Category: Uncategorized

  • ஒரு நிமிஷம்

    அலுவலக நண்பர்களுடன் மாலைப் பொழுதுகளைக் கழிப்பது இப்போதெல்லாம் சிறு பதற்றத்தை தருகிறது. இரு நாட்கள் முன்னம் நண்பர் ஒருவருடன் உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். பல வருடம் வெளிநாடுகளில் வேலை செய்தவர். அலுவலக வதந்தி, வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எனப் பாதுகாப்பாகப் போய்க்கொண்டிருந்த உரையாடல் எப்போது சமூகநீதி நோக்கித் திரும்பியது என்று தெரியவில்லை.

    • இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல
    • உயர் சாதிக்காரங்க பிற்படுத்தப்பட்டவர்களுக்கு விட்டுத் தராங்க இல்லாட்டி பகிர்ந்துக்கறாங்க
    • எல்லோர்க்கும் சம நீதி வந்துட்டா எல்லாம் சரியாயிடும்
    • என்னோட கேரியர்ல யாரோட சாதியையும் கேட்டதில்ல
    • நம்ம தாத்தாக்கள் எக்ஸ்ப்ளாய்ட் பண்ணியிருக்கலாம். இப்ப யாரும் பண்றாங்கன்னு தோணலை. நான் பார்த்ததில்லை.
    • கல்யாணம் என்பது கலாசாரம் சார்ந்தது. ஒருத்தன் அவன் சாதிக்காரப் பெண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டான்னா அவன் தலித்துகளை அவமானப்படுத்துகிறான் என்று அர்த்தமில்லை. நவீனத்துவத்தால இந்தச் சிக்கலை தீர்க்க முடியலை. கல்லூரியில் படித்த தாராளவாத அறிவொளி பெற்ற மேற்கத்திய நாட்டவர் ஒருவர் கீரை பறிக்கும் மெக்சிகன் தொழிலாளியை வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்வது மிகவும் அரிது.
    • இதில் எனக்கு சில தீவிரமான கருத்துக்கள் உள்ளன.. அனைவரையும் ஒரே நேரத்தில் பிராமண+க்ஷத்ரிய+வைஷா+சூத்திரராக்கும் நேரம் இது என்று நினைக்கிறேன். இது நடக்க வேண்டுமானால், சமுதாயத்தை தட்டுப்படுத்தும் சட்டங்கள் தேவை.

    சகிப்புத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. நானும் லால் சிங் சத்தா, கரீனா கபூர், என்று உரையாடலின் – இதை இப்படிக் குறிப்பிட தயக்கமாக இருக்கிறது. ஒருவரே பேசிக் கொண்டிருப்பது எப்படி உரையாடல் ஆகும்? – மையத்தை கலைக்க முயன்று கொண்டிருந்தேன். டேய் வாயை மூடுடா என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

    அவர் பேச்சு “ரிசர்வேஷன்” என்ற சப்ஜெக்டுக்குள் நுழைந்தது. என் பதற்றம் அதிகரித்தது. Affirmative Action, Sense of Entitlement போன்ற சொற்களின் தாத்பர்யத்தை உணராமல் அவர் பேசிக் கொண்டு போனார்.

    கிளாஸில் எஞ்சியிருந்ததை வாயில் கவிழ்த்துக் கொண்ட பின் சத்தத்துடன் மேசையில் வைத்தேன்.

    ஒரு நிமிஷம்! என்று சொல்லி அவர் பேச்சை இடைமறித்தேன். நான் ஏதோ அவர் மீது வாந்தியெடுத்துவிடுவேனோ என்று அவர் நினைத்திருக்க வேண்டும். கொஞ்சம் பின்னுக்குச் சென்று நாற்காலியின் மீது சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

    எனக்கு தொண்டை எரிவது போல் இருந்தது.

    ஒரு நிமிஷம்! – எச்சிலை விழுங்கிக் கொண்டேன்.

    அவர் கவனம் முழுதும் என் மீது இருப்பதை உறுதி செய்த பின்னர் –

    “தயவு செய்து திறந்த மனதுடன் பின்தங்கியவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதைப் பரிவுடன் படியுங்கள். உங்கள் அனுபவத்தின் கண் கொண்டு மட்டுமே எல்லாவற்றையும் பார்க்காதீர்கள். நமது அனுபவம் மற்றும் சொந்தப் பார்வையை விட இந்த உலகம் மிகப் பெரியது. முங்கேகர், நூன், ஓம்வெல்ட் போன்ற தலித் அறிவுஜீவிகளின் புத்தகங்களையும், மாபெரும் ஆளுமையான பாபா சாஹேப் அம்பேத்கரின் புத்தகங்களையும் படிக்குமாறு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அம்பேத்கரின் The Annihilation of Caste வாசித்த பிறகு எனது நிலைப்பாடு மற்றும் கருத்துகளை வெகுவாக மாற்றிக்கொண்டேன். என்னை வரையறுக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டிருந்த பிறப்பு சார்ந்த அடையாளத்திலிருந்து வெளியே வர முடிந்தவரை முயற்சி செய்வது என்று அப்போதுதான் முடிவெடுத்தேன்..”

    அவர் எதுவும் பேசாமல் என்னைச் சில கணங்கள் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய உளறல்களுக்கு இது தான் மிகச் சிறந்த come back என்று தோன்றியது.

    Fair enough என்று முணுமுணுத்தார்

    எனது நெஞ்செரிச்சல் குறைந்து சற்று குளிர்ச்சி பாய்ந்தது.

  • காஷ்மீர்ரிப்போர்ட்

    பெருநிலப்பரப்பில் வழிபாட்டுரிமை என்று பேசப்படுவது காஷ்மீரிகளுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து மறுக்கப்படும் ஒன்று. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, காஷ்மீரின் முக்கியச் சின்னமான ஜாமியா மஸ்ஜித் 136 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. இது முதல் முறை அல்ல. இது போன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பலமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி மூடப்பட்டிருக்கிறது.

    ஹஸ்ரத் பாலுக்குச் சென்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஓர் அறிவிப்பு பலகை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது – “இது ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமே ; வேறு எந்தச் செயல்களும் அனுமதிக்கப்படாது”. தொழுகை செய்ய வருபவர்களை இப்படியா பயமுறுத்துவது?

    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஆறு மாதங்களுக்கு, காஷ்மீர் மக்கள் பட்ட இன்னல்கள் நெஞ்சை உலுக்கின. ஆறு மாதங்கள் மொபைல் இணைப்புகள் இல்லாமல் வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள்! டெல்லியில் தற்போதைய ஆட்சியும் அதன் முக்கிய இரட்டையரும் இங்கு அதிகம் விரும்பப்படுவதில்லை என்பது கண்கூடு.

    உ.பி முதல்வர் டெம்ப்ளேட்டில் செயல்படுகிறார் ஜம்மு காஷ்மீரின் தற்போதைய லெஃப்டினன்ட் கவர்னர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (8/5/2022), இந்தியத் தொல்லியல் கழகத்தின் (ஏ எஸ் ஐ) பாதுகாப்பில் இருக்கும் வரலாற்று நினைவுச்சின்னத்திற்குள் முன்னறிவிப்பின்றி நுழைந்து ஹோமம் நடத்தியிருக்கிறார். இதுவரை கேள்விப்படாத ஒன்று. இதற்கு ஏஎஸ்ஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ராணுவத்தின் பங்கு பற்றி பலரிடம் பேசினேன். ஊக்கமளிக்கும் கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு கடைக்காரரிடம் நான் கேட்ட கேள்விக்கு – அவர் இந்தியாவை வெறுக்கிறாரா என்றால் – சுருக்கமான பதில் – “ஆம், அது இயற்கைதானே”.

    ஒவ்வொரு 20 அடிக்கும் ஒரு முழு ஆயுதமேந்திய சிப்பாய் தெருக்களைக் கண்காணிப்பதைக் காணலாம்.

    விரும்பத்தகாத அரசியல் பார்வைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், காஷ்மீரிகள் மிகவும் இனிமையாகவும், மரியாதையாகவும், விருந்தோம்பல் மிக்கவர்களாகவும் இருப்பதைக் கண்டேன்.

    பல சீக்கியர்கள் காஷ்மீரில் வாழ்வதைப் பார்த்தேன். பஹல்காமில் ஒரு சீக்கியரும் ஒரு காஷ்மீரியும் பங்காளிகளாக நடத்தும் ஓர் உணவகத்தில் உணவுண்டேன். சீக்கியர்கள் பள்ளத்தாக்கில் வாழும்போது பண்டிட்கள் ஏன் வெளியேற்றப்பட்டனர் என்பது குழப்பமாக உள்ளது.

    நாங்கள் தில்லி திரும்ப விமானத்தைப் பிடிக்க விமான நிலையத்தை அடையும் அதே நேரத்தில், விமான நிலையப் பகுதிக்கு அருகிலிருக்கும் அலுவலகமொன்றில் வேலை பார்க்கும் ஒரு காஷ்மீரி பண்டிட் (மீள்குடியேற்றத் திட்டத்தில் பள்ளத்தாக்கு திரும்பியவர்) வேலையிடத்திலேயே இரு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தெற்கு காஷ்மீரில் இன்னும் மிலிடன்ஸி ஓயவில்லை. சுற்றுலாப் பயணிகளைச் ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் முடிந்தவரை நெடுஞ்சாலை NH44 வழியாக மட்டுமே ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அனந்த்நாக் செல்லும் சில உள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

    தி காஷ்மீரி ஃபைல்ஸ் பிரபலமான திரைப்படம் அல்ல – நான் சந்தித்த கடைக்காரர்களிடம் நடத்தப்பட்ட முறைசாரா கருத்துக்கணிப்பின் அடிப்படையில். ஒரு சால்வை விற்பனையாளர் குறிப்பிட்டார் – நாங்கள் படத்தை எங்கே பார்ப்பது? – ஆம், இரண்டு தசாப்தங்களாக முழு பள்ளத்தாக்கிலும் சினிமா அரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் இல்லை. நம்ப முடிகிறதா?

    இந்தக் கோடையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை மொய்க்கின்றனர். ஐனவரியிலிருந்து மே மாதத் தொடக்கம் வரை ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகளை காஷ்மீர் வரவேற்றுள்ளது. இதை ஒரு மகிழ்ச்சி தரும் முன்னேற்றமாக சராசரி காஷ்மீரிகள் கருதுகின்றனர்.

    படம்: ஜாமியா மஸ்ஜித், ஶ்ரீநகர் – காஷ்மீரிகளின் மத-கலாச்சார நரம்பு மையம்

  • கண்ணாடிக்குள் ஒரு புத்தகம்

    Hazrat Bal, Sri Nagar, Kashmir (from Dal Lake Side)

    பேக்கேஜ் டூரில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களையும் பார்த்தாயிற்று. சஷ்மேஷாய் தோட்டமும் பரிமஹலும் பார்க்க முடியவில்லை. கவர்னர் வந்ததனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இவ்விரு ஸ்தலங்களிலும் அன்று அனுமதி இல்லை. எங்களுடன் ஒட்டுனராக வந்திருந்த குல்ஸார் அன்று களைத்திருந்தார். ஷாலிமார் பாக்-குக்கு வெளியே நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு டாக்ஸி நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியபோது குல்சாருடன் நின்று கொண்டிருந்த பிட்டு aka ஹஷீமைச் சந்தித்தேன். தன்னை தில்லிக்காரன் என்று சொல்லிக் கொண்டார். கிழக்கு தில்லியிலுள்ள ஷாட்ரா பகுதியில் அவர் வீடு இருக்கிறதாம். பொதுவாக ஶ்ரீநகரில் வெளி மாநிலத்துக் காரர்கள் எவரையும் டாக்ஸி ஓட்ட விட மாட்டார்கள். அவர் எப்படி ஶ்ரீநகரில் டாக்ஸி ஓட்டுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. குல்ஸார் எங்களை ஓட்டல் வாசலில் விட்டுச் சென்றவுடன் அருகிருந்த டீக்கடையில் காஷ்மீரப் பானம் காவா அருந்திக் கொண்டிருந்தோம். ஹஷீமுக்கு நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் எப்படித் தெரிந்தது எனத் தெரியவில்லை. டீக்கடையை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது எங்களைப் பார்த்து கையாட்டினார். பேக்கேஜ் டூரில் இடம்பெற்றிராத ஹஸ்ரத் பால் தர்கா ஷரீஃபுக்கு ஹஷீமுடன் போகலாமென உடனடியாக முடிவெடுத்தேன்.

    ஹஸ்ரத் பால் சென்றடைந்தபோது இரவுப் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. என்னை உள்ளே அனுமதிப்பார்களா என்று சந்தேகமாக இருந்தது. தலைமுடியை மறைக்கும் படி குல்லா அணிய வேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல் உள்ளே நுழைந்துவிட்டேன். ஹஷீம் தன் குல்லாவை எடுத்து வந்திருந்தார். பிராரத்தனைக் கூடத்துக்கு முன்னதாக காவலர்கள் நின்றிருந்தனர். தயக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு காவலர் என் பெயர் என்ன என்று கேட்டார். என்ன பெயர் சொல்வது என்று சில கணம் தயங்கினேன். பின்னர் அசல் பெயரைச் சொன்னேன். அவர் ஏற்கனவே நான் இந்து என்று ஊகித்திருக்க வேண்டும். “இரவுப் பிரார்த்தனை முடிந்த பின் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்றார் போலீஸ்காரர். தர்காவின் பின் புறம் இருந்த டால் ஏரிக்கருகே நின்று காத்துக் கொண்டிருந்தோம். தொழுகை அரை மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. மைக்கில் ஒலித்த தொழுகையில் கவனத்தை குவித்து ஏரியின் மேல் பார்வையை பதித்திருந்தேன்.

    பிரார்த்தனை முடிந்தது. நாங்கள் பிரதான வாயில் வழியாக முதல் பிரார்த்தனை பகுதிக்குச் சென்றோம். அந்தப் பகுதியில் சிலர் இன்னமும் அமர்ந்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். கையை எப்படி வைத்துக்கொள்வது? அவ்வப்போது கோயிலில் கையைக் கூப்புவது போல் வைத்துக் கொண்டேன். இது தர்காவல்லவா? கை கூப்புதல் சரியாக இருக்காது. கையைக் கட்டிக் கொண்டேன். நான் இயல்பாக இல்லை என்று எனக்கே தெரிந்தது. தொழுகையில் இருந்த சிலரைத் தாண்டி கண்ணாடிக்குள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான டயரி போன்ற ஒன்றை எனக்கு ஹஷீம் காண்பித்தார். கறுப்பு மையில் மணிமணியாக அரபி மொழியில் குர்ஆன் மூலமும் ஒவ்வொரு அடிக்கு கீழே சிவப்பு மையில் பர்சியனில் அந்த அடியின் அர்த்தமும் எழுதப்பட்டிருந்தன. பர்சியனை உர்து என்று சொன்னார் ஹஷீம். தொழுகையாளர்களுக்கு எங்களின் பேச்சு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக ஹஷீமுடன் அதிகம் பேசவில்லை. “இந்த குர்ஆனை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் ஹஷீம். அதைக் கண்டு கொள்ளாமல் நான் மூலப்பிரார்த்தனை அறைக்குள் சென்றேன். தொழுகை முடிந்து மக்கள் எழுந்தனர். குர்ஆன் ஓதிய அந்த இளவயது மௌல்வியிடம் சென்று ஒவ்வொருவராய் கைகுலுக்கி விடை பெற்றனர். மௌல்வி அங்கிருந்து கிளம்பும் முன்னர் என்னைப் பார்த்தார். பின் என்னருகே வந்து கை கொடுத்தார். “சப் கைரியத்?” என்று வினவினார். நான் தெற்கிலிருந்து வருவதாகச் சொன்னேன். அது ஒரு சம்பிரதாயமான பேச்சு. நான் தெற்கா, மேற்கா, வடக்கா என்று என் belongingness குறித்த குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு! மௌல்வி “குதா ஹாஃபீஸ்” எனச் சொல்லி இன்னுமொரு முறை கைகுலுக்கி விடை பெற்றார்.

    பின்னர் ஒரு முதியவர் என்னை அணுகி என் பெயரைக் கேட்டார். ஹஸ்ரத் பால் ஷரீஃப் பற்றிய தகவல்களை எனக்குச் சொல்லலானார். நபிகள் நாயகத்தின் ரெலிக் எந்தெந்த நாட்களில் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் என்று விவரமளித்தார். நான் சற்றும் எதிர்பாராத வகையில் ரெலிக் இருக்கும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். மூடியிருந்த அறையின் பூட்டுகளில் என் தலையை லேசாக இடித்த மாதிரி வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணித்தார். அவர் சொன்னது மாதிரி செய்து இரு நிமிடங்கள் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தேன். அந்த இரு நிமிடங்களில் சில கணங்களுக்கு தவறுதலாக என் கரங்களை கூப்பினேன். என் தலையில் கையை வைத்து வாழ்த்தினார் அம்முதியவர்.

    ஓட்டலுக்குத் திரும்பும் வழியில் ஹஷீம் கேட்டார் – “கண்ணாடிக்குள் வைத்திருந்த அந்த கையெழுத்து குர்ஆன் பிரதியை ஏன் போட்டோ எடுக்கவில்லை? உங்களுக்கு வரலாற்று விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என நினைத்தேன்.”

    “அஃப்கோர்ஸ்…அந்தப் புத்தகத்தில் என்ன விசேஷம்?”

    “முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தன் கையால் எழுதிய குர்ஆன் அது என்று சொன்னேனே”

    “எப்போதய்யா சொன்னீர்?”

    “நான் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் கை கூப்பி நின்றிருந்தீர்களே”

    “!?()/-@&₹@“

  • 23/4/2021

    வெட்டி உரையாடல்கள், எப்போதாவது சில நண்பர்களுடைய அறிமுகம் என நடைமுறை வாழ்க்கையில் காணும் அனுபவங்களை ஒத்தவாறு சுவையற்றதாகவே சமூக வளைதளங்களில் நேரம் கழிந்து வந்தது. இடும் கருத்துகள் ஏதோ இந்தவுலகை மாற்றியமைக்கப்போவது போலக் கூவுதற்கும் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றங்களை பறைசாற்றிக் கொள்வதற்குமான அரங்காக மட்டுமே சமூக வளைதளங்களைப் பயன்படுத்தி வந்த எனக்கு அவற்றுக்கு உயிர் காக்கும் வல்லமை உண்டு என்ற நேரடி அனுபவத்தைத் தந்த நாள் 23/4/2021.

    கொவிட் பாசிடிவாகி ஏழு நாட்களாகியிருந்தன. ஜூரம் குறையவில்லை. 22ந்தேதி நடுஇரவு SPO2 தொண்ணூறாக குறைந்துவிட்டது. இரண்டு மணி நேரம் கழித்து 86. மனைவிக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. சில பெரிய மருத்துவமனைகளுக்கு போன் செய்தாள். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்குமா என்று கேட்டவுடன் இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி லைனை கட் செய்தார்கள். ஊரில் நண்பர்களுக்கு போன் செய்து என் காதில் விழாவண்ணம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். என் ஜுரத்தை விட அவளின் அவஸ்தை எனக்கு மிகுந்த சங்கடமளித்தது.

    நண்பர் ஒருவரை அழைத்துக் களைத்துப் போயிருந்த குரலில் மெதுவாகப் பேசினேன். தொண்டை வறண்டு போயிருந்தது. அவரின் பதிலை கண்ணை மூடிக்கொண்டே கேட்டேன். தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனை கிடைப்பது அரிது என்றார். அவருக்கும் கொவிட் பாசிடிவ். ட்வீட் செய்கிறேன் என்று அவர் சொன்ன போது அவநம்பிக்கையோடு தான் போனை வைத்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பாராதபடி என் நண்பர் இட்ட சின்ன டிவிட்டர் நிலைத்தகவலை படித்துவிட்டு அறிமுகமில்லாத அரசியல் பிரமுகரின் தொண்டர் ஒருவர் அதிகாலை ஐந்து மணிக்கு தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.

    படுக்கைத் தட்டுப்பாடு நிலவிய இரண்டாம் அலை நாட்களில் நடுத்தர அளவிலான மருத்துவமனையில் எனக்கு இடம் கிடைத்ததையும்,

    ஸ்கேனிங் சென்டரில் மிக நீண்ட க்யூ வரிசையில் நான் நின்றிருந்த போது அந்தத் தொண்டர் போனில் யாருடனோ பேசி என்னுடைய முறை உடனடியாக வரும்படி செய்ததையும்,

    விதிமுறைக்கெதிராக மார்பு ஸ்கேன் ரிப்போர்ட் வரும் முன்னதாகவே (CT Severity Score 17/25) மருத்துவமனை என்னை அனுமதித்துக் கொண்டதையும்,

    அனைத்து மருத்துவமனைகளிலும் பிராண வாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த வேளையில் நான் படுத்திருந்த சிறு மருத்துவமனைக்கு மட்டும் ஒரு சின்ன லாரி நிறைய சிலிண்டர் கிடைத்ததையும் –

    அற்புதம் என்ற சொல்லினாலன்றி வேறெந்த சொல்லால் குறிப்பது? நன்றியுணர்வு ஆன்மாவின் மது என்பார் ரூமி. என் உயிர் காக்கப்பட்ட நன்றியுணர்வின் போதை என் வாழ்நாளெல்லாம் நீடித்திருக்கும்.

    ட்வீட் செய்த நண்பர் பெயர் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவர் பெயரை இங்கே குறிப்பிடவில்லை.

  • என் மூன்றாம் நூல்

    ஸீரோ டிகிரி பப்ளிஷிங்/ எழுத்து பிரசுரம்

    நூலை வாங்க

  • ஒரு தத்துவக் குறிப்பு – நட்பாஸ்

    சிறப்புப் பதிவு : நட்பாஸ் 

    திரு கணேஷ் வெங்கட்ராமன் அவர்களுக்கு,

    சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக்  குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு.

    நட்பாஸ் 

    நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் தனி நபராய் என் பிரச்சினை வேறு யாருக்கும் அதே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. சிலந்தி, வலை பின்னுவது போல் உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் நம்மைச் சுற்றி நாமே கண்ணுக்குத் தெரியாத இழைகளால் ஒரு வலை பின்னிக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக, நாமே அதில் சிக்கிக் கொள்ளவும் செய்கிறோம். (நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் சிலந்தி வலை அதன் மனதின் பருண்ம வடிவம் என்று சொல்லும் இந்தக் கட்டுரையை பாருங்கள் – The Thoughts of a Spiderweb, Quanta Magazine https://www.quantamagazine.org/the-thoughts-of-a-spiderweb-20170523/)

    நாம் பின்னிய வலைகளில் சிடுக்கு ஏற்படுகிறது என்றால், அதற்கு காரணம் நாம்தான், அது நம்மில் ஒரு அங்கமும்கூட. வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு அதன் வேர்கள் நம் இதயத்தோடு பிணைந்து நம்மில் ஒன்றியிருப்பது தெரிய வாய்ப்பில்லை. அவர் எவ்வளவு நியாயமாக பேசினாலும், அவரது தர்க்கம் எத்தனை வலுவானதாக இருந்தாலும், நம்மை அது காப்பாற்றக் கூடியதல்ல. நம் மனதுக்கு நியாயம் என்று தோன்றுவது, நம்மைச் சரியான திசையில் கொண்டு செல்லும் என்பது உறுதியல்ல. அறிவுரைகள் சரியாகவே இருந்தாலும் அது தீர்வு காண உதவாது. வேறொருவர் அப்படிச் செய்ய முடியும், ஆனால் என்னைப் போன்ற ஒருவனுக்கு இதில் என்ன தவறு, நம்மால் முடிகிற வேலைதானே என்று இருக்கும், இருந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது. காரணம், அவர் வேறு மாதிரி, நான் வேறு மாதிரி.

    எனவே யாராக இருந்தாலும் இந்த புரிதலுடனும் தன்னடக்கத்துடனும்தான் நாம் தீர்வு சொல்ல வேண்டும்.

    உலகில் வெற்றி பெற்றவர்களைப் பார்க்கிறோம் – விஞ்ஞானிகள், பெரும்பணக்காரர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல்வாதிகள். உலகில் தலை சிறந்த அறிவு, மிக அதிக பணம், ஆகச் சிறந்த புகழ், அதிகாரம், எதுவும் போதுமானதாக இல்லை. இவர்கள் வாழ்க்கையைப் பார்த்தால் மிக மோசமான மன வேதனை, காயங்கள், செயல்கள் இருக்கும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள மாட்டார்கள், மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள், மணமுறிவு, போதைப் பழக்கம், தற்கொலை. வெற்றியோ, அதன் பயன்களோ, உபகரணங்களோ மனதுக்கு மகிழ்ச்சியோ ஆறுதலோ தருவதற்கு தம்மளவில் போதுமானதாக இருப்பதில்லை.

    அதே சமயம் தெருவில் நடைபாதை பிச்சைக்காரன் பின்னால் கூட ஒரு நாய் போகிறது, அவனும் அதற்கு ஏதோ ஒன்றை சாப்பிடப் போடுகிறான். மனதுக்கு நல்லது எது என்று பார்த்தால், தன்னலமின்மை என்றுதான் தோன்றுகிறது. நான் எனது என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்வை ஏதோ ஒரு வகையில் இன்னும் நன்றாக வாழத்தக்க ஒன்றாய் மாற்ற முயற்சி செய்பவர்கள். அவர்களுக்கும் மன அழுத்தம் வரலாம், அச்சம், அவநம்பிக்கை ஏற்படலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க விடுவதில்லை, போதைக்கு அடிமையாவது இல்லை, தற்கொலை செய்து கொள்வதில்லை.

    அகத்தின் மீது ஒரு போர்வை போல் இருப்பது சுயம். ஒவ்வொருவரும் அதை ஒவ்வொரு வகையில் இறுக்கமாய் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலரே அதை மூச்சு முட்டும் அளவு இழுத்துப் போர்த்துக் கொள்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் அதை விட அபூர்வமானது நிர்வாணம். இந்த அபூர்வ மனிதர்கள் எல்லாம் பிறருக்கு என்று இருக்கிறார்கள், ஒருவன் பிறருக்கு தருவதை எல்லாம் தனக்கே தந்து கொள்கிறான் என்று புதிர் போடுகிறார்கள்.

    பிறருக்காக வாழ்பவர்கள் வாழ்வில் எத்தனை நெருக்கடி இருந்தாலும், எத்தனை அவலம் இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டு அதை அளவிட முடியாது. எவ்வளவு கொடுக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வாழ்வின் அர்த்தம். ஒரு பணக்காரனைப் பற்றி, “He is worth Billions,” என்கிறோம். ஆனால் ஒரு அம்மா அல்லது அப்பாவைப் பற்றி, அவர்தான் குடும்பத்துக்கு எல்லாம் என்கிறோம். யார் மதிக்கிறார்களோ இல்லையோ, இவர்கள் வண்டி இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் என்ன செய்தோம் என்பது அல்ல, நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி அளவை. செய்து முடிந்தவுடன் ஒன்றுமில்லை என்று கையைத் தட்டி விட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்.

    செய்ததை வைத்துக் கொண்டிருப்பது, செய்ய வேண்டியதைப் பற்றிய கவலைகளை வளர்த்துக் கொண்டிருப்பது, வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறது. நம்மையே சிக்கலான ஆட்கள் ஆக்குகிறது. இதற்கு மாறாக, இப்போது என்ன இருக்கிறதோ, அதிலிருந்து பிறருக்கு கொடுப்பது, நம்மை விடுவிக்கிறது. என்ன செய்வது பிடித்திருக்கிறதோ, எது சுலபமாக இருக்கிறதோ, அதை நன்றாகச் செய்வது என்று இருக்கும்போது எல்லாம் சரியாய்த் தொடர்கின்றன. எனக்கு கணிதம் பிடித்திருக்கிறது, கவிதை பிடிக்கிறது என்றால் நான் கணித மேதையாகவோ நோபல் கவிஞனாகவோ ஆகாதபோதும், அதனால் ஒரு பைசா பிரயோசனப்படாதபோதும், என் ரசனை, என் நேசம், நான் கற்றுக் கொண்டது என் வாழ்வை ஏதோ ஒரு வகையில் வளமைப்படுத்துகிறது.

    இதை எல்லாம் இன்னொருத்தார் எனக்கு வேறு சொற்களில் சொல்லலாம், ஆனால் உண்மையை நான் என் கண்களால் காண வேண்டும், என் இதயம் கொண்டு நான் உணர வேண்டும். அதுதான் உள்ளே இறங்கும், எனக்கு உதவும். பிறர் சொல்வதல்ல, நானே கற்றுக் கொள்வது.

    நாமே இவ்வுலகம். நமதே இவ்வுலகம். நாம் இவ்வுலகின் நாயகர்கள். நம்மைப் பற்றி மட்டுமே நினைத்து இதை நாசமாக்கிக் கொள்ளலாம், நம்மைக் குறைத்துக் கொண்டு பிறருக்கு இடம் கொடுத்து, இதை நல்லதாக்கிக் கொள்ளலாம். பெரிய பெரிய விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதில்லை. குறுகிய மானப்பான்மையிலும் உணர்வின்மையிலும் நம்மையொத்த இந்த தன்னலம் கொண்டு உழலும் அவல மனிதர்களுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய நன்மையும் மாற்றம் அளிக்கும்.

    இந்த அர்த்தத்தில்தான் பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொண்டதாகிறது. நம் வாழ்வு இவ்வாறுதான் செழுமையடைகிறது. பணத்தால் அல்ல, புகழால் அல்ல, அறிவால் அல்ல, சக மனித உறவுகளில்தான் வாழ்வின் மதிப்பு கூடுகிறது. இதயத்தில் என்ன இருக்கிறது, அதிலிருந்து என்ன வருகிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில், இதயம்தான் காயப்படுகிறது, தனிமையை உணர்கிறது, வலியால் துடிக்கிறது. பிறரை இணைத்துக் கொள்வதில், இன்னும் விரிவதில், ஆழப்படுவதில் அது குணமடைகிறது. 

  • முழுவதும் நீலம்

    முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில் அதிகம் பேர் தற்கோலை செய்து கொள்கிறார்கள் என்ற என் உலர் நகைச்சுவை அனுமானத்தை அவர்கள் முன் வைத்த போது சின்னவள் சொன்னாள் – அருமையான ஐடியா அப்பா! கிப்லி ஸ்டூடியோக்காரர்கள் இதே கருப்பொருளில் கூட ஓர் அனிமே தயாரித்துவிடுவார்கள்-என்றாள். இதெல்லாம்  நான் “பர்ஃபெக்ட் ப்ளூ” அனிமே திரைப்படத்தைப் பார்க்கும் வரைதான். 

    புதல்விகளுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை என்று என்னிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் மனைவி. அவரின் வாதங்களுக்கு எதிர் வாதங்களை அடுக்க முடியாமல் நான் திணறிக் கொண்டிருந்த போது உதவிக்கு வந்தாள் மூத்தவள். தன் மடிக்கணினியைத் தொலைக்காட்சியோடு இணைத்து ஒன்றன்பின் ஒன்றாக டிஜிடல் விளம்பர பேனர்கள்  குதித்துக் கொண்டிருக்கும் ஓர் இணைய தளத்திற்கு ஏகி “பர்ஃபெக்ட் ப்ளூ” படத்தை ஓட்டினாள். நான் மட்டுமல்ல மனைவியும் சண்டையிடும் ஆர்வத்தை இழந்து அமைதியானார். சின்னவளும் எங்களுடன் சேர்ந்து கொண்டாள். இப்படத்தை அவள் பல முறை பாரத்திருக்கிறாள். ஆனாலும் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரு குறிப்பும் தராமல் முதல் தடவையாக படத்தைப் பார்க்கும் அதே ஆர்வத்துடன் பார்த்தாள். 

    கற்பனாவாதம் – யதார்த்தம் இரண்டையும் சேர்த்துக் கட்டிய திரைக்கதையமைப்பு. இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து எது கற்பனாவாதம் எது யதார்த்தம் என்ற குழப்பத்தை எழுப்பியவாறே காட்சிகள் பயணப்படும். அனிமேக்களின் பலம் அவற்றில் பயன்படுத்தப்படும் நிறங்கள். அமெரிக்க சூப்பர் ஹீரோ கார்ட்டூன்களிடமிருந்து மிகவும் மாறுபட்ட அனுபவத்தை அனிமேக்கள் நமக்குத் தருவதில் வெற்றி பெறுவதன் காரணம் இருண்மைக் கருக்கள் மட்டுமல்ல ; அனிமேக்களின் வியக்கத்தக்க நிறக்கூட்டும் தான்.  பெரும்பாலான அனிமேக்களில் செயற்திறனுடன் பயன்படுத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட உயிரூட்டல் (limited animation) எனும் உத்தி அனிமேவை கார்ட்டூன்களிலிருந்து வித்தியாசப்படுத்தும் இன்னோர் அம்சம். இயக்கமும் நகர்வும் கார்ட்டூனுக்கு இன்றியமையாதவை. மட்டுப்படுத்தப்பட்ட உயிரூட்டல் உத்தி வாயிலாக கலைத் தரத்தை நிலை நிறுத்துபவை அனிமே. 

    அனிமேக்களையும் கார்ட்டூனையும் ஒப்பிடுவதே பிழையானது என்றாள் பெரியவள். “கார்ட்டூன்கள் பொதுவாக ஓவியங்களின் முன்மாதிரிகளாகவோ ஆய்வுகளுக்கெனவோ பயன்படுத்தப்பட்டன. இப்போதெல்லாம் நகைச்சுவை மற்றும் நையாண்டிக்கான கேலிச்சித்திரங்களாகவே கார்ட்டூன்கள் வரையப்படுகின்றன. அனிமேக்கள் பெரும்பாலும் வாழ்க்கைச் சிக்கல்கள் அல்லது மனித உணர்வுகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள விஷயங்களில் கவனம் செலுத்துக்கின்றன. வன்முறை சார்ந்த பாலியல் சார்ந்த கருப்பொருள்களை அனிமேக்கள் தைரியமாகச் சித்திரிக்கின்றன. கார்ட்டூன்களின் முக்கியக் குறிக்கோள் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதே” – பரவாயில்லையே, நிறைய யோசித்து வைத்திருக்கிறார்களே புதல்விகள் என்று அப்புறம் பெருமிதப்பட்டுக் கொள்ளலாமென்று படத்தில் கவனம் செலுத்தலானேன்.

    பாப் பாடகியாய் பிரபலமடைந்த மீமா நடிகையாக முடிவு செய்கிறாள். நடிப்பு அவ்வளவு எளிதாக இல்லை. திரும்பத் திரும்ப டேக் வாங்கும் போது அவள் சலிப்படைகிறாள். பாப் பாடகியாக இருந்த நாட்களை அசை போடுவது நிற்கவேயில்லை. முன்னாள் பாடகி தன் முடிவில் அவ்வப்போது சந்தேகம் கொண்டாலும் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. நடிக்கும் டீ வி தொடரில் குழு வன்புணர்வுக் காட்சியில் நடிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறாள்.  வனபுணர்வுக் காட்சியில் நடிப்பது அவளின் இமேஜுக்கு குழி பறிக்கும் என்ற அவளுடைய மேனேஜர் ரூமியின் அறிவுறுத்தலை உதாசீனப்படுத்திவிட்டு துணிச்சலாக நடிக்கத் தயாராகிறாள். யதார்த்தத்தில் மீமா எடுக்கும் முடிவுகள் அவளின் அகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தன்னுடைய பாப் பாடகி பிம்பம் அவளைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாக உணர்கிறாள். அவளுடைய வெறி பிடித்த ரசிகன் ஒருவன் பின் தொடர்ந்தவாறிருக்கிறான். மொட்டைக் கடிதம், மிரட்டல்கள், தபால் வெடிகுண்டு என்று அவனின் stalking மிகத் தீவிரமடைகின்றது. மேனேஜர் ரூமிக்கு மீமாவின் முடிவுகள் ஏமாற்றத்தை அளிக்கின்றன. உடையில்லாமல் கவர்ச்சி போட்டோக்கள் எடுத்துக் கொள்கிறாள் மீமா. முக்கியப் பத்திரிக்கைகளின் நடுப்பக்கங்களில் மீமாவின் புகைப்படங்கள் வெளியாகி மிக்க வரவேற்பு பெறுகின்றன. வெறிபிடித்த ரசிகனுக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. ரூமி வேலையை விட்டு நின்று கொள்கிறாள். கற்பனை – யதார்த்தம் இரண்டுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது மீமாவுக்கு. அவளுடைய ஏஜன்ட், கவர்ச்சிப் படங்கள் எடுத்த போட்டோகிராஃபர் என ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள்.  தூங்கி விழித்தவுடன் என்ன கனவு கண்டோம் என்ற தெளிவிலாமல் யதார்த்தத்தினுள் விழித்திருக்கிறோமா அல்லது கனவிலேயே விழித்திருக்கிறோமா எனும் மயக்கத்தில் புழங்குகிறாள் மீமா.  முகம் பார்க்கும் கண்ணாடி வழியே, அறையில் விளக்கொளிரும் இரவு நேரத்தில் ஜன்னல் கண்ணாடியினூடே அவளின் பாப் பாடகி ஆளுமை சதா பரிகசித்தவாறு இருக்கிறது. அவள் நடிக்கும் தொலைக்காட்சித் தொடரின் சம்பவங்களும் யதார்த்தத்தின் சம்பவங்களோடு இணைந்து கொள்கின்றன.

    கிரகித்துக் கொள்ளவும் உற்றுக் கவனிக்கவும் இப்படத்தில் நிறைய உள்ளன. பித்துப் பிடிக்க வைக்கும் எடிட்டிங் மற்றும் சற்றும் எதிர்பாராத திருப்பங்கள் வாயிலாக மிக அனுபவம் வாய்ந்த திரில்லர் பட பார்வையாளர்களையும் பர்ஃபெக்ட் ப்ளூ திக்குமுக்காட வைக்கும். 

    அன்றைய நாளில் நடந்த வருத்தமான நிகழ்வுகளை மனக்கவலையுடன் எண்ணியவாறே கதையின் மூலப்பாத்திரம் படுக்கையில் குப்புறப்படுத்திருக்கிறது. அங்குமிங்குமாக பொருட்கள் (அழகாக) சீர் குலைந்து கிடக்கின்றன. அறையின் ஓரத்தில் உள்ள மீன் தொட்டிக்குள் நீந்தும் மீன்களும் நகராமல் அடிவாரத்தில் இருந்த படி கண்ணாடியூடாக மூல பாத்திரத்தை நோக்கிக் கொண்டிருக்கின்றன. அறையின் கூரையின் வழியாக காமிரா படுக்கையை நோக்கினால் எப்படித் தெரியுமோ அதே போல ஒரு பறவைப் பார்வையாக அறை முழுதும் நமக்குக் காட்சிப்படுத்தப் படுகிறது. தன்னை யாரோ stalk செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையில் இருக்கும் மூல பாத்திரத்தை கிராபிக் சித்திரிப்பு வாயிலாக பார்வையாளர்களையே stalk செய்ய வைக்கிறது திரைப்படம். இந்த ஓவியத்தை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது – இது தான் என் வாட்ஸப் டிபி – என்றாள் சின்னவள்.

    படத்தின் நடுவே சின்னவள் சொன்ன ஒரு குறிப்பு என்னைத் தொந்தரவு செய்தது. சற்று ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. கடந்த பத்தாண்டுகளில் வெளியான படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமொன்று இந்த பர்பெக்ட் ப்ளூவின் தழுவல் என்றாள். அவள் குறிப்பிட்டது டேரன் அரனோஃப்ஸ்கியின் பிளாக் ஸ்வான் படத்தை. பிளாக் ஸ்வான் பற்றி அந்தக் காலத்தில் கட்டுரை கூட எழுதியுள்ளேன். (ப்ளாக் ஸ்வான்))

    ஒரு பெண் கலைஞர் அவரின் தொழில் வாழ்க்கையின் அதிகரிக்கும் அழுத்தங்களின் விளைவால் யதார்த்தத்தின் பிடியை இழந்து பித்து நிலைக்குள் வீழ்கிறாள். இது 2010இல் வெளியான பிளாக் ஸ்வானின் கதைச் சுருக்கம் மட்டுமில்லை. பிளாக் ஸ்வான் வெளியாவதற்கு பதிமூன்று வருடங்கள் முன்னதாக ஜப்பானில் வெளிவந்த பர்ஃபெக்ட் ப்ளுவின் கதைச் சுருக்கமும் இதுவே தான். 

    அனிமே படங்களின் விசிறியாக இல்லாதவர்கள் பர்ஃபெக்ட் ப்ளூ படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பது கூட அரிது. ஆனால் சடோஷி கோன் எனும் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் இது என்று புகழப்படுகிறது, சைகலாஜிகல் த்ரில்லர் வகைமைப் படங்களின் ரசிகர்களுக்கு பர்ஃபெக்ட் ப்ளூ முக்கியமான படமாகக் கொண்டாடப்படுகிறது. ப்ளாக் ஸ்வானும் ஒரு மைல்கல் படமாகக் கருதப்படுகிறது. நடிகை நடலி போர்ட்மேனுக்கு அகாடமி விருதைப் பெற்றுத் தந்ததோடு விமர்சகர்களின் பாராட்டு, வணிக ரீதியான வெற்றி – இரண்டையும் ஒருங்கே பெற்ற படம்.

    கரு, முக்கியப் பாத்திரப் படைப்பு மற்றும் விஷுவல்கள் – இவ்விஷயங்களில் இரண்டு கதைகளுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமை. பிளாக் ஸ்வான் இயக்குனர் டேரன் இரு படங்களுக்கிடையிலான ஒற்றுமைகளை ஏற்கிறார். ஆனால் பர்பெக்ட் ப்ளூவின் தாக்கம் பிளாக் ஸ்வான் என்பதை மறுக்கிறார்.

    பிளாக் ஸ்வான் நினா என்னும் பால்லரீனாவின் கதையைச் சொல்கிறது. ஸ்வான் லேக் என்னும் நாட்டிய நாடகத்தின் மூல பாத்திரத்தைப் பெறும் போட்டியில் பங்கேற்கும்போது தன் இயல்பு நிலையைத் தக்க வைக்கப் போராடுகிறாள் நினா. பர்பெக்ட் ப்ளூவின் மீமா பாப் பிரபலம் என்னும் தன் நிலையைத் துறந்து தீவிர நடிகையாகும் முயற்சியில் யதார்த்தத்தின் பிடியை இழக்கிறாள். மேலோட்டமாக இரு வெவ்வேறு பாத்திரங்களின் வேறுபட்ட கதையைச் சொன்னாலும் இரண்டு படங்களின் கருவும் சொல்ல வரும் கருத்தும் மிகவும் ஒத்திருக்கின்றன.

    இரண்டு கதைகளும் ஒரே மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளன.  இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் அழுத்தமான சூழல்களைச் சந்திக்கின்றன. இது அவர்களின் அடையாளம் குறித்த கேள்விகளை அவர்களுள் எழுப்புவதோடு இறுதியில் அவர்களின் ஆன்மாவை குழப்பும் ஓர் doppelganger-ஐ உருவாக்குகிறது. நினா ஒரு நடன கலைஞராக இருப்பதன் அழுத்தத்தால் பாதிக்கப்படுவது போல, மீமாவும் ஜப்பானிய பிரபலம் எனும் தகுதியின் கடுமையான எதிர்பார்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    இரு பாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்னைகள் தொழில் வாழ்க்கையிலும் கசிவது இரண்டு படங்களில் காணப்படும் இன்னொரு ஒற்றுமை. நினாவைப் பொறுத்தவரை இது அவளின் தாயின் ரூபத்தில் வருகிறது. மீமாவின் சூழ்நிலையில் ஒரு ஸ்டாக்கர் ரசிகர் வாயிலாக வருகிறது. தமக்கு நெருக்கமானவர்களால் கட்டமைக்கப்பட்ட innocent என்னும் பிம்பத்தை உடைத்தெறிந்து இரு பாத்திரங்களுமே படங்களின் குறிப்பிட்ட கட்டத்தில் பாலியல் விழிப்புணர்வை எய்துகின்றன. இரண்டு நாயகிகளும் தமக்குத் தாமே ஓர் உளவியல் போரில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமிடையிலான கோடுகளை மங்கவைக்கும் மாயத்தோற்றம் ஏற்படுகிறது.

    படத்தைப் பார்த்து முடித்தவுடன் சற்று நேரத்துக்கு அலசல் தொடர்ந்தது. பெரியவள் முன் வைத்த முன்னோக்கு படத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. – “நான் இதை coming of age வகைமை படமாகப் பார்க்கிறேன். இளம் பாப் பாடகியின் தொழில் வாழ்க்கை எத்தனை நாள் நீடிக்கும்? நடிப்புத் தொழில் மீமாவின் நடைமுறைத் தேர்வு. மேலதிக புகழும் அங்கிகாரமும் பெறுவதற்கான வழி. ஆனால் இந்த மாற்றம் எளிதானதல்ல. பழைய அனுபவங்களின் சாதனையுணர்வை புதுத் தொழில் உடனடியாக கொடுத்துவிடாது. பழைய தொழில் வாழ்க்கை பற்றிய இழப்புணர்வில் ஆழ்ந்திருப்பது புது யதார்த்தத்தை ஏற்பதாகாது. அந்த இழப்புணர்விலிருந்து மீளாமல் புதுத் தொழிலின் சாத்தியங்களை அறுவடை செய்ய இயலாது. பிளாக் ஸ்வானிலிருந்து இவ்விதத்தில் இப்படம் மாறுபடுகிறது என்பது என் எண்ணம்.”

    பத்தாண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்தில் உயர் பதவியேற்றுள்ள நான் இந்த மாற்றத்தை எப்படி எதிர்கொள்கிறேன்? பரிச்சயமான சூழலில் நன்கு பழக்கமான சக-அலுவலர்களுடன் வேலை செய்வது ஏறத்தாழ இரண்டாம் இயல்பாக மாறி விடுகிறது. செய்து முடித்த வெற்றிகரமான பணிகள், அடைந்த இலக்குகள், கிடைத்த அங்கிகாரம் – இவையெல்லாம் நினைவில் அடிக்கடி வருகின்றன. பழகிய நண்பர்கள் தொடர்பு கொள்ளும் போது நினைவேக்கத்துடன் பழைய அனுபவங்களைப் பேசுதல் ஒரு விதத்தில் அபத்தமாகவும் உள்ளது. நானே விரும்பி எடுத்துக்கொண்ட வாய்ப்புதானே இது? புதிது புதிதாகத் தானே தெரியும்? ஆனாலும் புது அலுவலகத்தின் எந்த விஷயத்தையும் பழைய அனுபவங்களோடு ஒப்பிடுதல் சதா மனதில் நிகழ்ந்தவாறுள்ளது. புது சகாக்களை பழைய சகாக்களுடன் புது வேலையமைப்புகளை பழையவற்றுடன்….ஒப்பீடுகள் ஓய்வதில்லை. நாம் புது நிறுவனத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவோமா…நம் வேலைக்கு அங்கிகாரம் கிட்டுமா…நம் அதிகாரிகள் நம்மை அமைதியாய் வேலை செய்ய விடுவார்களா….புதிய அதிகாரி புது சகாக்களும் நம்மைப் பற்றி மட்டமாக எடை போடுகிறார்களோ….நான் எப்போது தப்பு செய்வேன் என்று ஆர்வமாய் காத்திருக்கிறார்களோ…தோல்விப்பயம் நம்மை பிடித்தாட்டுகிறதே….பாதுகாப்பின்மை நம் குரல் வளையைக் கவ்வுகிறதே…கோபமும் உதவியற்ற உணர்வும் ஒருசேர கோர தாண்டவம் ஆடுகின்றனவே….முகத்தில் கடிதத்தை வீசியெறிந்துவிட்டு நகர்ந்துவிடலாமா….தோன்றும் எல்லா எண்ணங்களையும் செயற்படுத்தாமல் இருப்பது எத்தனை பெரிய வரப்பிரசாதம்! நினா யதார்த்தத்திலிருந்து தூர தூர விலகி்…தமக்குள்ளேயே போரில் ஈடுபட்டு…பிடியிழந்து…திரும்பவியலா பாதையில் செல்வது போல நாம் எண்ணுகின்றவற்றுக்கும் நமக்கமையும் யதார்த்தத்துக்கும் இடையிலான வெளி அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளுவது மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்வதற்கான முதல் புள்ளி. வேலை மாற்றம் மட்டுமில்லை…வாழ்வின் எந்த மாற்றமும் எளிதானதல்ல…மீமாவைத் தள்ளாடச் செய்த புது மாற்றம், புதுத் தெரிவு – நடிப்புத் தொழில் என்றில்லை, எந்த வித மாற்றமாயிருந்தாலும் – நம்மையும் தள்ளாட வைக்கும்….

    “அப்பா…அப்பா….” – சத்தம் போட்டு அழைத்து மனைவி கொடுத்தனுப்பிய தேநீரை என் கையில் கொடுத்தாள் சின்னவள்.

    “டேரன் அரனோஃப்ஸ்கி சுட்டதுக்கே இப்படி அதிர்ச்சி ஆனா எப்படி? நோலனும் சடோஷி கோன் கிட்டர்ந்து சுட்டுருக்கார்…உனக்கு புடிச்ச இன்செப்ஷன் படத்துக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ எதுன்னு நெனைக்கிற? சடோஷி கோன் இயக்கிய அனிமே படம் Paprika தான்….அடுத்த அதிர்ச்சிக்கு தயாரா?” – என்று கேட்டாள்.

    நன்றி : கனலி

  • ஶ்ரீ ஆனந்தமயி மா-வின் குட்டிக்கதைகள்

    நெடுங்காலமாக சாதனாவில் ஈடுபட்ட சாதகனின் மேல் கருணை கூர்ந்து கடவுள் அவன் முன் பிரசன்னமாகிறார். “உனக்கு வேண்டும் வரத்தை கேள்” என்கிறார். சாதகன் அதற்கு பதிலளிக்கிறான் : “எப்போதெல்லாம் நான் உம்மை காண விரும்புகிறேனோ அப்போதெல்லாம் நீங்கள் எனக்கு தரிசனம் தர வேண்டும்” “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடவுள் அவன் பார்வையிலிருந்து மறைகிறார். பக்தன் மிக்க ஆனந்தத்தில் லயிக்கிறான். எப்போதெல்லாம் அவன் விரும்புகிறானோ கடவுள் தோன்றிய வண்ணம் இருக்கிறார். ஒரு நாள் சாதகன் சொல்கிறான் : “என்னை விட்டு விலகாமல் என்னுடனேயே நீங்கள் இருக்க வேண்டும்” இந்த வரமும் அவனுக்கு வழங்கப்படுகிறது. கடவுள் அவனுடனேயே இரவும் பகலும் இருக்கிறார். சாதகன் அளவிலா ஆனந்தத்தில் மூழ்கிக் கிடக்கிறான். இதன் விளைவு? ஒரு நாள் அவனுள் ஒரு புது எண்ணம் பிறக்கிறது. “கடவுள் என் முன்னம் தோன்றுவதற்கு முன்னர் அவரைக் காணும் ஆழமான ஆவல் அதிகமாய் இருந்தது. இப்போது அப்படி இல்லை. அந்த தீவிரமான விழைவுணர்வை நான் இழந்திருக்கிறேன்” மீண்டும் கடவுளிடம் பிரார்த்திக்கிறான். “உன்னைப் பிரிந்த போது நானுற்ற ஆழ்ந்த ஏக்கத்தை மீண்டும் எனக்குக் கொடு” அவன் கேட்டது அருளப்படுகிறது.


    +++++


    ஆசிரம வாசலை  இரு மருங்கிலும் மரத்தில் செதுக்கப்பட்ட இரு புலிகள் காவல் காத்துக் கொண்டிருந்தன. இரையின் மீது பாயத் தயாராக இருப்பது போல் அவை தத்ரூபமாக வண்ணமிடப்பட்டிருந்தன. ஒரு முறை ஆசிரமத்துக்கு வெளியே ஒரு நாய் பசியாறுவதற்காக வந்தது. ஆனந்தமயி மா மரப்புலிகளுக்கருகே நாய்க்காக உணவு வைத்தார். நாய் குழம்பியது போல் காணப்பட்டது. உணவை சாப்பிட அதற்கு ஆவல்தான்.ஆனால் புலிகளின் மீதான பயம் அந்த உணவை சாப்பிடவிடாமல் தடுத்தது. நாயின் நிலைமை முக்கால்வாசி மனிதர்களின் நிலை போலவே கற்பனை பயங்களினால் கட்டுண்டிருப்பதாக ஆனந்தமயி மா நகைச்சுவையாகச் சொன்னார்.


    +++++


    வணிகன் ஒருவன் வியாபார காரணங்களுக்காக பயணமானான். அவனுடன் வியாபாரி என்ற போர்வையில் திருடன் ஒருவன் வணிகனிடமிருந்து வழிப்பறி செய்யும் எண்ணத்துடன் கூடவே சென்றான். ஒவ்வொரு காலையும் முந்தைய நாளிரவு அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து அன்றைய அலுவல்களுக்காக கிளம்பும் போது வணிகன் தன்னிடமிருக்கும் பணத்தை பகீரங்கமாக எண்ணி தன் சட்டைப்பைக்குள் போட்டுக் கொள்வது வழக்கம். சந்தேகப்படாதவன் போல் இரவில் வணிகன் தூங்கச் செல்வான். அவன் தூங்கிய பிறகு திருடன் வணிகனின் பயணச்சுமைகளை சோதனை போடுவான். பைகளை நோண்டுவான். ஆனால் அவனால் வணிகனின் பணத்தை கண்டுபிடிக்கவே முடியாது. பல இரவுகள் அவன் முயற்சி செய்தும் நோக்கம் நிறைவேறாதது திருடனுக்கு எரிச்சலேற்படுத்தியது. இறுதியில் முயற்சியைக் கைவிட்டு தன்னுடைய நோக்கத்தை ஒப்புக்கொண்டு இத்தனை வெற்றிகரமாக பணத்தை எங்கு ஒளித்து வைத்திருந்தான் என்பதை வணிகனிடம் கேட்டான். வணிகன் சொன்னான் : “துவக்கத்தில் இருந்தே உன் நோக்கத்தை நான் அறிவேன். ஆகவே, தினமும் என் பணத்தை உன் தலையணைக்கடியில் வைத்து விடுவேன். அந்த ஒரு இடத்தில் மட்டும் நீ என் பணத்தை தேடவே மாட்டாய் என்பதால் என்னால் நிம்மதியாய் தூங்க முடிந்து”




  • புனே டயரி

    நேற்று நடந்தது

    புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க மறந்துவிட்டேன். “ஃபால்ஸ் அலார்ம்” என்கிறார் வாட்ச்மேன். மற்ற பிளாட்டுகளிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. “இது இங்கே அடிக்கடி நடக்கிறது தான்” என்று வாட்ச்மேன் சொன்னதும் “எது? சாவி வீட்டுக்குள்ளேயே இருக்க கதவு வெளியிலிருந்து மூடிக் கொள்வதா?” என்று கடுப்புடன் கேட்கிறேன். “விசிட்டர் லௌன்ஜில் உட்கார்ந்துகிட்டே தூங்குங்க நாளைக்காலை பார்ப்போம்” என்கிறார். விசிட்டர் லௌன்ஜில் காற்றின் சத்தம் கேட்கவில்லை. மழை சத்தம் இல்லை. ரிசப்ஷனில் உறங்கும் வாட்ச்மேனின் பலமான குறட்டை சத்தம் மட்டும். எனக்கு கோபம். போர்வையை எடுத்து வந்திருக்க வேண்டும்! சட்டையையாவது அணிந்து வந்திருக்க வேண்டும். சாவியை மறக்காமல் எடுத்து வந்திருந்தால் செருப்பு அணியாததோ சட்டை அணியாததோ பெரிய தப்பாக தெரிந்திருக்காது. இரு கோடுகள் தத்துவம் என்று ஏதோ சொல்வார்களே!

    புனே ஹார்ரர்

    நகரத்துக்கு நான் வேண்டா விருந்தாளியோ! என் கேள்வியில் நியாயமிருக்கிறது என்றே நம்புகிறேன். திகிலிசை போன்று வீசும் காற்று, தானே மூடித் தாழ் போட்டுக்கொள்ளும் கதவு, ஆளரவமற்ற, காலியான ப்ளாட்டுகள், ம்….வார இறுதியில் இன்னொரு ஹார்ரர்…அறையில் தனித்திருந்து சலித்துப் போய் ஆறு மணியளவில் வாக்கிங் போகலாம் எனக்கிளம்பினேன். நேற்றிரவு இருந்த வாட்ச்மேனைக் காணோம். வரவேற்பு லாபியில் ஈ, காக்காய் இல்லை. நானூறு மீட்டர் தொலைவில் இருந்த கேட் வரை ஒருவரும் காணவில்லை. கேட்டைத் தாண்டி சாலையில் வந்தாலும் நிலைமையில் மாற்றமில்லை. ரோடில் கார்களோ, லாரிகளோ, ஆட்டோ ரிக்ஷாக்களோ- எவற்றையும் காணோம். ஒரு (மஹாராஷ்டிர) வடைக் கடை இருந்தது. ஷட்டர் போட்டிருந்தார்கள். ஷட்டரை லேசாகத் திறந்து வெளியில் நின்றிருந்த ஆளுக்கு ஒரு பொட்டலத்தை கடைக்காரர் மர்மமான முறையில் கொடுத்துக் கொண்டிருந்தார். பொட்டலத்தை வாங்கிக் கொண்டவர் அடுத்த கணம் காணாமல் போனார். அவர் போன ஸ்கூட்டர் சத்தமிட்டதா என்று இப்போது ஞாபகமில்லை. கடைக்குச் சென்று ஷட்டரைத் தட்டி “டீ கிடைக்குமா?” என்று கேட்டேன். என் பின்னால் யாரேனும் நிற்கிறார்களா என்பது போல் பார்த்தார். “டீ இல்லை, வடை பாவ் மட்டும் இருக்கிறது” என்று சொல்லி யோஜிம்போ திரைப்படத்தில் வரும் விடுதிக்காரர் பாத்திரத்தின் எக்ஸ்பிரஷனைத் தந்தார். நான் டோஷிரோ மிஃபுனே இல்லையே! வேகவேகமாக நடந்து அறைக்கு வந்து தாழ்ப்பாள் போட்டுக் கொண்டேன். வார இறுதி லாக்டவுன் எப்போது முடிவுக்கு வரும்?

    வாஷிங் மெஷின் புதிர்

    தங்கச்சங்கிலி இரவல் வாங்கினா- பாமா விஜயம் படப்பாடலை நான் வாழ்வேன் என்று நினைத்ததில்லை. புனேவுக்கு குடி புகுந்த பிறகு வாஷிங் மெஷினை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். வீட்டு புரோக்கர் குல்வீர் அறைகலன்களையும் வாடகைக்கு தருகிறேன் என்றான். ஐந்தாறு நாட்களாயின. வாஷிங் மெஷின் வந்த பாடில்லை. ஆடைக்குவியல் வளர்ந்து கொண்டிருந்தது. தினமும் சாவியை கேட்டில் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். சாயந்திரம் கேட்டிலிருந்து சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது “குல்வீர் வந்தாரா” எனக் கேட்பேன். யாரும் வரவில்லை என்று விடை கிடைக்கும். ஒரு நாள் பால்கனியில் நீல நிற வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. பழைய மெஷின். எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே கண்களையிழந்து பிதுங்கியிருந்தது. ஆடைக்குவியலில் அன்று அணிந்திருந்த ஆடையும் சேர்ந்தது. அடுத்த நாள் விழி பிதுங்கிய மெஷினின் இடத்தில் இன்னொரு மெஷின். அதற்கு பிளாஸ்டிக் ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்தேன். தண்ணீர் பிய்ச்சியடித்து தொப்பலாக நனைந்து போனேன். வாஷிங் மெஷின் உருவில் வந்த வாஷிங் “பேசின்” அது என்று புரிந்தது. அடுத்த நாள் வாஷிங் “பேசின்” அங்கேயே கிடந்தது. ஆனால் கூடவே இன்னொரு வாஷிங் மெஷின் சேர்ந்திருந்தது. புதிது போல் தோற்றம் அதற்கு. ஆடைக்குவியலின் உயரத்தை பார்த்து வெட்கம் தாளாமல் சில துணிகளை எடுத்து புதிதாகச் சேர்ந்திருந்த வாஷிங் மெஷினுள் போட்டேன். வரும் வார இறுதியில் தோய்த்துவிட வேண்டும். குல்வீர் சாவியில்லாமல் எப்படி வீட்டுக்குள் வருகிறான் என்ற கேள்வி இன்னமும் குடைந்து கொண்டிருக்கிறது.

    தொடரும் ஹார்ரர்

    இது முற்றிலும் புதிது. இரண்டு வார இறுதிகளாக நிகழ்வுகளுக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் ஒரு கதை சொல்லல் நிகழ்வு. முரகாமியின் the elephant vanishes கதையை யாரோ வாசிப்பதாக இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கதை பற்றிய கருத்துகள் பகிரப் படுமாம். இந்த வாரம் toast masters federation-இன் ஒரு நிகழ்வு. Cyber security பற்றி சக அலுவலர் ஒருவர் உரையாற்றப் போகிறாராம்! இவையொன்றும் புதிதல்ல. எது புதிது எனில் வாராது வந்த இரண்டு அழைப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருப்பதுதான் புதிது.

  • கேள்வி – பதில் நிகழ்வு

    சமீபத்தில் தமிழமுது அமைப்பு நடத்திய இணைய வழி சந்திப்பில் என் புத்தகம் – சக்கரவாளம் – குறித்த மதிப்புரையை திருமதி சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் வழங்கினார். மதிப்புரையைத் தொடர்ந்து நடந்த கேள்வி – பதில் பரிமாற்றத்தில் நான் பங்கு கொண்டேன். கேள்வி – பதில் காணொளியின் யூ-ட்யூப் லிங்கை இத்துடன் பகிர்கிறேன்.