மிலிந்தனின் கேள்விகள் 2

milin
சொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம்.

இவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்

(1)

”நாகசேனரே, மறு பிறப்பெடுத்த ஒருவன் அதே மனிதனா? அல்லது வேறொருவனா?”

”அவனுமில்லை. வேறொருவனுமில்லை”

”உதாரணம்?”

”பானையில் இருக்கும் பால், தயிராகவும், பின்னர் வெண்ணையாகவும், பிறகு நெய்யாகவும் மாறுகிறது. நெய், தயிர், வெண்ணை இவை எல்லாம் பாலைப் போன்றதே என்று சொல்வது சரியானது அல்ல; ஆனால் அவைகளெல்லாம் பாலில் இருந்து வந்தவையே, எனவே அவைகளெல்லாம் வேறுவேறானவை என்றும் சொல்ல முடியாது”

(2)

”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் அதைப் பற்றி அறிவானா?”

“ஆம் வேந்தனே”

”எப்படி அறிவான்?”

“மறுபிறப்புக்கான காரணங்களும் சூழ்நிலையும், முடிவுக்கு வருவதன் வாயிலாக. உழாமல், நடாமல், அறுவடை செய்யாமல் இருக்கும் விவசாயி, களஞ்சியம் நிரம்பவில்லை என்பதை அறிவான்.”

(3)

”மறுபிறப்பெடுக்காமல் இருக்கப் போகிறவன் துன்பத்தை உணர்வானா?”

”அவன் உடல் வலியை உணரலாம் ; மன வலியை உணர மாட்டான்”

“அப்படி அவன் வலியை உணர்வானேயானால், அவன் ஏன் உடன் மரணத்தை தழுவி, தத்தளிப்பில்லாமல், துக்கத்தை முடிவுக்கு கொண்டு வரக் கூடாது?”

”அருகன் வாழ்வின் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளாதவன். கனியாத பழத்தை அவன் அசைத்து உதிர்ப்பதில்லை; பழத்தின் முதிர்ச்சிக்காக காத்திருக்கிறான். புத்தரின் முக்கிய சீடரும் வணங்குதற்குரியவருமான சரிபுத்தர் இவ்வாறு கூறுகிறார் :-

”மரணமுமில்லை ; நான் நெஞ்சார விரும்புவது வாழ்வுமில்லை.
சம்பள வேலைக்காரன் போல
காலம் கடத்துகிறேன்.
மரணமோ வாழ்க்கையோ அல்ல நான் வேண்டுவது
கவனத்துடனும் தெளிவான புரிதலுடனும்
காலம் கடத்துகிறேன்”
– (தேரகதா 1002-1003)

(4)

”இன்ப உணர்ச்சி ஆரோக்கியமானதா, ஆரோக்கியமற்றதா, அல்லது நடு நிலையானதா?”

”இம்மூன்றில் எதுவாகவும் இருக்கலாம்”

“வணக்கத்துக்குரியவரே, ஆரோக்கியமான நிலைகள் துன்பம் தராதவையாக இருக்குமென்றால், துன்ப உணர்வைத் தருபவை ஒவ்வாதவையாக இருக்குமென்றால், வலியைத் தரும் ஆரோக்கியமான நிலை இல்லாமல்தானே இருக்கும்?” [விளக்கம் : ஆரோக்கியமான கருமங்கள் வலியைத் தருவனவல்ல ஆனால் அக்கருமங்களை செய்தல் கடினம் என்று நாம் எண்ணுவதற்கு காரணம் நம்முடைய பற்றும் வெறுப்புமே. ஒவ்வாத காரியங்களின் விளைவுகள் வலியுணர்ச்சி தருவன ஆனால் அக்காரியங்களைச் செய்து மகிழ்வடையக் காரணம் நம்முடைய மயக்கமே)

”அரசனே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதன் ஒரு கையில் சூடான இரும்பு பந்தையும், இன்னொரு கையில் பனிக்கட்டியாலான பந்தையும் எடுத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டால், இரண்டும் அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துமா?”

”கண்டிப்பாக”

“அப்படியானால், உங்களுடைய அனுமானம் தவறாகிப் போகும். அவை இரண்டும் சூடானவையாக இல்லாதிருக்குமானால், சூடு அசௌகரியத்தை ஏற்படுத்துமானால் மற்றும் அவை இரண்டும் குளிர்ச்சியாக இல்லாதிருக்குமானால், குளிர்ச்சி அசௌகரியத்தை தருமானால், அசௌகரியம் சூட்டிலிருந்தோ குளிர்ச்சியிலிருந்தோ எழுவதில்லை என்றுதானே பொருள்?”

”உங்களுடன் என்னால் விவாதிக்க இயலாது. தாங்களே விளக்குங்கள்”

பெரியவர் மன்னனுக்கு அபிதம்மத்தை போதிக்கலானார். “இவ்வுலகோடு இணைந்த இன்பங்கள் ஆறு. துறவோடு இணைந்தவை ஆறு. உலகியல் துக்கங்கள் ஆறு ; துறவு சார்ந்த துக்கங்கள் ஆறு. இரண்டு வகையிலும் நடுநிலை சார்ந்த உணர்ச்சிகள் ஆறு. மொத்தம் முப்பத்தியாறு. இறந்த, நிகழ் மற்றும் வருங்காலம் எனும் மூன்று காலங்களிலும் எழும் முப்பத்தியாறு உணர்ச்சிகள் ; ஆக மொத்தம் நூற்றியெட்டு உணர்ச்சிகள்.”

(5)

“நாகசேனரே, மறுபிறப்பெடுப்பது எது?”

“மனமும் பருப்பொருளும்”

“இதே மனமும் பருப்பொருளும்தான் மறு பிறவி எடுக்கிறதா?”

“இல்லை. ஆனால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

”ஏதாவது ஓர் உதாரணம் தாருங்கள்”

“ஒரு மனிதன் சிறு கனலை ஊதி தன்னை வெப்பப்படுத்திக் கொண்டபிறகு, அக்கனலை அப்படியே எரியவிட்டு அவ்விடத்திலிருந்து அகல்வது போன்றது இது. அக்கனல் பரவி அண்டை வயலொன்றின் விளைச்சலை எரித்து சாம்பலாக்கிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்தின் உரிமையாளன் இம்மனிதனை பிடித்து, அரசன் முன்னால் விசாரணைக்குக் கொண்டு வந்தானென்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அம்மனிதன் “இந்த ஆளின் வயலுக்கு நான் தீ வைக்கவில்லை. நான் அணைக்காமல் விட்டுப் போன தீயும் வயலை எரித்து சாம்பலாக்கிய தீயும் வேறு வேறானவை. எனவே நான் குற்றவாளியல்ல” என்று சொல்கிறான். அம்மனிதன் தண்டிக்கப்படத்தக்கவனா?”

”நிச்சயமாக. அவன் என்ன சொன்னாலும் பிந்தைய நெருப்பு முன்னர் பற்றி வைக்கப்பட்டதிலிருந்து வந்தது என்பதே உண்மை”

”ஆகையால் இம்மனமும் பருப்பொருளும் சேர்ந்து கருமங்களைப் புரிகின்றன. அக்கருமங்களால் இன்னொரு மனமும் பருப்பொருளும் பிறக்கிறது. ஆனால், மனமும் பருப்பொருளும் அதன் முன்னைய கருமங்களின் விளைவுகளிலிருந்து விடுதலையாவதில்லை”

(6)

”மனம்-பருப்பொருள் பற்றி விளக்கினீர்கள். எது மனம்? எது பருப்பொருள்?”

”எதெல்லாம் தூலமோ அது பருப்பொருள், எதெல்லாம் நுட்பமானவைகளோ அகம் சார்ந்த மனநிலைகளோ அது மனம்.”

“இவையிரண்டும் தனித்தனியே ஏன் பிறப்பதில்லை?”

”முட்டையின் கருவும் ஓடும் போன்றது இது. இவையிரண்டும் சேர்ந்தே எழுகின்றன ; நினைவுக்கெட்டாத காலந்தொட்டு இவைகள் இணைந்தே இருக்கின்றன.”

(7)

“நினைவுக்கெட்டாத காலம்” என்று நீங்கள் சொல்லும்போது, காலம் என்றால் என்ன? அப்படியொன்று இருக்கிறதா?”

”காலம் என்றால் கடந்தது, நிகழ்வது மற்றும் வரப்போவது. சிலருக்கு காலம் என்ற ஒன்று இருக்கிறது ; சில பேருக்கு இல்லை. எங்கு மறுபிறப்பெடுப்பவர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எங்கு மறுபிறப்பு எடுக்காமல் இருக்கப் போகிறவர்கள் இருக்கிறார்களொ, அவர்களுக்கெல்லாம் காலம் என்ற ஒன்று இல்லை”

“சரியாகச் சொன்னீர்கள் நாகசேனரே. நீங்கள் பதிலளிப்பதில் வல்லவர்”

~~~0~~~

Source : Pesala, Bhikkhu (ed.), The Debate of King Milinda: An Abridgement of the Milindapanha. Delhi: Motilal Banarsidass, 1992. Based on Rhys Davids (1890, 1894)

நன்றி : சொல்வனம் (http://solvanam.com/?p=23844)

Milinda Panha

நிலம்

நிலம் என்ற ஒன்று படைக்கப்பட்டிராவிடில், சிருஷ்டி செய்யப்பட்ட உயிரினங்கள் எங்கு வாழ்ந்திருக்கக்கூடும்? எல்லாமே நீர் வாழ் உயிரினமாகவே இருந்திருக்குமா?. நிலமும் நீரும் உயிரினங்கள் வருவதற்கு முன்னரேயே உருவாகிவிட்டனவே!

நிலத்துக்கேன்றும், நீருக்கேன்றும் தனித்தனி உயிரினங்கள் தோன்றின. பரந்து, விரிந்திருக்கும் நிலத்தின் ஒவ்வொரு பரப்பிலும், அப்பரப்பின் இயற்கையின் தனித்தனி உருவைப்போல விதம் விதமான உயிரினங்கள் ஜீவித்து வருகின்றன. புரியாத ஏதோ ஒரு கடமையை இவ்வுயிரினங்களுக்கு இயற்கை அளித்திருக்கிறது.

ஒவ்வொரு புவியியல் பகுதிகளிலும், நிலத்தின் உரு மாறுகிறது. பள்ளத்தாக்கு, மலை நிலம், வயற்காடு, வெப்பமண்டல காடு, எவ்வளவோ உரு? அங்கங்கு வாழும் உயிரினங்களும், அந்தந்த நிலத்துக்கேற்றவாறு உள்ளன. சில மிருகங்கங்கள், சில பிரதேசங்களில் மட்டுமே வாழ்கின்றன. ஒட்டகத்தைக்காண பாலைவனமும், கரடிகளைக்காண குளிர் பிரதேசமும் போகவேண்டியிருக்கிறது.

+++++

உலகத்திலே நுகர்ந்து அனுபவிக்க பல பொருள்களும், விஷயங்களும் இருக்கின்றன. வெறும் பொருட்கள் மட்டும் இருந்திருந்தால், அனுபவம் முழுமை பெற்றிருக்காது. பொருட்களின் அழகையும் நுண்மையையும் ரசிக்க, உணர்ச்சி என்ற ஒன்றும் தேவையாயிருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருளோடு, உணர்ச்சி என்ற கண்ணுக்கு தெரியாத கருவியும் இணைந்து அப்பொருளுக்கும் அப்பொருளை நுகர்பவருக்கும் ஓர் அர்த்தத்தை அளிக்கின்றன.

உணர்சசிக்கருவிகள் பல்வேறு வகைப்பட்டன – பயபக்தி, உறுதி, தன்னம்பிக்கை, திறன், நிச்சயம், சந்தோஷம், சுகம், தயை, தைரியம், தீர்மானம், உற்சாகம், ஆவல், ஆற்றல், கிளர்ச்சி, எதிர்பார்ப்பு, எழுச்சி, சிறப்புத்தன்மை, ஆச்சர்யம், உவகை, நன்றி, போற்றும்தன்மை, கவர்ச்சி, வசீகரம், நம்பிக்கை, நகைச்சுவை, ஊக்கம், அக்கறை, சுறுசுறுப்பு, அன்பு, விளையாட்டுத்தன்மை, அமைதி, இன்பம், பலம், பெருமை, நேர்மறை, ஸ்திரம், கம்பீரம், மேன்மை, சிலிர்ப்பு – வரிசை அனகோண்டா பாம்பு மாதிரி மிக நீளமானது.

பயம் மற்றும் வன்முறை சார்ந்த உணர்ச்சிகள், நேர்மறைக்கு மாறான உணர்ச்சிகள். எதிர்மறை உணர்ச்சிகள். தன்னைக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற தற்காப்பு உணர்வின் மறுவடிவமாக அவைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

எல்லா உணர்ச்சிகளும் எல்லாருக்கும் ஒரே அளவினதாய் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சாதாரண ஒரு செல் உயிரினத்திலிருந்து, சிக்கலான படைப்புகள் வரை பல படைக்கப்பட்டிருக்கின்றன. சிக்கலான உயிரினங்களுக்கு சிக்கலான, மேலே குறிப்பிட்ட குறிப்பிடப்படாத பல உணர்ச்சிக்கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. எந்த உணர்ச்சி எப்போது உபயோகிக்கப்படும் என்று சொல்வது மிகக்கடினம். அந்த உயிரினத்தின் ஆளுமையையும், சமூக பழக்கங்களையும், அப்போதைய மனநிலையையும் பொறுத்தது. இதற்கும் மேலாக அந்த உயிரினத்தின் தன்னினைவுடன் இயங்கும் அறிவை பொறுத்தது.

+++++

பொருள் ஒன்று. ஆனால் அதைக்காணும்போது ஏற்படும் உணர்ச்சிகள் வெவ்வேறு. கருநிறமான, நீளமான பாம்பு. பயவுணர்ச்சியை ஏற்படுத்தலாம். அல்லது அறியும் ஆவலை ஏற்படுத்தலாம். கொன்றுபோடும் வன்முறையை எண்ணத்தை உண்டாக்கலாம். அதே இன பெண் பாம்புக்கு காதல் உணர்ச்சியை தரலாம்.

+++++

கரும்பாம்பு கரும்பு விளை வயலின்னடுவே நகர்ந்து கொண்டிருந்தது. விவசாயி புற்களை வெட்டிக்கொண்டிருந்தான். புதர்போன்று பருமனான வளர்ந்திருந்த புற்களுக்கு நடுவே சுருண்டுபடுத்தது. அதே இடத்தில் சருகு, வாடிய தழைகள் என்று குப்பைகூடமாக இருந்ததால், ஒரு பாதுகாப்பான உணர்வுடன் பாம்பு இளைப்பாரிக்கொண்டிருந்தது. விவசாயியின் மண்வெட்டி புதரை நெருங்கியதும், தனது வேகத்தைக்கூட்ட, பாவம் ஒரு நொடியில், பாம்பு இரு துண்டுகளாக ஆனது. தலைப்பாகம் கொஞ்சம் அசைவதைப் பார்த்த விவசாயி, அதனை இன்னொரு வெட்டு வெட்டினான்.

என்னென்ன உணர்ச்சிகள் இந்த காட்சியில் பயன்படுத்தப்பட்டன? –
பாம்பு : களைப்பு, பாதுகாப்பு, சுகம், கவனமின்மை.
விவசாயி : சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, கவனமின்மை, வன்முறை

கவனமின்மை இரு வரிசைகளிலும் வருகிறது. கவனமாய் இருப்பது யாருடைய பொறுப்பு? பெரும்சிக்கல் இல்லாத “தொடர்ந்து வாழ்தல்” என்ற எளிய இலக்கை மட்டுமே கொண்ட ஓர் உயிரினத்தினுடையதா? அல்லது தானே சிந்திக்கும் திறம் கொண்ட, சுற்றுபுறத்தை திட்டமிட்ட நடவடிக்கை மூலம் ஓரளவு கட்டியாள தெரிந்த உயிரினத்தினுடையதா?

நிலத்தை சரி செய்து கொண்டிருந்த விவசாயி, "பாம்பு இருக்கலாம், எனவே கவனத்துடன் பாம்பைக்கொல்லாமல், தன் வேலையை செய்ய வேண்டும்" என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பது அவசியமா? அல்லது "தெரியாத்தனமாக படுத்திருக்கும் பாம்பை மிதித்து விடுவேன் எனவே கவனத்துடன் வேலை செய்து, பாம்பைக்கண்டால், அதை வெட்டி எரிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்"? என்று இருப்பது அவசியமா?

+++++

அதே விவசாயி அதே நிலத்தில் சிலகாலம் கழித்து உழுதுகொண்டிருந்தான். அவன் மனைவியும், இரு வயதே ஆன மகனும் கூட வயலுக்கு வந்திருந்தார்கள். மதியவுணவு உண்டபிறகு, விவசாயி உழுவதை தொடர்ந்தான். நிலத்துக்கு நடுவில் இருந்த மரத்தின் நிழலில், அவன் மனைவி மரத்தில் சாய்ந்து
உட்கார்ந்தபடியே உறங்கலானாள். பக்கத்திலேயே, விரிக்கப்பட்ட துண்டில் மகன் உறங்கிக்கொண்டிருந்தான். ஒரு பாம்பொன்று, குழந்தையின் காலுக்கு மிக அருகே ஊர்ந்துகொண்டிருந்தது. சடக்கென்று கண் விழித்த தாய் பாம்பை நோக்க, கையில் வைத்த தடியை வைத்து அடிக்க முயற்சிக்க, அது சரியாக பாம்பின் மேல் படவில்லை. பாம்பு அவ்விடத்திலிருந்து அகலுவதற்கு முன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் காலை கொத்திவிட்டுபோனது.

இந்த நிகழ்வை நோக்குமிடத்து, தாயின் தாய்ப்பாசம் மேலிட, பிழையான குறியுடன் குச்சி எரிந்து, பாம்பின் தற்காப்பு உணர்வை எழுப்பி, குழந்தையை கொத்தவைத்தது என்று கருத இடமுள்ளதல்லவா?.

+++++

சரியான வைத்தியம் சமயத்தில் கிட்டாததால், விவசாயியின் மகன் இறந்து போனான். மகன் இறந்த துயரத்தில், விவசாயி, விவசாயத்திலிருந்து கொஞ்ச காலம் விலகியிருந்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம், நிலத்தில் எதுவும் பயிரிடவில்லை. நிலம் கவனிப்பாரற்று, புற்களும் புதர்களும் பெருகின. பக்கத்து நிலத்தின் உரிமையாளன், விவசாயியை அணுகி "நீயோ பயிர் எதுவும் பண்ணவில்லை…உன் நிலத்தை எனக்கு விற்றுவிடேன்" என்று சொல்லவும், உறக்கத்திலிருந்து விழிப்பவன் போல "இல்லை…இல்லை…அது என் நிலம்…இந்த முறை பயிரிடலாமேன்றிருக்கிறேன்" என்று சொன்னான். விரைவிலேயே, சில குடியானவர்களை கூட்டிக்கொண்டு, தானும் நிலத்தில் மண்டிக்கிடந்த புதர்களை விலக்கி சீர் செய்ய வந்தான். நிலத்தை உழுவதர்க்கேற்றவாறு, தயார் செய்து முடித்தபோது, ஏறத்தாழ ஐம்பது பாம்புகள் இறந்திருந்தன.

உணர்ச்சி என்பது ஒற்றை உயிரினம் என்ற அலகில் நோக்கும்போது அளக்கத்தக்கதாய், அறவரைமுறைக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்ற கட்டாயப்போக்கு பொதுவாக நிலவிவருகிறது. அதுவே ஓர் உயிரினத்தொகுதி என்ற அலகில் நோக்கும்போது, இன்னொரு வலிய உயிரினத்தின் முன்னேற்றம் என்ற அளவுகோலில் அடங்கிப்போகிறது.

+++++

மூன்று வருடங்களுக்கு பிறகு விவசாயி அந்த நிலத்தை அடுத்த நில உரிமையாளனுக்கு விற்றான். நகரத்தில் இருக்கும் தன் அண்ணன் தொடங்கிய பட்டறையில் போய் வேலை செய்யப்போவதாகவும், மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க நகரவாசம் உதவும் என்றும், மகனின் நினைவுகளை மறக்க கிராமத்தை விட்டு விலகியிருப்பது உதவும் என்றும் தன நண்பர்களிடம் சொல்லிக்கொண்டான்.

விவசாயியிடம் நிலத்தை வாங்கியவரிடம் சிலர் வம்பு பேசினார்கள் – "மூன்று வருஷமாகவே, அவன் நிலத்தில் மகசூல் ரொம்ப கம்மி. எலித்தொல்லை மற்றும் பிற கொறிக்கும் பிராணிகளின் தொல்லை அதிகமாகவே ஆயிட்டுது. கெமிகல்ஸ் அது இதுன்னு யூஸ் பண்ணிப்பார்த்தான்யா..ஒண்ணும் முடியலே…"

"அதுக்கென்ன, நம்ம கிட்ட கோயம்புத்தூர் அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி-ல படிச்ச மேனேஜர் இருக்காரே…கவலை எதுக்கு"

+++++

விவசாயியின் குடும்பம் ஊரை அடுத்த கோயிலுக்கு வெளியே இருந்த பாம்புபுற்றுக்கு பால் வைத்து படையல் செய்துவிட்டே கிளம்பிப்போனது.

+++++