Tag: கூடு

  • சிவமரம்

    withered tree

    பட்டுப்போன மரமொன்று
    பரம சிவன் போல் தெரிந்தது
    உயரமான மரத்தின்
    இரு புறத்திலும்
    இரு கரங்களென
    பெருங்கிளைகள்
    மேல் நோக்கி வளைந்த
    இடப்புற கிளையின்
    இறுதியில் பிரிந்துயர்ந்திருக்கும்
    திரிசூலக் கிளைகள்
    முன் நோக்கி வளைந்து
    கண்ணில் படா தண்டத்தின் பிரிவில்
    தொங்கும் கையென
    வலப்புறக் கிளை
    தண்டின் உச்சியில்
    உருண்டைச் சிரத்தை நினைவு படுத்தும்
    கொத்தான கிளைகள்
    பறவைகள் காலி செய்துவிட்டுப் போன
    கூடுகள்
    சிரப்பாகத்திற்குக் கீழ்
    சுற்றியிருந்தது ஒரு கொம்பு வீரியன்
    சிவனே என்று
    இருந்த மரத்தின் தலையில்
    ஆகாய கங்கை வந்தமர்ந்து
    கூடுகளில்
    நீர் நிரம்பி வழிந்து
    வேர்களை ஈரப்படுத்தவும்….
    மரமெங்கும்
    இலைகள் துளிர்த்தன
    சிவனுருவை இழந்தது சிவமரம்
    மரத்தடியில்
    யானை வடிவத்தில்
    கல்லொன்று முளைத்தது
    அழகு மயிலொன்று
    அன்றாடம் புழங்கியது
    புதருக்குள்
    குடிபெயர்ந்த கொம்பு வீரியன்
    மறைவில் நின்று
    தினமும் மயிலை பார்த்தது

  • மரம்


    மரம் போலவொரு
    அழகான கவிதை
    என் வாழ்நாளில்
    என்னால் எழுத முடியாது.
    பசி மிகுந்த
    மரத்தின் வாய்
    பூமித் தாயின்
    வழியும் முலைகளில்
    பொருத்தப்பட்டிருக்கும்.
    கடவுளை தினமும்
    பார்த்துக் கொண்டிருக்கும் மரம்
    தன் இலைக் கரங்களை எழுப்பி
    தொழுகை புரியும்.
    கோடை காலங்களில்
    வண்ணாத்திக் குருவியின் கூடுகளை
    தொப்பிகளாக அணிந்து கொள்ளும்.
    மார்பில் பனி பூசிக் கொண்ட
    மரங்கள்
    மழையுடன் கூடும்
    என் போன்ற முட்டாள்களால்
    கவிதை மட்டுமே
    கிறுக்க இயலும்
    கடவுளால் மட்டுமே
    மரத்தினை படைத்தல் சாத்தியம்.

    [ ஜாய்ஸ் கில்மர் எழுதிய “Trees” என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம்]