ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!

Bullehshah_2009
சூஃபி மரபில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படும் புல்லே ஷா பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பஞ்சாபி சூஃபிக்களில் அவரைப் போன்று பரந்த பிரபலம் பெற்றவர்களும் அதிகமாகக் கொண்டாடப்படுவர்களும் யாருமில்லை ; காஃபி என்னும் பஞ்சாபி கவிதை வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளும் பாடல்களும் மிகப் பிரசித்தமானவை. உலகின் மிகச்சிறந்த சூஃபிக்களூள் ஒருவரான புல்லே ஷாவின் சிந்தனைகள் ஜலாலூத்தின் ரூமி மற்றும் டப்ரேஸ் போன்ற சூஃபிக்களின் சிந்தனைகளுக்கு ஒப்பானவை. ஒரு கவிஞராக, புல்லே ஷா பிற பஞ்சாபி சூஃபிக்களிடமிருந்து வேறு பட்டவர் ; தன் கவிதைகளில் உணர்ச்சி பூர்வமான பொது பஞ்சாபி குணங்களை சித்தரிக்காதவர் ; ஜீவனுள்ள, பக்தி நிரம்பிய பஞ்சாபி குணங்களை வலியுறுத்தி எழுதியவர். மரபார்ந்த ஆன்ம சிந்தனை வழி வந்த புல்லே ஷாவின் கவிதைகளில் மறைஞான சொற்றொடர்களும் மனக்கிளர்ச்சிகளும் நிறைந்திருந்தாலும், அவரின் கவிதைகளில் முக்கிய அங்கம் வகிப்பது – அறிவு சார் வேதாந்த சிந்தனையே.

சில வருடங்களுக்கு முன்னர் ராபி ஷெர் கில் என்ற பாடகர் புல்ஹே ஷாவின் “புல்லா… கீ ஜாணா மை கோன்…” என்ற பிரசித்தமான பாடலை ஜன ரஞ்சக பாப்-இசையாகத் தந்தார். உலக முழுதும் ரசிகர்களின் மனதை ஈர்த்த இப்பாடலை சில நாள் முன்னர் யூ-ட்யூபில் கேட்டு மெய்ம்மறந்து போகையில் இவ்வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. பாகிஸ்தானிய இணைய தளமொன்றில் எனக்கு கிடைத்த ஆங்கில மொழி பெயர்ப்பை கீழ்க்கண்டவாறு தமிழ்ப்படுத்தினேன் :-

ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!

நான் யாரென்று நான் அறியேன்
நம்பிக்கையுடன் மசூதிக்கு செல்பவனுமல்லன் ;
நம்பிக்கையின்மைக்கு சரணடைபவனுமல்லன் ;
சுத்தமானவனுமில்லை ; அசுத்தமானவனுமில்லை ;
மோசஸுமில்லை ; பாரோ-வும் இல்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
வேதப் புத்தகங்களில் இல்லை நான் ;
போதைப் பொருள்களிலும் இல்லை;
கெட்டவர்களின் கூட்டாளியாக மதுக்கடையிலும் நான் இல்லை ;
தூங்கவுமில்லை ; விழித்திருக்கவுமில்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
பாவிகளுக்கு நடுவிலுமில்லை ; புனிதர்களுக்கு நடுவிலுமில்லை ;
மகிழ்ச்சி மிக்கவனில்லை ; கவலை நிறைந்தவனுமில்லை ;
நீரைச் சார்ந்தவனில்லை ; பூமியைச் சார்ந்தவனுமில்லை ;
நான் வாயு இல்லை ; தீயுமில்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
அரேபியாவைச் சேர்ந்தவனில்லை ; லாகூரில் வசிப்பவனுமில்லை ;
இந்தியனில்லை ; நாக்பூரில் வசிப்பவனுமில்லை ;
இந்துவோ அல்லது பெஷாவர் வாழ் துருக்கி-இஸ்லாமியனோ இல்லை
நதௌன் நகரில் இருப்பவனும் இல்லை.
நான் யாரென்று நான் அறியேன்
சமயங்களின் ரகசியங்களை அறிந்தவனில்லை நான் ;
ஆதாம்-ஏவாளுக்குப் பிறந்தவனில்லை நான்;
எனக்கென்று ஒரு பெயரையும் இட்டுக் கொண்டதில்லை ;
மண்டியிட்டு தொழுகை புரியும் கூட்டத்தைச் சேர்ந்தவனில்லை ;
வழிதவறிச் சென்றவர்களின் கூட்டத்தையும் சேர்ந்தவனில்லை ;
நான் யாரென்று நான் அறியேன்
தொடக்கத்தில் நான் இருந்தேன் ; இறுதியிலுமிருப்பேன் ;
ஒன்றைத் தவிர வேறெதையும் அறியாத ஒருவன் நான்
என்னை விட ஞானி இருப்பானா?
புல்லா, அறிய முனையத் தக்க வேறொருவன் இருக்கிறானா?

3 responses to “ஓ புல்லாவே! நான் யாரென்று நான் அறியேன்!”

  1. அற்புதமான பாடல்
    அர்த்தமறிந்து கேட்க மிகச் சிறப்பு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  2. அறிமுகத்துக்கு நன்றி. இன்னும் அறிய ஆவல். ஆனால் வாழ்க்கை போதாதுபோலத் தெரிகிறது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.