Tag: குரங்கு

  • ‘இது காடு;நகரமல்ல’

    கான்டர் எனப்படும் திறந்த லாரியில் ஏறி வனத்துக்குள் சென்றோம். எங்களது லாரியில் பத்து-பன்னிரண்டு சுற்றுலாப்பயணிகள் இருந்தனர். மூன்றுமணி நேரம் தேடினோம். நீர்நிலைகளுக்கருகே காத்திருந்தோம். குரங்குகளும் மான்களும் இடும் எச்சரிக்கை ஒலிக்குப் பின்னர், ஒலி வந்த திசையில் காத்திருந்தோம். புலிகளின் பாதச்சுவடுகளைத் தேடினோம். ஈரப்பதமாக இருந்த இடத்தில் அதன் காலடித் தடங்களைப் பார்த்தோம். இரண்டு நாட்களுக்கு முன்னர் புலி அங்கு உலவிய தடம் அது என்றார், வாகனத்தைச் செலுத்திய முன்னாள் ராணுவ வீரர். அந்தத் தடம் பெண் புலியினுடையதாக இருக்கலாம் என்றும் சொன்னார். ஆண்புலியின் தடம் பெண்புலியின் தடத்தைவிடப் பெரிதாக இருக்கும் என்றார்.

    வாகன ஓட்டியுடன் ஒரு நடத்துநரும் இருந்தார். சஃபாரி நடத்துநரின் பெயர் என்னவென்று கேட்க மறந்துவிட்டேன். நேர்த்தியான ஆங்கிலத்தில் (லேசாக எட்டிப் பார்த்த ராஜஸ்தானி கொச்சை மொழியில்) பேசினார். வேளாண்மைத் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருந்த அவருக்கு தர்தி என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்.

    ஓரிடத்தில் வண்டியை நிறுத்திப் புலி தென்படுகிறதாவென நோக்கிக்கொண்டிருந்தோம். சுல்தானாவின் பகுதியில் வண்டியை நிறுத்தியிருப்பதாக தர்தி சொன்னார். சுல்தானா இளம் பெண்புலி. சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றிருக்கிறது.

    வேறோர் இடத்தில் நாங்கள் காத்திருந்தபோது சுல்தானாவின் சகோதரி நூரியின் பகுதியை அடைந்திருந்தோம். நூரிக்கும் சுல்தானாவுக்கும் அன்னை உண்டு. அதன் பெயர் நூர். நூர் முதுமையை எட்டிவிட்டதாம். அதற்குப் பதினாறு வயதாகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் – இரண்டாம் குட்டி நூரி அன்னை நூரைத் துரத்தி அன்னையின் பிரதேசத்தைக் கைப்பற்றிக்கொண்டதுதான்.

    வாழும் பெருங்காட்டில் தனக்கென ஒரு பகுதியை நிர்ணயித்துக் கொண்டு தனித்து வாழும் புலி ஒரு தனிமை விரும்பியாகும். அன்னை, குட்டி எனத் தம் உறவு அனைத்திலிருந்தும் விலகி நிற்கும் பிராணி. குட்டிகள் தாயிடம் இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் இருக்கும். அதன் பின்னர், குட்டி அன்னையைத் துரத்திவிடும் அல்லது தாய் குட்டியைத் துரத்திவிடும். தானிருக்கும் பிரதேசம் தன்னுடையதாய் மட்டும் இருக்க வேண்டும் என்று கருதுவது புலிகளின் மரபணுவில் உள்ளது. மரத்தின் மீது பற்குறிகளைப் பதிப்பது, மலம் – மூத்திரம் போன்றவற்றால் குறிப்பது எனத் தன்னுடைய பிரதேசத்தை வரையறை செய்யும். பெண் புலி, மரங்களின் மீது தன் மூத்திரத்தைத் தடவி அதன் வாசனையைப் பரப்புவதன் மூலம் ஆண் புலிகளைப் புணர்வதற்கென அழைக்கும்.

    புள்ளிமான்களும் கலைமான்களும் ஏராளமாய்ச் சுற்றித்திரிந்துகொண்டிருந்தன. வடஇந்தியச் சமவெளி சாம்பர் மந்திகளும் நிறைய கண்ணில் பட்டன. மானுக்கும் மந்திக்கும் இருந்த நட்புறவைப் பற்றி அதிகம் குறிப்பிட்டார் தர்தி. மரத்தின் மேல் உட்கார்ந்திருக்கும் மந்தி, புலியின் நடமாட்டம் இருந்தால் உடனடியாகச் சத்தம் கொடுக்குமாம். மரத்தினடியில் மேய்ந்து கொண்டிருக்கும் மான்கள் மந்தியின் சத்தத்தைக் கேட்டவுடன் ஓடத் தொடங்கிவிடுமாம். காட்டு பெர்ரி மரங்களில் பழுத்திருக்கும் அதன் பழங்களைத் தரையில் வீசியெறிந்து மான் நண்பர்களுக்குத் தின்னத் தருமாம்.

    இன்னோர் இடத்தில் காத்திருந்தபோது பாசி படிந்திருந்த நீர் நிலைக்கருகே இருந்த சேற்று மண்ணில் புரண்டு கொண்டிருந்தது கறுப்பு நிறமுள்ள ஓர் ஆண் கலைமான். அதற்குப் பக்கத்தில் இருந்த பாறாங்கல்லில் இரண்டடி நீளமான வெளிறிப் போன முதலையொன்று சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருந்தது. குளிர்காலத்தில் உறக்க நிலைக்குச் சென்றுவிடும் பாம்புகள்போல, முதலைகள் குளிர்காலத்தில் சூரிய வெளிச்சத்தில் நாட்கணக்கில் படுத்துக்கிடக்குமாம்.

    புள்ளிமான்களைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. நாங்கள் புலியின் வரவுக்காக ஏங்கி மான்களை ஆபத்துக்குள்ளாக்குகிறோமோ என்ற குற்றவுணர்வுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். வயது முதிர்ந்த ஆண் கலைமான்தான் புலிக்குப் பிடித்தமான இரை என்றார் தர்தி. ஓர் ஆண் கலைமானை வேட்டையாடினால் நான்கு நாட்களுக்குப் புலி மீண்டும் வேட்டைக்குச் செல்ல வேண்டியதிருக்காதாம். தர்தி இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக ஒரு கறுப்புக் கலைமான் எங்கள் வாகனத்துக்கு மிக அருகில் நின்றிருந்தது. அதன் கொம்புகள் நன்கு முதிர்ந்திருந்தன. நீட்டிக்கொண்டிருந்த மரக்கிளைகளைத் தன் கொம்புகளால் வளைத்துக் கடந்துசெல்லத் தொடங்கியது. கொம்புகள் உடைந்துபோய்விடுமோ என்று நான் பயப்பட்டேன். உடைந்தாலும் கொம்பு மீண்டும் வளரும் என்றார் தர்தி.

    மான்களை எளிதில் புலிகள் வேட்டையாடிவிட்டால் காட்டில் மான்களின் எண்ணிக்கை குறைந்துவிடாதா என்ற குழந்தைத்தனமான கேள்வியைத் தர்தியிடம் கேட்டேன். உணவுச்சங்கிலியெனும் பெருங்கருத்தின் மிகச் சிறு அறிமுகத்தை எனக்களித்தார் தர்தி. 1700 கிலோ சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட ரண்தம்போர் காட்டில் 75 முதல் 80 புலிகள் வாழ்கின்றன. இருபது சதுர கிலோ மீட்டருக்கு ஒரு புலி. வேட்டையாடும் ஒவ்வொரு தடவையும் புலி வெற்றிபெறும் எனில் மான்களோ பிற மிருகங்களோ எஞ்சியிராது. அப்படி இரைகள் அனைத்தும் மடிந்துவிட்டால் புலிகள் எப்படி உயிர் வாழும்? Bio-diversityயை நிலைநிறுத்துவதில் இயற்கையாற்றும் பங்கை விவரித்தார் தர்தி. பத்துமுறை முயன்று ஒரு வெற்றியும் பெறாமல் இரையில்லாமல் குகைக்குப் பட்டினியுடன் திரும்பும் புலி பற்றிப் படித்த ஒரு சிறுகதை நினைவில் வந்தது. அதன் தலைப்பு ஞாபகமில்லை. வேட்டையாட வரும் மிருகத்திடமிருந்து காத்துக்கொள்ள சாது மிருகங்களுக்கு இயற்கை அளித்திருக்கும் வெகுமதிகள் அவற்றைப் பலமுறை காப்பாற்றிவிடுகின்றன. பசியுடன் பதற்றத்தையும் சுமந்து திரியும் புலியை எளிதில் கற்பனைசெய்துகொள்ள முடிந்தது. புலியின் வேட்டையில் சிக்கி உயிர்துறக்கும் மானைத் தூரத்திலிருந்து பார்க்கும் பிற மான்களுக்கும் பதற்றம் தொற்றலாம்.

    கோரைப்புற்கள் அசைவதான பரபரப்பு ஏற்பட்டது. கேன்டர்களும் ஜிப்ஸிக்களும் ஒரே இடத்தில் நின்றன. “அங்கு தெரிகிறது அங்கு தெரிகிறது” எனும் சத்தங்கள்! கண்ணை வெறித்துக்கொண்டு சொன்ன திசையில் நோக்கினேன். புற்கள் அசைவது தெரிந்தது. பிராணி கண்ணில் படவில்லை. பக்கத்து கான்டரில் இருந்த அயல் நாட்டுச் சுற்றுலாப்பயணி பைனாகுலரை வைத்து உற்றுநோக்கிக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் திருப்தியில்லை; புன்னகையில்லை. புலி தெரிந்திருந்தால் ஒரு புன்னகை மலர்ந்திருக்கலாம். ஜிப்ஸி வாகனங்கள் நகர்ந்தன. எங்கள் ஓட்டுநருக்கு அங்கிருந்து கிளம்ப மனசு வரவில்லை. “அந்தக் கோரைப்புல்லுக்குப் பின்னால் நிச்சயம் புலிக்குட்டி இருக்கிறது” என்கிறார் ஓட்டுநர். ஐந்து நிமிடங்களாயின. கோரைப்புல்லில் இருந்து எதுவும் வெளியே வரவில்லை. ஏமாற்றத்துடன் நகர்ந்தது எங்களது வாகனம்.

    காட்டுக்கு நடுவே மலசலம் கழிக்க சில அறைகள் கட்டப்பட்டிருந்தன. அதற்கருகே வாகனங்கள் சில நிமிடங்கள் நின்றபோது பறவைகள் வந்து பயணிகளின் கைகளிலும் தரைகளிலும் அமர்ந்து விளையாட்டுக் காட்டின. அழகான அடர்-மஞ்சள் நிறப் பட்டையுடன் பறவைகள் பார்க்க மிக வசீகரமாக இருந்தன. என் தலைமீது வந்தமர்ந்த ஒரு பறவை நான் தலைகுனிந்தபோது முதுகில் முத்தமிடுவது போன்று குத்திவிட்டுப் போனது. அதனை உள்ளூரில் புலிப்பறவை என்று அழைப்பார்கள் என்றார் தர்தி. காக்கை இனத்தைச் சார்ந்த புலிப்பறவையின் ஆங்கிலப்பெயர் -ரூஃபஸ் ட்ரீபி.

    இலேசாக இருட்டத் தொடங்கிற்று. புலிகள் பகல்-தூக்கத்திலிருந்து விழித்து உலாவத் தொடங்கும் நேரம். சிறிய நீர்நிலைக்கருகே காத்திருந்தோம். மாமிச உணவுண்ணும் பெரும்பாலான மிருகங்கள் பொதுவாக இரவில் உலவுபவை. மான் போன்று தாவரவகைகளைத் தின்னும் விலங்குகள் சாயங்காலப் பொழுதுகளில் தூங்கச் செல்பவை எனும் சுவாரசியமான பார்வையைப் பகிர்ந்தார் தர்தி.

    புலிகள் தலைகாட்டுவதாயில்லை. வண்டியைத் திருப்பிக் காட்டுப்பகுதி எண் ஒன்றை நீங்கும் தறுவாயில் கிட்டத்தட்ட முந்நூறு மீட்டர் தொலைவில் மாலைச் சூரியனின் ஒளியில் மஞ்சள் தோல் மின்ன எங்களுக்கு முதுகு காட்டிச் சென்றுகொண்டிருந்தது அம்மிருகம். மற்றவர் சொல்லாமலிருந்தால் அதைப் புலி என்று நான் எண்ணுவதற்கே வாய்ப்பு அதிகம். “அதோ பாருங்கள் சிறுத்தை!” என்றார். சிறுத்தையின் தோல்களில் புலிபோன்ற வரிகள் இருக்காது. புலியை விடச் சற்றுப் பலங்குறைந்த மிருகம். புலியைப் பார்க்காத ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டிருந்ததாலோ என்னமோ “சிறுத்தைகளைப் பார்ப்பது புலிகளைப் பார்ப்பதைவிட அபூர்வம்” என்றார் தர்தி.

    ரண்தம்போர் தேசியப்பூங்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 114. புலிகளின் எண்ணிக்கையைவிட அதிகம். புலிகளைக் காட்டிலும் சிறுத்தைகள் கண்ணில் தென்படாமல் இருப்பதில் தேர்ந்தவை.

    “புலியைப் பார்க்கப் போனேன். சிறுத்தை பார்த்து வந்தேன்” என்று முனகிக்கொண்டிருந்தபோது கான்டர், தேசியப் பூங்காவின் வாயிலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. எங்களுக்கு முன் சென்றுகொண்டிருந்த ஜிப்ஸியில் இருந்த இளம்பெண்ணொருத்தி சிப்ஸ் பாக்கெட்டைத் தூக்கியெறிந்தாள். எங்களது வண்டியின் ஓட்டுநர் – முன்னாள் ராணுவ வீரர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தினார். “அம்மா, அக்கா”க்களைச் சேர்த்துச் சில வினைச்சொற்களை உச்சரித்தவாறே அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டைப் பொறுக்கியெடுத்தார். “இது காடு… மிருகங்கள் வாழும் பகுதி… நகரமல்ல” என்று கத்திச் சொன்னார்.

    நன்றி : காலச்சுவடு

  • தீவிர வேட்கை

    follow-me-buddha-paintings
    அக்கரையின்றி திரிபவனின் வேட்கை
    படரும் கொடி போல வளரும் ;
    வனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல்
    அவன் அங்கும் இங்குமாக
    அலைந்து திரிவான்.

    பிசுபிசுப்பு மிக்க
    அருவெறுப்பான தீவிர நாட்டம்
    உன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது
    கடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய்
    உன் துயரங்கள் வளரத் தொடங்கும்

    மாறாக, இவ்வுலகத்திலேயே,
    அருவெறுப்பான தீவிர வேட்கையிலிருந்து
    நீ விடுபடுவாயானால்
    தாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல
    உன் துயரங்கள் நீங்கும்

    Digout - Dhammapada_337
    இங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும் சொல்கிறேன் ;
    நற்பேறு உண்டாகட்டும் !
    மருந்து வேர்களை தேடுகையில்
    கோரைப் புற்களைக் களைவது போல்
    வேட்கையை தோண்டிக் களையுங்கள்

    காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாணல்கள் போல்
    மீண்டும் மீண்டும்
    மாரன் உங்களை வெட்டிச் சாய்க்காமல் இருக்கட்டும்

    வேர்கள் பாழடையாமல்
    பலத்துடன் இருந்தால்
    வெட்டப்பட்டாலும்
    மரம் திரும்ப வளர்கிறது
    அது போலவே
    உள்ளுறை வேட்கைகள்
    களைந்தெறியப்படாவிடில்
    துக்கங்கள் திரும்ப திரும்ப
    வந்து கொண்டிருக்கும் (334 – 337)

    சொந்த கருத்துகளால் உந்தப்பட்டும்
    கட்டுக்கடங்கா உணர்ச்சிகளால் ஆளப்பட்டும்
    அழகின் ஈர்ப்பில் கட்டுண்டும் கிடப்பவனின்
    வேட்கை சதா வளர்ந்து கொண்டே இருக்கிறது
    தன்னுடைய பந்தங்களை
    அவனே இறுக்கிக் கொள்கிறான்.

    ஆனால், சிந்தனையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்பவனாக,
    எந்நேரமும் அக்கரையாக இருப்பவனாக
    அழுகிய உறுப்புகளின் மேல் பிறழாத கவனத்துடன் திகழ்பவனே
    முடிவை எட்டுபவனாக இருப்பான்
    மாரனுடனான பிணைப்பை வெட்டி எறிபவனும் அவனே! (349-350)

    Dhammapada_352
    பயமின்றி
    கறை படாமல்
    வேட்கையிலிருந்து விடுபட்டு
    முடிவை தொட்டவன்
    ஆகுதலின் அம்புகளை
    பிடித்தெறிய வல்லவன்.
    இந்த உடற் குவியலே
    அவனுடைய கடைசியானதுமாக இருக்கும்.

    பேரார்வத்திலிருந்து விடுதலையாகி
    தத்தளிக்காமல்
    நுட்பமான வெளிப்பாடுகளுடன்
    சத்தங்களின் இணைகளை அறிந்து
    -முதலில் வருவது எது, பின்னர் வருவது எது–
    என்று தெளிவாக தெரிந்தவனாய் இருப்பான்.
    அவன் கடைசி உடல் தறித்த
    அளவிலா நுண்ணறிவு மிக்க பெருமகன். (351-352)

    அனைத்தையும் வெற்றிகொண்டு
    ‘நான்’ என்பதை முழுக்க உணர்ந்து
    எந்த முறையையும்
    பின் பற்றாது
    எல்லாவற்றையும் துறந்து
    வேட்கையின் முடிவில் விடுதலையாகி
    சுயமுயற்சியில்
    எல்லாவற்றின் இயல்பையும் அறிந்த நான்
    யாரை குருவென்று காட்டுவேன்? (353)

    தம்மத்தின் கொடை எல்லா கொடைகளையும் கைப்பற்றும்
    தம்மத்தின் சுவை எல்லா சுவைகளையும்
    தம்மத்தின் இன்பம் எல்லா இன்பங்களையும்
    வேட்கையின் முடிவு எல்லா துயரங்களையும் அழுத்தங்களையும்
    (354)
    Dhammapada_355
    பகுத்துணரும் சக்தி குறைந்த
    மனிதனை செல்வம் அழித்துவிடுகிறது ;
    ஆனால் மறுமையை வேண்டுபவர்களை அழிப்பதில்லை.
    பகுத்துணரும் ஆற்றல் குறைந்து
    செல்வத்தின் மேல் வேட்கையுறுபவன்
    எங்ஙனம் அடுத்தவரை அழிக்கிறானோ
    அது போலவே தன்னையும் அழித்துக்கொள்கிறான். (355)

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், மோகத்தால்.
    மோகமற்று இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், வெறுப்பால்.
    வெறுப்பின்றி இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், தவறான நம்பிக்கையால்.
    தவறான நம்பிக்கையின்றி இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது.

    நிலங்கள் புதர்களால் சேதமுறுகின்றன
    மனிதர்கள், பேராசைகளின் ஏக்கத்தில்
    பேராசைகளினால் ஏங்காமல் இருப்பவர்களிடம்
    கொடுக்கப்பட்டிருப்பது
    சிறந்த கனியாக முதிர்கிறது (356 – 359)

    (“தம்மபதம்” – இருபத்தி நான்காவது அங்கம் – “தீவிர வேட்கை”)

    (தனிஸ்ஸாரோ பிக்கு என்பவரின் மூல தம்மபதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)

    நன்றி : http://www.buddhanet.net

    படங்களுக்கு நன்றி : http://www.what-buddha-said.net