருளை மட்டும் கொண்டிருக்கவில்லை. காதல் முக்கோணம் எனும் கருப்பொருளும் கவிதையில் காணக்கிடைக்கிறது. “ஆடை விலகிய தொடை” – யாருடைய தொடை எனும் கேள்விக்கான விடையை கவிதாசிரியர் தராமல் போனது வடிவமைப்பின் சிகரம் என்று நினைக்கிறேன். பல ஊகங்களை நம் மனதுள் கிளப்பிவிடுகிறது. அவன் யாருடன் படுத்திருக்கிறான்? அவன் மனைவியுடனா? காதலியுடனா? அருகில் இல்லாமல் வெகுதொலைவில் வசிப்பதால் காதலியுடனான நெருக்கத்தை அனுபவிக்க முடியாமல் இருப்பதன் காரணமாக ஏதொவொரு விலைமாதுடன் படுத்திருக்கிறானா? வாசகன் மனதில் எழும் இத்தகைய கேள்விகள் வாசிக்கும் கவிதை மீதான ஈடுபாட்டை உயர்த்துகிறது.
அவனுக்கு வேறு துணை இருக்கிறதெனில் வேறொரு நேர மண்டலத்தில் வசிக்கும் அவளுக்கு இதைப் பற்றி தெரியுமா என்னும் கரிசனம் வாசகனான என்னில் எழுந்தது. அவளுக்குத் தெரிந்தால் அவளது சோகம் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகும்! பனிபொழியும் தெருவில் நடப்பவன் அவனைப் போல் இருக்கிறான் என்று அவனை சற்று நேரம் நோக்கும் அவள் “இது அவனில்லை” என்று உணர்ந்த பிறகு அவள் தன் கண்களை மூடிக் கொள்கிறாள். இது அவனில்லை, அவனைத் தவிர வேறு எவனையும் இந்தக் கண்கள் காணக்கூடாது என்று தன் கண்களை மூடிக் கொள்கிறாளோ? “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரியில் கவிச்சுவை பொங்குவதை உணர வேண்டுமானால் அவள் மீதான கரிசனவுணர்வு வாசகனுள் பொங்குதல் அவசியமாகும். “கண்ணீர் விட்டு உறைந்து போய்விட்டன அவள் கண்கள்” என்பதைத்தான் “கண்களுக்குள் பொழிகிறது பனி” என்ற வரி சொல்கிறது என்பதாகப் புரிந்து கொண்டேன். பனி என்பது உறைந்த நீர்!
கவிதையில் காணப்படும் இன்னொரு குறிச்சொல் – “எதுவும் நடக்காததைப் போல”. அவன் எங்கோ, அவள் எங்கோ “எதுவும் நடக்காததைப் போல” தத்தம் இயல்பான வாழ்க்கையைத் தொடர்கின்றனர். இருவருக்குமிடையிலான நேசத்தை இருவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அவள் கண்ணீர் விடுகிறாள். அவனுடைய கனவில் “அவள் போல தோன்றுபவள் அவளில்லை” என்று உணர்ந்தவுடனேயே அவன் விழித்துக் கொண்டுவிடுகிறான். உடனடியாக அவனுடைய படுக்கைத்துணையின் மீது போட்டிருந்த காலை விலக்கித் திரும்பப்படுத்துக் கொள்கிறான்.
“கனவின் காட்சிகள் யதார்த்தத்தில் இணைவது” என்ற அம்சம் முதல் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று ஏற்கனவே சொன்னேனில்லையா? அது தோற்ற மயக்கம் என்பது கவிதையின் மூன்றாம் மட்ட அர்த்தப்படுத்தலில் (அதாவது முழுக்கக் கலைத்துப் போடுதலில்) விளங்கிவிடுகிறது. இந்தத் தோற்ற மயக்கம் சில வரிகளை ஒழுங்கு மாற்றிப் படித்துப் பார்க்கும் போது விலகி விடுகிறது.
கவிதையை பத்தி பிரித்து வாசித்துப் பார்ப்போமா? (கவிஞர் என்னை மன்னிப்பாராக!)
புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்
அவனாகத்தான் இருக்க வேண்டும்
அவன் எப்படி இங்கே?
அவன் மாதிரிதான் தெரிகிறது (1)
—
அங்கே இரவு
அவன் கனவில் பனி பொழிகிறது
புள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்தி
அவள் எப்படி அங்கே?
அவள் மாதிரிதான் தெரிகிறது
விதிர்த்து எழுந்திருக்கிறான்
ஆடைவிலகிய தொடையிலிருந்து
தனது காலை மெல்ல எடுக்கிறான்
சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்
அவனுடைய கனவு முடிந்துவிட்டது (2)
–
அவளது பகல் முடிய
பல மணி நேரம் இருக்கிறது (3)
–
அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்
அவன் மாதிரி இருந்த அவன்
அவனாக இருந்திருந்தால்
தாண்டிச் சென்றிருக்கமாட்டான்
அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்
கண்களுக்குள் பொழிகிறது பனி
எதுவும் நடக்காததைப் போல (4)
–
அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்
அவள் மாதிரி இருந்த அவள்
அவளாக மட்டும் இருந்திருந்தால்
ஆடை விலகிய தொடைக்கு மேல்
மீண்டும் தன் காலைப் போடுகிறான்
எதுவும் நடக்காததைப் போல (5)
பத்தி எண்கள் 1 மற்றும் 4 – அவளின் கண்ணோட்டம்
பத்தி எண்கள் 2 மற்றும் 5 – அவனின் கண்ணோட்டம்
பத்தி எண் 3 – கவிதை சொல்லியின் குரல் – தொலைதூரத்தை, நேர மண்டலத்தை பூடகமாக சுட்டுகிறது
பத்தி எண் 3 நீங்கலாக, கவிதை இரண்டு கண்ணோட்டத்தில் செல்கிறது. இரண்டு கண்ணோட்டங்களும் வரிகளை அடுக்கும் விதத்தில் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. அவன் கனவு காண்பது கவிதையில் வருகிறது. கவிதை முழுக்கவும் அவன் கனவு காணவில்லை. ஒரு கட்டத்தில் அவன் விழித்துக் கொள்கிறான். அவள் கனவு காணவில்லை. யதார்த்தத்துக்குள் தான் இருக்கிறாள். வரிகளை பிசைந்து எழுதப்பட்டுள்ள விதத்தில் கனவு, கனவுக்குள் கனவு, யதார்த்தத்திலிருந்து கனவு, கனவிலிருந்து யதார்த்தம் என்பன போன்றவை மயக்கத்தைத் தோற்றுவித்து கவிதையைச் சுவையுள்ளதாக்குகின்றன. இந்த மயக்க விளைவு இல்லாமல் போயிருந்தாலும் இந்தக் கவிதை தன்னளவில் முழுமையான கவிதையாகவே திகழ்ந்திருக்கும், எனினும் குழந்தைக்கு என்ன உடை அணிவிப்பது என்ற முடிவை எடுக்கும் தாயைப் போல கவிஞரே தீர்மானிக்கிறார் கவிதை பூணும் வடிவத்தை!
சொல்ல வரும் எளிதான கருத்து, இரண்டு படிமங்கள், வடிவப்புதுமை – மூன்றையும் சரியான விகிதத்தில் கலந்து ஓர் அரிய கவிதையனுபவத்தைத் தருகிறார் பெருந்தேவி.
ஒரு கவிதை நம்மை ஈர்ப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது. உணவு, உடை, நிறம் போல கவிதையின் பொருள் கொள்ளும் முறை அவரவர் பார்வை. எனவே, இந்தக் குறிப்பு தரும் பொருள் மட்டுமே இக்கவிதைக்கான ஒரே பொருள் என்று கொள்ள முடியாது. இக்கவிதையை வாசிக்கும் இன்னொருவர் வேறுவிதமாகப் பொருள் கொள்ளக்கூடும். கவிதை எழுதி முடிக்கப்பட்ட பிறகு அது கவிஞனைச் சாராத தனித்த இருப்பைக் கொள்கிறது என்று சொல்வது இதனால்தான். இதன் காரணமாகவே ஒவ்வொரு வெற்றிகரமான கவிதையையும் அதன் வாசகர்களே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமிய சிந்தனைகளையும் ஆளுமைகளைப்பற்றியும் தினம் ஓரிரு குறிப்புகளாக ஃபேஸ் புக்கில் பதிந்தேன். அதைத் தொகுத்து நண்பர் Uvais Ahamed அவர்களுக்கு சில மாதங்கள் முன் அனுப்பியிருந்தேன். இரு வாரங்கள் முன் என்னைத் தொடர்பு கொண்டு தொகுப்பு நூல் வடிவில் தயாராகிக் கொண்டிருக்கிறது எனும் செய்தியைத் தெரிவித்து ஆச்சரியத்திலாழ்த்தினார்.
“இறைத்தோட்டம்” நூலை சென்னை புத்தக சந்தையில் வாங்கலாம். சீர்மை பதிப்பக வெளியீடு.
—
கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில் விருப்பங்கொண்டவர். புத்த மதம் பற்றிய அவரின் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவரின் பார்வையிலிருந்து ஆராய்வதில் ஆர்வம் காட்டிவருகிறார். இஸ்லாமிய வரலாறு, தொன்மங்கள், அறிவாளுமைகள் என இஸ்லாத்தின் வண்ணமயமான நாகரிகப் பங்களிப்புகளைப் பற்றி சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் ரம்ஜான் மாதம் முழுக்க எழுதியவற்றின் தொகுப்பு இது.
12th Fail படத்தின் ஆரம்ப பகுதிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. Under Dog பற்றிய கதை என்று எண்ண வைக்கிறது. கதையின் முதன்மைப் பாத்திரம் மனோஜ் (விக்ராந்த் மாஸே) தில்லி நகருக்கு வந்த பின்புதான் “இங்கு ஏதோ நடக்கிறது” என்று திரையில் நிகழ்பனவற்றில் பார்வையை ஒட்ட வைக்கிறது.
ஏழை ஒருவன் கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதைச் சொல்லும் கதைகள் இதற்குமுன் பல முறை சொல்லப்பட்டுவிட்டது. 12th Fail திரைப்படத்தில் என்ன வித்தியாசம்? மனதைக் கசிய வைக்கும் செண்டிமெண்டாலிடி இத்தகைய படங்களின் இன்றியமையா அம்சமாக இருக்கும். ஆனால் இப்படத்தில் செண்டிமெண்டாலிடி இல்லாமல் உனர்வைத் தொடும் மந்திரம் நிகழ்ந்திருக்கிறது.
கதையின் முதன்மைப் பாத்திரம் ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் மனந்தளராமல் தன் இலக்கை நோக்கிய குவியத்தை இழக்காமல் தொடர்வதுதான் கதையின் கரு. ஒரு Biopic என்பதால் கதையின் முடிவு என்பது நமக்கு முதலிலேயே தெரிந்து விடும் என்றாலும், பாத்திரப்படைப்புகளின் நிஜத்தன்மைதாம் கதையின் பலம்.
கடும் வறுமையிலிருந்து விடுபடவும் பிற ஏழைகளின் வாழ்வில் மாறுதலைக் கொண்டு வரவும் இந்திய போலீஸ் சேவையில் சேர பாடுபடும் மனோஜ் சமரசம் செய்து கொள்ளாமல் தன் இலக்கை அடைகிறான். கிராமத்தில் அவன் சந்திக்கும் ஒரு போலீஸ் அதிகாரி அவனுக்களிக்கும் உத்வேகம் ஒரே ஒரு வாக்கியம் – “சீட்டிங் கர்னா சோட்தே” (ஏமாற்றுவதை நிறுத்தி விடு). போலீஸ் ஆபீசர் சொன்னதைப் போல கதையெங்கும் முதுகு ஒடியாமல் நேர்மையைக் கடைப்பிடிக்கிறான் மனோஜ். நேர்முகத்தேர்வில் தான் பனிரெண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்ததை மறைக்காமல் சொல்லும் காட்சி மனதை மிகவும் வருடும் காட்சி. வெளியே காத்திருங்கள் என்று அவன் வெளியே அனுப்பப்படுகையில் அவன் மனதின் எண்ணவோட்டத்தை நம்மால் உணர முடிகிறது. பிறகு கடிதம் வாயிலாக திருமணத்தை அவனுடைய தோழி அவனிடம் ப்ரோபோஸ் பண்ணுவதை வாசித்தவுடன் மனோஜ் உணரும் லேசான தன்மையை நாமும் உணர்கிறோம்.
ஒரு மாவு மில்லில் வேலைபார்த்துக் கொண்டே பொதுத் தேர்வுக்கு கடுமையாக உழைக்கும் மகனைப் பார்த்து மனம் உடைந்து போகும் அவனுடைய தந்தை – “நம்மால் முடியாது. நம்மால் வெற்றி பெற முடியாவிட்டாலும் பரவாயில்லை” என்று சொல்லும் போது மனோஜ் சொல்கிறான் – “வெற்றி பெறாவிட்டால் ஒன்றுமில்லை, ஆனால் தோல்வியை எப்படி ஏற்பது?” இது போன்று பல தருணங்கள் நெகிழ்விக்கின்றன.
மனோஜின் வெற்றி ஏன் முக்கியம்? அவனை விட புத்திசாலிகள் இல்லை என்பதில்லை. மனோஜ் சொல்வது போல “ஐஐடி, ஐஐஎம் முதல் ரேங்க் ஹோல்டர்களை விட நான் புத்திசாலி என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களையெல்லாம் விட குடிமைப் பணியாளனாக இருக்க மிகவும் தகுதியானவன்”. ஏழைச் சமூகத்தில் ஓராள் அதிகாரத்தைப் பெறும் போது அவனைச் சுற்றியிருக்கும் அனைவரும் பலன் பெறுகின்றனர் எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.
உணர்வு பூர்வமாகக் கதை நம்மைத் தொட வேண்டும் என்பதற்காக வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பின்ணணி இசை இதில் அதிகம் பயன் படுத்தப்படவில்லை. நடிப்பு, காட்சியமைப்பு, வசனம் – இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு நகர்கிறது இந்தத் திரைப்படம்.
மனோஜ் ஒரு தலித் பாத்திரமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தால் இன்னமும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் மனோஜ் ஷர்மா எனும் ஐபிஎஸ் அதிகாரியினுடைய வாழ்க்கையின் அடிப்படையிலான திரைக்கதை என்பதால் பெயரை, பாத்திரத்தின் சமூக அடையாளத்தை மாற்றாமல் விட்டிருக்கலாம்.
ஆண்டிறுதிப் பிரதிபலிப்புகள் வாய்மொழியில் சிக்காமல் தப்பித்துக் கொண்டு இருக்கின்றன. உணர்வுகளின் கூட்டமாக அவை எனக்குள் சுழன்று கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு பெயரிட விழைந்தால், "கசப்பு" என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். "அவமானம்" அல்லது "அவமரியாதை" என்பது போன்ற வர்ணனைகளுக்குப் பொருந்தி வரும் இவ்வருடத்து சம்பவங்களை அனுபவங்களை என் மனதில் தொடர்ந்து அசைபோட்டு ‘ரீப்ளே’ செய்யும் குணம் சோம்பேறித்தனமான மனநிலையை உருவாக்கி, மலரப்போகும் புதிய ஆண்டு பற்றிய உற்சாகத்தை நீக்குகிறது. அசை போடும் அனுபவங்கள் இப்போது கடந்த காலத்தில் உள்ளன. என் இப்போதைய யதார்த்தத்தின் பகுதியாக இல்லை. குளிர்ந்த காற்று, பாதி மடிக்கப்பட்ட பயணக்கட்டுரை புத்தகம், சமையலறையிலிருந்து வரும் சத்தம் – இதுதான் எனது தற்போதைய தருணம். "கசப்பு" என்றோ “அவமதிப்பு" என்றோ இத்தருணத்தை வர்ணிக்கத் தகுமா? இல்லை. அவை வெறுமனே இப்போது என் முன்னே நிகழ்பவை, நான் அவற்றுள் ஒரு பார்வையாளனாக இருக்கிறேன். கடந்த காலத்திற்கு நகர்ந்து விட்ட நிகழ்வுகளை மீண்டும் மனதுக்குள் இயக்கிப் பார்க்காமல் இருப்பதும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதையும் எதிர்நோக்காமல் இருப்பதும் தாம் சதா நம்மை பார்வையாளனாக வைத்துக் கொள்வதற்கான வழி. #YearEndReflections
I had dabbled in lay buddhist practice for a couple of years when I was introduced to Soka Gakkai International, way back in 1997. Like my other pursuits in my life, this practice too fizzled out. Certain friends kept persuading me for a few months. They asked what my reservations were. The obviously honest reasons could have been – my, then, distractions and my consistent laziness. But I did not cite these, as I was an expert impostor – instead I attributed it to the personality cult that was prevalent among its members as the reason. Partially It was an honest answer too. In the SGI monthly meetings wherein the members are asked to share their experience of the practice – a demonstration of the success after chanting the venerable title of the Lotus Sutra – Namu Myoho Range Kyo – I had kept noticing the glorification of the personality of SGI’s Leader Daisaku Ikeda. If it’s a spiritual practice, why should the personality of the group’s leader be invoked? In its ritual prayer, there is a line whereby the members are invoked to pray for the leader. In one of the conversations during a monthly discussions in Mumbai, when I raised these questions, one of the seniors – I don’t remember his name now, he used to be executive director of India’s premier financial institution with high pedigree – took me aside to give a lecture on how negative karma forces one to raise such “pseudo-questions”. The conversation didn’t progress long.
Subsequently, over the years, due to my keen interest on Japan’s Cultural History, I pursued my reading about various politico-buddhist sects which sprung up post the lull in Buddhist Culture in 13th century Japan. The zen practices which perpetuated the military culture (until Japan got defeated the world war) also maintained the class – caste differences to persist (until Japan embraced the modernity). The personality cult is not new in Japan’s history. The sects and cults continued to thrive in Japanese Culture. This understanding threw light on my experiences when I was practising under the umbrella of SGI. Looking back, I now realise that I was becoming part of a cult, which I came to detest subsequently. Being part of a cult, to me, is akin to imprisonment.
Another aspect which I disliked about SGI – is its political ambitions. Although the organisation never publicly accepts this – in 1975, the President Ikeda founded the precursor to what later came to be known as Komeito Party – the political arm of SGI, in whose support the current coalition which is in Government survives. Does it remind us of a certain “cultural” organisation at home, which spawned a certain political party?
As far as the theology that SGI espouses, it draws inspiration from the 13th Century teachings of Nichiren Daishonin, but in an evangelical way. Nichiren’s Buddhism taught its followers that the chanting of the Lotus Sutra helps overcome the Negative Karma. This ideal is re-cycled in a material way, suiting to the needs of modern Japanese and global lay believers – “the essence of Buddhism is the conviction that we have within us at each moment the ability to overcome any problem or difficulty that we may encounter I life”
Ikeda was a prolific writer. The SGI Magazine used to contain his long essays and the serial of his long autobiography titled “Human Revolution”. Have enjoyed reading those essays.
Daisaku Ikeda who led Japan’s largest religious organisation died today.
திரு. கார்த்திக் சுப்புராஜ் கண்ணை கசக்கிக் கொண்டிருந்தார். அடுத்த படத்துக்கான கதைக்கருவை யோசித்து யோசித்து எதுவும் தோன்றாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் ஓர் இயக்குனர் என்பதை அவரால் மறக்க முடியவில்லை. ஏதாவது படம் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் அவரை துரத்திக் கொண்டிருந்தது. பாகுபலி போன்ற படங்களின் வெற்றியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவருக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று பொறி தட்டியது. தானியக்கிய ஒரு நல்ல படத்தின் ப்ரான்சைஸ் அல்லது சீக்வல்தான் எடுக்கப்போகும் அடுத்த படம் என்று முடிவெடுத்தார். பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான அவரின் செயல்முறையில் நல்ல தெளிவு இருந்தது. ஜிகர்தண்டா என்ற பெயர் படத்தின் தலைப்பில் இருந்துவிட்டால் போதும்! ஜிகர்தண்டா பாகம் ஒன்றின் ரசிகர்கள் நிச்சயம் தியேட்டர்களுக்கு வந்து விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது.
நெட்ப்ளிக்ஸைத் திறந்து ப்ரௌஸ் செய்யலானார். ஓர் ஆவணத்தொடர், ஓர் ஆவணப்படம், வெற்றி பெற்ற பான் இந்தியா தெலுங்கு படம் – மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்தார். சரி விகிதத்தில் கலக்கலாம் என்று வேலையை ஆரம்பித்தபோது பழங்குடிகள் படும் அவலத்தை சித்திரித்து வெற்றி பெற்ற தமிழ்ப்படம் ஞாபகம் வந்து அதையும் சேர்த்துக் கொண்டார். போன வருடம் பெரும் வெற்றி பெற்ற கன்னடப்படம் ஒன்றையும் ஊறுகாய் போலத் தொட்டுக் கொண்டார். கலவையின் பண்டங்கள் குறித்து முடிவானதும் அதிக நேரம் பிடிக்கவில்லை. முதல் காட்சியில் வழக்கமான “காட்ஃபாதர்” குறிப்பையும் சேர்த்துக் கொண்டார். அதில்லாமல் தமிழ்ப்படம் எடுக்க முடியுமா என்ன? கிளின்ட் ஈஸ்ட்வுட் பாணி தொப்பி ராகவா லாரன்ஸுக்கு நன்றாக இருக்கும். ஆனால் மதுரை கேங்க்ஸ்டர் தொப்பி அணிவானா என்ன? கிளின்ட் ஈஸ்ட்வுட்டை படத்துக்குள் கொண்டுவந்துவிட்டால் தொப்பி அணியலாம். ஈஸ்ட்வுட் படத்தை செர்ஜியோ லியோன் தான் இயக்க வேண்டும் என்று சட்டமேதும் இல்லையாதலால் சத்யஜித் ரே-யின் உதவியாளர் ஒருவர் இயக்குவதாக வைத்துக் கொண்டார் கார்த்திக். இரண்டாம் பாதியை எழுதும் போது வினியோகம் செய்யப்போகும் நிறுவனத்தை திருப்திப் படுத்த வேண்டும் என்று நினைத்தார். பெயரிடப்படாத பெண் முதல்வர் பாத்திரம் மந்திரிகளை செருப்பால் அடிப்பது போல் காட்சி வைத்தால் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வினியோக நிறுவனத்துக்கு ஊக்கம் பிறக்கும். சென்டிமென்ட், சமூகக் கருத்து – இவையில்லாத தமிழ்ப்படங்கள் உப்பில்லாப் பண்டங்கள் என்பதை அறியாதவரா என்ன இயக்குனர்? பச்சடி, துவையலாக படைக்கும் விருந்தில் அவற்றையும் சேர்த்துக் கொண்டார்.
எழுதி முடித்து நெட்டி முறித்துக் கொண்டிருந்தபோது இசையமைப்பாளர் சந்தோஷ் போனில் அழைத்தார். “காதல் பாட்டு ஒண்ணு வேணும்னு கேட்டீங்களே, மெட்டு தயார், வாட்ஸப்பில் அனுப்பியிருக்கேன்” என்றார். “படத்துல காதல் பாட்டு இல்ல சந்தோஷ், பழங்குடிகள் கோஷ்டியாக பாடும் வனப்பாடல் ஒன்று உண்டு” என்று கார்த்திக் சொன்னபோது “பிரச்சினையில்லை, வாட்ஸப்பில் அனுப்பின அதே சத்தத்தையே யூஸ் பண்ணிக்கலாம். இன்ஃபாக்ட் நீங்க சிச்சவேஷனே சொல்ல வேண்டாம். எந்த சிச்சுவேஷனா இருந்தாலும் அதே டியூன யூஸ் பண்ணலாம். பா ரஞ்சித்தோட அடுத்த படத்துக்காகக்கூட அஞ்சு நிமிஷம் முன்னாடி அவருக்கு இதே டியுன அனுப்பிவச்சேன்” என்றார் சந்தோஷ்.
The Night Face Up என்றோரு சிறுகதையை 1967இல் எழுதினார் ஹூலியோ கொர்த்தசார். ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு கதாநாயகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யதார்த்தம் – கனவு இரண்டும் மாறிமாறி அடுத்தடுத்து தொகுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அவன், ஒரு சடங்குப் போரில் அஸ்டெக்குகளால் துரத்தப்படுகிறான். மோடேகா பழங்குடிகள் மட்டுமே அறிந்த ஒரு பாதையில் அவன் ஓடிக்கொண்டிருப்பதாக அவன் கனவு காண்கிறான். தாகம், மற்றும் தீவிர காய்ச்சலில் விழிக்கும் அவன் தன் கைகளில் பிளாஸ்டர் கட்டியிருப்பதை நோக்குகிறான். நர்ஸ் அவனுக்கு அளித்த உணவை உண்டுவிட்டு மறுபடியும் தூங்குகிறான். கனவில் அவன் இப்போது மோடேகாக்களின் பாதையிலிருந்து விலகி வேறெங்கோ ஒடிக்கொண்டிருப்பதை உணர்கிறான். கழுத்தில் இருக்கும் தாயத்தைப் பிடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது அஸ்டெக்குகளிடம் சிக்கி விடுகிறான். மருத்துவமனையிம் மீண்டும் விழித்தெழுகிறான். தனது விபத்திற்குப் பிறகு சுயநினைவற்று இருந்ததைப் பற்றி யோசிக்கிறான். பிறகு உறக்கத்தில் வீழ்ந்தபோது அவன் உடலெங்கும் கயிறுகள் கட்டப்பட்டு தரையில் கிடத்தப்பட்டிருக்கிறான். அவன் கழுத்தில் இருந்த தாயத்து இப்போது காணவில்லை. பூசாரிகள் அவனை தூக்கிச் செல்கிறார்கள். கடைசியாக ஒரு முறை விழித்தெழுந்தான். ஆனால் இப்போது யதார்த்தம் கனவுடன் இணைந்துவிடுகிறது. பூசாரி கையில் கற்கத்தியை நீட்டியவாறே அவனை நோக்கி நெருங்குகிறார். அவன் இனிமேல் விழித்தெழப்போவதில்லை, ஏனெனில் அவன் விழித்துக் கொண்டுதான் இருக்கிறான்.
போர்ஹேஸின் The Circular Ruins என்ற கதை The Night Face up போன்ற ஒரு கதை. இக்கதையில் கனவுக்குள் கனவு எனும் கருப்பொருளை போர்ஹேஸ் கையில் எடுத்துக் கொண்டுள்ளார். கனவு வாயிலாக ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ஒரு மந்திரவாதி. நெடுமுயற்சிக்குப் பின்னர் அவன் தங்கியிருக்கும் இடிந்த கோயிலின் தெய்வங்களின் உதவியால் ஒரு மனிதனை கனவில் உருவாக்கிவிடுகிறான். ஆனால், தெய்வங்கள் அவனுக்கு ஒரு நிபந்தனை இடுகின்றன. அவனுக்கு உரிய பயிற்சிகளைத் தந்து அவனை வடக்கே அனுப்பிவிட வேண்டும். மகனுக்கு அனைத்து தந்திரங்களையும் சொல்லிக் கொடுக்கிறான் மந்திரவாதி. அவனை வடக்கே அனுப்பி வைக்குமுன் மகனின் ஞாபகத்தை அழித்துவிடுகிறான். மகனுக்கு தன்னுடைய மூலம் பற்றி அனைத்தும் மறந்துவிட்டது. சில காலம் கழித்து வடக்கில் வரும் ஒருவர் வடக்கில் ஓர் ஆள் நெருப்பின் மீது நடப்பதைப் பற்றி வியந்து சொல்ல மகனுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் என மந்திரவாதிக்குப் புரிந்துவிடுகிறது. கனவின் அம்சத்தைக் கொண்ட வேதாளம் மட்டுமே தாம் என மகன் அறிந்திருப்பான் என்பதை உணரும் மந்திரவாதிக்கு ஒரே வேதனை. உடனடியாகத் தன்னை அழித்துக் கொண்டு விட எண்ணி எரியும் நெருப்பு தன்னைத் தீண்ட விடுகிறான். ஆனால் நெருப்பு அவனை எரிக்கவில்லை. அப்போது அவனுக்கு தெளிவாகிறது – “,,,he understood that he too was a mere appearance, dreamt by another.”
கொர்த்தசாரின் கதை – கனவு – யதார்த்தம் இரண்டின் பிரிவைப் பேசுகிறது. போர்ஹேஸின் கதை கனவுக்குள் கனவு. முந்தைய கதையில் ஒரே ஒரு மனிதன் – கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் இருப்பவன் ஒரே மனிதன்.
போர்ஹேஸின் கதையில் இருவர் – இரண்டுமே கனவு மனிதர்கள். இறுதியில் – கனவு முடிந்த பின்னர் – கனவுக்கு வெளியே கனவு காண்பவன் ஒருவன் இருக்கிறான். அவன் மூன்றாம் மனிதன். இரண்டு கனவுகளையும் தாங்கி நிற்கும் அவன் ஒருவன் அந்தக் கனவுகளுக்கு வெளியே இருக்கிறான்.
கதையின் கனவு காண்பவர் தான் இன்னொரு மனிதனை மிகுந்த தன்னம்பிக்கையுடன் உருவாக்குவதாக நம்பினாலும், அந்த அனுபவத்துக்கு முரண்பாடாக அவன் தன்னையே ஒரு கனவு என்பதை உணர்வது அவனது அடையாளத்தைச் சிதைக்கிறது.
கதையின் ஆரம்பத்தில் பிளாட்டோனிக் இலட்சியவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதாகத் தோன்றினாலும் — உடனடியாக உணரக்கூடிய உலகத்தைத் தாண்டிய இலட்சிய வடிவங்களின் உலகம் — அந்த உலகமும் ஒரு நிலையற்ற கனவு என்பதைக் கதையின் முடிவில் காட்டுகிறது.
ஜே ஜே சில குறிப்புகள் – நாவலை வாசித்துப் பிரமித்துப் போனதுண்டு. இப்படியும் புனைவுகள் எழுத முடியுமா என்றெண்ணி வியந்து போனேன். இலக்கிய அங்கதம் எனும் வகைமை என்பதாக நாவல் படித்த நாட்களில் என் புரிதல்! ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு கற்பனையான இலக்கிய ஆளுமை உயிர் பெறுகிறார். ஜே ஜே சில குறிப்புகள் நாவல் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்னர் Sur பத்திரிக்கையில் வெளியானது – Pierre Menard, Author of the Quixote. இதிலும் ஒரு கற்பனை இலக்கிய ஆளுமை வருகிறார். இந்தக் கதையிலும் கற்பனை இலக்கியவாதி ஏற்கனவே இறந்துவிட்டார். அவருடைய அபிமானி ஒருவர் பட்டியலிட்ட நூல் வரிசை குறித்தான எதிர்வினையாகத் தொடங்குகிறது “சிறுகதை”. எதிர்வினை செய்பவர் இறந்து எழுத்தாளர் மெனார்டின் நெருங்கிய நண்பர் மற்றும் இரசிகர். நூல் பட்டியலில் பிரபலமான நூல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்ததாகவும் பரவலாக அறியப்படாத பல அரிய நூல்களின் பெயர்கள் விடப்பட்டிருந்தன என்றும் “கட்டுரை”யாசிரியர் குறை பட்டுக் கொள்கிறார். பரவலாக அறியப்படாத, இன்னொருவர் பட்டியலிட்ட வரிசையில் இல்லாத நூல்களின் பட்டியல் கதையில் வருகிறது. இத்தகைய பட்டியல் ஒன்றைப் புனைவில் சேர்ப்பதற்கே நிறைய மேதமை வேண்டும். நம்பத்தகுந்த விதத்தில் வரிசை ஒலிக்க வேண்டும். அப்படியில்லாவிடில், கதை வடிவம் கேலிக்குள்ளாக்கப்பட்டுவிடும். கதையின் நம்பத்தகுந்த தொனி கடைசி வரை தொடர்கிறது. முதல் முறை வாசிப்பவர்களுக்கு இது “இறந்த இலக்கியவாதியின் பங்களிப்பு” குறித்த “கட்டுரையாகவே” தொனிக்கும். மரபார்ந்த சிறுகதையின் தரவடிவமான சிக்கல் – தீர்வு என்ற படிவத்தில் பயணிக்காத இதை எவ்விதத்தில் புனைவு என்று கொள்ள முடியும்?
சிறுகதையில் புனைவின் அடையாளங்கள் புதைந்துள்ளன. நுணுக்கமான வாசிப்பில் அவை வெளிப்படுகின்றன. ஓரிரு புனைவம்சங்களை மட்டும் இங்கு சொல்கிறேன்.
(1) கதையின் உள்ளிருக்கும் அங்கதம் – கதையை அற்புதமான இலக்கியப் பகடியாக வாசிக்கலாம். போர்ஹேஸ் இரு இயல்முரண்களைக் கதையில் விவரிக்கிறார். இறந்த எழுத்தாளரின் மீது அளவற்ற மரியாதை வைத்திருக்கும் அவரின் பரம ரசிகன். அந்தப் பரமரசிகனின் மதிப்புரையினுடே நாம் அறியவரும் மறைந்த இலக்கியவாதியின் எழுத்துத்திருட்டுத்தனம். கேள்விக்குரிய சாதனைகளுக்காக மெனார்டை வானளாவப் புகழ்வதைத் தவிர, கதையின் பெரும்பகுதியில், கதைசொல்லி Mme.Henri Bachelier-ஐ (அதாவது மெனார்டின் பிரபலமான நூல்களின் பெயரை மட்டும் நூல் பட்டியலில் சேர்த்தவர்) கடுமையாக விமர்சிக்கிறார். இதில் உள்ள முரண் Mme Bachelier-ம் கதைசொல்லியைப் போலவே மெனார்டின் இரசிகர். தன் பக்கத்தில் இருப்பவரைப் பின்தொடர்வதும், தெளிவில்லாத காரணங்களுக்காக அவரைக் கடுமையாக விமர்சிப்பதும் முரண்நகை.
(2) மெனார்டின் கலாசாரப் பின்னணியும் பொருந்தா விருப்பமும் – மெனார்ட் பிரெஞ்சு இலக்கியத்தின், கலாசாரத்தின் பின்னணி கொண்டவர் – முழுக்க முழுக்க பிரெஞ்சு கலாசாரத்தில் ஊறியவர். கதையில் “a Symbolist from Nimes, a devotee essentially of Poe, who begat Baudelaire, who begat Mallarme, who begat Valery” என்று அடையாளப்படுத்தப்படுகிறார். மேலும், கதைசொல்லி வரிசைப்படுத்தும் நூல் வரிசையில் “a study of the essential metrical rules of French prose, illustrated with examples taken from Saint-Simon” என்பதுவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சுப் பின்னணியில் வேரூன்றிய ஒருவருக்கு ஸ்பானிய இலக்கியத்தைப் புரிந்து அதை மீளுருவாக்கம் செய்ய விரும்புவது விந்தையிலும் விந்தை. கதையில் மெனார்ட் ஒரிடத்தில் விளக்குவது மாதிரி அவரால் “குயிக்ஸாட்” இல்லாத உலகை அவரால் எளிதில் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. அவர் மேலும் சொல்கிறார் – “குயிக்ஸாட் ஒரு தற்செயல். அது தேவையில்லை. கூறியது கூறல் இல்லாமல், அந்த நாவலை என்னால் எழுத முடியுமென என்னால் முன்கூட்டியே திட்டமிட முடியும்”
(3) பகடியையும் எள்ளலையும் தாண்டி எதை விளையாட்டுத்தனமாக இந்தக் கதை ஆராய முனைகிறது? – ஓர் இலக்கியப் படைப்பை அணுகும் போது நாம் அதன் சூழல் சார்ந்த தகவல்களையும் நம்முடைய பிரக்ஞைக்குள் இழுத்து வருகிறோம் – ஆசிரியரின் அடையாளம், அவர்கள் வாழ்ந்த காலம், அந்தப் பிரதியை அவர் எப்போது எழுதினார், முதலியவற்றை.
(4) தலைப்பே ஒரு நகைச்சுவை – டான் குயிக்ஸாட் நாவல் ஸ்பானியர்களின் கலாசார அடையாளம்! கதையின் தலைப்பை வாசிக்கும்போதே – Pierre Menard, Author of the Quixote – ஒவ்வொரு ஸ்பானியனும் புன்முறுவல் பூத்து ஏதோ பகடி என்பதை புரிந்து கொள்வான் அல்லது “இது என்ன கிறுக்குத்தனம்” என்பான். உதாரணமாக “கம்ப ராமாயணம் – ஜெயகாந்தன் எழுதியது” என்பது போலத்தான்! (படைப்புக்கு கம்பர் இட்ட பெயர் – இராமாவதாரம் – என்பது தெரியும்!)